வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 04, 2016

மாலன் செய்கிற வாதம் மொக்கையானது

குஜராத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் பி.பி. படேல் உட்பட 36 பேர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டை நீதிபதி பி.பி. தேசாய் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார்.இது பற்றிய விவாதம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 3 ம் தேதி காலையில் நடைபெற்றது. கருத்து சொன்னவர் பிரபல எழுத்தாளர் மாலன் .

இந்தத் தீர்ப்பின் விவரங்களைச் சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 60 பேரில் 36 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்கிறார்.“நீதிமன்றம் என்ன செய்யும், சாட்சிகள் அடிப்படையில் தான் அது தீர்ப்பு சொல்ல முடியும். நமது நீதி முறை அப்படி இருக்கிறது.” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொன்னார் மாலன். ஆமாம் ஆமாம் என்று நெறியாளரும் தலையாட்டி ஆமோதித்துவிட்டார். அவரின் வயதுக்கு அதைத்தான் செய்ய முடியும். கடந்த கால அனுபவங்களை எடுத்துச்சொல்லி மாற்று வினா தொடுக்க இயலாத அளவுக்கு இளம் வயது நெறியாளருக்கு .ஆனால் ‘அனுபவசாலி’யான மாலனின் பதில் தான் சில சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது. நீதிமன்றங்கள் எப்போதுமே சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறதா?மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினார்கள். இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தை தனது நிலைக்கு ஏற்ப வியாக்கியானம் செய்தது. அதாவது மக்கள் அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்று சொல்வதால் எந்த வகையிலும் இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடு என்ற அளவைத் தாண்டக் கூடாது என்றது.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இடஒதுக்கீட்டிற்கு மட்டும் தான் பொருந்துமா? செல்வ வளத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்து அளித்துவிடுமாறு நீதிமன்றம் சொன்னதா? ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய நிலப் பகிர்வு மிகமிக முக்கியம் என்று மண்டல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதே! அதனை அரசு செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லையே ! மாறாக 50 விழுக்காடு அளவுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றதால் தமிழகத்தின் 69 விழுக்காடு ஒதுக்கீடு இப்போதும் தொங்கலில் தான் இருக்கிறது.

அப்படியென்றால் தேவைப்படும் போது நீதிமன்றம் சட்டத்தை வளைத்துக் கொண்டு வியாக்கியானம் அளிக்கும் என்பது விளங்குகிற தல்லவா?இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பைத் தமிழகம் சந்தித்தது.1968 ஆம் ஆண்டு கீழ வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கோர சம்பவம் தொடர்பான வழக்கில் நாகை விசாரணை நீதிமன்றம் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரும் மற்ற குற்றவாளிகளும் மேல் முறையீடு செய்தனர். கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சொன்ன காரணம் என்ன தெரியுமா?“இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விசயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள் . முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்.”(நின்று கெடுத்த நீதி பக்கம் 435)நிலம் வைத்திருப்பவர்களும் கார் வைத்திருப்பவரும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டார்கள் என்று எந்த சட்டமாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குஜராத் படுகொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதையும் இந்தப் பின்னணியுடன் எண்ணிப்பார்ப்பதில் தவறு இல்லை.எனவே சட்டம், சாட்சிகள் இவை மட்டுமே நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் இயக்குகின்றன என்று மாலன் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிற வாதம் மொக்கையானது என்பது தெளிவு.`இயற்கை நீதி, சூழ்நிலை சாட்சியங்கள் என்பதும் கூட நீதிமன்ற மொழிகளில் உண்டு. இதையும் மாலன் மறந்து விட்டுத் தான் பேசுவார் அவரது ``சார்பு’’ அத்தகையது.

குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகள் படுகொலை வழக்கின் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடி மீது படிந்துள்ள கறை. ஏனென்றால் சம்பவம் நடந்த 2002 ல் அவர் தான் குஜராத் முதலமைச்சராக இருந்தார் என்று தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திரசச்சார் கூறியிருப்பதும் இந்த வழக்கில் குற்றச்சதிக்கான (120-பி) காரணங்களை விசாரணை அறிக்கையில் விரிவாகக் கூறியிருந்தேன். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டதற்குகாரணம் தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் கூறியிருப்பதும் இணைத்தே பார்க்க வேண்டியவை. மாலனின் பார்வைக் கோளாறு ஒதுக்கப்பட வேண்டியது.

