வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 29, 2010

ஞானசூரியன் - தொடர்-10

பொருள்: குலத் தொழிலை மீறி நடக்கிற வைசியன் இறந்தபின், மலத்துவாரத்தில் கண்களை உடையதும் மலத்தையே புசிக்கும் இயற்கையுடையுதுமான, மைத்திராக்ஷ ஜோதிகன் என்கிற பிசாசாகவும், இம் மாதிரியே சூத்திரன் வெள்ளைப் பேனைத் தின்கிற கைலாசகன் என்கிற பிசாசாகவும் பிறக்கின்றனர். இதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், இன்னும் பாப்பனருக்கே அடிமையாக இருக்கவிரும்பினால், அவர்களையே வணங்கிக் கேட்டும், அடிமைத் தனத்தைத் தள்ளிச் சுதந்திரமாக இருக்க விரும்பினால், ஸ்மிருதிகளைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

1சனாதன தரும முறையாக வருணங்கள் நான்கே உள்ளன. இதற்கு மனுவின் வசனம் வருமாறு:

பிராஹ்மண; க்ஷத்திரியே வைஸ்த;

த்ரேயோவர் ணாத்விஜாதய

சதுர்த்த ஏகஜாதிஸ்து சூத்ரோ

நாஸ்திது பஞ்சம (மனு)

பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். 2நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி (இவனுக்கு உபநயனமில்லாததால், துவிஜாதியாக மாட்டான்). அய்ந்தாவது ஜாதி கிடையாது. ஆனால், இக்காலத்தில் காணப்படுகிற அளவற்ற ஜாதி வேற்றுமைகள் எங்ஙனம் உண்டாயின என்றால், எட்டுப் பார்ப்பனர்களும், ஒன்பது அடுக்களை என்று வங்க தேசத்தில் ஒரு பழமொழி வழங்குவதுண்டு. இதைப்போல் ஒழுக்கங்களையுடைய வகுப்பினர்கள் அனைவரும் ஸ்மிருத முறைப்படி சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்களேயாவர்.

1. சனாதன தருமம், வைதிகம், மனுதர்மம், வருணாச்சிரம தருமம் ஆகிய சைவம், வைணவம், தருமம் என்பனவெல்லாம் பிராமண மதமென்றே கொள்ள வேண்டுவதன்றிப் பெயர் மாற்றத்தால் மயங்கவேண்டாம்.

2.பிறப்பினால் மனிதனாகவும், வைதிக ஸம்காரத்தாலும், ஒழுக்கங்களினாலும் ஜாதிகள் உண்டாவதால், எம்மனிதனுக்கும் சமஸ்காரஞ் செய்து ஒழுக்கங்களைப் பழக்கினால் ஜாதியுண்டாமென்றது கருத்தாகவும், பிற்காலத்தில் பொறாமையால் எழுதிய சுவடிகளில் சம்ஸ்காரம் செய்யாதே என்று எழுதியும், நல்லொழுக்கத்தில் பழகினால் தண்டித்தும் வந்த மதமே பிராமண மதமென்றறிய வேண்டும். நிற்க, அய்ந்தாவது ஜாதி கிடையாது என்று இதில் கூறவும் 180 ஜாதி என்கிறது எசுர்வேதம்.

ஆதலால், எவ்வளவு உயர்ந்த ஜாதியென்று தன்னை மதித்துக் கொண்டாலும் வேதவிதிப்படி உபநயனமில்லாத வர்கள் யாவரும், இந்த நான்காவது ஜாதியிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். புலையர், சான்றார், செட்டியார், பிள்ளை எனத் தங்களை உயர்வுப்படுத்திக் கூறிக்கொண்டு, ஒருவரோ டொருவர் கலக்காமல் நூல் முறையும் தெரியாமல், நம்மவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, வருவது பார்ப்பனருக்கு நன்மையும் நம்மவருக்குள் தீமையும்தான் பயக்கம். தவிரவும் அய்ரோப்பியர், அமெரிக்கர், ஜப்பானியர், அராபியர், சைனாக்காரர் முதலிய பலதிறப்பட்ட மனிதர்களும் பார்ப்பனர் பார்வைக்குச் சூத்திரன் என்ற வார்த்தைக்கு இடங்கொடுப்ப தில்லை. பார்ப்பனர் தங்களுக்கு இடையூறு நேராவண்ணம், ஒரு ஜாதியாருக்குள்ளேயே இவ்வளவு அதிகமான வேற்றுமையை உண்டாக்கி, அதை அழியாமல் நிலைநிறுத்திக் கொண்டு வருவதால் அவர்களுக்கு மிகுந்த நன்மையுண்டு. ஆனால், இந்த வேற்றுமைகளைப்பற்றி அவர்கள் ஒன்றும் கூறமாட்டார்கள். இப்போது பலவிடங்களிலும் நாடார்களுக்கும், நாயக்கமார்களுக்கும் யுத்தம். புலையர்களுக்கும் ஏனைய வகுப்பினருக்கும் சண்டை. மலையாளத்தில் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரகம் மற்றும் பலவிடங்களிலும் மண்டை உடைபடுதல் ஆகிய இவைகளெல்லாம் இவ்வேற்றுமையின் பயனென்று நம்மவர்கள் நன்கு யூகித்து உணர வேண்டும். இதனால் நம்மை வஞ்சிக்கிற பார்ப்பனர்கள் ஜெயமடைகிறார் களென்றும், நாம் தோல்வியடைகிறோமென்றும் நன்கு விளங்குகிறன்றோ? வேத முறைப்படி சம்ஸ்காரமில்லாத வர்களைச் சூத்திரர்கள் என்று பார்ப்பனர்கள் கூறும் சொற்படியே நாமும் கூறுகிறோமேயல்லாது, தாழ்மைப்படுத்திக் கூறுவது எமது கருத்தன்று.

சம்ஸ்காரமில்லாதவர்களும் சூத்திரர்களே என்று பார்ப்பனரும் அவர்களின் சமய நூற்களும் கூறினும், பார்ப்பன சமயத்தைப் பின்பற்றி யொழுகுவோர் யாரோ அவர்களைத்தான் இதனால் ஏற்படும் தீமைகள் சாரும். 1அதினின்றும் ஒழிந்தவுடன், ஜாதிச்சங்கிலி அறுபட்டுப் போவதால், அத்தகைய தன் மதிப்புள்ள ஒரு மனிதனைப் பார்த்து, நீ சூத்திரனாகப் பிறந்தமையால் எங்களுக்கு அடிமை; வீட்டுக்கு வந்து எனது கட்டளைப்படி நடக்கவேண்டும் என்று ஒரு பார்ப்பனன் கூறத்துணிவானோ? எவனேனும் இறுமாந்து மதிப்பைக் கெடுக்கக்கூடிய வார்த்தை யாதேனும் கூறுவானாயின், அக்கணமே பிறரால் நையப் புடைக்கப்படுவதோடு,

1. கிறிஸ்துக்கள், முகம்மதியர்கள், புத்தர்கள் முதலியோர்.

2கிரிமினல் சட்டப்படி தண்டனையும் அடைவானென்பது திண்ணம். ஆனால், பார்ப்பனரல்லாத ஓர் இந்து முன்சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதுதானே, அதனாலன்றோ வைக்கத்தில் பொதுவழியில் நடக்க உரிமை வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டும் பயன்படாது, ஓராண்டு காலமாய்க் கடுந்தவம் புரிகின்ற பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்கள் கிறிஸ்துவையோ முகம்மது நபியையோ சரணமடைந்தால், அடுத்த நிமிஷத்திலேயே இரத்தம் ஒழுகுகின்ற மாமிசத்தைக் கையில் தாங்கிக் கொண்டு எந்தப் பொதுவழியிலும் தடையின்றிச் செல்லும் உரிமையுடையவர் களாகின்றார்கள். இது ஜாதிச்சங்கிலி அறுந்து போனதனா லென்றே உணரவேண்டும். இந்துச் சமயத்தைத் தங்கள் சமயமாக ஒப்புக்கொள்ளும் பார்ப்பனரல்லாதாரைப் பார்ப்பனர்கள் தஸ்யு, தாஸன் 3விருஷலன் என்றும் மற்றும் இழிவாகக் கூறுவதிலும் இதினின்றும் விலகியவர்களைத் துரை (அரசன்), சாயபு (பிரபு) என்றும் அழைத்து உபசரிப்பதிலும் என்ன ஆச்சரியமிருக்கிறது?

இனி, ஒவ்வொரு வருணங்களையும் அவர்களின் ஒழுக்கங்களையும் பற்றிக் கூறுவோம். பார்ப்பனன் யாவன்? என்னும் வினாவிற்குப் பார்ப்பனியின் வயிற்றிற் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி முதலிய தரும சாஸ்திரமுறைப்படி விடை இப்படியே நடைபெறுவதையும் பார்க்கிறோம் அல்லவா? இஃதன்றி வேறு வகையாகவும் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:-

சமோதமஸ்தப: சௌசம்

க்ஷாந் திராஜவமேவச

ஜ்ஞானம் விஞ்ஞானம் மாஸ்திக்யம்

ப்ராஹ்மம் கர்ம, ஸ்வபாவஜம்

(கீதை - அத்தியாயம் 18)

பொருள்: ஞானேந்திரியம், கருமேந்திரியங்களை அடக்குதல், சுத்தி, பொறுமை, நல்லொழுக்கம், சாஸ்திரஞானம், அனுபவஞானம் இவை பிராமணனது இயற்கைக் குணங்களாம். முன்சொன்ன மனுஸ்மிருதிக்கும் இதற்கும் இருக்கிற வேற்றுமை, வீட்டுச் சுரைக்காய்க்கும், ஏட்டுச் சுரைக்காய்க்கும் உள்ள வேற்றுமை போன்றதே.

-(தொடரும்) நன்றி - விடுதலை

Saturday, November 27, 2010

ஞானசூரியன் - 4

மந்திரத்தை மறைத்து வை என்று எந்நூற்களைப் பற்றிப் பார்ப்பனர் கூறிக் கொண்டிருந்தனரோ, அவைகளையெல்லாம் அச்சு வாகனத்தில் ஏற்றி அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். குறைந்த விலைக்கும் விற்கின்றனர். வேண்டுவோர் பெற்றுப் படிக்கலாம். அவைகளில் சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உயிருக்குக் கேடில்லாமல் தெரிந்துகொள்ளலாம்; இதுவே நமது நற்காலம். இத்தருணத்தை நன்றியறிதலுடன் பயன்படுத்திக் கொள்வோமாக. இல்லாவிடில், செய்ந்நன்றி கொன்ற பாவத்திற்காளாவோம். ஆதலால், இந்துக்களின் சமய நூற்கள் எவை? அவைகளில் கூறப்படும் பொருள்கள் எவை? தலைவர்கள் யார்? இவைகளைக் குறித்து ஆராய்வோம்.
இந்துக்களின் சமய நூற்கள், சுருதம், ஸ்மிருதம் என இருவகைப் படும். சம்ஹிதைகள், பிராமணங்கள், உபநிஷத்துகள் ஆகிய இவைகளடங்கிய நான்கு வேதங்களைச் சுருத மென்பார்கள். இவ்வேதங்கள் முதல் முடிவில்லாதனவும் எவராலும் உண்டு பண்ணாதவையுமானதால் இப்பெயர் பெற்றதென்று ஒரு சரார் கூறுகின்றனர், மற்றொரு சாரார் வேதம் கடவுளால் உண்டு பண்ணப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், வேதம் கடவுளால் உண்டுபண்ணப்பட்டது என்றால், மனித இயற்கைக் குணமாகிய மறதியினால் ஒன்றொடொன்று முரண்படக்கூறுதல் முதலிய குற்றங்கள் வேதத்தில் ஏற்படும். இத்தகைய குற்றங்கள் வேதத்தில் இருப்பதாக, வேதத்திற்குத் தலைவனுளன் என்று ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் சொல்லவில்லையாதலால், மனிதனால் உண்டு பண்ணப்பட்டதன்று. இரண்டாவது குற்றமில்லாத ஈசுவரனால் செய்யப்பட்ட வேதத்தில் குற்றமில்லை என்று சொல்லுவோமானால், ஈசுவரன் ஒருவன் உளன் என்பதை உறுதிப்படுத்துவதற்கு வேதம் தவிர, வேறு பிராமண நூலில்லாததால் 1ஒன்றையொன்று பற்றிய குற்றம் உண்டாகும். ஆதலாலும் ஈசுவரனை வேதத்திற்குத் தலைவனாக ஒப்புக்கொள்ள முடியாது. (இவைகளில் சிருஷ்டி கர்த்தாவாகிய ஈசுவரனை இவர்களின் வேதத்தில்தான் நிலைபெறச் செய்யவேண்டும் என்பது உண்மையே) வேதம் நித்தியம் என்பதை நிலைநாட்டு வதற்கு ஓர் அனுமானப் பிரமாணமும் கூறுகின்றனர். அதையும் ஈண்டு எடுத்துக்காட்டுவோம்.
அது வருமாறு:
வேதாத்யயனம் ஸ்ர்வம், குர்வத்யயன பூர்வகம்
வேதாத்யயன ஸாமான்யாதாது னாத்யயனம்யதா
வேதம் கற்றுக்கொடுப்போர் மற்றொருவனிடத்திலிருந்து கற்றுக் கொண்டவர்களாதலால், வேதம் நித்தியம். அப்படியானால், முதன் முதல் கற்பிப்பதற்கு ஆசானாயிருந்த கடவுளுக்கு வேதம் கற்றுக் கொடுத்தவர் யார்? அவரே வேதத்தை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்தார் என்று கூறுவோமாயின், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்களைக் குறித்த, முற்றறிவும் ஈசுவரனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அவையனைத்தும் படைப்புக்கால முதல் இருந்தனவென்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அது பொருந்தாது; ஆதலால், ஈசுவரனுடைய முற்றறிவுக்கு விஷயமாகிய வேதத்தைப் படைப்புக்கால முதல் நினைத்துக் கற்பித்தார் என்று ஒப்புக்கொள்வதே யுக்திக்கு ஒத்ததாம்.

