வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 24, 2015

தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள்

தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள் என்றும் வாழ்பவை.
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வென்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!


Saturday, November 21, 2015

நூல் விமர்சனம்...

எந்தப் புத்தகத்தையும் படித்து முடித்து வெளியேறிட முடியும் என நம்புகிறவன் நான். கதைகளாயினும், கட்டுரைகளாயினும் அவை முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றோ, மறுத்தோ நம்முடைய கை அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிடும். நம் கண்முன்னே வார்த்தைகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியான வாசக முறையை ஏற்பவரில்லை ஷோபா சக்தி. அப்படியெல்லாம் நீங்களோ, நானோ சட்டச்சடசடவென புரட்டிட அவருடைய படைப்பிற்குள் உறைந்திருக்கும் எளிய சொற்கள் நம்மை அனுமதிப்பதில்லை. வாழ்வின் துயரங்களைச் சேர்த்து கட்டியிருக்கும் கதைப் பிரதிகள் வாசகனை நிம்மதியிழக்கச் செய்பவை. அவருடைய "கொரில்லா", "தேசத்துரோகி","வேலைக்காரியின் புத்தகங்கள்" ஆகியவற்றை வாசித்திருப்பவர்கள் இத்தகைய மனநிலையை அடைந்திருப்பார்கள். 

இலங்கை போருக்குப் பிறகான தமிழ்நிலத்தின் கதையையும், நிகழும் அரசியல் போக்கின் துயரைத் தாங்கிட முடியாது தடுமாறிடும் ஜனத்திரளின் மனநிலையையும் எழுதிட எழுத்தாளன் தேர்வு செய்கிற நிலம் வன்னி நிலம். நாவல் நிகழும் காலம் வரலாற்றின் பக்கங்களில் துரோகத்தின் அடையாளமாகவும், இன அழித்தொழிப்பின் குரூரமாகவும் பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்குப் பிறகான நாட்கள் தான். 

க்ஷடீஓ நாவல் நாலா திசைகளிலும் காலத்தின் பெரும் பாதைக்குள் உருண்டு புரள்கிறது. வன்னிப் பெருநிலம் எனும் நிலப்பகுதி உருவாகி நிலைத்த தன்மையையும் கூட சொல்ல முடிகிறது எழுத்தாளனால். பண்டார வன்னியனை அந்நிய ஆதிக்க அரசுகளின் ஆயுதங்கள் தின்று தீர்த்தன. இறந்தே போனான் அவன் என வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களும் எளிய மக்களும் கூட நம்பத் துவங்கினார்கள். ஆனாலும் பண்டார வன்னியன் பிழைத்திருக்கவே செய்கிறான். ரகசியமாக வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியிருந்து இனத்தின் விடுதலைக்காக இயங்குகிறான் என்பதையே நாவல் எடுத்துரைக்கிறது. எழுதப்பட்ட நாவலின் பகுதி நமக்கு எழுதப்படாத பகுதிகளையும் கூட வாசக மனதிற்குள் விரிக்கிறது. இது தான் எழுத்தின் பலம். முள்ளிவாய்க்கால் பெருந்துயரக் கொடூரங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனும் பெயரில் இலங்கைக்கு வருகிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாகி விட்டதே. களப்பலி நிகழ்ந்த நிலம் எனும் வாதையையும் கூட நாவல் வாசிப்பின் ஊடாக புரிந்துணர முடிகிறது. 

நாவலோ, சிறுகதையோ அல்லது புனைவோ கட்டுரைகளோ எவையாயினும் அதன் கட்டமைப்பை முடிவு செய்வது கருத்தியல் சார்ந்த அவதானிப்புகளே. க்ஷடீஓ கதைப் புத்தகத்தின் கட்டமைப்பும், வடிவ நேர்த்தியும் தனித்துப் பேசிட வேண்டியவை. மையக்கதையிலிருந்து நாற்பது கதைகள் சரம்சரமாக விரிந்து செல்கின்றன. அவையாவும் பெரிய பள்ளன் குள்ளம் எனும் வனம் சூழ்ந்திருக்கும் ஊரின் கதைகளாகவே காட்சிப்படுகின்றன. பெரிய பள்ளன்குளம் என்றறியப்படுகிற அந்த ஊரின் ஆழமும், அகலமுமான பெரும்குளம், மனித உழைப்பினால் வெட்டி வடிவமைக்கப்பட்ட குளமல்ல; இயற்கை அதன் சீரான மாற்றங்களினால் மனிதர்களுக்காக மட்டுமின்றி விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமாக இருந்தது. அந்தக் கரையில் விரிந்து படர்ந்திருக்கும் மதுரமரமும், ஆதாம்சாமி வீடும் வெறும் சடப்பொருட்கள் அல்ல. மாறாக அந்த ஊரின் பலநூறு வருட ஞாபகங்களைத் தேக்கி வைத்திருக்கும் குறிப்பேடுகள். நாற்பது கதைகளுக்கும் ஊடாகப் பிரதிகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. உபபிரதிகளுக்குள் ஷோபா சக்தி எழுதிச் செல்வது வன்னியின் வரலாற்றைத் தான். 1980களின் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்கு ஊடாக நகர்த்திட "உபபிரதி" எனும் சொல்முறை ஷோபாசக்திக்கு உதவுகிறது. நாவலுக்குள் வருகிற மற்றொரு முக்கியமான பகுதி உரைமொழிப் பதிவாகும். ஊரின் ஞாபகங்களை படைப்பாளியிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாவற்றையும் உரைமொழிப் பதிவாக்கித் தருகிறார்கள். அதை அப்படி, அப்படியே ஷோபா படைப்பின் இடைவெளிகளில் பயன்படுத்திக் கொள்கிறார்.