-மயிலை பாலு

நன்றி: தீக்கதிர்,05-06-2016


பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்கு ஏது வாஸ்த்து சாஸ்த்திரம்?


ஞாயிறு சிறப்பு: படித்ததில் பிடித்த நூல் விமர்சனம்...வாய்ப்பிருந்தால் வாங்கி பயனடையவும்.

புத்தகத்தின் பெயர்: வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும்

‘வாஸ்து’ என்று சொல்லி கொஞ்சம் வசதிபடைத்த மக்களின் மனங்களில் பீதியையும், அச்சத்தையும் உருவாக்கிப் பணம் கரப்போர் உலவி வருகிறார்கள்.வசதியில்லாதவர்களுக்கு கொம்புகளும் கீற்றும்இருந்தால் போதும் குடிசையாக்கி எங்கேயும் வாழ்ந்து விடுவார்கள். அவர்கள் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை,பூஜையறை என்ற விதவிதமான வசதிகளை அறியாதவர்கள்.எனவே வாஸ்து என்பது நடுத்தர உயர்நடுத்தர, உயர்தர வருவாய்க் குடும்பங்களையே, பெரிதும் ஆட்டிப்படைக்கிறது. அனுபவிக்க அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்குத் தானே அச்சப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களுக்கு கெல்லாம் அறிவுரை மட்டும் கூறி நிறுத்தி விடாமல் வாஸ்து என்கிற பண்டைக் கால கட்டுமானமுறையில் உள்ள அறிவியல் அம்சங்களை நூலாசிரியர் எஸ்.ஏ.பெருமாள் எடுத்துக் காட்டுகளுடன் எடுத்துச் சொல்கிறார்.மின்சார வசதி கிடைத்த பின் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் கிணறு விசயத்தில் வாஸ்துக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.வாஸ்து மிரட்டல்காரர்கள் வீட்டோடு நின்றுவிடாமல் நாடாளுமன்றக் கட்டடம், மும்பை ரயில் நிலையம் போன்ற வற்றையும் விட்டுவைக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லி வாய்ப்பு கிடைத்தால் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் எடுத்துச் சொல்லி வாய்ப்பு எப்படிப் பரப்பி விடுகிறார்கள் என்பதை அங்கதச் சுவையோடு சொல்வது இந்தச் சிறுநூலின் சிறப்பம்சமாகும்.

ஆசிரியர்: எஸ்.ஏ.பெருமாள்
வெளியீடு: நியூசெஞ்சூரி புக்ஹவுஸ் (பி)லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,


சென்னை - 600 098 பக்:44, விலை ரூ. 30/-

நன்றி : தீக்கதிர்,05-06-2016


மோடி அளிப்பதாக உறுதி அளித்த நல்லாட்சி எங்கே?

ஆழம் நிறைந்த கருத்துகளை ஆவேசத்துடன் வெளிப்படுத்த இயன்ற அரசியல் வாதியும் பத்திரிகையாளரு மான அருண் ஷோரி அண்மையில் கரண் தாபருக்கு அளித்த நேர்காணல் உடனடியாக உலகெங்கும் ஒளிபரப்பப் பட்டது. அனைவராலும் பெரிதும் மதிக்கப் பட்ட இந்த அரசியல் விமர் சகர், கரண் தாபரின் கேள்விகளால் தூண்டுதல் பெற்று, பிரதமர் நரேந்திர மோடி பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியபோது அனல் கக்கினார் என்றே கூறவேண்டும்; தனது கருத்து களை வெளிப்படுத்தியபோது, வார்த்தை களை அறைகுறையாக மென்று விழுங்காமல், சற்றும் தயக்கம் இல்லால் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவரது பேச்சு ஒரே சீராக ஆற்றொழுக்கு போல அமைந்திருந்தது. நாட்டில் எப்படிப் பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய தனது கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரி வித்த அவரது நேர்காணல் காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது.
அவரது சொற்கள் மட்டுமல்ல; அவரது அங்க அசைவு களும் பெரும் அளவிலான மக்களின் கவனத்தையும், கருத்தையும் ஈர்ப்பதாக இருந்தன.  அது ஒரு நேர்காணலைப் போலவே இல்லை; துணிவு மிகுந்த மாவீரர் ஒருவரின் தீரம் மிகுந்த செயலைப் போலவே இருந்தது. தூண்டுதல் பெற்றவராக மட்டுமன்றி, தடுத்து  நிறுத்த இயலாதபடி ஒரு நாடக பாணியில் அந்த நேர்காணல் அமைந்திருந்தது.
அவரது கைகளும், விரல்களும் பல வளைவுகளையும், நிழல் களையும் உருவாக்கிக் காட்டின. மோடி அரசின் பல தவறான செயல்களைப் பற்றி அவர் விவரித்தபோது, அவரது கண்கள் மின்னல் அடித்து ஒளிர்ந்தன; அவரது உதடுகளில் குறும்புத்தனமான புன்னகை தவழ்ந்தது.