1. இதை வடநூலார் அன்யோன்யாஸ்ரய தோஷமென்பர் அல்லது பூர்வாபரவிருத்தம் என்பர்.

இந்த வாதத்தின் இனிமையையும் இந்த வாதத் தலைவர் களின்அறியாமையையும் விளக்கும் பொருட்டே இவ்வளவு தூரம் சொல்ல நேர்ந்தது. இனி, ரிக் ஸம்ஹிதையும், அய்தரேயம், கவ்ஷீதகி என்ற பிரமாணங்களையும் அய்தரேயாரண்கயகம் முதலிய உபநிஷத்துகளும் இருக்கு வேதத்தைச் சேர்ந்தவை. யஜுர்வேதம் ஒன்றையே கிருஷ்ண யஜுஸ், சுக்கில யஜுஸ் என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இவைகள் இரண்டிலுள்ள மந்திரங்கள் பெரும்பாலும் ஒரே விதந்தான். ஆனால், அம்மந்திரங்களின் வைப்பு, சற்று முறை பிறழ்ந்து காணப்படுகிறது. நிற்க, வேதத்திற்கும் கருமை, வெண்மை முதலிய நிறங்கள் உண்டா? என்று அய்யப்படுகின்றவர்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள் ஒரு கதை கூறுவது வழக்கம். அது வருமாறு:
வேதத்தைப் பகுத்த வியாச முனிவரின் சிஷ்யர்களுள் ஒருவரான வைசம்பாயனரிடம் யாக்ஞவல்கியர் வேதத்தை உணர்ந்தார். கடைசியாக ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வைசம்பாயனர் இவரிடம் மனத்தாபம் கொண்டு, தன்னிடம் கற்றறிந்த வேதங்களைத் திருப்பித் தரும்படி கேட்டார். யாக்ஞவல்கியரும் தமது தவ வலிமையால் தாம் கற்றுணர்ந்த வேதத்தைக் கக்கிவிட்டார். இவ்விதம் வாந்தி பண்ணப்பட்டவேதத்தைக் குருவின் ஆணைப்படி வைசம்பாயனருடைய மற்றைய மாணாக்கர்கள் விழுங்கி விட்டார்கள். அது சமயம் அவர்களது புத்தியானது தெளிவாக இல்லாமையால், இந்த யஜுஸ் கருமை நிறத்தை அடைந்தது. இதுதான், தைத்ரீய ஸம்ஹிதை என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. சதபதப் பிரமாணம், பிரகதாரண்ணிய கோபநிஷத்து ஆகிய இரண்டும் இதைச் சார்ந்தவையே. சுக்கில யஜுர் வேதத்திற்கு வாஜஸனேயீஸம்ஹிதை என்று மற்றொரு பெயரும் உண்டு. இதைச் சார்ந்ததே ஈசா வாஸ்யோபநிஷத்தாகும். ஸாமம், அதர் வணம்இவ்விரண்டிற்கும் கணக்கற்ற பிரமாணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. உபநிஷத்துகள் ஏராளமாக இருந்தாலும், ஏறக்குறைய பத்து உபநிஷத்துகளை 1வைதிகம் என்றும், மற்றவைகளை வேதத்திற்குப் புறம்பானவைகள் என்றும் சொல்லுகிறார்கள்.
உபநிஷத்துகளில் ஆன்மாவைக் குறித்த விஷயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பகுதியும் கவுதம புத்தன்
1. வேத சம்பந்தம்
பிறந்த பிறகே ஏற்பட்டவை. அல்லா உபநிஷத்தும், கிறிஸ்து உபநிஷத்தும் இருப்பதிலிருந்தே இவைகள் பிற்காலத்தியவைகள் என்பது தெளிவாய் விளங்கும். சமஸ்கிருத இலக்கியத்துள், ஃசந்தேச காவியம் என்ற ஒரு பகுதி இடைக் காலத்தில் ஏற்பட்டிருப்பது போல், உபநிஷத்து என்கிற ஒரு பகுதியும் ஏற்பட்டிருப்பது உண்மை. உபநிஷத்தை உண்டுபண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனாதியும் வேதமுமாகுமென்று உறுதிப்படுத்துவதற்கு, இந்த இந்திர ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்கி இருக்கிறார்கள். இதைப்பற்றி மற்றோரிடத்தில் விரிவாகக் கூறுவோம். இனி, ஸ்மிருதம் என்ற இரண்டாவது பிரிவில் ஆறு அங்கங்கள், புராணங்கள், தரும சாஸ்திரங்கள் (மனு, யாக்ஞவல்கியர் முதலியோரால் எழுதப் பெற்றவை) முதலிய நூல்களும், ஆகமங்களும் தரிசன கிரந்த (நியாய, வைசேஷிக, சாங்கிய, யோக, வேதாந்த)ங்களும் அடங்கும். இவற்றுள் ஆறு அங்கங்களாவன: வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருமங்களைச் செய்யும் முறையை விவரித்துக் கூறுவனவும், வேத மொழியிலுள்ள சில தனிப்பட்ட சொற்களுக்குப் பொருளையுணர்த்துவனவுமாகும். மேற்கூறப்பட்ட 1தரிசன நூற்கள் ஆறும், கவுதம ஸ்மிருதி முதலிய சில தர்ம சாஸ்திரங்களும் 2ப்ராதி சாங்கியங்களும், 3சூத்திர வடிவினவாக இருக்கின்றன.
தரிசனங்களுள் சாங்கியமும், வேதாந்தமும் தவிர ஏனைய பூர்வ மீமாம்சை, நியாயம், வைசேஷிகம், யோகம் இவைகளைச் சமயக் கொள்கையுடன் பெரும்பாலர் ஏற்றுக்கொள்வதில்லை; புராணங்கள் பதினெட்டு; அன்றியும் புராணங்கள் என்ற பெயருடன் அளவற்ற நூற்களும் காணக்கிடக்கின்றன. தருமம் என்ற சொல்லுக்கு, நூன்முறைப்படி ஒவ்வொரு வருணத்தானும் கட்டாயம் செய்யத்தக்க தொழில் என்றே பொருள் கொள்ளக்கிடக்கின்றது. இதற்கு உதாரணமாகச் சோதனா,
ஃ. சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் இவை ஆறுமாம்.
1. தரிசனம் - சாஸ்திரம்
2. இதற்குச் சரியான தமிழ்ப் பெயர் விளங்கவில்லை. ஆயினும், வட மொழியிலும் வேறு பெயர் காணப்படவில்லை. இது வேத இலக்கியத்திற்கு இலக்கணமாமென்பர்.
3. சூத்திரம் - குறள்.
லட்சணோர்த்தோ தர்மம் (ஒவ்வொரு வருணத் தானையும் தத்தந் தொழிலில் ஏவுவதாகிய இலக் கணத்தையுடையதே தருமம்) என்று ஜைமினி பூர்வமீமாம்சையிற் கூறுகிறார். எனவே, அவசியம் செய்யத்தக்க தொழில் என்பதனால், யாகம் முதலியவைகளைச் செய்தே தீரவேண்டும் என்பது பெறப்பட்டது.

ஞானசூரியன் - 3

ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.

இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த

1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.

நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.

அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.

இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.

எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்

1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.

அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.

இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,

பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்

சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்

அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர

புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.

1சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.

1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.

இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.

ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.

ஞானசூரியன் - 2

ஞான சூரியன்

முதல் அத்தியாயம்

சக்தி சத்தர் சனாதனப் பேரொளிச்

சித்தர் முத்தர் திருமிகு மேனியர்

சுத்த நெஞ்சுறுத் தூய்மைகண் டுய்ந்திடப்

பத்தி யாலவர் பாதம் பணிகுவாம்

செழுந்தமிழ்க் குடித்தீரரே; வீரரே;

எழுந்து மின்னே இழிதகை யோர்ந்துநாம்

அழுந்தி நாளும் அடிமைசெய் காரணம்

கொழுந் தறிவினிற் கூர்ந்துணர் வாமரோ.

நமது நாட்டின்கண் தமிழர்களாகிய (திராவிடர்கள்) நம்மவர்கள் கல்வி கற்பதில் சிறிது காலமாகவே ஊக்கங்கொண்டு உழைத்து வருகின்றனர். அதன் பயனாக, நம்மவர்களின் மனக்கண்ணை மூடியிருந்த அறியாமை என்னும் மாசு சிறிது சிறிதாக நீங்கிற்று. நீங்கவே, இதுவரையிலும் நம்மை ஏமாற்றி வந்த ஆரியப் பார்ப்பனர்களின் சமய நூற்களாகிய, சிரவுத, ஸ்மார்த்த தருமங் களின் மேற்பூச்சு விளங்கலாயிற்று. அதனால், அந்நூற்களில் நமக்கிருந்த மதிப்பு குறையலாயிற்று. எதிர்காலத்தில் நம்மவர்கள் அடையும்படியான மேல் நிலையைக் குறிக்கிற இத்தருணத்தில், ஆரிய சமாசத்தினர், இந்து சபையார், பிரம்மசமாசத்தினர் முதலிய பல குழுவினரும் மேற்சொன்ன நூற்களின் பழைய பூச்சைத் துடைத்துப் புதிதாகப் பூசி மினுக்குமாறு, வேஷத்துடன் நம்மவர்முன் காட்டி, நம்மவர்களை ஏமாற்ற முயன்று வருகிறார்கள். எனவே, இவர்களின் எண்ணத்தை உற்று நோக்குமிடத்து, மேற்குறித்த சமய நூல்களிலுள்ள மூட நம்பிக்கைகளை நம்மவர்களின் உள்ளத்தில் தழைத்தோங்கி வளரச் செய்து, நம்வர்களை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியினின்றும் கரையேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்பதேயல்லாது வேறில்லை என்றே கொள்ளக் கிடைக்கும். இவர்களின் முயற்சியும் சிறிது சிறிதாகப் பயன்கொடுத்துக் கொண்டே வருகிறது. இம்மைக்குரிய பயன்களுள் சிலவற்றை இவர்களின் வயப்பட்ட (சூத்திரர் என்று அழைக்கப்படுகிற) நம்மவர்கள் அடைகின்றார்களெனினும், பார்ப்பன நூற்களாகிய வேதம், ஸ்மிருதி முதலியவைகட்கு இவர்கள் சொல்லுகிற யுக்தி வாதங்களும், உரைகளும் அந்தந்த நூற்களுக்கு1 மகீதரர் முதலிய பழைய உரையாசிரியர்களின் கருத்திற்கு ஒத்திட்டுப் பார்த்த பிறகே ஒப்புக்கொள்ளத் தக்கவை. இதற்காக முயற்சிப்போர், தயானந்த திமிர பாஸ்கரம் முதலிய நூற்களின் ஆசிரியரான2 பண்டித ஜ்வால்ப்ரஸாத் மிஸ்ரஜி முதலிய மேதாவிகளைப்போல் இவர்களைக் கண்டிக்க முற்படுவார்கள். நாம் இங்கு எதைக்குறித்து ஆராயப்போகிறோம் என்றால், நமது நாட்டில் யாவராலும் பிராமணங்களாகக் கொள்ளப்படுகின்ற வேதம், ஆகமம், ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களையும், அவைகளின் உண்மைக் கருத்துகளையுமேயாம். பகவான் புத்தன் அவதரிப்பதற்கு முன்னும் அதன் பின்னரும் உள்ள நமது தேச சரித்திரத்தைப் பதினாறு ஆண்டுகளாக ஆராய்ந்தவுடன், நமது தேசம் முழுவதும் நேபாளம், காஷ்மீரம், சிலோன் முதலிய பல தேசங்களிலும் சஞ்சரித்து, அந்தந்த தேசத்தார்களின் முற்கால, தற்கால வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் அறிஞர்களிடத்தும், சரித்திர வாயிலாகவும், நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததன் பயனாகத் தமிழ் மக்களாகிய நம்மவர்கள் நெடுநாட்களாகவே அடிமைப்படுகுழியில் தள்ளப்பட்டிருப் பதையும், கரையேற முயற்சி செய்யாதிருப்பதையும், அறிந்த யான் நம்மவர்களின் முன்னேற்ற வழியை எடுத்துக் கூறத் துணிந்தனன். இதனால் நம்மவர்கள் அறியாமை என்னும் நித்திரையை விட்டெழச் செய்து, சமய நூல்களில் மனத்தை ஒருமுகப்படுத்திக் கீழ்க் கூறுகின்ற பொருட்களைப் படித்தறியும்படி மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி இல்லாமல் ஒருவரை யொருவர் ஆட்டு மந்தையைப்போல் பின்பற்றி நடக்கும் இயற்கையுள்ள நம்மவர்களுக்கு, உண்மையை அறிய வேண்டுமென்னும் விருப்பமும், அதற்குரிய ஆற்றலும் மேன்மேலும் பெருகி வளரும்பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