 எல்லாவற்றையும் பற்றறுத்து துறவு நிலையை எட்டுகிற பௌத்த நெறியின் உச்சமான நிர்வாணம் குறித்த நுட்பமான வியாக்கியானங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனித நிர்வாணத்தைக் காடு மறைக்கக் கூடும் என நிலவு நம்பியிருக்கிறது. அமையாள் கிழவியின் பிணம் பெரும்பள்ளன் குளத்திற்குள் மீனாக நீந்திக் கொண்டிருக்கிறது நிர்வாணமாக. மீள்குடியேற்றம் நிகழ்கிறது என அரசதிகாரம் படோபடமாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் எதுவும் மாறிடவில்லை. தமிழர் குடியிருப்புகளில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு ஏதிலிகளாக விரட்டப்படுவதும், மீள் குடியமர்வு எனும் பெயரில் ராணுவக் குடியிருப்பாக அவை உருமாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. 

கதைகளுக்குள் காட்சிப்படுகிற மதுரமரக் கரைவீடு "டைடஸ் லெமுவேஸ் வீடு" என்கிற வரலாற்றுப் பதிவும், அதன் உண்மைத் தன்மைக்குச் சான்றாக வைக்கப்படுகிற புகைப்படங்களும் கூட வரலாற்றையும், புனைவையும் பிரித்தறிவதற்கான சூட்சுமத்தைக் கற்றுத் தருகின்றன. தேசாந்திரியாக அலைந்து திரிந்து, தர்க்கம் செய்து லெமுவேஸ் வந்திறங்கிய வன்னி நிலம் தான் பெரிய பள்ளன் குளம் கிராமம். ஒடுக்கப்பட்டுக் கிடந்த பள்ளர் இன மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் தந்து சமூகப்படி நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும். மக்களோடு விவாதித்து அதே நிலத்தில் ஆதாம்சாமி ஆகிவிட்ட ஒரு விதத்தில் அவர்களுடைய பூர்வீக சாமியான அண்ணன்மார் சாமிகளைப் போலாகி விடுகிறார். நாம் அறிந்திருக்கும் வரலாற்று விவரங்கள் தான் இவை யாவும். வெள்ளை நிறத்தோலோடு ஆசிய நிலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திட்டவர்கள் அனைவரும் நிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு ஊடாடி இங்கேயே சமாதியாகி விட்டனர். இதற்குள் இயங்கும் மனிதநேய மனநிலைகளைப் பலரும் இங்கே விவாதித்திருக்கவே செய்திருக்கிறார்கள்.

 க்ஷடீஓ வடிவில் எதிரிகள் எனக் கட்டமைக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து தாக்குகிற போர் முறையையே நாவலின் தலைச் சொல்லாக வடித்திருக்கிறார் எழுத்தாளர். நாற்புறமும் சுத்தி வளைக்கப்பட்டு குழந்தைகளும், பெண்களும் பலியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட தாங்கள் கண்ணுற்ற காட்சிகளை ஒரு போதும் மறப்பதேயில்லை. ஒருவிதத்தில் அது அவர்களுடைய ஆழ்மனதின் பதிவாகவே உறைந்து விடுகிறது. அதனால் தான் அவர்களின் விளையாட்டுக்களாக அவை யாவும் புது வடிவம் பெறுகின்றன. ஓடிப்பிடி விளையாட்டு, அம்மா, அப்பா விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் எனும் மரபான விளையாட்டுகளின் இடத்தில் இப்போதெல்லாம் பதிலீடு செய்யப்படுவதாக ஷோபா சக்தி காட்சிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜத்தில் விளையாட்டா அல்லது களத்தின் போர்க் காட்சிகளா என நாவலை வாசிக்கிற நாம் தடுமாறிப் போகிறோம். பிள்ளைகள் புலிகளாகவும், ராணுவ வீரனாகவும் ஒருமாறி நிகழ்த்துகிற போர்க்களக் காட்சிகளை வாசித்திட முடியாது தடுமாறுகிறோம். இந்தக் குழந்தை விளையாட்டில் கலந்திருக்கும் சிறுவன் தொலைதூரத்திலிருந்து பெரிய பள்ளன் குளம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தவன். 

எல்லாம் முடிந்த பிறகும் கூட இன்னும் காழ்ப்பின் எச்சமும், கோபமும் படிந்திருப்பதாகவே சிங்கள அரசு எந்திரம் நீடித்திருக்கிறது என்பதையே நாவலின் கடைசிக்கதைகள் முன் வைக்கின்றன. சாதித் துவேஷத்திலிருந்து ஊரின் அடையாளத்தை துடைத்திட எண்ணிய இளைஞர்கள் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் பெயரை கார்த்திகைக் குளம் என மாற்றிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நடப்பது வேறாகிறது. அருகாமை வெள்ளாங்குளத்துக்காரர்களின் முஸ்தீபும் அரசதிகாரத்தின் இயல்பான இனவெறியும் பெரிய பள்ளன் குளம் கிராமத்து மக்களை ஊரை விட்டே அப்புறப்படுத்துகிறது. எல்லோரும் வெளியேறிய பிறகும் எஞ்சியிருப்பது வாசகன் யோசித்தேயிராத காட்சிகளால் கதையை நகர்த்துகிற சாதுர்யமான எழுத்து ஷோபாசக்தியினுடையது. நிஜத்தில் ஊமைச் சிறுவனாக கிராமத்திற்குள் நுழைந்தவன் இளம் புத்த துறவி. அவன் நிலையிலிருந்து ராணுவத்தினரோடு விவாதிக்கிறான். ஊரில் இருக்கும் எவருக்கும் முழு உடல் இல்லை. அங்க`ஹீனர்களின் நிலமாக்கி விட்டீர்கள் போரின் பெயரால் என போரின் வன்மத்தைக் கட்டுடைக்கிறான் சிறுவன். வரலாறு ஒரு முழுவட்டம் தான் போல் தெரிகிறது. அசோகனுக்கு நிகழ்த்திய போதனையைப் போல போதனை தான் இருந்தது என்ன செய்ய, அரசதிகாரம் இளகாத இரும்பாயிருந்திடும் போது.

