வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 29, 2010

பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் கிராமத்தில் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். கேட்பார்க்கு மதியில்லாமல் போய் விட்டதால் ஆங்கே மூட நம்பிக்கை முந்திரிக் கொட்டையாகக் குதித்துத் துள்ளுகிறது.

குளத்தினுள் இருந்த காட்டாமணக்குச் செடியை வெட்டும்போது அங்கு வேலை பார்த்த பெண்கள் சாமி ஆடினார்களாம்.

நான் குடிகொண்டுள்ளேன் என்னை வெட்டாதே! என்று அந்தச் சாமியாடிப் பெண்கள் சத்தம் போட்டார்களாம். இந்த நிகழ்ச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.

வெட்கம் கெட்ட ஏடுகள் இதனைப் படம் போட்டு வேடிக்கை காட்டுகின்றன.

சாமி குடியிருக்க காட்டாமணக்குச் செடிதான் கிடைத்ததா? அப்படியே சாமி குடிகொண்டிருந்தால் அதனை வெட்டத்தான் முடியுமா?

வெட்ட முடிந்தது என்றால் அந்தச் சாமிக்குச் சக்தியும் இல்லை, வெண்டைக்காயும் இல்லை என்று நிரூபணம் ஆகவில்லையா?

இதன் பின்னணியில் ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் - அதுதான் அந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்கிற தந்திரம்.

அவ்வாறே ஆசாமிகள் ஆரம்பித்துவிட்டார்கள். 1001 விளக்குப் பூஜை போடப்பட்டுவிட்டதாம்.

ஊராட்சித் தலைவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் கனவில் சாமி வந்து தனக்குக் கோயில் கட்டச் சொன்னதாம்.

விஷயம் அங்கேதான் இருக்கிறது - சொல்லி வைத்த ஏற்பாடு - நாடகம்தான் இதன் பின்னணியில்!

மயிலாடுதுறை பக்கத்தில் கொல்லுமாங்குடியை யடுத்த பாப்பம்மாள் கோயில் என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு திருகுதாளம் நடந்தது.

பூமிக்கு வெளியில் கை தெரிந்ததாம். எனக்கு வளையல் போடு என்று அது சொன்னதாம். வளையல்காரர் வந்து வளையல் போட்டாராம். அவ்வளவுதான், ஆங்கே கோயில் கட்டவேண்டும் என்று ஆரம்பித்தார்கள்.

உடனே உண்டியல் வந்து விட்டது. வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது.

திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா? களத்தில் குதித்தார்கள் - பிரச்சாரப் புயலைக் கிளப் பினார்கள் - மறியல் என்று அடுத்து அறிவித்தார்கள். அவ்வளவுதான் வளையல்கார மாரியம்மாள் கதை புஸ்வாணம் ஆகிவிட்டது.

1970 செப்டம்பரில் அய்யா, அண்ணா பிறந்த மாதத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தியாகராயர் நகரில் - சிவா - விஷ்ணு கோயில் அருகில் ஒரு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கினார்கள்.

தியாகராயர் நகரைச் சேர்ந்த கே.எம். சுப்பிர மணியம் என்ற பார்ப்பனர் அந்த வேலையைச் செய்தார்.

பூமியைப் பொத்துக் கொண்டு திடீரென்று பிள்ளையார் தோன்றினார் என்று கதை கட்டினார்கள். அப்படி சொன்ன சிறிது நேரத்திலேயே உண்டியல்கள் வந்தன - வசூல் வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

அந்த இடத்திலேயே பொதுக்கூட்டம் போட்டுப் பேச தந்தை பெரியார் அறிவிப்புக் கொடுத்தார்.

பிரச்சினை பேருரு எடுத்துவிடும் என்ற நிலையை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் உண்டியலைப் பறிமுதல் செய்தார். திடீர்ப் பிள்ளையார்பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

செல்வராஜ் என்ற காவல்துறை கான்ஸ்டபுளைப் பயன்படுத்தி அந்த சுப்பிரமணியம் பார்ப்பான் அந்த எத்து வேலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவோடு இரவாகக் குழியைத் தோண்டி அதில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, சுற்றிலும் பருத்திக் கொட்டையை நிரப்பி, பூமிக்கும் மேலே ஒரு துவாரத்தை ஏற்பாடு செய்து, தண்ணீரை அதன் வழியாக ஊற்றியவுடன் பருத்திக் கொட்டை உப்பி பிள்ளையார் பொம்மையைப் பூமிக்கு வெளியிலே கொண்டு வந்து பிதுக்கித் தள்ளிவிட்டது.

இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு என்ன தெரியுமா?

சுயம்பு - அது தானாகத் தோன்றும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்தப் பித்தலாட்டத்துக்கு வக்காலத்து வாங்கினார்.

ஆனந்தவிகடன் ஆம்! ஆம்! பிள்ளையார் தானாகத் தோன்றியது உண்மைதான் என்று ஒத்தும் ஊதியது.

சில நாள்களிலேயே சாயம் வெளுத்துவிட்டது.

அந்த இடத்தில், மசூதி கட்ட அனுமதியளிக்கப்பட்டு இருந்தது - அதனைத் தடுக்கவே இந்தத் திட்டம்; மதக் கலவரத்தை உண்டாக்குவது அதன் நோக்கம். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்கி இருக்குமே.

இப்பொழுது விழுப்புரம் பக்கத்தில் கிளம்பியிருக்கும் அக்கப்போரும், இதுபோன்ற பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்.

விரைவில் அதனை அம்பலப்படுத்துவோம்!

----------- விடுதலை (29.07.2010)
                                                                                                                                                          

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

சீக்கிரம் இவர்களை அம்பலப்படுத்துங்கள் தோழர் ! வெட்ட வெட்ட முளைக்கும் விஷ செடிகள் இவர்கள்! இனிய இரவு தோழர் !

smart said...

பெரியார் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா?
உங்கள் தயவால் முதல் முதலாக ஒரு தொடர் பதிவு போட்டிருக்கேன் வந்து தொடருங்கள்.

smart said...

அன்றொருநாள் விவாதிக்கப் பட்ட ஒதிக்கீட்டு முறையில் தாங்கள் கொண்டுள்ள நிலைதான் இந்த வன்னிய சமுகத்திற்கும் பொருந்தும். சீக்கிரமாக 20 % ஒதிக்கீடு கேட்டு எழுதுங்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]