உயிர்களுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் இயற்கையிலேயே எற்பட்டுள்ளது. இதன் பொருட்டே முயற்சியும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதற்கு எதிர்மறையான பலனை அனுபவிக்க நேருவதும் உண்டு. ஆயினும், எல்லா உயிர்களும் மேன்மையைத்தான் விரும்புகின்றன. இந்த மேன்மையும் இம்மைக்குரியது, மறுமைக்குரியது என இருவகைப்படும். மனிதன் தன்னால் பழக்கப்பட்ட எந்த விஷயத்திலும் நிறைந்த சுகத்தை அனுபவிக்காததனால், உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் முதன் முதலாக மனிதனது உள்ளத்தில் எழுந்தன. இவ்வாறு எழுந்ததன் பயனாகவே இப்போது பல வேற்றுமைப்பட்ட கொள்கையுடைய பல்வேறுவகைச் சமயங்களைக் காண்கிறோம். அவைகளில் இவ்வேற்றுமையினால் சமூக முன்னேற்றத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன பிரிவினையானது எல்லாச் சமயத்தினராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளத் தக்கதேயாகும். இதில் சமுதாயத்தை (ளுடிஉயைட), கல்வித்துறை (நுனரஉயவடியேட), ஒழுக்கம் (ஆடிசயட), அரசியல் (ஞடிடவைஉயட) ஆகிய நான்கு வகையான முன்னேற்றங் களையும் இம்மைக்குரியது என்கிற முதலாவது இனத்திலும், தவம், யோகம், ஞானம், இவைகளை மறுமைக்குரியது என்கிற இரண்டாவது இனத்திலும் சேர்க்க வேண்டும். இம்முன்னேற்றங்கள் எல்லாச் சமயங்களுக்குள்ளும் ஒரே தன்மையா யிருப்பின், வேற்றுமைகளுக்கு வழியேயில்லை. ஆனால், உருவங் களுள் வேற்றுமை காணப்படுவதுபோலச் சமுதாய விஷயங்களிலும் வேற்றுமை காணப்படுகின்றது. மேற்கூறிய வேற்றுமைகளால்தான் மத வேற்றுமைகளும் உண்டாயின.

சமயங்களின் காலம்

இந்து சமயம் உற்பத்தியாகி இன்றைக்கு நூற்றுத் தொண்ணூற்றாறு கோடியே எட்டு லட்சத்து அய்ம்பத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெழுபத்தாறு (196,08,52,976) ஆண்டுகள் ஆகின்றனவென்று, ஆரிய சமாசத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி கணக்கிட்டுக் கூறுகிறார். அதற்கு அவர் ஏழு மனுக்களையும் அவர்களின் அரசாட்சிக் காலத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வளவு காலப் பழக்கமுள்ள இந்தச் சமயத்தைத் தங்கள் சமயமென ஒத்துக் கொள்வோரின் தொகை இருபத்தொன்றரைக் கோடியாகும். முகம்மதிய மதம் எற்பட்டு 1372 ஆண்டுகளாகின்றன. முகம்மதியர்களின் தொகை முப்பத்துமூன்று கோடியாகும். கிறிஸ்து மதம் உண்டாகி 1956 ஆண்டுகளாகின்றன. கிறிஸ்தவர்களின் தொகையோ அய்ம்பது கோடியாகும். 2498 ஆண்டாகப் புத்தரையும், திரிபீடக நூலையும் நம்புகின்றவர்கள் அறுபதுகோடி மக்கள் இருக்கிறார்கள்.

இனி இருபத்தொன்றரைக் கோடி இந்துக்களுள் ஒன்றரைக்கோடி மக்கள் பார்ப்பனர்களாவார்கள், ஏனையோர் பார்ப்பனரல்லாதவர்கள். இந்தக் கணக்குப்படி பார்ப்பனரல்லாதவர்களுள் பதினெட்டுப் பேர்களுக்கு ஒரு பார்ப்பனப் புரோகிதன் ஆகின்றான் என்று கணக்கிடலாமன்றோ? மேற்கூறிய ஒன்றரைக் கோடி பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதாரின் இனத்திலிருந்து ஒவ்வொரு காலங்களில் பார்ப்பனர் களாக மாற்றப்பெற்றவர்களும், தாங்களாகவே மாறினவர்களுமாவார்கள். குமாரில பட்டர், சங்கராச்சாரியார், இராமாநுசர், மத்துவர் முதலிய மதாச்சாரியார்கள் அநேக தடவைகள் சூத்திரர்களைப் பார்ப்பனராக்கியதாகச் சங்கர திக்விஜயம் முதலிய நூல்களாலும் தேச சரித்திரங்களாலும் அறியக் கிடக்கின்றது. உண்மையில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களல்லரென்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு, இவர்களையும் இந்துக்க ளென்றும் கூறி ஏமாற்றிய தாகவும் கொள்ளவேண்டும். இப்படிக்கிருந்தால், உண்மை இந்துக்கள் (ஒன்றரைக் கோடி) எவ்வளவு குறைவு என்பதைக் காரணத்துடன் ஆராய்வோம்.

இந்துக்கள் தவிர, மற்ற எல்லா மதத்தினருக்கும் தங்களுக்கெனச் சொந்தமான ஒரு மதத்தலைவரும், அத்தலைவரால் பரம்பரையாக வெளியிடப்பட்ட மதக் கொள்கைகளும், இவைகளடங்கிய மத நூலும் அம்மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவாக உண்டு. விளக்கமாகக் கூறுங்கால், முகம்மதியர் களுக்கு முகம்மதுநபி என்ற சமயத் தலைவரும், குரான் என்ற மத நூலும் அம்மதத்தில் பொதுவாக இருக்கின்றன. இவர்களுள் ஒவ்வொரு ஆண் மகனும், பெண்களும் தங்கள் குருவையும் மத நூலையும் மதத் கொள்கைகளையும் முறையே அன்புடன் வணங்கியும், போற்றியும் வருகிறார்கள். புத்த சமயிகளுக்குப் புத்தர் என்னும் மதத்தலைவரும், திரிபீடகம் என்னும் மத நூலும் இருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறே கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்து என்னும் மதத் தலைவரும் பைபிள் என்னும் மத நூலும் இருக்கின்றது. இந்துக்கள் நீங்கலாக மற்ற சமயத்தினரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நூல்கள் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தந்த மொழியிலேயே அதைப் படிக்கவும், அதில் சொன்னபடி ஒழுகவும் அதிகாரமுண்டு. இதில் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை காட்டப்படுவதேயில்லை. இவ்விதம் சமய நூற்களைக் கற்று, அதன்படி ஒழுகாத ஒருவனை நிந்திக்கவும் செய்கிறார்கள்.

ஞானசூரியன் - 1

ஞானசூரியன் ,(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.

முன்னுரை

இந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.

இதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை திருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.

இந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளி யிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.

இவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.

சிறப்புரைகள்

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது

ஞானசூரியன் கூறும் பொருள் களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.

அவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப் பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.

பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.

வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.

சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை 7.10.1927

எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட

திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.

தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.

சென்னை, கா.சுப்பிரமணியபிள்ளை

24.10.1927.

மறைமலை அடிகளார் கருத்து

ஞான சாகரம் பத்திராதிபர்
சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:

-

வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.

பல்லாவரம் சுவாமி வேதாசலம்

7.10.1927

ஆரியர் சித்தாந்தம்

அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.

(13-10-1935 குடி அரசு பக்கம் 9)

இந்து மதம் ஒழிகிறது

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.

(17-10-1935 குடி அரசு பக்கம் 11)

பெண்களும் - கற்பும்

பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

(3-11-1935 குடி அரசு பக்கம் 13)

சூத்திரர்கள் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

(19-9-1937 குடி அரசு பக்கம் 9)

--- நன்றி விடுதலை நாளிதழ்

Thursday, November 25, 2010

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்!

நாட்டைப் பீடித்த 5 நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்னாலும் சொன்னார் - அதனை நாள்தோறும் மக்கள் அனுபவித்துத் தீர வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டு விட்டனர்.

யாரை வேண்டுமானாலும் இந்தப் பத்திரிகைப் பிர்மாக்கள் விமர்சிக்கலாம் - களிமண்ணைக் கடவுள் என்று கூறலாம்; கடலை வாய்க்கால் என்று வருணிக்கலாம். கூழாங்கல்லைக் கோமேதகம் என்று கூசாமல் சொல்லலாம் - கோமேதகத்தின் மீது எச்சில் துப்பலாம்.

கொலை வழக்கில் சிக்கிய ஆசாமியை ஜெகத்குரு என்று எழுதுவதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. ஆனால், எந்தவிதத் திலும், எந்த ஆவணத்திலும் ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்று சொல்லப்படாத நிலையில், ஸ்பெக்ட்ரம் ராஜா என்று முத்திரை குத்தி, பதவியைப் பறித்து மூலையில் ஒதுக்குவதற்கு முண்டியத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படி யாரையும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று விமர்சிக்கும் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் எல்லாம் உத்தமப் புத்திர சிகாமணிகள்தானா? ஊழல் என்பதை ஊறுகாய் அளவுக்குக் கூடத் தொட்டுக் கொள்ளாதவர்கள்தானா?

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களா? முதலாளிகளின் கையு றையாக இருக்க மறுப்பவர்களா?

இந்தக் கேள்விகள் இப்பொழுது மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச் சராகவிருந்த ஆ.இராசா விடயத்தில் ஊட கங்கள் நடந்துகொண்டுவரும் முறைகளைப் பார்த்ததற்குப் பிறகு - சாமான்ய மக்கள்கூட ஊடகங்கள் மீது வெறுப்பு நெருப்புத் துண்டு களைக் கக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் கீழிறக்கத்தைக் கண்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூறும் அளவுக்கு ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் குப்பைத் தொட்டிகளாகி விட்டன.

ஊடகத்துறையை விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால் அவர்களின் சாபத்துக் கும், சக்ராயுதத்துக்கும் பலியாக நேரிடுமே என்று எண்ணியிருந்த அச்ச மாயையை தமிழ் ஊடகப் பேரவைக் கிழித்து எறிந்துவிட்டது.

பத்திரிகைத் துறை என்பதும் ஒரு தொழில்தான் - அதிலும் ஏராளமான உருட்டல் - புரட்டல்கள், ஊழல் குப்பைகள் - உள் குத்துகள், முதுகுக் குத்துகள், கையுறைக் கையூட்டுகள் அச்சுறுத்திப் பணம் பறிப்புகள் (பிளாக் மெயில்) முதலாளிகளின் முகவர்கள் (ஏஜெண்ட்) மதத் தலைவர்களின் பினாமிகள் என்று ஏராளம் உண்டு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகார வர்க்கத்துடன் உறவுகொண்டு, சிங்களவர்களின் ஏஜெண்டுகளாகப் பணி யாற்றி, அவர்கள் கொடுக்கும் சன்மான எச்சில் மூலம் மாட மாளிகைக் கட்டி வாழ்ந்து வருப வர்கள் யார்?

தமிழர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களின் ரத்தத்தையே சந்தனமாகக் குழைத்துத் தடவிக் கொண்டிருக்கும் பத்திரி கையாளர்கள்பற்றி அறியமாட்டோமா?

இதுவரை மற்றவர்களைப் பற்றி விமர் சிக்கும், சேறு வாரி இறைக்கும் இந்தப் பத் திரிகை உலகம் - விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல - விமர்சிக்கலாம் - நன்றாகவே விமர்சிக்கலாம் - நார் நாராகவும் கிழிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை தமிழ் ஊடகப் பேரவை ஊட்டிவிட்டது! (வாழ்க தமிழ் ஊடகப் பேரவை!).

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (24.11.2010 மாலை). ஆ. இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் தமிழ் ஊடகப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும், விடுதலை ஆசிரியரு மான (48 ஆண்டுகாலம் விடுதலையின் ஆசிரியர்) மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இப்படி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பரம் வந்தது முதல் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தன. குற்றமுள்ள ஊடகக்காரர்கள் மத்தியில் ஒரு சொர சொரப்பும், குருதிக் கொதிப்பும் இருந்ததாகக் கேள்வி.

மாலை 6.30 மணிக்குக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. இந்த மன்றத்தில் இதுவரையிலும் இந்த அளவு மக்கள் திரள் நிரம்பி வழிந்ததில்லை என்பது பத்திரிகையாளர்களின் கணிப்புக்கூட.

ஒரு பரபரப்போடு பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழ் ஊடகப் பேரவையின் நோக்கம் குறித்தும் கடந்த ஏழ ஆண்டுகாலத் தில் அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் நிறுவனரான வளர்தொழில் ஆசிரியர் க. ஜெயகிருட்டிணன் தம் வரவேற்புரையில் எடுத்துக் கூறினார்.

மாதந்தோறும் இவ்வமைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது - பல்வேறு பொதுப் பிரச் சினைகள் குறித்து விவாதங்கள், சிறப்புரை கள், காட்சி உரைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக் கின்றன.

பத்திரிகையாளர்கள் மட்டத்தில் இருந்த இந்தப் பேரவையின் செயல்பாடு மக்கள் மத்தியில் இப்பொழுதுதான் முதன்முதலில் வெளிவந்திருக்கிறது - இனியும் வரும் என்று வரவேற்புரையில் தோழர் செயகிருட்டிணன் குறிப்பிட்டார்.