நன்றி: தீக்கதிர் , 22-11-2015



Saturday, October 03, 2015

தலித் மக்கள் மீதான வன்முறை


“சமத்துவத்திற்கான உங்களது உரிமைகோரல் தான் அவர்களைக் காயப்படுத்துகிறது.இதுவரையிலான தங்களது ஆதிக்க நிலையை அவர்கள் தக்கவைக்க நினைக்கின்றனர்.எவ்வித எதிர்ப்புமின்றி உங்களது இழிநிலையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வீர்கள் எனில்அழுக்கானவர்களாக, அறிவற்றவர்களாக, வறுமையில் உழல்பவர்களாக ஒற்றுமை இல்லாதவர்களாக நீங்கள் தொடர்ந்து இருப்பீர்கள் எனில் அமைதியாக வாழ அவர்கள் உங்களை அனுமதிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளதொடங்கும் அந்நொடி போர் தொடங்குகிறது”. -டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். தலித் மக்கள் மீதான பத்தாண்டு தொடர் வன்முறைகளை ஒருசேரப் படிக்கும் போது உள்ளமும் உடலும் பதறுகிறது. முண்டம் சாலையோரமும் தலை கிணற்றிலும் வீசப்பட்ட மேலவளவு முருகேசனின் சகதோழர்களின் - உயிரின் துடிப்பு மின்சாரமாய்த் தாக்குகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரைதாமிரபரணிக் கரையில் படுகொலை செய்த தமிழக காவல்துறையின் ஆதிக்க சாதி மனோபாவமும் அன்றைய முதல்வரின் நயவஞ்சக உரையாடல்களும் அருவருப்பையும் குமட்டலையும் ஏற்படுத்துகிறது.


திண்டுக்கல் கவுண்டன் பட்டியிலும்திருச்சி திண்ணியத்திலும் மனிதக்கழிவுகளை மனிதர் வாயில் திணித்த நெறியற்ற செயல்களின் கசப்பூறி முகத்தில் உமிழ்கின்றன.ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளும் மேலெழும் ஜனநாயக உணர்வுகளும் கொலை ஆயுதங்களைச் சொருகிவீழ்த்தப்படுவதன் ஓலம் செவிகளில் அறைகின்றன. ‘சாதி ஒடுக்குமுறையை ஒழிப்போம்! சாதிமோதல்களைத் தடுப்போம்!” எனும் தோழர் என்.சங்கரய்யாவின் முழக்கம் திசைகளெங்கும் எதிரொலிக்கிறது.தலித்மக்களின் வழிபாட்டுரிமையை, பொது வெளியில் புழங்கும் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும் போதெல்லாம் கொடிய வன்முறையின் மூலம் முறியடிக்கிறார்கள். வாழும் உரிமையை சிதைத்து அழிக்கும் நோக்கில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கொலை செய்வது, கொடுங்காயப்படுத்துவது அல்லது ஊனப்படுத்துவது முதன்மை நோக்கமாக இருக்கிறது.அச்சுறுத்துவது அவமானப்படுத்துவதுபெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவது, நிலம், வீடு முதலிய சொத்துக்களை அபகரிப்பது, விலை உயர்ந்த வீட்டு உபயோகப்பொருட்களை அழிப்பது, திருடுவது, கூட்டாகக் கொள்ளையிடுவது குறிப்பாக மாணவர்களின் பாடநூல்களை, கல்விச் சான்றிதழ்களை தீயிட்டுப் பொசுக்குவது எனதாக்குதல்களின் வன்மம் தொடருகிறது. இத்தாக்குதல் முறை தலித்துகளின்வளர்ச்சியை, உரிமை கோரலை பொறுக்கமுடியமால் அரங்கேற்றப்படுபவை என்பதை உறுதிசெய்கிறது.தலித் மக்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகையோடும் சமூகநிலையோடும் ஒப்பிடும் போது அவர்களின் வளர்ச்சி மிகச்சிறு அளவே. இச்சிறு முன்னேற்றத்தைக் கூடஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினரின் சகிப்புத்தன்மையற்ற நிலையே தலித்மக்கள் மீதான வன்முறையின் வேராக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மனிதனின் கண்ணியத்தை அவமதிக்கும் சாதி அடிப்படையிலான தீண்டாமை கருத்து நிலையிலிருந்தே இவ்வன்முறைகள் வெடித்தெழுகின்றன.“ஒடுக்குதல்களையும் அவமானங்களையும் துக்கங்களையும் ஓயாது சந்திக்கும்ஒரு தலித் மாறுபட்ட மன நிலையை எட்டசாத்தியம் இருக்கிறது. ஒரு கலவரத்தின் பிறகான மரண ஓலம், மரண பயம், சவ மௌனம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சூழலில் சிக்கிக் கிடக்க நேரும் ஒரு தலித்தின் மனம் கொந்தளிப்புடன் இருக்கின்ற கடல்போல இருக்கும்” (எழுத்தாளர் அழகிய பெரியவன், தலித் இலக்கியம் எனது அனுபவம் -நூலில்). கலவரத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிகப்பெரிய உளவியல்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். ஏமாற்றத்தை,கையறுநிலையை உணர்கிறார்கள். “ஏதாவது செய்யுங்க சாமி’ என்கிறார் வடக்கம்பட்டியைச் சார்ந்த ஒரு மூதாட்டி. ‘வாழ்க்கை என்பது இங்கே நெருப்புக்கு மத்தியிலே இருப்பது போல’ என்கிறார் சிறுதொண்டமாதேவியைச் சார்ந்த பழனியம்மாள்.பெரும்பாலான வன்கொடுமைகள் காவல்துறையாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. வனத்துறை, நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறைகள் என அரசின் பிற துறைகளும் பல நேரங்களில் காவல்துறையோடு இணைந்து கைகோர்த்திருக்கின்றன. தலித்மக்கள் மீதான தாக்குதலை நிகழ்த்தும் போது தமிழக காவல்துறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, காவல்துறைக்கு அதிகாரமளிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை, நீதித்துறையின் அறிவுரைகளை, மனிதாபிமானத்தை, குறைந்தபட்சமாக மனிதன் என்கிற உணர்வைக் கூடபல்லுபடாமல் விழுங்கி, செரித்து ஏப்பமும்குசுவும் விட்டுத்திரியும் நர பிண்டமாய்காட்சியளிக்கிறது. சாதி ஆதிக்கமனோபாவமும் மமதையும் அதன் கோரமுகத்தை வடிவமைக்கின்றன. ‘சவட்டி நசுக்க வேண்டும்’ என்கிற மனோநிலை ஒடுக்குமுறையின் ஊற்றாகப் பீறிடுகிறது. இங்கே அடிக்கோடிட வேண்டியது - “ஆளுகிறவர்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பதாகவே காவல்துறையின் நடவடிக்கைகள் அமை யும்” என்கிற கருத்தை.தங்களின் வாழ்வியல் கோரிக்கைகளுக்காகவும் பண்பாட்டுக் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும்பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளே வன்முறையைக் கையாளும் ஆதிக்க சாதியாய் இந்நூல் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