ஒரு பத்திரிகை ஆசிரியரும் நுண்ண றிவாளருமான அவரது நேர்மையான நடத்தைக்காக பலராலும் அஞ்சப்பட்டு, ஈர்க்கப்பட்டவர் அவர். நேர்மையும் நேசமும் கொண்ட ஒரு மாமனிதர் அவர். இந்தியா முன்னேற்றம் அடைந்து வளம் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பது பற்றியோ, பொதுவாழ்க்கையில் நிலவும் ஊழல் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பைப் பற்றியோ சந்தேகம் எழுப்புவதற்கு இதுவரை எவரும் துணிந்ததில்லை.
இம்முறையும் தனது கருத்தை வெளிப்படுத்த அவர் சற்றும் தயங்கவே இல்லை; தன்னால் குறை காணப்பட்ட எவரைப் பற்றியும் விமர்சனம் செய் யாமல் விட்டுவிடவுமில்லை. சிந்தனை யைத் தூண்டும் கூரிய நேர்காணல் ஒன்றை அவர் அளித்தார். குறிப்பாக, நீங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி எங்கே? என்று கேட்ட ஷோரி,
பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்போது மட்டும்தான் ஊழலுக்கு எதிரான எந்த ஒரு  நடவடிக்கையும் வெற்றி பெற இயலும் என்றும் கூறினார். இதற்கு லலித் மோடி போன்றவர்களின் பெயர்களை எடுத்துக் காட்டாகக் கூறினார். மேலும் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பு களின் அடிப்படையில்தான் ஊழல் புகார்களின் மீதான நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அதன் பின்னர்தான் நரேந்திர மோடியின் மீதான ஒட்டு மொத்த தொடர் தாக்குதல் வந்தது. மோடி ஆட்சி செய்யும் பாணியைப் பற்றி கண்டனம் தெரிவித்த ஷோரி, மோடியின் ஆட்சியில் எவரையும் கலந்தாலோசிப்பது என்பதே இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
தந்திரமும் வஞ்சனையும் கொண்டவர் என்று மோடியைப் பற்றி வர்ணித்த அவர்,  தான் செய்த தவறுகளுக்கு சற் றுமே வருந்தாதவர்தான் மோடி என்று குற்றம் சாட்டினார். வேண்டு மென்றே இந்திய மக்களிடையே பிளவை மோடி ஏற்படுத்துவதாக கூறினார். துடைத் தெறியப் பயன்படுத்தப்படும் காகித கைக்குட்டைகளைப் போலவே மக் களைக் கருதி மோடி நடத்துவதாக ஷோரி கூறுகிறார்.
ஒவ்வொருவருட னும் மோடி குத்துச் சண்டைப் போட்டி நடத்துவதாக அவர் கூறு கிறார். தன்னால் வெற்றி பெற முடியும் என்பதை ஒவ்வொரு இரவும் தனக்குத்தானே உறுதி செய்து கொள்ள முனையும் காதல் மன்னன் மோடி என்று மிகத் துணிவுடன் ஷோரி கிண்டல் செய்தார். ஒரு தனி நபர் ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சிக்கு எந்த வித கட்டுப் பாடோ, சமன்பாடோ கிடையாது என் றும் கூறினார். தனது கருத்தை ஏற்றுக் கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் கூறுவதைத்தான், அதுவும் அவர் கேட்க விரும்புவதைக் கூறுபவர்களது பேச்சை மட்டும்தான் மோடி கேட்பதாக ஷோரி கூறுகிறார்.

