வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 30, 2011

இந்த கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்....

பேரன்புமிக்க தமிழினப் பெருமக்களே வணக்கம். இந்த துண்டறிக்கை மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறோம். தமிழன் கடவுள் நம்பிக் கையால் தன்னம்பிக்கையை இழந்தான்.

மதம், ஜாதகம், ஜோதிடம், மந்திரவாதம், கன்வென்ஷன் கூட்டங்களுக்கெல்லாம் சென்று பகுத்தறிவை பாழாக்கி வருகிறான். கற்சிலைக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

பசியால் உணவு கேட்கும் குழந்தையை அடித்து விரட்டுகிறான். சாமி, மத மோதல்களால் சண்டையிட்டு மடிகிறான். அயல் நாட்டுக்காரன் சாண எரிவாயுவை கண்டுபிடிக்கிறான்.

ஆனால் நம் நாட்டுக்காரனோ, சாணத்தைப் பிடித்து கடவுளாக வழிபடுகிறான். மதுபோதைக்கு அடிமையாகி தமிழன் உழைக்கிற காசையெல்லாம் மதுக்கடையில் செலவு செய்கிறான்.

தமிழின ஜாதி, மத, மூட நம்பிக்கை போதைகளுக்கு அடிமையாகாமல் தன்னம்பிக்கையோடு பகுத்தறிவோடு உலக மக்களைப் போல் உயர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையோடு இந்த துண்டறிக்கையை வெளியிடுகிறோம். தமிழர்களே, படியுங்கள், சிந்தியுங்கள்.

உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு இருக்க குடிசையில்லை, நடமாடாத கற் சிலைக்கு கோவில் தேவையா?

ஜெபம் செய்தே நோயைக் குணப் படுத்துவதாக கூறும் பாதிரியார்கள் இருக்கும் போது கிறிஸ்துவ மருத் துவமனைகளில் மருத்துவர்கள் எதற்கு?

இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?

கடவுளுக்குச் சக்தியிருந்தால் கோவிலுக்கு பூட்டும், காவலும் எதற்கு? எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும் எவன் செயல்?

பில்லி, சூனியம், செய்வினை, தகடு, மந்திரம் செய்து ஒருவருக்கு சாவு ஏற்படுமென்றால், நமது மந்திரவாதி சாமியார்களை நாட்டின் எல்லைக்கு அனுப்பி எதிரிகளை கை, கால் விளங்காமலோ, சாகடிக்கவோ செய்து விட்டால் ராணுவத்துக்கு ஆண்டு தோறும் செலவாகும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தலாமே!

அக்னி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பிடித்தால் அக்னி பகவானுக்கு பூசைசெய்வார்களா? அக்னியை அடித்து விரட்ட தீயணைப்பு வண்டியை அழைப்பார்களா?

பத்து அவதாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க, தீவிர வாதத்தை, பயங்கரவாதத்தை அழிக்க ஓர் அவதாரம் கூட எடுக்காது ஏன்?

ஜெபக்கூட்டத்தில் நாங்கள் குருடனுக் குப் பார்வை கொடுக்கிறோம் , முட வனை நடக்க வைக்கிறோம் என்று கூறுகின்ற போதகர்கள் எய்ட்ஸ் நோயாளியையும், புற்றுநோயாளி யையும், ஜெபத்தால் குணப்படுத்தத் தயாரா?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலைகள் வெளிநாடு செல்வது எவன் செயல்?

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்றுகோடி பேருக்கு உணவும், வேலையும் இல்லாமல் வறுமையும், ஏழ்மையும் உள்ளதே -_ ஏன்?

பசியால் வாடும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காத நாட்டில் கல்லுரு வுக்கு பாலாபிஷேகம் தேவையா?

சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பல வாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே _ ஏன்?

எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?

தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கு மென்றால் கடவுளெதற்கு?

கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?

கர்த்தர் ஊசா என்பவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார் (பைபிள் 11 சாமுவேல் 6-6, 7 -ஆம் வசனம்) இது தான் கருணையான இரக்கமுள்ள தேவனின் அடையாளமா? கிறித்து வர்கள் இவரை அன்புள்ள ஆண்ட வர் என்று வழிபடலாமா?

ஆயுதங்களைக் கண்டுபிடித்த வெளி நாடுகளில் ஆயுத பூஜை உண்டா?

எட்டுகிலோ கடவுள் உருவுக்கு என்ப தாயிரம் கிலோ எடையுள்ள தேர் தேவையா?

நீங்கள் வணங்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போல் உங்களுக்கு குழந்தை பிறந்தால் கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?

வாயிலிருந்து லிங்கமும், வெறுங்கை யிலிருந்து விபூதியும், மந்திரசக்தியால் எடுத்துக் கொடுக்கும் சாமியார்கள் வாயிலிருந்து பூசணிக்காயையும், வெறுங்கையிலிருந்து ஓர் உயிருள்ள யானையையும் எடுத்துக் கொடுப் பார்களா?

பச்சை ரத்தம் குடித்துக்காட்டும் பூசாரி பாலிடால் அல்லது ஆசிட் குடித்துக் காட்டுவாரா?