வாழ்நிலையில் தலித்மக்களுக்கு இணையான அல்லது சற்று மேம்பட்ட வாழ்க்கையை வாழ்பவர்களே அவர்கள். பெரும்பாலோர் தங்கள் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்களே.“சாதியத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்றான படிநிலை வரிசையே சாதியத்தை கட்டிக்காக்கும் அதிகார அமைப்பாக விளங்குகிறது. தம்மை விட மேல்சாதியின் பண்பாட்டு உரிமைகளைக் கோரும் ஒருசாதி, அதற்கான வலிமையாகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கூட தம்மைவிட தாழ்ந்த சாதி அத்தகைய பண்பாட்டு உரிமைகளைக் கோரி போராடினால் அதை மிகவும் அதிக ஆற்றலோடும் வலிமையோடும் எதிர்க்கிறது. இதுசாதியத்தைக் கட்டிக் காப்பாற்ற சாதியத்துக்குள்ளே அதிகாரம் உள்ளார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” (முனைவர் கோ.கேசவன் ‘சாதியம்’ நூலில்) ஆக இச்சமூகம் சாதியச்சமூகமாக இருப்பதாலேயே இக்கொடூரங்கள் மிக எளிதாக நிகழ்த்தப்படுகின்றன. இவ்வன்முறைகள் நிகழ்ந்த அதே பத்தாண்டு காலகட்டத்தில் அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ வெளியிட்ட புள்ளி விவரப்படி, இந்திய ரூபாயில்4000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் 90 சதவீதம் பார்ப்பனர், பனியா, தாக்கூர் எனும் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். புதுடில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்தின் பெரிய நிறுவனங்களைப் பற்றிய ஆய்வுப் பிரிவின் 1992ம் ஆண்டைய தரவுகளைப் பயன்படுத்தி டாக்டர் சந்தோஷ் கோயல் வெளியிட்டுள்ள விவரப்படி முதன்மையான 1100 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரமிக்க பதவிகளில் 95 விழுக்காடு பேர் மேற்கண்ட மூன்றுஉயர் சாதியைச் சார்ந்தவர்கள். அதே விவரப்படி 1985ம் ஆண்டில் அரசு இயந்திரத்தில் ஆட்சிப்பணி அலுவலர்களாக பணிபுரிந்த 3235 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 66 பேர்மட்டுமே சூத்திரர்கள். (2.04 சதவீதம்) மீதமுள்ளவர்களின் 78 சதவீதம் பேர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். (ப.கு.ராஜன், சாதியும் வர்க்கமும் கட்டுரையில்)இந்த தேசத்தின் சொத்தை அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் வேறு வேறு அல்ல என்பதை இப்புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.