மோடியின் ஆட்சியை ஷோரி கடுமையாக விமர்சித்திருந்தது, மிகத் துணிவுடனும், வெளிப்படையாகவும்,  எத்தகைய முக்கியமான நம்பிக்கை களோ,  மதிப்பீடுகளோ பின்பற்றப்பட வில்லை. அவர்களது ஒரே நோக்கம் அடுத்த தேர்தலில் எப்படியாவது, என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்று கூறி யதே ஆகும். அதைப் பற்றி மேலும் விவரிக்கும்படி கேட்கப்பட்டபோது,
இதற்கு முன் எப்போதுமே எவருமே கூறியிராத கருத்தை மிகுந்த துணிவுடன் கூறி, இதற்கும் மேலான முறையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும்,  மக்களின் அன்றாட நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும், வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிடும், மதத்தின் அடிப்படையில் மேலும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகள்  போன்ற ஆபத்துகள் எதிர்காலத்தில் நிகழ உள்ளன என்று மக்களை அவர் எச்சரித்தார்.

மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட  பசுபாதுகாப்பு என்ற ஏமாற்று செயல்திட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார். பசுபாதுகாப்பு திட்டம் எதிர்பார்த்த அளவில் பயன்தரவில்லை என்பதே இதன் காரணம் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்களுக்கு சங்கடம் அளிக்கும் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டு எழுப்புபவர்களின் குரல்வளை நெறிக் கப்படும்.
பிரதமர் மோடி இந்தியாவுக்கு ஏற்ற நல்ல பிரதமர் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்களா என்று தாபர் கேட்டபோது, இந்தியா இப்போது ஆபத்து நிறைந்த வழியில், திசையில் நடத்திச் செல்லப்படுகிறது என்று ஷோரி பதிலளித்து, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் எதிர்காலம் இல்லை என்ற எதிர் மறை எண்ணத் துடன் தனது நேர்காணலை  நிறைவு செய்தார். இந்த ஒளிவு மறைவு அற்ற நேர்காணலில், பல முக்கியமான செய்திகள் முதன் முதலாக இடம் பெற்றுள்ளன. என்றாலும், தனக்கு ஏற்பட்ட  தனிப்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகத்தான் ஷோரி இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று காரணம் கற்பிக்க முயலும் சந்தர்ப்ப வாதிகளும் இருக்கவே செய்வர்.
ஆனால் இதில் உள்ள உண்மை என்ன வென்றால்,  ஆற்றல் மிகுந்த தடை களை உடைத்தெறிந்து விட்டு உள்ளே நுழைந்து, தான் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்வதில் ஷோரி வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான். அவரிடமிருந்து வெடித்து வெளிவந் துள்ளவை எல்லாம், ஏமாற்றம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் புலம்பல் அல்ல. அவருக்கு நிதி அமைச்சர் பதவி அளிக்காத காரணத்தால்தான்  மோடி மீது ஷோரி குறை கூறுகிறார் என்று சில சில்லறை விமர்சகர்கள் கூறவும் கூடும்.  ஆனால் அவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.
ஷோரி அமைச்சர் பதவியை விரும் பியிருக்கவும் கூடும்; அது கிடைக்க வில்லை என்று ஏமாற்றம் அடைந்து வருந்தியும் இருக்கலாம்; அவர் தொடர்ந்து கோபமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் கூறியதன் பின்புலத்தில் உள்ள கவலையை எவராலாவது மறுக்க முடியுமா? மக்கள் எதையெல்லாம் உணர்கிறார்களோ, எதையெல்லாம் அனுபவிக்கிறார்களோ அவற்றைத்தான் அவர் கூறியிருக்கிறார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கான ஒரு சீரான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறுவதை எவராலாவது மறுக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இயலுமா?
தனது மனதில் உள்ளதையெல்லாம் அருண்ஷோரி கொட்டித் தீர்த்து விட்டார். அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேருமா என்பது அய்யத்திற் கிடமான கேள்வியாகும். அவர் ஒரு  மூத்தகுடிமகன்;  அவர் உடலால் மெலிந்து தளர்ந்துள்ளவர்.  நோயாளி யான மனைவியையும், மாற்றுத் திறனாளியாக உள்ள ஒரு மகனையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் அவர். தனது மனதைத் திறந்து பேசியதற்காக அவருக்கு என்ன தீங்கு அவர்களால் செய்துவிட முடியும்? எதுவுமே செய்யமுடியாது.
வரித்துறை யினரால் தொல்லைப் படுத்தப்பட இயன்ற அளவுக்கான சொத்தோ, வருமானமோ அவருக்கு இல்லை. அவரது கடந்த காலத்தைப் பற்றி தோண்டி எடுக்க மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு முயற்சியும், காலத்தை வீணாக்கக் கூடிய  வீண் முயற்சியே. போராட்டக்காரர் களாலும் பேரணிகளினாலும் ஷோரியைப் போன்ற மக்களை அச்சுறுத்த முடியாது. அவரது வாழ்க்கையில் இதைப் போன்றவைகளையும், இன்னமும் அதிகமானவை களையும் கூட அவர் பார்த்திருக்கிறார்.
இதில் உள்ள விஷயம் என்ன வென்றால், நம்மால் அருண் ஷோரி யையோ அவரது இந்த நேர்காண லையோ அலட்சியப்படுத்தி விட முடியாது என்பதுதான்.  மோடியாலும் அலட்சியப் படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அவருக்கு சங்கடம் அளிக்கும், ஆனாலும் அவரால் எதிர்கொண்டே ஆக வேண்டிய  உண்மைகள் ஆகும்.  அதைத்தான் நாம் இங்கே, இப்போதே செய்கிறோம். இவை ஏதோ கசப்புணர்வு கொண்ட,  ஏமாற்றத்தால் கோபமடைந்துள்ள ஒரு கிழவர், தனது கோபத்தை வெளிப் படுத்த அரசின் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை, தனது சுயவிளம்பரத் துக்காக கூறுபவை அல்ல.
அவர் அளித்துள்ள  பல எச்சரிக்கைகள் பற்றியும்,  அவரது நெஞ்சார்ந்த அறிவுரைகள் பற்றியும்  நாம் நெருங்கிய கவனம் செலுத்தத் தவறினோமானால், நமக்கு நாமே பெருந்தீங்கு இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம். ஷோரி கவலை அடைந்துள்ள ஒரு மனிதராகும். அவரைப் போலவே நாமும் கவலைப் படுபவர்களாக இருக்க வேண்டும். அவர் நமக்கு எச்சரிக்கை அளிக்கும்போது, அதனை நாம் கவனிக்க வேண்டும்.
ஷோரியின் சொற்களைக் கேட்காமல் முதுகைத் திருப்பிக் கொண்டு நாம் செல்வோமானால்,  அதற்கு நாம் மிக அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செய்வது நம்மால் இய லாததும், தேவையற்றதும் ஆகும். மோடி யாலும் கூட அதனை கவனிக்காமல் புறக்கணித்துவிட முடியாது.
நன்றி : டெக்கான் கிரானிகிள் 14-05-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Source: http://www.viduthalai.in/page2/123455.html