நெருப்பில் நடப்பது கடவுள் சக்தி என்றால் பக்தர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?

இயேசுவின் பிறப்பை மருத்துவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

தெருவில் டேப் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிற பக்கிரிசாக்கள் புனித யாத்திரை (மெக்கா பயணம்) கடமை முடிப்பது எப்போது?

நமக்கு வரும் நோய்களுக்கெல்லாம் பிரார்த்தனை, தொழுகை நேர்த்திக் கடன் செய்தால் மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?

எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவனை வழிபட சபரிமலை, திருப்பதி, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, மெக்கா செல்லும் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பது எவன் செயல்? தன்னைத் தேடிவருபவர் களுக்கு இறை வன் கொடுக்கும் பரிசு இதுதானா?

புதிதாக கார் வாங்குபவர்கள், இது கடவுளின் பரிசு என்று எழுது கிறார்கள். பலகோடி பேருக்கு கார் கொடுக்காத கடவுள் இவர்களுக்கு மட்டும் கார் கொடுப்பது நியாயம் தானா?

நாம் பள்ளிக் கூடத்தில், உயிரியல் பாடம் படிக்கத் துவங்கும் போது எல்லா உயிர்களையும் கடவுள் படைத்தார் என்றா சொல்லித்தருகிறார்கள்?

பக்தனே நீ கைவைக்காமல் கடவுள் நகருமா?

சிவாய நமஹ என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தைத் தொட முடியுமா?

ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகிய வீட்டு விலங்குகளை கடவுளுக்கு பலிகொடுக்கும் பக்தர்கள் புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய காட்டு விலங்கு களை பலி கொடுப்பதில்லையே _ ஏன் பயமா?

ஜாதகம் பார்த்து நடக்கும் திருமண வாழ்க்கையில் தரித்திரமும், சண்டை யும், சாவும், விவாகரத்தும் வருகிறதே _ ஏன்?

அன்று பேசிய, தோன்றிய கடவுள் இன்று, பேசவும் காணோம், தோன் றவும் காணோமே ஏன்?

சாமிக்கு தலை மயிரை காணிக்கை யாகக் கொடுக்கும் பக்தர்கள் ஒரு கையையோ அல்லது காலையோ காணிக்கையாகக் கொடுப்பார்களா? சாமியாடுபவர் கையில் மின்சார கம்பியை கொடுத்தால் சாமி ஆடுவாரா?

கடவுள் அருளால் நாக்கில், கன்னத் தில் வேல் குத்தும் பக்தர்கள், நெற்றி யிலோ, நெஞ்சிலோ வேல்குத்திக் காட்டுவார்களா?

தன்னையும், தமது நகைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் உங்களையும், ஊரையும், உலகத்தையும் எப்படிக் காப்பாற்றும்?

இயேசு அதோ வருகிறார் இதோ வருகிறார் என்றால் தற்சமயம் எங்கு இருக்கிறார்? எந்தத் தேதியில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு வர இருக்கிறார் யாராவது கூறமுடியுமா?

அறிவாளி கண்டு பிடித்தது மின்சக்தி, அடிமுட்டாள் கண்டுபிடித்தது ஓம் சக்தி, மின் சக்தியால் கிடைக்கும் நன்மைகளுள் ஒரு துளியாவது ஓம் சக்தியால் கிடைக்கிறதா?

பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய் வதன் மூலம் தான், கடவுளின் ஆசி கிடைக்கும் எனில் வழி யற்ற ஏழைக்கு, கடவுளின் ஆசி எப்படி கிடைக்கும்?

கடவுள் முன்பு அனைவரும் சம மெனில் சிறப்பு கட்டண நுழைவாயில் எதற்கு?

மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் கோயில்களும், - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

பாவத்தின் சம்பளம் மரணமே என் றால், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

நீரின் மேல் நடந்து காட்டியவரும், மோசேயை கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியவரும், புதைக்கப்பட்ட லாசரை எழுந்து வரச் செய்தவ ருமான இயேசு கிறிஸ்துவால் சிலுவையைத் தூக்குவதிலிருந்தும், சவுக்கடி துயரத் திலிருந்தும், அவருக்கு ஏற்பட்ட மரணத்திலிருந்தும் தம்மைக் காப் பாற்றிக் கொள்ள முடியவில்லையே _ ஏன்?

பேய், பூதம், பிசாசு, ஆவி, பில்லி சூனியம் பற்றி கூறும் மதவாதிகளும், பிழைப்புவாதிகளும் அறிவியல் ஆய்வுக்கு தயாரா? பேயை, பிசாசை, வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்ட முன் வருவார்களா?

பத்து அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு ஓர் அவதாரத்தை ஆஸ்திரேலியாவிலும், ஜப்பானிலும், அமெரிக்காவிலும் எடுக்கக் கூடாதா? எல்லா அவதாரமும் இந்த நாட்டிலே தானா?

பழைய ஊர்களுக்கு கடவுள் வந்ததாகக் கூறி அதற்கென்று ஸ்தல புராணங்கள் எழுதியுள்ளனர். இப் போது புதிய புதிய ஊர்கள், குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக் கின்றன. அவற்றுக்கெல்லாம் கடவுள் எழுந்தருளுவது எப்போது? ஸ்தல புராணங்கள் எழுதப்படுவது எப்போது?