பத்து விழுக்காடு மட்டுமே வாழும் ஆதிக்க சாதியினரின் சொத்துக் குவியலும் அதிகார இணைப்பும் தொண்ணூறு சதவீதஏழைகளுக்கு வறுமையையும் வன்முறையையும் பரிசளித்திருக்கிறது. இப்புரிதலின் அடிப்படையில் நடைபெற வேண்டிய சமூகப் போரை மடைமாற்றம் செய்து தலித் மக்கள் மீதான பிற்படுத்தப்பட்ட மக்களின் வன்முறையாக மாற்றியிருக்கிறது சாதியம் என்பதை நிறுவுகிறது

இக்கலவரங்கள்.அக்காலகட்டத்திற்கு சாதியத்திற்கு எதிராக சவால்விட்ட ஜனநாயகப்பூர்வ முயற்சிகளையும், சாத்தியங்களை உருவாக்க நடைபெற்ற இயக்கங்களையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். தலித்மக்களின் எதிர்த்தாக்குதலையும் சட்டரீதியான சில வெற்றிகளையும் மிக்க மகிழ்வோடு பதிந்திருக்கிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்மக்களுக்கு ஆதரவாக, அவர்களோடு இணைந்து போராடிய - தலித் அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இடதுசாரிகள் அதில் குறிப்பாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் செயல்பாடுகள் குறித்து வலுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேஷ சமுத்திரம்வரை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் சாதிய மோதல்கள், ஏழை உழைப்பாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை ஒருவர்க்கம் என்ற முறையில் ஒன்றுசேர விடாமல் தடுத்து வைத்துள்ளது. சாதியத்தின் இத்தந்திரம் முறியடிக்கப்பட வேண்டும்.கட்டுரை உருவாவதற்கும் வெளியாவதற்கும் முக்கிய காரணமாயிருந்த ப்ரண்ட்லைன் ஆங்கில இதழின் நிர்வாகிகள் வணக்கத்திற்குரியவர்கள். இந்நூலின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் அவர்களும், தமிழாக்கித் தந்த த.நீதிராஜன் மற்றும் தயாரிப்பில்ஈடுபட்ட அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.

தலித் மக்கள் மீதான வன்முறை
ஆங்கிலத்தில்:எஸ்.விஸ்வநாதன்
தமிழில்: த.நீதிராஜன்
வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ்251,(132), 
அவ்வை சண்முகம் சாலை,
 கோபாலபுரம், 
சென்னை - 600 086 
பக்: 340 விலை ரூ. 200/-

நன்றி: தீக்கதிர், 04-10-2015



Sunday, July 19, 2015

நூல்: கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்


கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்.
ஆசிரியர்:அ.அன்வர்உசேன்,வெ.பத்மனாபன்,
வெளியீடு :பாரதி புத்தகாலயம்.7,இளங்கோ தெரு, தேனாம் பேட்டை ,சென்னை - 600 018 .
பக்:96 , விலை : ரூ. 70/-

வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் ஏன் ?கஜினி முகமது சோமநாதர் ஆலயத்தைக் கொள்ளையடித்தது மெய்யா ?இல்லையா ?எல்லா முஸ்லிம் மன்னர்களும் கோவில்களை இடித்தார்களா ?இந்து மன்னர்கள் மசூதியை இடித்ததுண்டா? வேறுமத வழிபாட்டுத் தலங்களை இந்து மன்னர்கள்அழித்ததுண்டா ?இடிப்பு பற்றி பேசுகிறவர்கள் அக்பரையும் பாபரையும் பேசுவதில்லை ஏன் ?மசூதிக்கும் கோயிலுக்கும் என்னவேறுபாடு ?

இப்படி இயல்பாய் எழும் கேள்விகளுக்கு விடைதேடி -ஆதாரங்கள் தேடிச் சேகரித்து இந்நூலை ஆக்கியுள்ள அன்வருக்கும் பத்மனாபனுக்கும் பாராட்டுகள் .

முதல் அத்தியாயமே சூடாகவும் சுவையாக வும் துவங்குகிறது . கி.பி.835ல் பாண்டிய மன்னன் படையெடுத்து அனுராதபுரம் புத்த மடத்தைக் கொள்ளையடித்து புத்தர் சிலை யை மதுரைக்குக் கொண்டுவந்தான்; காலம் திரும்பியது சிங்கள அரசன் படையெடுத்துவந்து. புத்தர் சிலை யை மீட்டுச் சென்றான். ஏன்? புத்தர் சிலை அரசு அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்பட்டது என்பதை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளனர் .

“ தோற்ற மன்னனின் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்ல; மன்னனின் மனைவிகள், இதரப் பெண்கள் மட்டுமல்ல; தோற்ற மன்னனின் கடவுள்கள் கூட வெற்றிபெற்ற மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டன” என நூலாசிரியர்கள் சொல்வதுடன் ; அதற்கு ஆதாரமாக சோழர் , சாளுக்கியர் உட்பட பல இந்து அரசர்கள் அவ்வாறு செய்ததை எடுத்துக்காட்டி மநுஸ்மிருதி அதனை நியாயப்படுத்தியுள்ளதையும் பொருத்தமாகக் கூறியுள்ளனர் . இவையெல்லாம் கஜினி முகமது படையெடுத்து வரும்முன்பே இந்தியாவில் வழக்கமாக நடந்து வந்தது என்கிறார்கள்.