ரமேஷ் பிரபா

சன், கலைஞர் தொலைக்காட்சிகள்மூலம் நன்கு அறியப்பட்ட தோழர் ரமேஷ் பிரபா, தொலைக்காட்சியில் அவர் மேற்கொண்டு வரும் இயல்பான யதார்த்தமான மொழியில் சில கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறீர்களா? அதன் பாரதூர விளைவுகள் பற்றி யோசித்தீர்களா? என்று தம் நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எடுத்த எடுப்பி லேயே விடை பகன்றார்.

இதில் கலந்துகொள்வதால் என்னாகும் என்று நினைப்பது - யோசிப்பது - தயங்குவது என்பது வியாபாரக் கணக்காகும். இதில் கலந்துகொள்ளவேண்டும், நம் கடமையைச் செய்யவேண்டும் என்று நான் முடிவு செய்தது - நியாய உணர்வு - இன உணர்வு ஆகும் என்று அவர் சொன்னபோது மண்டபமே அதிரும் அளவுக்கு அப்படியொரு கையொலி!

(எல்லாவற்றையும் ரூபாய் அணா கண்ணோட்டத்தில் பார்த்துப் பாழாய்ப் போகும் இனவுணர்வற்ற தமிழர்கள் - ரமேஷ் பிரபாவின் இந்தப் பொறிதட்டும் உணர்வுக்குப் பிறகாவது, தங்கள் தங்கள் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ரோஷம் பெறுவார்களாக!)

ஆ.இராசாமீது சொல்லப்படும் குற்றச்சாற்று ஒரு யூகத்தின் அடிப்படையில் கற்பனைக் குதிரையின்மீது சவாரி செய்யும் அற்பக் குற்றச்சாற்று என்பதற்கு ரமேஷ் பிரபா மாந்தோப்புக் கிளி திரைப்படத்திலிருந்து சுருளிராஜனின் விகடத்தை எடுத்துக் காட்டினார்.

பள்ளிக்குச் செல்லும் தன் மகனுக்குப் பேருந்து செலவுக்காக 5 ரூபாய் கொடுத்தார் அவனின் அப்பா.

மாலையில் பள்ளியிலிருந்து வந்த மகன் அப்பாவைப் பார்த்து அப்பா நீ கொடுத்த 5 ரூபாயை மிச்சப்படுத்தி விட்டேன் என்றான். என்னடா கதை விவரமாகச் சொல்லு என்றார் அப்பா.

நான் பேருந்தில் பயணம் செய்யாமல் பேருந்தின் பின்னாலேயே ஓடி பள்ளிக்குப் போய்விட்டேன் - 5 ரூபாய் மிச்சம் என்றான் மகன்.

அட மடையனே, பேருந்தின் பின்னால் ஓடாமல் ஆட்டோவின் பின்னால் ஓடியிருந்தால் 50 ரூபாய் மிச்சப்பட்டு இருக்குமே! (பலத்த சிரிப்பு) என்று சுருளிராஜன் சொல்லுவார். அந்தக் கதைதான் 2ஜி ஸ்பெக்ட்ரமில் இராசா ஊழல் செய்தார் என்பது என்று எடுத்துக் காட்டியது சுவையானது என்பதைவிட சுருக்கென்று புரிய வைக்கக் கூடியதாகும்.

மின்னணு ஊடகக்காரர்கள் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகளை - அத்துறையில் அவருக்கு அளப்பரிய அனுபவத்தின் காரணமாக எடுத்துரைத்தவர்.

தமிழ்த் தொலைக் காட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில செய்தியைத் திடீரென்று போடும்போது முக்கிய செய்திகள் என்று போடுவோம். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என்று போடுவார்கள். அதன் உண்மையான பொருள் பெரும்பாலும் உண்மைகளைத் தகர்ப்பதாகவே இருக்கும்.

ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டி காண்போர் கடைபிடிக்கும் ஒரு தந்திரம் - அதனையும் அம்பலப் படுத்தினார்.

யாரிடம் பேட்டி காண்கிறார்களோ, அவர்களைப் பெரும்பாலும் பேசவிடுவதில்லை. பாதி வார்த்தையைப் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே இடையில் புகுந்து, மடக்குவதுபோல வேறு விஷயத்துக்குச் சென்று திணற வைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூடுமான வரை அடுத்தவர்களைப் பேச வைப்பதில்லை. மாறாக, இவர்களின் கேள்விகள்தான் ஆதிக்கம் செலுத்தும்.

முதலில் இதனை முறியடிக்க வேண்டும் - கேள்வி கேட்பவர்களைத் திருப்பிக் கேள்வி கேட்டுத் திணற அடிக்கவேண்டும். அந்த நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் அடங்குவார்கள் (நுனி நாக்கு ஆங்கிலம், மூச்சு முட்டப் பேசும் திறன் உள்ளவர்கள்தான் அறிவாளிகள் என்று நினைக்கும் அப்பாவித் தனத்திற்கும், மூடத்தனத்துக்கும் முடிவு கட்டவேண்டும்).

எல்லோரிடமும் இதே பாணியில் நடந்துகொள் கிறார்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது தங்களுக்குச் சாதகமானவற்றை வரவழைக்கவேண்டும் என்று நினைத்து வேறு சிலரிடம் பேட்டி காணும்போது, எவ்வளவுப் பவ்யமாக அமர்ந்து, அவர்கள் கூறுவதைக் கடைசிவரைக் கேட்டு, அடுத்த கேள்விக்குப் போகிறார்கள். இது என்ன பத்திரிகை தர்மம்?

இன்னொரு தகவல் தோழர் ரமேஷ் பிரபா கூறியது கோடிட்டுக்கொண்டு படிக்கவேண்டியதாகும்.

ஒருவரைப்பற்றி செய்தி சொல்லும்போது, பக்கத்தில் அதற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் சம்பந்தப்பட்டவர் சாப்பிடுவது, நடப்பது, மூக்கு நோண்டுவது வரை படங்களாக (விஸுவல்) காட்டுவது நாகரிகமும் அல்ல - நேர்மையானதும் அல்ல - விஷமத்தனமானது.

இன்னொன்று, அமைச்சர் ஆ.இராசா டில்லியிலிருந்து ஊருக்கு வருவதை எப்படி செய்தியாக்குகிறார்கள்? ராஜா எஸ்கேப்!

ராஜா எஸ்கேப் ஆகி வெளிநாடு சென்றுவிட்டாரா? தலைமறைவாகி விட்டாரா? ஏனிந்த கேவலமான பிரச்சாரம்? ஒருவரை அசிங்கப்படுத்தவேண்டும் என்று அந்த வட்டாரம் நினைத்துவிட்டால், எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கீழ்த்தரப் புத்திதானே இதில் நெளிகிறது?

(கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி செய்தி ஒளிபரப்பியபோது அவர் நடப்பது, சாப்பிடுவது, கைப்பேசியில் பேசுவது (யாருடன் பேசினார் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும்!) என்பது போன்ற காட்சிகளைக் காட்டியதுண்டா?)

ஓர் அரிய புள்ளி விவரம்:

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.

உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை (கூசுஞ) அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:

சி.என்.என். அய்.பி.என். மும்பையில் பார்ப்போர் 0.24

கொல்கத்தாவில் 0.06

டில்லி 0.21

சென்னை 0.03

பெங்களூரு 0.11

அய்தராபாத் 0.17

சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி.

மும்பை 0.16

கொல்கத்தா 0.11

டில்லி 0.13

சென்னை 0.14

பெங்களூரு 0.07

அய்தராபாத் 0.06

சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ்

மும்பை 0.08

கொல்கத்தா 0.08

டில்லி 0.09

சென்னை 0.33

பெங்களூரு 0.19

அய்தராபாத் 0.12

சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?

ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.

ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.

இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!

அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!

புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்

ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

(தொடரும்)----- விடுதலை, மின்சாரம் (25-11-2010)

பிகாரில் தங்கள் கொள்கைக்கு மக்கள் பேராதரவு அளித்துவிட்டனர் என்று பா.ஜ.க. கூத்தாட முடியாது

பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட அதிகளவில் அய்க்கிய ஜனதா தளத்துக்கு இடங்கள் கிடைத்துள்ளன.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டுச் சேர்ந்ததால், பா.ஜ.க.வுக்கும் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க.வைப் புறந்தள்ளியிருந் தால், அந்த இடங்களும் அய்க்கிய ஜனதா தளத்துக்கே கிடைத்திருக்கும்.

பிகாரில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு தங்கள் கொள்கைக்கு மக்கள் பேராதரவு அளித்துவிட்டனர் என்று பா.ஜ.க. கூத்தாட முடியாது.

நிதிஷ்குமார் ஆட்சியில் மக்கள் பெற்ற நலன் களுக்காக, வளர்ச்சித் திட்டங்களுக்காக வாக்கு அளித்துள்ளனர். அதற்கான ஆதரவு கிடைத்திருக் கிறதே தவிர - இதில் பி.ஜே.பி.,க்கு மக்கள் ஆதரவு தந்துவிட்டனர் என்று உரிமை கொண்டாடுவதற்கு இடம் இல்லை.

(கடைசிக் கட்ட தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராகவே அத்வானி பேசினார் என்பது கவனிக் கத்தக்கது).

இன்னும் சொல்லப்போனால் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதிஷ் அழைக்கவே யில்லை. குறிப்பாக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிகார் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கறாராகவே அடித்துக் கூறிவிட்டார்.

பிகாரில் வெள்ளம் சூழ்ந்தபோது, அதனைப் பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி வருகிறார் என்று சொல்லி நிதிஷ்குமாரோடு - மோடியின் படத்தையும் இணைத்துச் சுவரொட்டி ஒட்டப்பட்டது என்றவுடன், உடனடியாக அவற்றை அகற்றுமாறு முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் உத்தர விட்டார். வெள்ளப் பகுதியைப் பார்வையிட எல்.கே. அத்வானி வந்தபோதுகூட அவரை வரவேற்க முதலமைச்சர் நிதிஷ்குமார் செல்லவில்லை.

கொள்கையளவில் பா.ஜ.க.வோடு எந்த வகை யிலும் ஒத்துப் போகக்கூடியவரல்லர் நிதிஷ்குமார். பிகார் மாநில அரசியல் சூழலில் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி இருக்கிறதே தவிர, வேறு எந்த வகையான காரணமும் கிடையாது.

நிதிஷ்குமார் சாதனைக்குக் கிடைத்த வாக்கு கள் என்கிறபோது மக்கள் சாதனைகளுக்காக வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை கணிக்க முடிகிறது. அதன் பிரதிபலிப்பை 2011 இல் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காணலாம் - அதற்கான அறிகுறியே பிகார் தேர்தல் என்பதில் அய்யமில்லை.

இந்தத் தேர்தலில் லாலுபிரசாத் அவர்களின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தியும், காங்கிரசும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாகக் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டுக் குதித்து குதிகால் எலும்பு முறிந்தது தான் கண்ட பலன். உத்தரப்பிரதேசத் தேர்தலி லிருந்தாவது புத்தி கொள்முதல் கண்டிருக்க வேண்டும். அனுபவமே தலைசிறந்த ஆசான் என்பதை 125 ஆண்டுகள் வரலாறு படைத்த காங்கிரசுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே!

வடநாட்டைப் பொறுத்தவரை லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஒரு மேசைமுன் அமர்ந்து பேசி நல்ல தோர் முடிவை எடுப்பார்களேயானால், அதன் அலைவீச்சு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறு பான்மையினரும் இணைந்து கைகோத்து நிற்பார் களேயானால், அதுதான் உண்மையான பகுஜன் ஆகும்.

இதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் கன்ஷிராம் விரும்பினார். அவர் மறைவுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி சந்தர்ப்பவாதமாக, பார்ப்பனர் களையும் இணைத்துக் கொண்டு கொட்டிக் கவிழ்த்துவிட்டார்.

அடுத்து உத்தரப்பிரதேசத்திலும் தேர்தல் நடக்கப் போகிறது. பார்ப்பனப் பிடியிலிருந்து விலகி, கன்ஷிராம் விரும்பிய உண்மையான பகுஜனை (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) உருவாக்குவது நல்லது!

இதன்மூலம் பா.ஜ.க.வை தம் அணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேற்றவும் வசதியாகுமே!
------- விடுதலை தலையங்கம் ()

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!... அய்வருக்கும் தேவி அழியாத பத்தினிக் கதைதான்..

மக்களில் Common Mass என்று கருதப்படும் சாமான்ய மக்களுக்கு 1-ஜி, 2-ஜி, 3-ஜி அலைக்கற்றை, தொழில் நுட்பம் குறித்து அடிப்படைத் தகவல் கள்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு மிகவும் வாய்ப்பாக போய்விட்டது. தொழில்நுட்ப ரீதியான அந்தத் தகவல்களையும் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

1-ஜி என்பதுFirst Generation என்று சொல்லப்படும் முதல் தலைமுறை தொழில்நுட்பம். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருந்ததால், ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்போன் சேவை இருந்தது.