இறை இல்லம் என்று வர்ணிக்கப் படுகிற மெக்காவில், புனித நாளில் பக்தர்கள் கூடியிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மடிந்தார்களே! உண்மையிலே இது இறைவனுடைய இல்லம்தானா? மெக்காவிற்குச் சென்றவர்களுக்குப் பணச்செலவு தானே ஆகிஇருக்கும், வேறென்ன பயன் கிடைத்தது?

கற்களில் செய்யப்பட்டு கதவுகளால் அடைக்கப்பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்ட வர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?

நீங்கள் ஆர்வத்துடன் கருத்தூன்றிப் படித்தமைக்கு நன்றி. இந்த கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்றுபட்டால், அறியாமையில் துன்புறும் தமிழர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களும் சிந்தனைத் தெளிவுபெற உதவுங்கள் என வேண்டுகிறோம். மேலும் தகவலறியவும், செயல்படவும் விரும்பினால் திராவிடர் கழக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
----விடுதலை ஞாயிறு மலர், 28-05-2011


தாகூருக்கு விழா எடுத்தால் மட்டும் போதுமா?


இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 ஆம் ஆண்டு விழா இந்திய அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது.

அவர் எழுதிய கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு கிடைக்கப் பெற்றது. அது போலவே அவர் தீட்டிய ஜனகணமன அதி நாயக ஜயகே என்ற பாடல் இந்தியத் துணைக் கண்டத்தின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே, எங் களுடைய மனத்திலும் ஆட்சி செய் கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட் டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடல் அலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன. நின்புகழைப் பாராட்டுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு வெற்றி!, வெற்றி!!, வெற்றி!!!

என்பதுதான் தாகூர் எழுதிய தேசிய கீதத்தின் திரண்ட பொருளாக்கமாகும்.

இந்தியாவில் இருக்கக்கூடிய பல மொழி, பல இனம், பண்பாடுகளையும், இயற்கை நதிகளையும் உயிரோட்டமாகப் படம் எடுத்துக் காட்டுகிறார். வேற்றுமை யில் இந்திய மக்கள் ஒற்றுமையாக கை கோத்து நிற்கும் நிலைமை அவர் கண் ணோட்டத்தில் தேசிய கீதத்தில் தேன் சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார் தாகூர்.

தாகூரின் இந்தப் பாடலுக்குப் பதிலாக வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலில் இடம் பெற்ற வந்தேமாதரம் என்ற பாடலை தேசிய கீதமாகக் கொண்டு வரப் பெருமுயற்சி நடந்ததுண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் பிரதமாக இருந்த போது வந்தேமாதரம் பாடலை தேசிய கீதமாகக் கொண்டு வர முயற்சிக்கப் பட்டது. அப்பொழுது சட்டப் பேரவையில் சபாநாயகராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சட்டை அணியாத திருமேனி அவர்; இடுப்பில் ஒரு வேட்டி, தோளில் ஓர் அங்கவஸ்திரம் அவ்வளவுதான்.

சட்டமன்றம் தொடங்கப்படும்பொழுது வந்தேமாதரம் பாடல் முழங்க அனுமதித்தார்.

இந்து மதக் கடவுள்களைப் புகழ்ந்து பாடும் இப்பாடலுக்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுள்களான முப் பெரும் தேவியர்களான பார்வதி, இலட்சுமி, சரசுவதி ஆகியோர் துதிக்கப்படுகின்றனர்.

உருவ வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளாத முசுலிம்களால் இது எப்படி ஏற்றுக் கொள்ளப்பட முடியும்? பகுத்தறி வாளர்கள்தான் எப்படி ஆதரிக்க முடியும்? பிரதமர் ராஜாஜி அவருக்கே உரித்தான தந்திரப்படி மூக்கை உள்ளே நுழைத்தார்.

அவை தொடங்கும் காலை 11 மணிக்கு முன் இந்தப் பாடலைப் பாடி முடித்துவிடுவது; விரும்புகிறவர்கள். இந்தப் பாடல் நிகழ்ச்சியின் போது அவையில் இருக்கலாம். விரும்பாதவர்கள், இந்தப் பாடல் ஒலிபரப்பியதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று பாம்பும் நோகாமல், பாம்படித்த கொம்பும் நோகா மல் இருக்கும் வகையில் வெள்ளரிப் பழத் துக்குப் பூணூல் போட்டுக் கொடுத்தார்.

விவரம் அறிந்த சிறுபான்மை மக்களான முசுலிம்கள் அறவே கூடாது _ இந்தத் தெருப் புழுதிப் பாடல் என்று எதிர்க் குரல் கொடுத்தனர்.

பார்ப்பான்தான் கெஞ்சினால் மிஞ்ச வான்; மிஞ்சினால் கெஞ்சுவான் என்பது தான் உலகறிந்த உதாரணக் கருத்தா யிற்றே!