மோ(ச)டியின் “திருவிளையாடல்!”





இரண்டாண்டு சாதனையோ சாதனை! ஆட்சியைப் பிடிக்க அன்று ஆட்சியை நிலைநிறுத்த இன்று மோ(ச)டியின் “திருவிளையாடல்!”

போட்டோஷாப்  1
நவம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் வந்த போது அதை பார்வையிட ஹெலிகாப் டரில் வந்த மோடி தனது சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டி ருந்தார். பொதுவாக விமா னம் மற்றும் ஹெலிகாப் டரின் ஜன்னல் வழியாக எடுக்கப்படும் படங்கள் மங்கலாக இருக்கும். ஆனால் பிரதமர் அலுவல கம்  ஜன்னல் வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை பார்வையிடுவது போல் போலியான படத்தை வெளியிட்டது.


போட்டோஷாப் 2 
ஈழத்தில் போரால் பாதிக் கப்பட்ட தமிழ்க் குடும்பம் ஒன்றை அவுட்லுக் பத்திரிகை அட்டைப் படமாக வெளி யிட்டது, அதை வைத்துக் கொண்டு கேரளத்தில் ஊட்டச் சத்து குறைவினால் குழந்தை கள் பாதிக்கப்படுகின்றனர் என்று போட்டோஷாப் மூலம் மாற்றங்கள் செய்து காண்பித் தார் பிஜேபி தலைவர் அமித்ஷா. இவ்விவகாரம் தொடர்பாக உண்மை வெளிவந்த பிறகு அவுட் லுக் பத்திரிகை மீது பழியைப் போட்டுவிட்டு தங்கள் மீது தவறு இல்லை என்று விளக்கம் கூறினார்.