கஜினி முகமது செய்த கொடுமைகளை யும் அவனுக்கு இருந்த மதவெறியையும் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை ; அதே சமயம் கஜினி முகமது இந்துக்களை மட்டுமல்ல தனது சன்னி இனத்தைச் சாராத ஷியா மற்றும் இஸ்மாயிலி பிரிவினரையும் கொன்றதையும் பதிவு செய்துள்ளதோடு, வரலாற்றில் எப்படி மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளன என்பதையும் பிரிட்டிஷ் ஆட்சி பின்னிய வஞ்சக வலை மதமோதலுக்கு வழிவகுத்ததையும் கே. எம் முன்ஷி போன்றோர் பகையை விசிறிவிட்டதையும் விவரமாகக் குறிப்பிடுகிறார் . கஜினி, ஒளரங்கசீப் தவிர ஏனைய முஸ்லிம் அரசர்கள் கோயில் இடிப்பில் ஈடுபடவில்லை என்பதையும் அவர்களும் கூட மன்னரின் பெருமைக்குரிய கோயிலைத்தவிர வேறெதிலும் கைவைக்கவில்லை என்பதையும் மாறாக கோயில்களுக்கு மானியம் அளித்து உதவியதை யும் விவரிக்கின்றன .

கோயில்கள் இடிக்கப்பட்டது போல் மசூதிகளும் இடிக்கப்பட்டதுண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் கோயில் இடிப்பு அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் . புத்த, சமண வழிபாட்டுத் தலங்களை இந்துக்கோயில்களாக மாற்றியதையும் சொல்லிச் செல்கிறார்கள் .

கோயில்கள் கஜானாக்களாக இருந்ததாலும் அரசின் அதிகாரச் சின்னமாக இருந்ததாலும் இடிக்கப்பட்டன . அதே சமயம் மசூதிகள் அரசு அதிகாரச் சின்னங்களாக மாற்றப்படவில்லை. ஆன்மீகக் குறியீடாகவே கருதப்பட்டது என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்கள் .

அரசன் இந்துவோ, முஸ்லீமோ அதிகாரத்தை நிலைநாட்ட தோற்றவர்கள் மீதும் அடிபணிந்தவர்கள் மீதும் பண்பாட்டு ஆதிக்கம் செய்ய மதத்தைப் பயன்படுத்தினர். .கஜினி முகமதுக்கு இருந்ததுபோல் மதமாற்ற வெறி இதரர்களுக்கு இருக்கவில்லை ; இதன் அரசியல் பொருளாதார ,சமூகக் காரணங்களையும் நூலாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர் .

வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் உலகின் இதர பகுதிகளில் இருந்ததையும் கோடிட்டுக்காட்டி ; அரசர்களின் ஆதிக்க வெறியே அடிப்படைக் காரணம் என நிறுவுகிறார்கள். அதே சமயம் கடந்த கால சரித்திர நிகழ்வுகளுக்குப் பழிவாங்க எனக் கிளம்பினால் அதற்கு முடிவேது ? சங்பரிவாரின் நோக்கம் எவ்வளவு கொடு மையானது ; அவர்களின் வாதம் எவ்வளவு பிழையானது என்பதை தக்க சான்றுகளோடு நிறுவுகின்றனர் நூலாசிரியர்கள் .

கனகவிஜயன் தலையில் கல்லை ஏற்றி ஒரியக்கடற்கரை முதல் தஞ்சாவூர் வரை நடத்தியே கூட்டிவந்தான் சோழ அரசன் என தமிழ்நாட்டில் பெருமைப்படுவதுண்டு ; யோசிப்பவர்கள் நம்புவது சிரமம் . இது போலவே எழுதப்பட்ட வரலாறுகள் வென்றவரின் பெருமையைப் பீற்ற எழுதி வைத்திருப்பர் ;அதில் மெய்யைவிட கற்பனையும் கைச்சரக்கும் அதிகம் கலந்திருக்கும் ; அதனை அலசி உண்மையை மட்டும் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்தப்பாடம் இந்நூலில் உள்ளது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில் மதுரா , காசி என அடுத்து குறிவைக்கும் சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு வரலாற்றை, பண்பாட்டை சிதைத்து குறுகிய மதவெறி மோதலை சங்பரிவார் உசுப்பிவிடும் காலத்தில் இந்நூல் ஒரு காத்திரமான வரவு . இந்நூல் இன்றைய காலத்தின் தேவை . அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் . மதவெறியருக்கு பதிலடி கொடுக்க இதுபோன்ற நூல்கள் இன்னும் அதிகம் தேவை . இந்நூலை வாங்குங்கள் ! படியுங்கள்! உண்மையை ஊரறிய உரக்கச் சொல்லுங்கள் !

நன்றி: தீக்கதிர், 19-July-2015


Sunday, July 05, 2015

காவி ஆட்சி யோகிதை - பாஜக பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் குழந்தைத் திருமணம்