இந்தச் சேவையை தனியார் நிறு வனங்களான மோட்டரோலா, ஆர்.பி.ஜி., பி.பி.எல்., போன்ற நிறு வனங்கள் மட்டுமே வழங்கி வந்தன. அப்பொழுது பி.எஸ்.என்.எல். என்னும் பொதுத் துறை உருவாகவில்லை. அப் பொழுது இருந்த அரசுத் துறையான தொலைத்தொடர்புத் துறை (DOT) இந்த செல் சேவையில் இறங்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசும் (வாய்ஸ் மெயில்) வசதி, பேஜர் சேவை வசதி (பேஜர் சர்வீஸ்) மட்டுமே 1-ஜி தொழில் நுட்பத்தில் வழங்க முடிந்தது. அப் பொழுது செல்போனின் வெளி அழைப்பு கட்டணம் ரூ.16 ஆக இருந்தது.

1-ஜி-க்கு பிறகு வந்த தொழில்நுட்பம் தான் 2-ஜி.

2-ஜி என்பது Second Generation என்று சொல்லப்படும், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம்.

2-ஜியின் அலைக்கற்றை வரிசை 900MHZ மற்றும 1800 MHZ

(1 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1000 கிலோ ஹெர்ட்ஸ், 1 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1000 ஹெர்ட்ஸ்)

அதிக வேகம் உடையதால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சேவை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தன. பி.எஸ்.என்.எல். பொதுத்துறை 2002 ஆம் ஆண்டிலிருந்து செல்போன் சேவையில் நுழைந்தது. இந்த 2-ஜி அலைக்கற்றை தொழில் நுட்பத்தில் வாய்ஸ் கால் எனப்படும் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி சேவை, இண்டர் நெட் ப்ரவுசிங் எனப்படும் இணையத் தேடல் சேவை, புளூ டூத் (படங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்), எம்.எம்.எஸ். போன்ற மதிப்புக் கூட்டு சேவைகள் இந்த 2-ஜி தொழில் நுட்பத்தில் கிடைத்தன.

ஆரம்ப காலத்தில் இதில் அழைப்புக் கட்டணங்கள் அவுட்கோயிங் ரூ.1.80 ஆகவும், இன்கமிங் 0.90 பைசா ஆகவும், எஸ்.எம்.எஸ். கட்டணம் 0.80 பைசா ஆகவும் இருந்தன. தனியார் நிறுவனங் களான ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், டொக்கோமோ, எம்.டி.எஸ். அய்டியா, யுனிநார், வீடியோ கான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கிக் கொண்டிருக் கின்றன.

2-ஜிக்குப் பின்னர் வந்த சேவைதான் 3-ஜி.

3-ஜி என்பது Third Generation எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம். இதனுடைய அலைக்கற்றை வேகம் 10,782 MHZ

2-ஜியைப் போல 10 மடங்கு அலைக்கற்றை வேகமுடையதுதான் 3-ஜி. அதிக வேகம் உடையதால் ஏராளமான நவீன சேவைகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற தலைப்பில் கூறிய கருத்துகளில் ஒன்றான ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசும் வசதி எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியது உண்மை ஆனது, இந்த 3-ஜி தொழில் நுட்பத்தால்தான்.

இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வீடியோ கால் எனப்படும் முகம் பார்த்துப் பேசும் வசதி, மொபைல் டி.வி. எனப்படும் மொபைல் தொலைக்காட்சி சேவை, VOD, GOD போன்ற சேவைகள், அதிவேக இன்டர்நெட் ப்ரவுசிங், 7.2 MbpS (Mega Bits per Second) டேட்டா வேகமுடைய 3-ஜி டேட்டா கார்டுகள், போன்ற பல சேவைகள் இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகின்றன. இந்த 3-ஜி சேவையை 3-ஜியின் நுட்பம் கட்ட மைக்கப்பட்ட இரண்டு கேமராக்கள் உடைய செல்போன் செட்களில்தான்(3G Enabled Set) பெற முடியும்.

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியாக அமைச்சர் ஆ.இராசா அவர்கள் முயற்சியால் இந்த 3-ஜி தொழில்நுட்பம் முதன்முதலாக பொதுமக்கள் துறையாம்; பொதுத் துறையான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்பொழுதுதான் தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத் துள்ளன. இதுதான் 1-ஜி, 2-ஜி, 3-ஜி.யின் தொழில்நுட்ப வரலாறு!


இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான பொய்யான ஊழல் குற்றச்சாற்று 2008 இல் தொடங்கி, கின்னஸ் சாதனை என்று சொல்லப்படும் அளவிற்கு திரும்பத் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு, ஊழல் தொகை ரூ.20,000 கோடியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடிவரை கற்பனை யாகவே உயர்த்தப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அய் வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினி யாம் என்று பொய்யான தகவல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படு வதைப்போல பொய்யாகவே உருவாக் கப்பட்டு, பொய்யாகவே வளர்க்கப்பட்டு, அந்தப் பொய்யின் அடிப்படையில் கற் பனையாகப் போடப்பட்ட ஒரு கற்பனைக் கணக்கீடுதான் இந்த ரூ.1.76 லட்சம் கோடி என்பது.

நாம் சற்று பின்னோக்கிச் சென்றால் பி.ஜே.பி. மத்தியில் ஆண்டபொழுது அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பதற்கென்றே Disinvestment Minister திரு. அருண் ஷோரி இருந்த வரலாறும் இங்கே நினைவு கூரத்தக்கது. அதே பி.ஜே.பி. ஆண்ட பொழுது தனியார் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று தொலைத் தொடர்புத் துறையில் லைசென்ஸ் கட் டணம் ரூபாய் 85 ஆயிரம் கோடி தள் ளுபடி செய்யப்பட்டது என்பது தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாடு என்று பொருள் கொள் வதா? அப்பொழுது இதனை யாரும் இந்த அளவு எதிர்க்கவில்லை என்பது உண்மை.

இந்தப் பிரச்சினையில் அறிவார்ந்த வர்கள் மத்தியிலும், நடுநிலைச் சிந்த னையாளர்கள் மத்தியிலும் நிலவிவரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், பொய்க் குற்றம் சுமத்தும் அந்தத் தலித் விரோத சக்திகள் கண்டிப்பாகப் பதில் அளித்தே தீரவேண்டும் என்பது காலத் தின் கட்டாயம்.

கேட்கிறார்கள்...
தலைவர்கள்

மத்திய அரசாங்கத்தின் கொள்கை யான தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை அடிப்படையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வந்த அதே நடைமுறையில், அதாவது இதற்கு முன் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகி யோர் பின்பற்றிய அதே நடைமுறைதான், அலைக் கற்றை ஒதுக்கீட்டில் ஆ. இராசா அவர்கள் செய்திருக்கும்பொழுது, முன் தேதியிட்டு, பின் தேதியிட்டு, இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந் தால் என ஆயிரத் தெட்டு குற்றச்சாற்று களை ஏன் இதற்கு முன் இருந்த அமைச்சர்கள்மீது சுமத்தவில்லை? அப்பொழுது இந்த அறிவாளிகளின் மூளைகள் எல்லாம், அவர்களது தலையைவிட்டு வெளியேறி எங்கே யாவது சுற்றுப்பிரயாணமா செய்து கொண்டி ருந்தன?

6.2 MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்யும் பொழுது 3ஜி-க்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் 2010 ஆம் ஆண்டில்தான் TRAI (Telecom Regulatory Authority of India) ஆல் அறிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு கணக்கீட்டை 2008-க்கும் பொருத்திப் பார்ப்பது ஒரு கற்பனைக் கணக்கீடு (Imaginary Calculation).

இதற்குமுன் இருந்த தொலைத் தொடர்பு அமைச்சர்களும் 6.2MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 6.2MHz -லிருந்து 10MHz -வரை மாண்பு மிகு அமைச்சர் பிரமோத் மகாஜன் அவர்களும், 21MHz வரை மாண்புமிகு அமைச்சர் அருண்ஷோரி அவர்களும், 38.8ஆழண வரை மாண்புமிகு அமைச்சர் தயாநிதிமாறன் அவர்களும் ஒதுக்கீடு செய்துள்ளபொழுது இவர்கள் மூவரும் இந்தக் கணக்கீட்டில் வராதது ஏன்? அமைச்சர் ஆ.இராசா அவர்களை மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்?

இன்றைக்கு இந்த அளவுக்கு பிளந்து கட்டும் திறமை வாய்ந்த மத்திய தணிக் கைத் துறை மூளைகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை, தலையணை போட்டு மெத்தையில் உறங்கிக் கொண்டா இருந்தன? 2000 ஆம் ஆண்டில் அது சமர்ப்பித்த கடுமை யான ஆட்சேபங்களுக்கும், அறிக்கை களுக்கும் PAC என்று சொல்லப்படும் பொதுக் கணக்குத் துறை ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்கு 10 வருடங்களாக வரவேயில்லையா? திடீரென்று இப் பொழுது மட்டும் சலங்கை கட்டி ஆட வேண்டிய அவசியம் என்ன? 10 வரு டங்களாக மெய், வாய் அனைத்தும் மூடி இருந்ததற்கு என்ன காரணம்?

ரகசியமானதோ, ரகசியம் இல்லா ததோ, ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வெளியில் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக் கப்பட்டதன் உள்நோக்கம் என்ன? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினிக் கதைதான்....................


நாவில் பிழை இருந்தால் ஒழிய தேன் கசக்காது! வேம்பு இனிக்காது!

பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது!

அதுபோலத்தான் பார்ப்பனர்களின் தன்மையும்!

என்பது திராவிட இயக்க அறிஞர், செம்மல், தந்தை பெரியாரின் கூற்று.

ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்து

தாம் மட்டும் வாழச் சதை நாணா ஆரியம்

என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைப் படைப்பு!

பார்ப்பனர்களின் தன்மை குறித்து மேலே கூறப்பட்டுள்ள கணிப்புகள், எக் காலமும் பொருந்தும் பண்புவரிகளைப் போல இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன.

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் முன்புபோல இல்லை. நிறைய மாறி விட்டார்கள் என்று பேசும் பார்ப்பனர் அல்லாதவர்களின் தலையில் ஓங்கி குட்டு வைத்தது போன்ற ஒரு நிகழ்வுதான் - பொய்யாகப் புனையப்பட்ட 2-ஜி அலைக் கற்றை ஊழல் குற்றச்சாற்று!

சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு என்னும் மனிதநேயக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்துக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் குரல் வளையைப் பிடித்து நெரிக்கும் கொடிய வன்முறையின் மறு பெயர்தான் பார்ப்பனியம்!

இன்றைய காலகட்டத்தில் சமூக நீதியின் முகவரிகளாக இருக்கின்ற தமிழக முதல்வர் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களுமே இதுபோன்ற வன்முறைகளைச் சந்தித்தவர்கள்தான்!

பார்ப்பனச் சவுண்டிகளால், பாடை யிலே கட்டி தூக்கி எடுத்துச் செல்லப்பட் டது, தமிழர் தலைவரின் உருவ பொம்மை. வடநாட்டில் நடைபெற்ற மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலே எரிக்கப்பட்டது கலை ஞரின் உருவ பொம்மை!

இராமாயணம் தொடங்கி இராசாவரை

இதற்கு முந்தைய காலகட்டத்தில் வேதகால அசுரர்கள் தொடங்கி, இராவ ணன், இரணியன், ஏகலைவன், வாலி, அதன்பின் நந்தனார், சித்தர்கள், அறி வின் மறுஉருவான புத்தர், வள்ளல் ராம லிங்க அடிகளார், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிவாளர் அண்ணல் அம் பேத்கர், மண்டலுக்காக மகுடத்தைத் துறந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் என இன்றுவரை நீண்டு கொண்டிருக்கும் இந்த வன்முறை வரலாற்றின் இன்றைய இலக்கு (target) முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள்!

இந்திய அரசியல் எத்தனை எத்த னையோ ஊழல் வரலாறுகளை கண்டிருக் கிறது. அதிக அளவில் பணம் கைமாற் றப்பட்ட சர்வதேச ஊழல் குற்றச்சாற்றுகள், முகாந்திரம் (Prima facie) உள்ளது என கண்டறியப்பட்டு, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், String Operation எனச் சொல்லப்படும் பொறி வைத்து குறி பார்க் கப்பட்டு அதிரடியாக கையும் களவுமாக தெகல்கா வீடியோ மூலம் பிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர ஊழல் குற்றச்சாற்றுகள், கேள்வி கேட்பதற்குக்கூட பணம் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான ஊழல் குற்றச்சாற்றுகள்.

அரசியல் ரீதியாக வேண்டுமென்றே முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்மீது சுமத்தப்பட்ட செயின்ட்கிட்ஸ் ஊழல் குற்றச்சாற்று, தொலைத்தொடர்புத் துறை கருவிகள் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீதான ஊழல் வழக்குகள்.

சி.பி.அய். என்னும் மத்திய புலனாய் வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், CVAC எனப் படும் (Central Vigilance and Anti corruption) என்னும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பொறி(Trap) ச் வைத்து பிடித்த ஊழல் குற்றச்சாற்றுகள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர் களின்மீது இருக்கும், ஊழல் குற்றச் சாற்று பட்டியல்கள், மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு கையூட்டுப் பெற்று, கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட கேதன் தேசாய் மீதான ஊழல் குற்றச் சாற்றுங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டி யலே உண்டு.