கடைசிக் கடைசியாக வந்தேமாதரம் (வந்து ஏமாத்துறோம் - என்று கூடப் பொருள் கொள்ளலாம்) பாடல் ஊற்றி மூடப்பட்டது. தாகூரின் ஜனகணமன பாடல் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் வந்தது. அப்பொழுது என்ன செய் தார்கள்? சரஸ்வந்தனா என்ற பச்சையான இந்து மதக் கடவுளை முன்னிறுத்தி ஒரு பாடலை அறிமுகப்படுத்தத் துடியாய்த் துடித்தனர்.

1998 அக்டோபர் 22,23 ஆகிய இரு நாள்களில் புது டில்லியில் மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் இந்த சரஸ் வதி வந்தனா அறிமுகப்படுத்தப்பட்டது.

பா.ஜ.க. அல்லாத மாநிலக் கல்வி அமைச்சர்கள் பல்லில் எல்லாம் நஞ்சை வைத்துப் பாடும் பாரதீய ஜனதாவின் இந்தச் சதிக் கூட்டை சுக்கல் நூறாக உடைத்தெறிந்து விட்டனர்.

தமிழ்நாட்டின் சார்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பங்கேற்று பா.ஜ.க. வின் சதியைக் கிழித்தெறிந்தார்.

சரஸ்வதி வந்தனா பாடலை முன்னிறுத்தியதன் பின்னணியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி இருந்தார். ஒன்றும் தெரியாததுபோல வாஜ்பேயியும் பதுங்கிக் கிடந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது தாகூரின் பெருந் தன்மையையும், பொது நிலையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தத் தகவல்களையெல்லாம் சலித்துப் பார்த்தால்தான் தாகூரின் அருமை புரியும். மாஸ்கோவில் பணியாற்றிய பேராசிரியர் பிரிட்டோ என்பவர் கவிஞர் தாகூருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் (1929).

ருசியாவில் கைத் தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்களுக்கான உங்கள் நாட்டின் திட்டங்கள் என்ன? அந்த அவற்றுக்குத் தடை உண்டா? என்று கூறி மடலில் கேட்கப்பட்டு இருந் தது. இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் அதற்குப் பதிலும் அனுப்பினார்.

உங்கள் (ருசிய) நாட்டின் வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடம் இருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததேயாகும்.

நாங்கள் கீழ் நிலையில் இருப்பதற்கு, எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பயித்தியக்காரத் தன்மைகளும், வெறிப் பிடித்த தன்மைகளும் கல்வியில் முன் னேற்றம் அடையாததுதான் காரணம் (குடிஅரசு 29_11_-1931) என்று பதில் எழுதினார்.

தாகூர் வெறும் கவிஞர் மட்டுமல்ல. ஆழ்ந்த சமூகப் பார்வை அவரிடம் கோலோச்சிக் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் அறிய முடியுமே!

பிறப்பின் அடிப்படையில் பேதம், முன்னேற வேண்டுமே என்கிற துடிப்பை - முன்ஜென்மப் பலன் என்ற கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கீழே தள்ளும் சுரண் டல் முறை; எல்லாம் கடவுள் செயல் என்ற கவட்டிக்குள் தலையைச் செருகிக் கொள்ளும் பேதைமை; - சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கவே கொடுக்காதே என்பதில் மிகக் கவனமாக இருந்த மனுதர்மச் சட்டத்தின் சூழ்ச்சி; - பெண்கள் என்றால் யோனியில் பிறந்தவர்கள் என்று ஏளனம் செய்யும் இழிநிலை; - இவற்றின் ஒட்டு மொத்தத்தின் கூட்டுத் தொகை, பெருக்கல் தொகையைத்தான் சுத்த பயித்தியக்காரத் தனம் என்ற சுள்ளென்று உறைக்கும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுள்ளார் தாகூர்.

இந்தியாவின் பின்னடைவுத் தன்மைக்கு என்ன காரணம் என்பது குறித்து அய்.நா. 2004 இல் ஒரு தகவலை வெளியிட்டது.

வேற்றுமை மலிந்த இன்றைய உலகில் கலாச்சாரச் சுதந்திரம் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியானது. இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டி அவர்கள் அதனை தலைநகரான புதுடில்லியிலேயே வெளியிட்டார்.

அந்த அறிக்கை என்ன கூறுகிறது?

உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 127 ஆவது இடத்தில் இருப்ப தற்கான காரணங்கள் என்ன?

இந்தியாவில் ஆரவாரத்துடன் செயல்படும் இந்துமத அமைப்புகள்தான் அமைதி, வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இந்திய மக்களிடையே அவநம்பிக்கையும், வெறுப்பும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

பல்லாயிரம் பேரைக் கொன்று விட்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மேலும் பல்லாயிரம் பேரை, தங்கள் வீடுகளைஅப்படியே விட்டு விட்டு, பிழைத்தால் போதும் என்று புலம் பெயர வைத்த கொடுமை குஜராத்தில் நடந்தது. இத்தனையையும் செய்துவிட்டு தங்களைக் கலாச்சார இணக்கத்துக்கான தூதுவர்கள் என்று அவர்களே பாராட்டிக் கொள் கிறார்கள் என்கிறது அய்.நா. அறிக்கை.

150 ஆண்டுகளுக்கு முந்தைய தாகூரின் கணிப்புக்கு அய்.நா.வின் இந்த அறிக்கை கட்டியம் கூறவில்லையா?