ராஜஸ்தானில் 53 வயதான பஞ்சாயத்து தலைவருக்கு 6 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த பிறகு படம் சமூக வளைதளங்களில் வெளியான பிறகு காவல்துறை செயலில் இறங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் மேவாட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமம் கிர்கர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ரதன்லால் ஜாட் (வயது 35). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.       மேவாட் நகரத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் சரண் என்பவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இவருக்கு கிர்கர் பஞ்சாயத்து தலைவர் ரூ30,000 கடனாக அதே கிராமத்தைச்சேர்ந்த ஜமுனாபாய் என்பவர்மூலம் பணம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக பணத்தைத் திருப்பித் தராததால் மேவாட் நகரத்திற்குச் சென்று உன்னால் பணம் கொடுக்க முடியா விட்டால் உனது பெண் குழந்தையை ரதன்லால் ஜாட்டிற்கு திருமணம் செய்து கொடுத்துவிடு இல்லையென்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார் ஜமுனாபாய்  என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சரண் தனது பெண் குழந்தையை திருமணம் செய்து தர முடிவுசெய்தார். இதனை அடுத்து ஜூன் மாதம் 29 ஆம் தேதி மேவாட் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கோவில் ஒன்றில் பார்ப்பனப்புரோகிதர் ஒருவர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின் போது ஜமுனா பாய் மற்றும் குழந்தையின் பெற்றோர்களுடன் ரதன்லாலில் உறவி னர்கள் பலர் கலந்துகொண்டனர். காவல்துறை தரப்பில் இந்தத் திருமணத்தில் சுமார் 40 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரதன்லால் ஜாட் ஏற்கெனவே திருமணமானவராக இருந்தாலும் அவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தபடியால் யாரும் அவரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இவரது திருமண ஆல்பம் சமூகவலைதளம் ஒன்றில் வெளி யானது. இந்தப்படத்தைப் பார்த்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேவாட் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கியானேந்திர சிங் நடவடிக்கையில் இறங்கினார். கிர்கர் கிராமத்திற்குச் சென்று ரதன்லாலைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: குழந்தைத் திருமணம் தொடர்பான படம் சமூகவலைதளத்தில் வந்ததை அடிப்படையாக வைத்து புகார் தெரிவித்தனர்.அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் ரதன்லால் ஜாட்டின் மீது குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் 2006 கீழ்  கைது செய்தோம் என்றனர்.
ஏற்கெனவே 2008-ஆம் ஆண்டு இவர் குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற போது பிடிபட்டு எச்சரித்து விடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடைத்தரகர் போல் செயல்பட்ட ஜமுனாபாய் தலை மறைவாகிவிட்டார். அவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக்கூறி மணம் முடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் தாங்களாகவே நீதிமன்றம் சென்று நீதிகேட்டது தொடர்பான செய்தி மார்ச் மாதம் விடுதலையில் தலைப்புச் செய்தியாக வந்தி ருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அதே மாநிலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது.    லலித்மோடி ஊழல் புகழ் வசுந்தரா ராஜே முதல் வராக உள்ள மாநிலம் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் மோடி பெண் குழந்தைகளுடன் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வானொலியில் அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : விடுதலை நாளிதழ், 05-07-2015


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு



துச்சம்

ஆசிரியர்: ஸ்ரீரசாவெளியீடு: காலம் வெளியீடு26, மருதுபாண்டியர் 4வது தெரு(சுல்தான் நகர்)கருமாரியம்மன் கோயில் எதிர் வீதிமதுரை - 625 002பக்: 64 விலை ரூ.60/-   (நன்றி : தீக்கதிர்,  05-07-2015 )


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு. எளிய நடையில் எழுதபட்டிருக்கும் கவிதை தொகுப்பு.



Sunday, June 28, 2015

நூல் அறிமுகம்: ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ?


சில வருடங்கள் முன்பு மாட்டுப்பொங்கலன்று ராம கோபாலன் கோமாதா பூஜை செய்தார் . உழவர்கள் மாட்டின் உழைப்பை மதித்து அதற்கு படையலிட்டு கொம்புக்கு வர்ணம் பூசி முன்பக்கம் பூஜித்துக்கொண்டிருந்தபோது ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ? பசுவின் வாய் அசுத்தமானது என்கிறது மநு .அங்கிரஷர் ,பராசரர்,வியாசர் , யக்ஞவல்லியர் உட்பட பலர் எழுதியுள்ளனர். அதனால்தான் பசுவின் குண்டிப்பக்கம் பூஜை செய்தார் ராமகோபாலன் . இதுதான் பார்ப்பனர் வழக்கம் . அதே சமயம் மாட்டு மூத்திரம், சாணி இவற்றை புனிதம் என்பர். இவையும் இவைதொடர்பான பால், தயிர், நெய் ஐந்தும் கலந்து பஞ்சகவ்யம் எனக்கொண்டாடுவர்.

மருத்துவக் காரணங்களுக்காக இவற்றை பயன்படுத்துவது வேறு ; இதற்கு இல்லாத புனிதத்தைக் கற்பிப்பது வேறு . பசுவதை கூடாதெனக் கூப்பாடு போடும் இந்தக் கொடி யவர் கூட்டம் வரலாறு நெடுகிலும் எப்படி நடந்து கொண்டது ? யாகத்தில் மாட்டை பலியிட்டது. பசு மாமிசம் சாப்பிட்டதற்கு நிறைய அசைக்க முடியாத சான்றுகளை அள்ளித் தொகுத்திருக்கிறது இந்நூல் .பசுவின் புனிதம், பசுவதை, பால், பஞ்சகவ்யம் போன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னாலுள்ள வரலாற்று உண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி , பேராசிரியர் டி.என்.ஜா அவர்கள் எழுதியுள்ள இந்நூல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த நூலென்று பதிப்புரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல . 2001ல் வெளியிடப்பட்ட இந்நூல் இந்துமதவெறியர் எதிர்ப்பால்- வழக்கால் வெளிநாட்டுப் பதிப்பாக வெளியிடப்பட்டது . சட்டத்தடை தாண்டி இந்தியாவில் பின்னர் வெளியானது .