தலித் விரோத வலைப்பின்னல்

ஆனால், மேலே உள்ள இந்தப் பட் டியலின் எதற்குள்ளும் அடங்காத, விசித் திரமான, பொய்யான வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு ஊழல் குற்றச்சாற்று தான் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாற்று, ஏதோ அமைச்சர் ஆ.இராசா அவர்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய்களையும் தன் வீடு முழுவதும் ரகசியமாக நிரப்பி வைக்கும்பொழுதோ, அல்லது வெளிநாட்டு சுவிஸ் வங்கியில் போடும்போதோ பிடிபட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை அம்மையார் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் தலித் விரோத வலைப்பின்னல்(Anti Dalit Network) உருவாக்கி, இதற்காக நாடாளுமன்றத் தின் அன்றாட அலுவல்கள் முடக்கப் பட்டு, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணம் பாழடிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது.

இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் மென்மையான அணுகுமுறைதான் பிரச் சினையை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத் துவதற்குக் காரணமாக அமைந்துவிட் டது என்பதை மறுப்பதற்கில்லை! இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா கி. வீரமணி அவர்கள் அண்மையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், விரட்ட விரட்ட ஓடுபவர்களைக் கண்டால், விரட்டுபவர் விரட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். கொஞ்சம் நின்று திரும்பியாவது பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.

பார்ப்பனிய முன்வரலாறு:

இந்த நேரத்தில் சில முன் வரலாறு களையும் தாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய முற்போக்கு சிந்தனையாளர் என்று போற்றப்பட்ட ஜவகர்லால் நேரு அவர்களேகூட, இந்து சனாதனவாதிகளிடம் சரணடைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த இந்து மசோதா திருத்த பில் தீர்மானத்தை ஏற்க மறுத்து, தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், சமூகநீதியை நிலை நாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை நிறை வேற்றியே தீரவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, எந்த தந்தை பெரி யாரால் திரு.வி.க. அவர்கள் மாநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதே தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை, காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி திரு.வி.க. அவர்களே தோற்கடித்த வரலாறும் உண்டு! பொய்யாகப் புனையப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றில், பொதுமக்கள் மத்தியில் கோடிக்கணக் கான ஊழல், கோடிக்கணக்கான ஊழல் என்று தொடர்ந்து கோயபல்ஸ் பாணி யில் பத்திரிகைகளும், ஊடகங்களும், பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
--------- நன்றி ஊமைக்குரல், தொகுப்பு விடுதலை (24,25 nov ,2010)

Wednesday, November 24, 2010

ஓ இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?


இடையூரப்பா தலைமை சொல்லியும் நாற்காலியை பிடித்து கொண்டு நகரமால் இருக்கிறாரே அனால் ராசாவோ, நான்  பதவியே விலக தேவை இல்லை என்று கூறியவர்.. தலைமை சொன்னவுடன் ஏற்று பதவி விலகினார். என்னே ஒரு தலைமைக்கு கீழ் படியும் தொண்டன் ,என்னே முத்தமிழ் அறிஞரின் போர்ப்படை தளபதி.... ராசா உண்மையிலே நீ ஒரு யோக்கியன் மானஸ்தன் என்று மனதிற்குள் நினைத்திருக்கிறார் தட்டி கொடுத்திருக்கிறார். மாண்புமிகுவை  பறிக்கலாம்..மானமிகுவை பறிக்க முடியுமா? என்று பிரதமர் மன்மோகனுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ?

தட்டி கொடுத்ததை குற்றம் காண்பவன் பூணூல் போட்டிருந்தால் பூரிப்பு இருக்கும் இந்த பி.ஜே.பி க்கு....எனவே தட்டி கொடுத்ததை தவறாக சித்தரிக்கும் பத்திரிக்கைகளுக்கும், ராஜாவை பற்றி தவறான தகவல் அளித்த பத்திரிக்கைகளும் விரைவில் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பபடும்.
 
நிலைமை இப்படி இருக்க பி.ஜே.பி யின் தலைவர் நிதின் கட்கரி அவர்கள் ஊழல் செய்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இனிப்பு வழங்கி நீங்கள் பதவியில் நீடிக்கலாம்...என்று அங்கீகரிக்கிறார்.....இப்படி வெட்ட வெளிச்சமாக ஊழலை அங்கீகரிக்கும்  பி.ஜே.பி க்கு என்ன யோகிதை இருக்கிறது? ஊழல் என்று பேச....மனிதாபிமான அடிப்படையில் ஒருவரை பார்க்கும் பொழுது தலை அசைப்பது, தட்டி கொடுத்து பேசுவது இயல்பு...இது அரசியலுக்கும் அப்பாற்பட்டது....அப்படி ராஜாவை பார்த்து பிரதமர்  மன்மோகன் தட்டிகொடுத்து பேசியதற்காக குதி ஆட்டம் போடும் வக்கிர காவி கூட்டம், வெட்ட வெளிச்சமாக ஊழல் செய்த்த ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்க முடியவில்லை மாறாக அவர் அந்த பதவியில் நீடிப்பதற்கு காவி கட்சியின் தேசிய தலைவர் இனிப்பு வழங்குகிறார்....ஓ இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?...பி.ஜே.பி பற்றி வாய் கிழிய பேசுபவர்களே இதற்க்கு உங்கள் பதில் என்ன?


Tuesday, November 23, 2010

துப்புரவுப் பணிகளில் உயர் ஜாதியினர் எண்ணிக்கை ஏதாவது உண்டா?

மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராசன் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அடிப் படையில் ஒதுக்கப்படும் இடங்கள்பற்றி எழுப்பிய வினா வுக்கு, மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங் களுக்கான அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் சில புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.

முதல் நிலையில் மொத்த மத்திய அரசு ஊழியர்கள் 97 ஆயிரத்து 951 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 12 ஆயிரத்து 281, பழங்குடியினர் 4 ஆயிரத்து 754, இதர பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 331 என்றும் கூறினார்.

இரண்டாம் நிலையில் மொத்த ஊழியர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 223 என்றும், இவர்களில் தாழ்த் தப்பட்டோர் 20 ஆயிரத்து 884, பழங்குடியினர் 8004, இதரப் பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 562 என்று குறிப்பிட்டார்.

மூன்றாம் நிலையில் மொத்த ஊழியர்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 326 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 2 லட்சத்து 86 ஆயிரத்து 573, பழங்குடியினர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 871, இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 327 என்றும் குறிப்பிட்டார்.

நான்காம் நிலையில் (துப்புரவு தொழிலாளர்கள் தவிர) மொத்த ஊழியர்கள் 7 லட்சத்து 6 ஆயிரத்து 170, இவர் களுள் தாழ்த்தப்பட்டோர் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 466, பழங்குடியினர் 48 ஆயிரத்து 828, இதர பிற்படுத்தப்பட் டோர் 35 ஆயிரத்து 468 என்ற விவரத்தைக் கொடுத்தார்.

துப்பரவு தொழிலாளர்கள் மொத்தம் 77 ஆயிரத்து 295. இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் 39 ஆயிரத்து 774, பழங் குடியினர் 4 ஆயிரத்து 621. இதர பிற்படுத்தப்பட்டோர் 2 ஆயிரத்து 548.
மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 965 பேர்கள்.
இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 4 லட்சத்து 97 ஆயிரத்து 978, பழங்குடியினர் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 978. இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 236 என்று மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் விலாவாரியாக புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.

மொத்தம் 28 லட்சத்தில், 9 லட்சம் போக மீதி 19 லட்ச இடங்களை அனுபவிப்போர் யார்?
இதில் பதவிகளின் தகுதி குறையக் குறைய (கீழ்மட்ட அளவில்) தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

வேலை வாய்ப்பில் நிலவும் இந்த நிலைக்குக் காரணம்- இந்து சமூகத்தில் நீண்ட காலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஜாதி வாரியான ஏணிப் படிக்கட்டு முறை என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

துப்புரவுப் பணிகளில் உயர் ஜாதியினர் எண்ணிக்கை ஏதாவது உண்டா என்ற வினாவை உறுப்பினர்கள் யாராவது எழுப்பினால் பிரயோசனமாக இருக்கும். அந்த விவரம் தெரிந்தால்தான் இந்து சமூகத்தின் ஜாதீய அமைப்பு முறையின் கேடுகெட்ட நிலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.

இதில் ஒரு முக்கியமான, துல்லியமான புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இட ஒதுக்கீடு சதவிகித அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா என்பதுதான் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
இதில் வெளிப்படையாக ஒரு புள்ளி விவரம் மிக வெளிச்சமாகவே தெரிகிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு இடங்கள்; பழங் குடியினருக்கு 7.5 விழுக்காடு இடங்கள். பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் என்பது சட்டப்படியான நிலையாகும்.

ஆனால், 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு உரிமையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினர்களைவிட மிகவும் குறைவாக இருப்பதை எளிதாகவே அறிய முடிகிறது.

முதல் நிலைப் பணிகளில் (ஊடயளள ஐ) 5.4, இரண்டாம் நிலைப் பதவிகளில் 4.2, மூன்றாம் நிலைப் பதவிகளில் 6.4, நான்காம் நிலைப் பதவிகளில் 5.1 விழுக்காடு இடங் கள்தான் - 27 விழுக்காடுக்குரிய பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை - அநீதி!

1993 ஆம் ஆண்டு முதல்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதால், இந்த அளவுக் குக் குறைந்திருக்கிறது என்று சமாதானம் சொல்லக் கூடும். அப்படியானால், பிற்படுத்தப்பட்டோருக்குக் காலி யாக உள்ள 35 ஆயிரத்து 468 பதவிகளையும் விரைவாக நிரப்ப வேண்டியது அவசியம் அல்லவா! அதுபோலவே, தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு முறையே காலியாக உள்ள 6202 மற்றும் 40015 காலி இடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டாமா?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள்தானே பெரும் பான்மை? இவர்கள் ஒருமித்து, கையிணைத்து நின்று குரல் கொடுத்தால் நாடாளுமன்ற விதானமே குலுங்காதா?

ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே முடக்கிக் கொண்டு இருக்கிறார் களே, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப் பட்டோராலும், பிற்படுத்தப்பட்டோராலும் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் - இந்த மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் சட்ட ரீதியாக உள்ள இடங்களைப் பெற்றுத்தர வேண்டியது அடிப்படைக் கடமையல்லவா!

மற்றொரு முக்கிய புள்ளிவிவரம் அவசர அவசியமாகத் தேவை. இந்த நான்கு வகைப் பணி இடங்களிலும் துறை வாரியாகப் பணியாற்றும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம்தான் அது. சமூகநீதியில்ஆர்வம் உள்ள உறுப்பினர்கள் வினா எழுப்பி விவரங்களைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (23-11-2010)

Wednesday, November 10, 2010

தினமணி ஏன் வீண் வம்புக்கு வருகிறது? அதன் பூணூல் ஏன் துடியாய்த் துடிக்கிறது?

தினமணி ஏடு இந்தத் தலைப்பில் நேற்று (9.11.2010) ஒரு தலையங்கத்தைத் தீட்டியிருக்கிறது. மேற்கண்ட அய்ந்து எழுத்துக்களும் தமிழில் ஏற்கனவே புகுந்து தொலைத்து விட்டன; நடை முறையில் புழக்கத்திலும் இருக்கின்றன.

இப்போது ஒருங்குறி (ருஉடினந) ஒன்றின் மூலம் உலகளாவிய அளவில் எல்லோரும் படிக்க, எழுத ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.

இதனை வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை. அதே நேரத்தில் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி சமஸ்கிருதக் கூட்டத் தார்களான பார்ப்பனர்கள் தமிழில் மேலும் 26 சமஸ்கிருத எழுத்துக்களைத் திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழில் ஏற்கனவே சமஸ்கிருத ஊடுருவலால் தமிழே பிளவுபட்டு, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், துளு என்று திரிபுக்கு ஆளாகிவிட்டன என்பது வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்) போன்றவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இதில் மூல மொழியான தமிழ் மட்டும் சமஸ்கிருத சூறாவளியைப் புறங்கண்டு, தன் தனித் தன்மையை நிறுவியுள்ளது.

மற்ற மற்ற மொழிகளில் ஊடுருவி அந்த மொழிகளின் தனித் தன்மைகளை அழித்த சமஸ் கிருதத்தின் கதி என்ன வென்றால், அது வழக் கொழிந்து மரணக் குழியில் விழுந்து செத்த மொழி (னுநயன டுயபேரயபந) ஆகி விட்டது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது சமஸ்கிருதத்தைப் பொறுத்த வரை நூற்றுக்கு நூறு பொருந்தி விட்டது.

தன் மூக்கு அறுந்துவிட்டது; மற்றவர்களுக்கும் அது ஏன் என்கிற தாராள மனப்பான்மையில் பார்ப் பனர்கள் தங்களுக்கே உரித்தான கேடு கெட்ட புத்தியோடு கச்சை கட்டிக்கொண்டு காரியத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் ஒரு அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்ன வென்றால், உண்மையில்லாத ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு வெட்ட வெளியில் சிலம்பம் ஆட முயற்சித்துள்ளது தினமணி.

தினமணி குறிப்பிட்டுள்ள அந்த அய்ந்து எழுத்துக்களைப் பற்றி இப்பொழுது பிரச்சினையே இல்லை. அப்படியிருக்கும்போது, தினமணி ஏன் வீண் வம்புக்கு வருகிறது? அதன் பூணூல் ஏன் துடியாய்த் துடிக்கிறது?

தாங்கள் மேற்கொண்ட புதிய திணிப்பு எதிர்ப் பைச் சந்திக்கிறது என்ற நிலையில், அதற்கான நியாயமான காரணங்களைச் சொல்லி நிறுவிட இயலாமையால், இல்லாத ஒன்றை - பிரச்சினைக்கு உட்படுத்தப்படாத ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி அனுதாபத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முயற்சிப்பது - அவாளின் வடித்தெடுத்த கோழைத்தனத்தைத்தான் - அறிவு நாணயமற்ற தன்மையைத்தான் வெளிச்சப்படுத்துகிறது.