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைக்கும், முடிவுகளுக்கும் இவை ஆதாரச் சுருதிகளாய் இருக்கவில்லையா?

தாகூருக்கு விழா எடுத்தால் மட்டும் போதாது; -இந்திய சமூகத்தின் ஆணி வேர்களைக் கவ்விப் பிடித்திருக்கும் தாகூர் சொன்ன -_ கணித்த - அந்தப் பயித்தியக்காரத் தன்மைகளை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி தூக்கி எறியும் துணிவு உண்டா என்பதுதான் இன்றைய கேள்வி! 

-------- விடுதலை ஞாயிறு மலர், 28-05-2011


பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஊர் அது. தொழிலில் உலகமே உற்று நோக்கக் கூடிய அளவுக்கு பிரமிப்பான வளர்ச்சி கண்டதற்கு தங்களின் ஆன்மிக ஈடுபாடே காரணம் என்று அந்த ஊரின் மெஜாரிட்டி சமுதாயத்தினர் உறுதி யாக நம்புகிறார்கள். அதனால், தேரோட்டம், சாமி விக்கிரக வீதி உலா, கும்பாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள் என கோயில் காரி யங்களில் ஒரு குறையும் வைக்கா மல் பக்தி சிரத்தையோடு செய்து வருகிறார்கள். 

மூடி மறைத்தனர்

பணம் வேண்டுமா? பத்ரகாளி கோயிலுக்கு  போ! அவளிடம் முறையிடு! நீ கேட்டது கிடைக்கும் என்று சமுதாய பெரியவர்கள், பணக் கஷ்டத்தில் உழலும் தம் மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தக் கோயிலுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக் கிறார்கள். இந்த அளவுக்கு பிரசித்த பெற்ற அந்தக் கோயிலில் தவறான ஒரு காரியம் நடந்து இப்போது கடும் மன உளைச்சலில் இருக் கிறார்கள் அச்சமுதாய பிரமுகர்கள். தப்பு செய்தது அய்யராச்சே! அவ ருக்கு சட்டப்படியான தண்டனை கிடைக்கச் செய்தால் வேதம் ஓதும் வாயால் பிராமணர்கள் நம்மை சபித்து விடுவார்களே! புனிதமான இத்திருக்கோயிலில் தெய்வ குற்றம் நடந்து விட்டதே! வெளியில் இது தெரிந்துவிட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் இது தெரிந்து விட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று பேச ஆரம்பித்து விடுவார் களே! கோயிலுக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே என்று பலவாறாக சிந்தித்து, விவாதித்து விவகாரத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆனா லும் அரசல் புரசலாக அந்த சமாச் சாரம் வெளியில் கசிந்துவிட்டது.

அர்ச்சகன் ஒட்டம்

அது என்ன தெய்வ குற்றம்?

அந்தக் கோயில் பிரகாரத்தில் உள்ள அஷ்டலட்சுமியை வழிபடுவ தில் ஆர்வம் காட்டுவார்கள் பெண் கள். அதற்கென்றே பிரத்யேகமாக அர்ச்சகர் ஒருவரை நியமித்திருந்தது கோயில் நிர்வாகம். அந்த அர்ச்சகரின் பெயர் முத்து சீதாராமன். (வயது 63). மணி அடித்து தீபாராதனை காட்டும் அவருக்கு விபூதி தட்டில் காணிக்கை நிறைய  விழும். சாமி கொஞ்சம் குங்குமம் கொடுங்கோ, இல்ல சாமி நீங்களே வச்சு விடுங்கோ என பெண் கள்  அவர்முன் பயபக்தியாக நெற் றியை காட்டி நிற்பார்கள். வயதில் முதியவர் என்பதால் அவர் கையால் குங்குமம் இட்டுக் கொள்வதை ஒரு பாக்கியமாக கருதுவார்கள். ஆன்மிகத் தின் பெயரால் பெண்களின் நெற் றியை அவர்களின் அனுமதியோடு தொட முடிந்த அந்த அர்ச்சகருக்கு அன்று ஒரு விபரீத எண்ணம் தோன்றிருக்கிறது. அதை தனியாக வந்த ஒரு சிறுமியிடம் செயல்படுத்த, அவள் போட்ட கூச்சலில் பக்தர்கள் அவரை நையப்புடைத்திருக்கிறார்கள். உடனே இந்த விவகாரத்தை அந்தச் சிறுமியின் பெற்றோரே தொலைபேசி மூலம் காவல் நிலையத்துக்கு தெரி விக்க, கோயிலுக்கே வந்து அர்ச்சகரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது காவல்துறை. கோயில் நிர்வாகமோ எதுக்கு இந்தச் சின்ன விஷயத்தை பெரிசுபடுத்துறீங்க அய்யரு இந்த வயசுல தப்பு பண்ணுவாரா? கீழே விழுந்த உங்க புள்ளய தூக்கி விட குனிஞ்சிருக்காரு, அப்ப மேல விழுந்துட்டாரு போல, ஒருவேளை அய்யரு தப்பு பண்ணியிருந்தா ஆத்தா தண்டிப்பா, அவளை நம்புங்க என்று சிறுமியின் பெற்றோரை சமாதானப் படுத்த முனைந்திருக்கிறது. பெற்றோர் அதற்கு உடன்படாமல் காவல்நிலை யத்தில் புகார் கொடுக்க ஆயத்தமா யிருக்கிறார்கள். அப்போது காவல் துறையினர் நீங்க புகார் கொடுங்க, அய்யருமேல நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்.