2003 ல் தமிழில் முதல் பதிப்பு வெளிவந்தது . “இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.” என ஒரு பேட்டியில் ஆசிரியர் சொல்லியிருப்பதை இந்நூல் நெடுகக்காணலாம் .
“ இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன” என நூலாசிரியர் வாக்குமூலம் தருகிறார். நூல் சாட்சியாகிறது. “ இந்திய நூல்கள் - குறிப்பாக பார்ப்பனிய - தர்ம சாஸ்திர நூல்கள் முன்வைத்துள்ள பசு வடிவமானது பல நூற்றாண்டுகளில் பலவிதமான வடிவங்களை எடுத்துள்ளது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

ஆயிரமாண்டு வரலாற்றில் பசு குறித்த தகவல்கள் முழுக்க முரண்பாடுகள் கொண்டதாகவே இருந்திருக்கின்றன.” “.. பசுவின் புனிதத்தன்மை என்பது ஒரு ஏமாற்று வித்தையே. காரணம் பசுத் தெய்வமோ, அதன் பேரில் ஒரு கோயிலோ இருந்ததில்லை” என்கிறார் நூலாசிரியர் .‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’ யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத்தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து - இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13 இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் நாடாளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இதையெல்லாம் இந்நூல் நிறுவுகிறது . ஆதாரங்களும் குறிப்புகளுமே கடைசி 76 பக்கங்களை நிரப்பி இருக்கிறது என்பதே நூலாசிரியரின் கடின உழைப்பையும் நம்பகத்தன்மையையும் பறை சாற்றுகிறது .பசுவை மீண்டும் மதவெறியர் கொலை வாளாகச் சுழற்றும் இன்றையச் சூழலில் இந்நூல் மிகமிக அவசியமானது. கட்டாயம் படிக்க வேண்டும் .

நன்றி: தீக்கதிர், 28-06-2015


Friday, May 01, 2015

அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு...

நாட்டுல விவசாயிகள் மேகதாட்டு ஆணை, காவிரி பிரச்சனை என்று போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் போதுமான ஊழியர்கள் இல்லை பணி சுமை என்று கூறி போராட்டம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடக்கிறது. இது அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தது.அந்த பணியில் தொய்வு என்றால் மக்களுக்கு பாதிப்பு என்பது அதிகம்.
ஆனா பாருங்க, இன்று(29-04-2015) காலையில் ஒரு செய்தி பார்த்தேன், அர்ச்சக பார்ப்பனர்கள் பூஜைக்கு அனுமதி வேண்டி உண்ணாவிரதம் என்று. இவர்களுக்கு போராட்டம் கூட எந்த ரூபத்தில் வருது பார்த்தீர்களா?
தந்தை பெரியார் ஒன்றை கூறுவார், இந்த நாட்டில் முடி திருத்துபவர் இல்லை என்றால் திண்டாட்டம். சலவை தொழிலாளி இல்லை என்றால் திண்டாட்டம். உழவன் இல்லை என்றால் திண்டாட்டம். துப்புரவு பணி செய்பவர் இல்லை என்றால் திண்டாட்டம். ஆனால், இந்த அர்ச்சக பார்ப்பான் இல்லை என்றால் என்ன நட்டம் வந்துட போவுது என்று கூறுவார்கள். தந்தை பெரியார் இதை குலத்தொழிலை உறுதி படுத்த கூறியதாக எடுத்து கொள்ள கூடாது...பார்ப்பனர்கள் செய்யும் வேலையில் துளி கூட மக்களுக்கு பயன் கிடையாது இருந்தாலும் அவன் தான் உச்சாணி கொம்பில் இருக்கிறான்..உடலுழைப்பை செலுத்தி பணி செய்யும் நம்ம ஆட்கள் மரியாதை குறைவாக நடத்த படுகிறார்கள் என்பதை உணர்த்தவே அய்யா இதை எடுத்து கூறியுள்ளார்கள்.


விகடனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை..காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்

இந்த வார ஆனந்த விகடனில் (06-05-2015) வெளிவந்திருக்கு திருமாவேலனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்
இந்த சமுகத்தில் எவ்வளவு உரிமையை எடுத்துகொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்கு கொடுத்தாரோ அது அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. அதை பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை. எனச் சொன்ன அவர். எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் சொன்னார்.
ஏனெனில் அவர் பெரியார்!
(கட்டுரையில் இருந்து...)





கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்

கணவன் மூலம் மனைவிக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை தண்டிக்க.... ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள் என்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி பேசியிருக்கிறார்.அதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்திபாய் சௌத்ரி, அப்படிப்பட்ட எண்ணமே மத்திய அரசுக்கு கிடையாது. அது நம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பேசியிருக்கிறார்.
கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்...மனைவியை பலாத்காரம், பாலியல் வல்லுறவு செய்யலாம் என்று மத்திய அரசு சொல்லுகிறதா? இதுதான் இந்திய கலாச்சாரமா? பெண் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் அடங்கித்தான் போக வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் யோகிதையை இது போன்ற அமைச்சர்களின் பேச்சுகளின் மூலம் நன்கு உணர முடிகிறது. பெண்கள் என்றாலே ஆணுக்கு அடிமை, சேவகம் செய்யும் வேலைக்காரி என்ற மனோபாவம் கொண்ட இந்துத்துவா ஆட்சியில் வேறு என்ன பதில் வரும்.
இது போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. இன்றும் பல ஊர்களில் இது போன்று கணவன் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உட்படும் பெண்கள் ஏராளம் உள்ளனர்.



Tamil 10 top sites [www.tamil10 .com ]