எடுத்துக்காட்டுக்காக தினமணி குறிப்பிடு வதைப் படித்தால் விலா நோக சிரிக்க வேண்டி யுள்ளது. பஸ் மோதி பசு மரணம் என்று இருப்பதை, பசு மோதி பசு மரணம் என்று எழுதலாமா என்று கேட்கிறது. இதை எழுதிவிட்டு அடுத்து பேருந்து மோதி பசு மரணம் என்று எழுதலாம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்களின் போக்கினைப் பார்க்கும் பொழுது ஏற்கனவே தமிழில் புகுந்துள்ள அய்ந்து எழுத்துக்களைக் கூட வெளியேற்றினால் கூட நல்லது என்று தோன்றுகிறது.
ஒருங்குறி பிரச்சினையில் தமிழில் பார்ப்பன சமஸ்கிருத எழுத்துக்கள் ஊடுருவும் ஆபத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதன் முதலாக விடுதலை அறிக்கையின் வாயிலாக (28.10.2010) வெளிப்படுத்தினார்.

அந்த அறிக்கை மின்னல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவிவிட்டது; உலகத் தமிழர்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு அலைகளை எழுப்பி விட்டது. முதலமைச்சர் தலையிட்டு இந்தப் பிரச்சினை மேலே வளர்ந்துவிடாமல் தடுக்கப்பட்டதானது - உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

திருவரங்கத்தில் (8.11.2010) நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி தலையங்கத்தைப் பார்க்கும் பொழுது - அதற்கு எதிரான நடவடிக்கை அவசியம் என் பதை எளிதில் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்த கட்டமாக முதல் அமைச்சர் அவர்கள் தலையிட்டு, கிரந்த எழுத்துக்களின் ஊடுருவலை அறவே தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (10.11.2010) 



Sunday, November 07, 2010

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

தீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்.

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கட வுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் - சுவைத்திருப்பான்.

இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன் றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு.

என்னுடைய வாழ்க் கையை நானே தீர்மானிக் கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கை யில் தலையிட முடியாது.

நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் - கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன் மிகம் நம்பிக்கையை மழுங் கடித்து சிந்தனையை நிலை யானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது.

ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்பு கிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக் கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார்.

ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன் னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது?

நாம் சொல்லத் தேவை யில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார்.
ஒரு காலத்தில் விடி யற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக் கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வ மான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் - 7-20-2009) என்றாரே.

எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர் களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவ ரையும் தந்தை பெரியார் சிந் தனை புரட்டிப் போடும் தான்.

அய்யயோ, அந்தத் தாடிக்கார கிழவரின் பேச்சைக் கேட்க மாட்டேன்; வரிகளைப் படிக்க மாட் டேன்; அப்படிக் கேட்க நேர்ந்தால், படிக்க நேர்ந் தால் நான் திருந்தி விடு வேன், என்ன செய்வது? என்று கதறும் கோழை களிடத்தில் பெரியாருக்கு என்ன வேலை? அவருக்கு வேறு வேலையில்லையா?
-விடுதலை (07-11-2010) , மயிலாடன் கட்டுரை



ராஜபக்சே விஷயத்தில் பிரிட்டன் நடந்துகொள்ளும் முறையில் இந்தியா நடந்துகொள்ளாதது - ஏன்?

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை
வாங்கித் தரவேண்டியது மத்திய அரசின் கடமை
சோனியா கருத்தை வரவேற்று தமிழர் தலைவர் அறிக்கை

ராஜபக்சே விஷயத்தில்
பிரிட்டன் நடந்துகொள்ளும் முறையில் இந்தியா நடந்துகொள்ளாதது - ஏன்?

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா அவர்களின் கருத்தை வரவேற்றும் - ராஜபக்சே பிரச்சினையில் மனிதநேய உணர்வோடு பிரிட்டின் நடந்துகொண்டுள்ள நிலையில், இந்திய அரசு வேறு விதமாக நடந்துகொள்வது ஏன் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள்மீது சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அண்மைத் தீர்ப்புகளும்கூட, பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளை விடுவித்துவிடவில்லை என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் காவிச் சாமியார்கள் அமைப்பு இவைதான் இடித்த குற்றவாளிகள் என்பதற்கு ஏராளம் ஆதாரங்கள் உண்டு - படங்கள் உள்பட.

அதைவிட முக்கியம் - நாங்கள்தான் இடித்தோம்; அது அவமானச் சின்னம் என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர்கள் இந்த அமைப்புகளைச் சார்ந்த பலர். இன்னமும் சட்டமும், நீதியும் ஊமையாகவே உள்ளன!

ஜஸ்டிஸ் லிபரான் ஆணையம் அறிக்கை

பல கோடி ரூபாய்களை செலவழித்து நடந்த ஜஸ்டீஸ் லிபரான் விசாரணை ஆணைய அறிக்கை வெளிவந்து, அதன்படி குற்றவாளிகளாக்கப்படும் நபர்களை கூண்டில் ஏற்றி, நீதி விசாரணை நடத்தி - ஏற்கெனவே கிரிமினல் வழக்குகள் உள்ள - அயோத்தி காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரின் சாட்சியங்களும் உள்ளன. தண்டிக்கப்படுவதற்கான அதிக சட்ட நிர்ப்பந்தம் - நியாயத் தேவை உள்ளது.

இதனைக் காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியுள்ளது. இதில் எதிர்க்கட்சியுடன் ஆளுங்கட்சி எந்தவித சமரசப் போக்கையும் கைக்கொள்ளவில்லை என்பதை நாட்டிற்குத் தெளிவுபடுத்தி உள்ளது வரவேற்கத்தக்கதே!

இது சம்பந்தமாக மேலும் காலதாமதம் காட்டாது, மத்திய அரசின் உள்துறை உடன டியாக கவனஞ்செலுத்தி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை வாங்கித் தரவேண் டியது - நீதி செத்துவிடாது என்று காட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இங்கிலாந்து செல்ல அஞ்சிய ராஜபக்சே!

மற்றொரு செய்தி. இங்கிலாந்துக்குப் பயணமாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கே போனால், தனது நாட்டில் பல லட்சக்கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து தீவிரவாத ஒழிப்புப் போர்வையில், அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களின் மானத்தையும், கற்பையும் சூறையாடியதோர் நிலைக்கு மூலகாரணமாக இடி அமீனாக இருந்தார் என்பதால், போர்க் குற்றவாளியாக அய்ரோப்பிய யூனியன் நாடுகளால் கருதப்படுவர்; எனவே, எங்கே தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுமோ பிரிட்டிஷ் அரசு என்று அஞ்சி, அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்ற செய்தி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை யைப் பறித்தவர்கள் என்றாவது ஒரு நாள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்படுவர் என்ற இயற்கை நீதியைச் சுட்டிக்காட்டுவதாக அச்செய்தி அமைந்துள்ளது! இவ்வச்சமே அவமானம்தானே!

காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கு ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பளம்
பாபர் மசூதியை இடித்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று கூறும் மத்திய அரசின் கூட்டணி ஆட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவி திருமதி சோனியா அவர்களும், அதே பிரிட்டன் உள்பட பங்கு கொண்ட டில்லி காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சேவை முக்கிய விருந்தினராக அழைத் தது எவ்வகையில் நியாயம்? மனிதாபிமானத்தை டில்லி விரித்த சிவப்புக் கம்பளத்தின் கீழே போட்டு மிதித்ததோர் அநியாயச் செயல் அல்லவா!
இந்த இரட்டை நிலையை காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசோ எப்படி நியாயப்படுத்த முடியும்? இதுபற்றிய குமுறல் - தமிழ்நாட்டுத் தமிழர்களில் தொடங்கி, உலகத் தமிழர்கள் வரை உலகம் முழுவதும், பரவலாக உள்ளதே, அதுபற்றி அலட்சியம் காட்டலாமா?
பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் எனது (சிங்கள) அரசு போர் தொடுக்கிறது என்று கூறி, பல லட்சம் தமிழர் களைக் கொன்று குவித்து, அஞ்சிய அப்பாவி மக்களை இன்னமும்கூட முள்வேலிக்குள் அடைத்து, கொடுமைக்கு ஆளாக்கும் நபரை அழைத்து விருந்து கொடுப்பதைவிட, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்திய செயல், மனிதநேயத்தை மரணப் படுகுழியில் தள்ளிய செயல் வேறு உண்டா?

தமிழக மீனவர்கள் நாளும் அனுபவிக்கும் கொடுமை தமிழர்கள் நெஞ்சங்களில் வடியும் ரத்தக் கண்ணீர் வீணாகிவிடாது. ஆற்றாது அழுத தமிழர்களின் கண்ணீர் அது!
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை நாளும் கொடுமைப்படுத்துவது அன்றாட அவலமாகிவிட்டதே!

நம் மக்கள் வரிப் பணம், நன்கொடை இவைமூலம் தமிழக அரசு, மத்திய அரசு கொடுத்த பல நூறு கோடி களைப் பெற்ற சிங்கள ராஜபக்சே அரசு உண்மையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்குச் செய்ததென்ன?

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்களின் வீடுகள், காணிகளில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்பெறும் நிலைதானே இன்றும் தொடருகிறது?

இந்திய அரசு இதுபற்றி தட்டிக் கேட்டால், சுண்டைக் காய் நாடு ஓரளவு திருந்தியாவது நடக்க வாய்ப்பு ஏற் படுமே - செய்யவில்லை ஏன்? அவர்கள் எம் இனமில்லை; ஆகவே, எமக்கு மனமில்லை என்று எண்ணுகிறாரோ என்ற நியாயமான சந்தேகம் தமிழர்களின் உள்ளங்களில் பீறிட்டுக் கிளம்புகிறதே!

பிரிட்டிஷ் அரசு காட்டும் மனித நேயம், சாயாத தராசு நீதி - நமது மத்திய அரசு காட்டவேண்டாமா?

இனியாவது வற்புறுத்தி வாழ்வுரிமைக்குக் காப்பு கேட்கட்டும்!
தலைவர்,
6.11.2010 திராவிடர் கழகம்


Saturday, November 06, 2010

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு...

இன்று கந்தசஷ்டி திரு விழா தொடங்குகிறதாம். சிவபெருமான் நெற்றிக்கண் ணின் தீப்பொறியில் இருந்து தோன்றியவன் முருகபெரு மான் (ஸ்கந்தனாகிய இவன் சிவபெருமானின் இந்திரிய வெள்ளத்திலிருந்து தோன்றி யவன் என்பது இன்னொரு கதை!)

அவன் சூரபத்மனோடு போரிட்டு வதம் செய்த நாள் தான் இந்தக் கந்த சஷ்டியாம்.
தீபாவளி என்று சொல்லி நரகாசுரனை வதைத்து நேற்று தீபாவளி கொண்டாடி யாயிற்று. இன்றோ சூரபத் மன் என்ற அசுரனைக் கொன்று கந்தசஷ்டி விழா - ஆறு நாள்கள் முருகன் கோயில்களில் தடபுடலாக விழா நடக்கும். எதையாவது காரணம் சொல்லி, கோயில் சுரண்டல் சாங்கோபாங்க மாக நடந்தாக வேண்டுமே!

கடவுள்களுக்குச் சக்தி யிருந்தால் சண்டை போட் டுத்தான் கொல்லவேண்டுமா என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது - அப்படி கேட்டால், நாஸ்திக வாதம் என்று வாய் நீளம் காட்டு வார்கள். பதில் சொல்ல சரக்கு இல்லாதவர்கள் வேறு எதைத்தான் சொல்லி சமாளிப்பார்கள்?

ஒரு மனிதனுக்கு ஒரு பிறப்புதான் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் சந் தேகப்படுவார்கள் - கொச் சையாகப் பேசுவார்கள். ஆனால், முருகன் பிறப்பாக இருந்தாலும் சரி, அவன் சகோதரன் விநாயகன் பிறப் பாக இருந்தாலும் சரி பல பல தகவல்கள் - ஆபாசச் சாக் கடைக் குட்டைகள்!

கடவுள் சமாச்சாரம் ஆயிற்றே - யார் கேள்வி கேட்கப் போகிறார்கள். பக்தி என்று சொன்னால், மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய வற்றைப் பஞ்ச கவ்யம் என்று சொல்லி தட்சணை கொடுத் துக் குடிப்பவர்களிடத்தில் அறிவையும், மானத்தையும் தான் எதிர்பார்க்க முடியுமா? பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?

இந்தக் கந்த சஷ்டியைப் பற்றி ஆன்மீகக் கர்த்தாக் கள் ஒரு வியாக்கியானம் சொல்லுவார்கள்.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியே தவறு. சஷ்டியில் இருந்தால் அகப் பையில் வரும் என்பதுதான் உண்மையான பழமொழி.

சஷ்டியில் முருகப்பெரு மானை வேண்டி, திருமணம் ஆன பெண்கள் விரதம் இருந்தால், அவர்களது கருப் பையாகிய அகப்பையில் குழந்தை வரும் என்பதுதான் இதன் உண்மையான பொருள் என்று கூறுகிறார் கள்.

