வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, July 06, 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!

 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, வழக்கறிஞர்களின் ஒரு சிறு பிரிவினர் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உண்ணாவிரதம், நீதிமன்றப் புறக்கணிப்பில் தொடங்கி, அதை அரசியலாக்கினர்.

 இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் முதலாக, தமிழில் வாதாட வாய்மொழி உத்தரவாதம் அளித்த தலைமை நீதிபதி வரை, ஓர் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டச் சிக்கலையும், தகுந்த கட்டமைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிற உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் தீர்மானத்தையும் முற்றிலும் மறந்துவிட்டு, வெறும் தமிழுணர்வின் அடிப்படையில், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கட்டுரை.

 இந்தக் கட்டுரை தமிழுணர்வுக்கு எதிரானது அல்ல; தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரை. இந்தப் பிரச்னையின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களைப் பற்றி அலசும் முன் சில அடிப்படை உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

 உயர் நீதிமன்றம் தவிர, இதர கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டு முதல் அலுவல் மொழி சட்டத்தில் (Offi ​ci​al Langu​ages Act 1956.)​ .- திருத்தம் 4ஏ மற்றும் 4பி-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக உத்தரவாதம் பெற்றும்கூட, அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது சிக்கல் ஏற்பட்டது.  ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று அந்த வழக்கில் (1978(2)MLJ 442 Ram​ayee Vs Muniy​andi)  தீர்ப்பு வந்த பிறகே ​1982-p ​(Go Ms​ 9,​ 19th Jan 1982)​ சட்டம் அமலாகி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்றது.

 இருப்பினும், தமிழ் தெரியாத இதர மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு அனுமதி மூலம் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஓர் அனுமதி இருந்தது. அப்போது தமிழில் அவர்கள் பரிபாலனம் செய்யும் சட்டங்கள் இயற்றப்படாததாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தாலும் இருந்த இச்சிறப்பு அனுமதி, பின்னாளில்,  கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் சொந்த விருப்பத்தில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு எழுதலாம் என்று அப்போது தலைமை நீதிபதியான கே.ஏ. சாமி சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அலுவலக மொழிச் சட்டத் திருத்தத்துக்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.

 இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்.

 இன்றுகூட 80 விழுக்காடு வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே மனு தாக்கல் செய்கிறார்கள், ஆங்கிலத்திலேயே வாதாடுகிறார்கள். ஒருவேளை அவ்வாறு செய்வது கட்சிக்காரர் புரிந்துகொள்ள முடியாத ஒரு தொழில் ரகசியமாகக் கூட இருக்கலாம். எனவே, ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகச் சட்டம் மூலம் கொண்டு வந்த திருத்தத்தையே இன்றுவரை 80 விழுக்காடு வழக்குரைஞர்கள் நடைமுறையில் கடைப்பிடிக்காதபோது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம்.

 இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

 அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்  214 (5) மற்றும் 227-ன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.

 இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணியில் "ஆங்கிலம்' ஒன்றே "ஓர் இணைப்பு மொழி'. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.

 அரசியலமைப்புச் சட்டம் 348-வது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)வது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின்  அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

 அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.

  இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

÷இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8-ல் உள்ளபோது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?

÷அப்படியானால் அலாகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்றவைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்பந்திக்கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியாமல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?

÷இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.

÷இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவையாக உள் கட்டமைப்பு ""எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது! சிலர் அரசியலாக்குகிறார்கள் என்பதால், ஒரு உடனடி தீர்வு கேட்டுப் போராடுவது பேதைமை.

÷இதில் வேடிக்கை என்னவென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இணங்க கொண்டு வரப்படும் ஒரு சட்ட அதிகாரத்தில், சட்டத்தில் உரிமையே இல்லாத தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் ""வாய்மொழி உத்தரவாக உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம்'' என்று கூறியிருப்பதுதான்.

 இது, இப்போராட்டத்துக்கு நீதிபதிகளும் சேர்ந்து பொதுவான ஒரு குருட்டு நம்பிக்கைக்கு  ஒத்தடம் கொடுப்பதைப் போன்றது. நீதிபதிகளுக்கு இந்தப் பிரச்னையில் தீர்வுகூறும் உரிமையில்லை. முழு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு உள்பட்டே இதை நடைமுறைப்படுத்த முடியும். இந்த உண்மையைச் சொல்ல ஏன் தயக்கம்?

 உண்மை பேசத் துணிவில்லாத பயத்தினால் பொய்யர்கள் தங்களின் போராட்டத்தை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

 பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே!

இதனுடைய பின்விளைவால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

 கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழ் முழுமையாக வழக்காடு மொழியாகாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது எப்படி சாத்தியம்? இதனால் ஏற்படும் குழப்பங்களால் பாதிக்கப்பட இருப்பது வழக்கறிஞர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல. பொதுமக்கள்தான்.

 நீதித்துறையில் அரசியலைப் புகுத்தாதீர்கள். பொய்வாதம் எல்லா நேரங்களிலும் எடுபடுவதில்லை. அப்படியே பொய்வாதம் வெற்றி பெற்றால், தோல்வியடைவது நீதி என்பதை மறந்துவிடக்கூடாது.

 உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!

------------- நன்றி தினமணி (05.07.2010)

1 comment:

PRABHU RAJADURAI said...

கே.எம்.விஜயனின் பிழைப்புவாதம்!
http://marchoflaw.blogspot.com/2010/07/blog-post.html

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]