ஆனா, உங்க மக இந்த சின்ன வயசுல கோர்ட், கேஸுன்னு அலைஞ்சு தேவையில்லாம அவமா னப்பட வேண்டியிருக்கும் என்று நடைமுறையை விளக்கியிருக்கிறார் கள். உடனே யோசித்த பெற்றோர். காக்கிகள் கூறியபடி சாமி கும்பிட்ட போது வீண் விவாதம் பண்ணி தகராறு செய்தார் என்று அர்ச்சகர் மீது பெயரளவுக்கு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். பிறகென்ன? தப்பித்தோம்; பிழைத்தோம் என கோயில் பணியை ராஜினாமா செய்து விட்டு அர்ச்சகர் நடையைக் கட்டி யிருக்கிறார்.

நாம் அந்தக் கோயில் கமிட்டி யின் செயலாளரைச் சந்தித்தோம். என்னமோ நடந்து போச்சு. இதை யெல்லாம் எழுதி கோயில் பேரைக் கெடுத்திடாதீங்க. இப்பதான் அந்த அய்யரு வேலைல இல்லியே பக்தை ஒருவர் கொடுத்த நன் கொடைக்கு ரசீது போட்டவாறே நமக்கும் பதில் சொன்னார்.

மற்ற அர்ச்சகர்கள் மட்டும் யோக்கியர்களா?
அந்தக் கோயிலின் மற்ற அர்ச் சகர்களின் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசினார் கடைக்காரர் ஒருவர். அந்தக் கோயில்ல இருக்கிற அர்ச்சகர்களுக்கு பான் பராக் பழக்கம் உண்டு. ராத்திரி ஆனா தண்ணி அடிப்பானுக. அதனால கோயில்லையும் போதையிலேயே இருப்பானுக. அங்க ஆஞ்சநேய ருக்கு பூஜை பண்ணுற அர்ச்சகர் ஒருத்தரு இன்னொரு அர்ச்சகரு கிட்ட பேசிக்கிட்டிருந்த நானே கேட்டிருக்கேன். அவன் தீர்த்தம் கொடுப்பானாம். அத குடிக்கிற இளம் பெண் பக்தைகளோட உதடுக தீர்த்தத்தோட ஈரம் பட்டு ரொம்ப கவர்ச்சியா இருக்குமாம். அப்ப அந்த அர்ச்சகருக்கு ரொம்ப மூடாயிருக்குமாம். இதயெல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் இந்த வேலையை பார்க்க வேண்டி யிருக்குன்னு ரொம்பவும் சலிச்சுக் கிட்டு சொன்னான். இந்த அர்ச்ச கருக கையில இருக்கிற செல் போன்ல அந்த மாதிரி அசிங்கம் நெறய இருக்கு. உன் போன்ல என்ன இருக்கு? என் போன்ல என்னெல் லாம் இருக்குன்னு மாற்றி மாற்றி பார்த்துக்குவானுக. இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சு அலையற அர்ச்ச கருக பூஜை பண்ணித்தான் சாமி யோட அருள் நமக்கு கிடைக்கு தாக்கும். ரொம்பக் கொடுமையா இருக்கு. சாமி பேரைச் சொல்லிக் கிட்டு இந்தக் காலத்துலயும் இன்ன மும் ஏமாத்திக் கிட்டிருக்கிறவங்கள நாமதான் அறியாமையில சாமி சாமின்னு சொல்லிக் கிட்டிருக் கோம். எல்லா அர்ச்சகரையும் நான் பொதுவா குத்தம் சொல்லல... ஆச் சாரமா இருக்கிற நல்ல அர்ச்சர் களும் இருங்காங்க என்றார்.

- சி.என்.இராமகிருஷ்ணன்
(நன்றி: நக்கீரன் மே 28-31 (2011)

-------- தொகுப்பு விடுதலை, 30-05-2011


தி.க - தி.மு.க வை விமர்சிக்க நான் தயாராகவில்லை --- சின்னக்குத்தூசி


எழுத்தாளர் சின்ன குத்தூசி அவர்களின் நினை வேந்தல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது (29.5.2011).

கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் பேசினார்கள்.

அடிப்படையில் பெரியார் சிந்தனையாளராக அவர் வாழ்ந்து மறைந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.

மனிதர்கள் பிறக்கிறார்கள் - வாழ்கிறார்கள், மறை கிறார்கள் - ஆனாலும் அனைவரும் மக்களால் பாராட்டப் படுவதில்லை. மனித குலத்துக்குத் தொண்டு செய்தவர்கள் போற்றப்படுகிறார்கள்.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுவதை இந்நேரத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவது தான் மனிதத் தன்மை (21.7.1962) என்று கூறுகிறார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

குடும்பம் என்கிற தனி வாழ்க்கையைத் தவிர்த்து, முழு நேரமும் எழுத்துப் பணியை மேற்கொண்டவர் சின்ன குத்தூசி. அது பெரும்பாலும் அரசியல் தன்மை கொண்டதாக இருந்தாலும் அதில் அடிப்படையான சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வு - திராவிடர் இயக்கப் பார்வை என்பது முதல் நிலையில் இருக்கும் என்பதுதான் அவர் எழுத்துகளுக்குரிய தனிச் சிறப்பாகும்.