போட்டோஷாப் 3
2014- மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும் போது மோடியின் தேர் தல் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவ ரது சகாக்களும் ஆர்வத் துடன் பார்ப்பது போன்ற ஒரு படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி யானது. ஆனால் அந்தப் படம் பாகிஸ்தான் அப்டா பாத்தில் ஒசாமா பின்லே டனை பிடிக்க நடந்த ஆபரேசன் ஜொரோமா நேரடி சம்பவங்களை கண்காணிக்கும் படமா கும்.  - அதை ‘உல்டா’ செய்து இப்படி வெளியிட் டுள்ளனர்.

போட்டோஷாப் 6
பாஜகவின் இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முதல் அமைச்சராகவிருந்த  குஜராத் அகமதாபாத்தில் புல்லட் ரெயில் ஓடுகிறது என்று ஒருபடம் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் புல்லட் ரெயிலே இல்லை என்று சமூக வளைதளத்தில் பலர் கிண்டல் அடிக்க ஆரம்பித்ததும், யாரோ மோடி அனுதாபி மிகைப்படுத்தி இப்படத்தை வெளியிட்டு விட்டார்; என்றும் வேலைப் பளுவில் கவனிக்காமல் அந்தப் படத்தை வெப்சைட்டில் வெளியிட்டு விட்டோம் என்று அறிக்கை விட்டு ஏமாற்றினர்.

போட்டோஷாப் 7 
2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற மோடி வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் உரையாடி நடந்து வருவது போன்ற ஒரு செய்தியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த படம் போலியானது என்றும் வெள்ளைமாளிகையில் ஒபாமாவும் அவரது மனைவியான மிகையிலும் நடந்து வரும் காட்சியில் மிகையிலின் படத்தை எடுத்துவிட்டு மோடியின் படத்தை ஒட்டிவிட்டனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தப் போட்டோ மோடியின் உதவியாளர் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதாகவும் அது உண்மையா போலியா என்றும் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இது மாதிரி ஒரு பிரதமரை எங்காவது பார்த்திருந்தால், படித்திருந்தால் அவசியம் தெரியப்படுத்துங்கள்.

போட்டோஷாப் 5 
சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம் வயதில், ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. 1988ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அஹமதாபாதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோரியுள்ளார். இதையடுத்து வந்த பதிலில், அந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும் கணினி மூலம் மறு ஆக்க வேலை(போட்டோஷாப்) செய்யப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 04-06-2016


Saturday, February 27, 2016

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது

வனபுத்திரி
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
7,இளங்கோ தெரு 
தேனாம்பேட்டை , சென்னை -– 600018. 
பக்:112 , விலை : ரூ. 80/-

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....

புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது . அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார் .பாராட்டுகள்.புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில் , தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும் ; கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும் .இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது .வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய , ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார் .இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார் .இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார் .

ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது ? “ அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை ……. ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே! என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள் ....” என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது .“ கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது ; வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது; லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.; இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது .அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார் ?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை ? வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது . விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது ; இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை, ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும். இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு .நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான் . இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான் .

ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர் .இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான் . ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான் ?தீக்குளிக்கச் சொன்னான் . இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும் . சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை . நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார் . அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது .இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது .இது இன்றையத் தேவை . ராஜம் கிருஷ்ணன் எழுதிய , இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும் ;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும் . இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே ! இது என் வேண்டு கோளும் கூட . இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும் .

எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது . சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

தகவல்: சு.பொ.அகத்தியலிங்கம் @ தீக்கதிர் நாளிதழ், 28-02-2016


Saturday, February 20, 2016

மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள உதவும் இந்தியத் தத்துவ மரபுகள்



1977ல் வெளியான பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் எனும் நூல் பல்கலைப் பதிப்பகத்தின் மூலம் மீண்டும் நம் கைகளுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இயக்கவியல் குறித்த தமிழ் நூல்கள் மிகக் குறைவே. ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சிய மெய்ஞானம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறதோ, அதேபோல் இந்திய தத்துவ மரபுகளை உள்வாங்கி மார்க்சியத்தை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.மனம், ஆன்மா, சாந்தி, பிரம்மம், முக்தி என பல்வேறு வார்த்தைகள் இன்றும் சத்குருக்களாலும், நித்தியானந்தர்களாலும், ஸ்ரீஸ்ரீக்களாலும் போதிக்கப்படுகின்றன. ஒரு பெருங்கூட்டம் அங்குதான் நிம்மதி விற்கப்படுவதாக நினைத்துக் கொண்டு படை எடுக்கிறது. தத்துவமும் ஞானமும் கூட ஏதோ வானத்தில் இருந்து கொட்டுவதாகவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்ற பிற்போக்கான கருத்துக்களுக்கு எதிரான போராட்டம், இந்திய தத்துவ வளர்ச்சியின் தொடக்க காலம் தொட்டு இருந்துள்ளது. எல்லாம் மாறும் என்கிற கோட்பாட்டை பௌத்தமும், பொருள்தான் பிரதானம் என்பதை சாங்கியமும், அணு, அதன் இயக்கம், பிரம்மமோ, கடவுளோ உலக இயக்கங்களுக்கு காரணமில்லை என வைஷேசிகமும் கூறுகிறது. லோகாயதம் அதையும் கடந்து ஐம்பூதங்கள்தான் உலகிலுள்ள அனைத்திற்கும் மூலமான பொருள்கள், இதன் கூட்டுகளினால் உணர்வு தோன்றுகிறது. இவ்வுணர்வுதான் பிரபஞ்சத்தை அறிகிற ஆற்றல் என்கிறது. இந்திய தத்துவத்தில் இருந்த கருத்து முதல்வாத சிந்தனைகளுக்கு ஆரம்பகாலம் தொட்டு பொருள் முதல்வாதிகள் முன்வைத்த எதிர்வினையே மேற்கண்ட தத்துவ சிந்தனையாகும். இந்திய தத்துவத்தின் பொருள் முதல்வாத சிந்தனைகள் பதில் சொல்ல முடியாத அம்சங்களுக்கு மார்க்சியமும், வளரும் அறிவியலும் பதில் தருகிறது.தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் இன்று நேற்றல்ல, அது தொடர்ந்து நடந்து கொண்டேதான் உள்ளது. மார்க்சியத்தை எதிர்கொள்ள அமெரிக்கா சுமார் 130 தத்துவ வெளியீட்டகங்களை நடத்தி வந்தது என்று வானமாமலை தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று அனுபவங்களாலும், விஞ்ஞானப் புதுமைகளாலும் வளரும் மார்க்சியத்தை அந்தப் பொய் புனைவுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒன்பது இயல்களாகப் பிரித்து மார்க்சியம், லெனினின் பங்களிப்பு, இந்தியத் தத்துவம், இயக்கவியல் என அனைத்தையும் மிக எளிமையாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள முக்கியமான அம்சங்களை கேள்வி பதில் வடிவில் கீழே தொகுப்பதன் மூலம் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இப்புத்தகத்திற்குள் நுழைய வழி கிடைக்கும் எனக் கருதுகிறேன்.

மார்க்சியம் ஏன் பிற்போக்குத்தனத்தை எதிர்க்கிறது?

மார்க்சியம், முன்னோக்கி வளர்ச்சி பெறாத, பின்னுக்கு இழுக்கிற எந்த சக்தியையும் எதிர்க்கிறது.
மார்க்சியம் முடிந்து போன ஒன்றா?

மார்க்சியம் வறட்டு சித்தாந்தம் அல்ல. அது செயலுக்கான வழிகாட்டி. மார்க்சிய கொள்கைகள் வளர்ச்சியடைய முடியாத இறந்து போன கருத்தல்ல. அது விஞ்ஞானத்தின் அஸ்திவாரம், அதைப் பல திசைகளில் சோசலிஸ்டுகள் வளர்க்க வேண்டும்.புதிய சமூக நிலைமைகளில் புதிய பிரச்சனைகளும், புதுமுறைப் போராட்டங்களும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கும். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் வளர்த்தால்தான் அது ஜீவ சக்தியுள்ள சமூகத்தை மாற்றும் சக்தியுள்ளதாக அமையும்.

தற்போதைய அறிவு வளர்ச்சி பூரணமானதா?