அது சரி, அந்த சஷ்டி கதாநாயகனான முருகப் பெருமானுக்கு வள்ளி, தெய் வானை என்று இரண்டு பெண்டாட்டிகள் இருந்தும், குழந்தை இல்லையே - அவரா மற்றவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுப் பார்?

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு என்கிற பிச்சைக்காரனுக்கும், இவர் களுக்கும்தான் என்ன வித்தியாசம்?

- மயிலாடன், விடுதலை (06-11-2010)
                                                                                                   

Thursday, November 04, 2010

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்?

கவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கை நெறிமுறை களை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால், அந்த நூலை பல்கலைக் கழகங் களில் பாட நூலாக்கியி ருப்பேன்.

- (தினமலர், 28.10.2010)
என்று கவிஞர் வாலி கூறி யுள்ளார்)

கண்ணதாசன் எவ்வ ளவோ பாடல்களை எழுதிய வர்தான். அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்? அர்த்தமற்ற இந்து மதத்தையும் குடைந்து எடுத்துத் தள்ளியுள்ளாரே!

ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னியத் தாயக
எல்லை தொட்டனர்
மஞ்சள் மேனியும்
வஞ்சக நெஞ்சமும்
மானமென்னும் ஓர்
எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும்
கொண்டவர் - தமிழ்க்
கோட்டை வாசற்படியை
மிதித்தனர்
சொந்தமாக ஓர்
நாடில்லாதவர்
தொட்ட பூமியில்
சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடும் தன்
சொந்த நாடென
ஏற்று மாந்தரை
மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ
தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ
துளியும் இன்மையாம்
வித்தை யாவையும்
சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்
வேறு என் சொல!
நச்சரவுகள் மனித
மேனியில்
நடமிடும் கதை
இவர்கள் கதையாம்
அச்சமிக்கவர் கோழையர்;
ஆயினும்
அடுத்து வீழ்த்திடும்
திறமை மிக்கவர்!
(கண்ணதாசன் கவிதைகள், பக்கம் 162-163).

என்றெல்லாம் விலாவாரி யாக ஆரியப் பார்ப்பனர் கள்பற்றி எழுதி இருக்கிறார் - முடிந்தால் கவிஞர் வாலி இதனையும் பல்கலைக் கழ கங்களில் வைத்திட சிபாரிசு செய்யலாமே!

சூழ்ச்சி வென்றது!
நாடு காய்ந்ததே!
கடவுள் வாசலை
காத்தனர் ஆரியர்
வீரம் முற்றும்
ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர்
சாத்திரத்
தீக்குழியிடைச்
சாய்ந்தனர் தென்னவர்
என்று முழங்கினார் கண்ணதாசன்.

இன்னும் அந்த நிலை இருப்பதை கவிஞர் வாலிகள் மறுக்க முடியுமா?
கடவுள் வாசலைக் காக் கும் வேலையில் உள்ளவர் கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று சட்டம் செய் தால், அதனைத் தடுத்து நிறுத்திட உச்சநீதிமன்றம் வரை சென்று கொண்டு தானே இருக்கிறார்கள்?
கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கூறுவார்கள். அந்த அர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக!

-  மயிலாடன், விடுதலை (04-11-2010)

ஆனந்தவிகடன் போன்ற பாரம்பரிய இதழ்கள்கூட சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம்.

அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் கடத்தல் என்கிற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாகும். கோவை, அதனையடுத்து சென்னை என்று ஒரு வார இடைவெளியில் குருதியை உறைய வைக்கும் செய்திகள் இவை.

சென்னையில் பணத்துக்காக ஒரு சிறுவனைக் கடத்தியிருக்கிறார்கள். அப்படிக் கடத்தியவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்.

இருவரும் பொறியியல் பட்டதாரிகள். ஒருவன் பி.டெக் படித்து, லண்டன் சென்று எம்.பி.ஏ.,யும் படித்துள்ளான். இன்னொருவனும் பொறியியல் பட்டதாரி; சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளான்.

இவர்கள் படித்த படிப்பு இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை. நம் நாட்டுக் கல்வியின் தரமும், உருவாக்கமும் எந்தத் திசையில் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

நம் நாட்டு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் கூடுமானவரை மக்கள் மத்தியில் நச்சு விதைகளைத்தான் வாரி இறைத்து வருகின்றன.
சென்னையில் சிறுவனைக் கடத்தியவர்கள் வறுமை யின் காரணமாக பணம் பறிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையாகவும் கருத முடியாது. குறுக்கு வழியில் பெரிய அளவு பணத்தைப் பெறவேண்டும்; அதனைக் கொண்டு கேளிக்கைகளில் மூழ்கவேண்டும் என்ற எண்ணமே இதன் பின்னணியில் இருக்க முடியும்.
இது உலகம் முழுவதும் இருக்கக்கூடியதுதான். அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் கைகளில்கூட துப்பாக்கி இருக்கிறது. சக மாணவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கிறான் என்று சமாதானம் சொல்லித் தப்பிக்க முடியாது.

அமெரிக்காவில் அவ்வாறு நடப்பதால், இந்தியாவில் நடப்பதில் தவறு இல்லை என்று கூறுவது ஒரு குற்றத் துக்குத் தங்கப் பூண் போடும் ஆபத்தான வேலையாகும்.
கல்வி கற்கும் பருவம் என்பதேகூட இப்பொழுது கேளிக்கையை சார்ந்ததாகவே ஆகிவிட்டது. விடுதிகளில் தங்குவது, கல்லூரிப் பேருந்துகளில் பயணம் செய்வது, கல்லூரிக்குச் செல்வது, மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது, கையில் பசை உள்ளவர்கள் இரவு நேரங்களில் பிரபல ஓட்டல்களில் கூத்தடிப்பது என்பதெல்லாமே ஒரு ஜாலிதான் என்கிற ஆபத்தான மனோபாவம் பேருரு எடுத்துவிட்டது.

ஒரு பேருந்தில் மாணவர்கள் கும்பலாக ஏறிவிட்டார்கள் என்றால், பொதுமக்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிவதில்லை.

கல்லூரிப் பேருந்துகளில் பயணம் செய்வதாக இருந்தாலும்கூட ஒரே அரட்டைக் கச்சேரிதான், கூச்சல்தான்!

இத்தகைய போக்குகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உள்ளவரை பள்ளிப் பிள்ளைகளைப் பணத்துக் காகக் கடத்துவது போன்ற கொடுமைகள் நடந்தேதான் தீரும்.
உல்லாசங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் ஒரு வரையறை கண்டிப்பாகத் தேவை. ஊடகங்களுக்கும் மூக்கணாங்கயிறு அவசியம்தான்.

ஆனந்தவிகடன் போன்ற பாரம்பரிய இதழ்கள்கூட பெரும்பாலும் சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அனேகமாக அனைத்து வார இதழ்களின் அட்டைப் படங்கள் எல்லாம் அரைகுறை உடை அணிந்த நடிகைகளின் வண்ண வண்ணப் படங்கள்தான்.

உள்ளுக்குள்ளும் அவர்களின் பேட்டிகள்தான்; அந்தரங்க சமாச்சாரங்கள்தான்.
பண்டிகை நாள்களில் காலைமுதல் இரவு வரை நடிகர், நடிகைகள் எல்லாம் அறிவு ஜீவிகள் என்ற நினைப்பில் அவர்களிடத்தில்தான் நேர்காணல்கள்.
கல்வித் திட்டத்திலும் புத்தாக்க உணர்வு, பொதுநலத் தொண்டு, உழைப்பின் அருமை, சமுதாய பொறுப்புணர்ச்சி என்கிற வகையில் மாணவர்கள் உருவாக்கப்படுவதற்கான பாடத் திட்டங்கள் கிடையாது.

விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திரையரங்குகளோ நிறைந்து வழிகின்றன.

ஏடுகளை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் குற்றச் செய்திகள்தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளாகி விடுகின்றன.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் விழுவது போல்தான் நிலைமைகள் இருக்கின்றன.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலும் அளவிறந்த காலதாமதங்கள்! (அண்ணா நகர் குற்றவாளிகளை மிகத் திறமையாக விரைவாகப் பிடித்த சென்னை மாநகரக் காவல்துறை மிகவும் பாராட்டுக்குரியது) இவற்றை யெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இளைஞர்களை உருப்பட வைக்க ஏதுவானவைகள்பற்றிச் சிந்திக்கப்பட வேண்டும். இதற்கான சிந்தனைப் பட்டறை (கூமே-கூயமே) ஒன்று உருவாக்கப்பட்டால்கூட நல்லதுதான்.

உடனே ஆன்மிகம் பரவவேண்டும். அது பரவினால் சரியாகிவிடும் என்று யாரும் கரடிவிட ஆசைப்பட வேண்டாம். ஆன்மிகக் குருக்களான சங்கராச்சாரிகள், நித்தியானந்தாக்கள், பரமானந்தாக்களின் கதைகளே நாற்றம் எடுத்துக் குடலைப் புரட்டுகின்றன.

பகுத்தறிவையும், ஒழுக்கத்தையும் ஊட்டக்கூடிய தன் முயற்சியை மேலோங்கச் செய்யக் கூடிய கல்வி முறைபற்றி சிந்திப்பது நல்லது.

----- விடுதலை தலையங்கம் (04-11-2010)

Monday, November 01, 2010

அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!

தலையணையை மாற்றினால் தலைவலி போகுமா என்று சொல்லுவதுண்டு. பா.ஜ.க. மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து இருமுறை மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்தனர்.

ஏதோ கட்சியின் தலைவர் சரியில்லை என்பதுபோல கற்பித்துக் கொண்டு தலைவர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு திரிகிறது.
அத்வானியை பிரதமர் என்று தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

பிள்ளை பிழைத்தபாடில்லை. பாகிஸ்தான் சென்றபோது ஜின்னாவை அரசியலைத் தாண்டி நான்கு வார்த்தை புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, அத்வானியை சங் பரிவார்க் கூட்டம் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்துவிட்டது.

இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங், அவரும் ஜின்னாவைப் புகழ்ந்தார். அத்வானியை உண்டு இல்லை என்று பிளந்து கட்டினார் - கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இப் பொழுது அவருக்கு மீண்டும் கட்சியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டனர் - ஏன் விலக்கினார்கள்? ஏன் மீண்டும் சேர்த்தார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இவ்வளவுக்கும் மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.

கட்சிக்குப் புதிய தலைமை தேவை - அதுவும் இளைய தலைமுறையை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தேடி அலைந்து, சலித்து எடுத்து மும்பையில் இருந்து ஒரு தொழி லதிபரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். நிதின் கட்காரியான அவர் கடந்த ஓர் ஆண்டில் கட்சியைத் தூக்கி நிமிர்த்தவில்லை யாம். அடுத்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கட்காரியை வைத்துக்கொண்டு காயை நகர்த்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறதாம்.

ஆர்.எஸ்.எஸ். வேறு - பா.ஜ.க. வேறு என்று சில சூழ்நிலை களில் அவர்கள் சொல்லுவதுண்டு. உண்மை வேறுவிதமானது தான் - பா.ஜ.க.வின் மூக்கணாங்கயிறு எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸிடம்தான்.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கட்சியின் விதியையே திருத்திக் கொண்டுவிட்டார்கள். நாடாளுமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் நடைமுறையாகிவிட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு, பா.ஜ.க. வேறு என்பது சட்ட ரீதியாகத் தப்பித்துக் கொள்ளச் சொல்லும் தந்திரம் ஆகும்.

ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் கரைந்த நிலையில்கூட, ஆர்.எஸ்.எஸில் அவர்கள் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டபோது - இரட்டை உறுப்பினர் முறையிலிருந்து விடுபட முடியாது என்று கூறி, ஜனதாவிலிருந்து விலகி, மறுபடியும் ஜனசங்கத்துக்குப் பதில் பாரதீய ஜனதாவைத் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களே கூடாது என்றும், மதச்சார்பற்ற தன்மையைத் தூக்கி எறிந்து ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவவேண்டும் என்றும் கருதுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதன் பொருள் மீண்டும் மனுதர்மம் கோலோச்சவேண்டும் என்பதுதான்.

அதற்காகச் சிறுபான்மை மக்களை எதிரியாக முன் னிறுத்தி வருபவர்கள்; 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் முக்கிய தலைவர்கள் முன்னிலையிலேயே இடித்துத் தரைமட்டமாக்கிய கூட்டம், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலி ருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தண்டனை அளிக்கத் தவறியிருந்தாலும் மக்கள் மன்றம் இவர்களை வாக்குச் சீட்டுகள் மூலம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டது.

இந்த நிலையில், நரவேட்டை நரேந்திர மோடியை கட்சியின் தலைவராக்கி, குஜராத் மாடலில் இந்தியாவை பா.ஜ.க.வின் பிடியில் கொண்டுவந்துவிடலாமா என்ற நப்பாசையில் இருப்பதாகத் தெரிகிறது.

கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் அம்மையாரே வெளிப்படையாகக் கூறி விட்டார். நரேந்திர மோடியின் ஜம்பம் குஜராத்தில் மட்டும்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டார்.

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பிகார் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?

இந்த நிலையில், எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் நரேந்திர மோடி என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார். இவர்தான் அடுத்த பிரதமராம் - பா.ஜ.க.வின் தலைவராம். 

நல்ல தமாஷ்!                    -------- விடுதலை தலையங்கம் (01.11.2010)
                                                                                                                           


Tamil 10 top sites [www.tamil10 .com ]