காலச் சுவடு என்னும் இதழ் சின்னக்குத்தூசி அவர்களைப் பேட்டி கண்டது.

கேள்வி: எல்லா விஷயங்கள் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் தி.க. - தி.மு.க. சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் மவுனம் சாதிக்கிறீர்களே; இது எப்படி சரியாகும்?

சின்னக் குத்தூசி: தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்கள் பற்றியும் ஓச்சல், ஒழிச்சல் இல்லாமல் கேலி செய்ய, கண்டிக்க, தாக்கிட என்று எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ எழுத்தாளர் பெரு மக்களும் இருக்கிறார்கள்.

ஓரிரு சந்தர்ப்பங்களில் தி.க.வும், தி.மு.க.வுமே ஒன்றையொன்று தாக்கி விமர்சனப் போர் நடத்து கின்றன. என்னைப் பொறுத்தவரையில் தி.க. - தி.மு.க., ஆகிய இரு அமைப்புகள் பற்றியும் எத்தனைப் பேர் எத்தனைவிதமான குறைகளைக் கூறினாலும், அந்த இரு அமைப்புகள் இருக்கும் வரையில்தான் சமூக சீர்திருத் தத்துக்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அந்த இரு அமைப்புகளும் இல்லாவிட்டால் இங்கே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவைகளை இந்த அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய அமைப்புகள் வேறு எதுவும் என் கண்ணுக்குப்படவில்லை. ஆகவே தி.க., தி.மு.க., வன்முறைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்து, அவைகளை அழித்துவிடத் துடிக்கும் பேனா வீரர்கள் அணியில் இடம் பெற நான் விரும்பவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் நான் தயாராகவில்லை
என்று சின்ன குத்தூசி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது ஓர் ஆழமான கருத்து என்பதில் அய்யமில்லை. பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மம் வேரூன்றப்பட்ட சமூக அமைப்பில், அவற்றை வீழ்த்தும் சமூகப் புரட்சி இயக்கமாக திராவிடர் கழகமும், அரசியலில் தி.மு.க.வும் இருப்பதால் இந்த முடிவினை எழுத்தாளர் சின்னகுத்தூசி மேற்கொண்டார். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பன சக்திகள் கண் மூடித்தனமாக தி.மு.க.வை எதிர்த்ததன் பின்னணியைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், தமிழ் செம்மொழி அங்கீகாரம், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம், தீட்சதப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடமாக இருந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டு வந்த நிலை - வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் கோட்பாட்டுக்கு விரோதமாக அவரால் உண்டாக் கப்பட்ட சத்திய ஞானசபையில் ஊடுருவி, லிங்க உருவ வழிபாட்டைத் திணித்த அர்ச்சகர்ப் பார்ப்பனரை வெளியேற்றியது உள்ளிட்ட செயல்கள் தந்தை பெரியார் வழி - சீர்திருத்த எண்ண வழி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்லவா?

அதற்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தானே சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும்  என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திக்கு இடம் இல்லை என்ற நிலையும் உறுதிபடுத்தப்பட்டது.

திராவிடர் கழகத்தால்  பிரச்சாரம் மூலம் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்படு வதையும், அதற்கான சட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படு வதையும் காண்பவர்களுக்கு எழுத்தாளர் சின்னகுத்தூசி அவர்களின் பேட்டியில் கூறப்பட்ட கருத்தின் அருமை கண்டிப்பாகப் புரியாமற் போகாது.

அந்த அடிப்படையில்தான் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அவரின் பெயரால் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பல்கலைக் கழகவேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களால் நேற்றைய நினைவேந்தல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது ஒரு பொருத்தமான அறிவிப்பாகும்.

சின்னகுத்தூசி அவர்களை  கடைசி காலத்தில் பேணிக் காத்த நக்கீரன் குழுமத்திற்கு விடுதலை குழுமம் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

--------- விடுதலை தலையங்கம், 30-05-2011


Monday, May 23, 2011

பத்திரிகை நரிகளின் முகத்திரையைக் கிழிக்கும் அரிய கட்டுரை

ஊழல்பற்றி ஊளையிடும் பத்திரிகை நரிகளின் முகத்திரையைக் கிழித்து முதுகு எலும்பை முறிக்கும் அரிய கட்டுரை இது.

தமிழின அழிப்புப் போரை சிங்கள ராணுவம் மட்டும் அல்லாமல் இந்திய பார்ப்பன ஊடகங்களும் சமீபகாலமாக நடத்தி வருகின்றன. அப்பாவி மக்களை காக்கவே இந்த போர் என்று சிங்கள ராணுவம் சொல்லியது போலவே ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பதே தங்கள் நோக்கம் என்று இந்திய ஊடகங் களும் சொல்கின்றன!