நமது அறிவு பூரணமானது அல்ல. உண்மையை நெருங்கிச் செல்லுகிற தன்மையுடையது. நெருங்கி செல்லச் செல்ல, பொருளின் தன்மைகளைக் கண்டறிய முடியும்.

மதத் தீமைகளை எதிர்க்காமல், ஆளும் வர்க்கத்தை மட்டும் எதிர்த்தால் என்ன?

சமயம் பொதுவாக ஆளும் வர்க்கத்தோடுதான் சேரும். ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும்பொழுது சமயத்தையும் எதிர்க்க வேண்டி வரும்.

அனுமானம்-கற்பனை-கருத்து இவைகள் தானே மனித சிந்தனையை வளர்த்து புதிய பொருட்களை உருவாக்கஉதவுகிறது?

அனுமானத்தால் அனுபவ எல்லைக்கு உட்பட்டவற்றை மட்டுமே யூகம் செய்ய முடியும். வரம்பற்ற அனுமானங்களை அல்லாமல், பௌதிக நிரூபணத்திற்கு உட்பட்ட அனுமானங்களே நிரூபிக்கப்படும்.புறச்சூழ்நிலையே மனிதனின் உணர்வை உருவாக்குகிறது. எதிர்வினையை அது நிகழ்த்தும் போதே அது அறிவு பெறுகிறது. இயற்கை சூழலும், குடும்ப சூழலும், சமூக சூழலும்தான் ஒருவரது உணர்வை (கருத்தை) உருவாக்குகிறது. மேற்படியான சூழ்நிலைகளின் எந்த அனுமானமும் கருக்கொள்வதில்லை. உணர்வென்பது புற உலகின் அகவய படிமம்.
பொருள், கருத்து: எது முதன்மை?

பொருள் என்பது புறநிலையில் உள்ள எதார்த்தம். அது மனத்தைச் சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது. அது இருப்பதற்கு மனம் அவசியம் இல்லை. பொருள் புலன்கள் வழியாக அகவுலகக் கருத்தமைப்பாக மாறுகிறது. புறநிலை யதார்த்தத்தை நமது புலனுணர்ச்சிகள் அறிவதிலிருந்து பொருளைப் பற்றிய கருத்தமைப்பு உருவாக்கப்படுகிறது.
பொருள் - இயக்கம், காலம் - இடம்?

இயக்கம் என்பது பொருளில் இருப்பின் பொது இயல்பாகும். உலகில் எங்கும் இயக்கமற்ற பொருள் இல்லை. அது போலவே பொருள் இல்லாத இயக்கமும் இல்லை.உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் தவிர வேறெதுவும் இல்லை. காலத்திலும் இடத்திலும் தான் அவை இயங்குகின்றன. காலத்திற்கும், இடத்திற்கும் வெளியே பொருள் இருக்க முடியாது. அது போலவே பொருளுக்கு வெளியே காலமும், இடமும் இருக்க முடியாது.
மனிதனின் அறிவு வளர்ச்சி எதற்கானது?

ஒரு செயல் பொருளுள்ளதாகவும், நோக்கமுடையதாகவும் இருக்க வேண்டும். அறிவிற்காக மனிதன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை. புறவுலகை மாற்றுவதற்காகவே மனிதனுக்கு அறிவு தேவைப்படுகிறது. மனிதனது உணர்வு புறவுலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, அதனைப் படைக்கவும் செய்கிறது. மனிதன் தான் வாழும் உலகைப் பற்றி திருப்தியடைவதில்லை தனது செயலால் அதனை மாற்ற முடிவு செய்கிறான்.இப்படி தத்துவம் குறித்து நமக்கிருக்கும் கேள்விகளை எழுப்பினால் அதற்கான அர்த்தம் பொதிந்த பதில்களை நா.வானமாமலை அவர்களின் இந்தியத் தத்துவ மரபும் இயக்கவியலும் என்கிற இப்புத்தகத்தில் கண்டடையலாம்.

இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்
ஆசிரியர்: நா.வானமாமலை
வெளியீடு: பல்கலைப் பதிப்பகம்
97/55,
என்.எஸ். கிருஷ்ணன் சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024பக்:192
விலை: ரூ. 100/-

நன்றி: தீக்கதிர், 21-02-2016


Tamil 10 top sites [www.tamil10 .com ]