சிங்கள ராணுவம் செய்ததும் இந்திய ஊடகங்கள் செய்வதும் வெகுமக்களின் நன்மைக்கே என்று உலகம் நம்பும் அளவுக்கு காட்சிகள் நேர்த்தியாக அரங்கேற்றப்படுகின்றன. தமிழக மக்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசும் சிங்கள ராணு வமும் வெளியிடும் கருத்துகளை நம்புவதற்கு தயாரில்லை.

ராஜபக்சே குற்றவாளிதான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இந்திய பார்ப்பன ஊடகங்களை இவர்கள் நம்புவதுதான் நம்மை உறுத்துகிறது. இந்திய ஊடகங்கள் அனைத்தும் கடந்த 6 மாதகாலமாக ஊழலுக்கு எதிராக செய்தி போடுகிறோம் என் கிற பெயரில் நடத்திய அடாவடித் தனத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

குறிப்பாக இந்திய காட்சி ஊடகத் தொலைக்காட்சி களான சி.என்.என்.அய்.பி.என்., டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. போன் றவை அளவுக்கு அதிகமாக கூச்ச லிட்டன. ராஜ்தீப் சர்தேசாயும் அரு ணாப் கோசுவாமியும் பர்கா தத்தும் தான் இனி இந்த நாட்டை காப் பாற்றும் வல்லமை வாய்ந்தவர்கள் என்று ஆங்கிலம் தெரிந்த அறிவு ஜீவிகள் நம்பும் வகையில் செய்திகள் ஒளிபரப்பாகின. அச்சு ஊடகங்களில் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற வையும் ஊழலுக்கு எதிராக பதாகை கள் தூக்கின.

இவற்றுள் காட்சி ஊடகங்களின் யோக்கியத் தன்மையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

சி.என்.என்.அய்.பி.என். செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்டார்! என்ன காரணத்திற்காக எனில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், அன்றைய நாளின் முக்கிய செய்திப் பற்றிய மக்களின் கருத்துகளை டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து எடுத்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார் கள்.

அப்படி சி.என்.என்.அய்.பி.என். ஒளிபரப்பிய டிவிட்டர் கருத்துகளில் பல போலியானவை என்று ஒரு பார்வையாளர் கண்டுபிடித்து கட்டுரை எழுதியதும் அந்த தொலைக்காட்சி நிறுவனம், ‘‘We deeply regret the error and apologise for the same. We will take all steps to ensure that this is not repeated’’ இப்படி மன்னிப்புக் கேட்டது.

இது ஏறக்குறைய தினமலர் பத்திரிகையில் வெளியாகும் போலி ஆசிரியர் கடிதத்துக்கு ஒப்பானது தான்.

அடுத்து, நம்ம டைம்ஸ் நைவ் தொலைக்காட்சியின் பண்புநலனைப் பார்ப்போம்!

டைம்ஸ் குழுமத்தின் ‘Medianet’ திட்டம் பலத்த எதிர்ப்புக்கு உள் ளானது. அந்த திட்டத்தின்படி, திரைப்படக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், நிறுவன அதிபர்கள் போன்ற பணம் கொழிக்கும் பிரபலங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெறுவதற்கு தம் பத்திரிகையிலும் தொலைக்காட்சி யிலும் இடம் ஒதுக்கப்படும்.

எது உண்மை செய்தி எது பணம் வாங்கிக் கொண்டு போடும் செய்தி என்கிற வேறுபாடே மக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்று பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த நிறுவனம் அந்தச் சாக்கடையில் இருந்து இன்னும் எழவில்லை. அதன் பிறகு 2008ஆம் ஆண்டு புதுவகை திட்டத்தை கொண்டு வந்தது டைம்ஸ் குழுமம்.

அதன்படி, பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதனுடைய பங்குகளை வாங்கிக் கொள்வது. அது எப்படி எனில், பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் போடப்படும் விளம்பரங்களுக்கு பணம் வாங்கிக் கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்வது.

அந்த வகையில் 2008ஆம் ஆண்டு வரை சுமார் 200 நிறுவனங்களில் தன் ஒப்பந்தத்தை நீட்டியிருந்தது இந்த டைம்ஸ் குழுமம்.

இப்படி பங்கு வாங்கியிருக்கும் நிறுவனங்கள் பற்றி நல்ல செய்திகளை போடுவதும் கெட்ட செய்திகளை தவிர்ப்பதும் அதன் மூலம் நிறுவனங்களின் பங்கு கள் சரியாமல் பார்த்துக் கொள் வதுமான ஊடக தர்மம் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியது.

அதன்பிறகு, பங்குச்சந்தையை கண்காணிக்கும் SEBI அமைப்பு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், ஊடகங்களில் பிற நிறுவனங்கள் பற்றிய செய்திகள் எப்படி ஒளிபரப் பப்படுகிறது அல்லது அச்சிடப்படுகிறது என்கிற விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

அந்த விளக்கங்கள் எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவைகள் தான் டைம்ஸ் குழுமத்தின் சிறப்புகள். மூன்றாவதாக என்.டி .டி.வி.யின் சிறப்பம்சங்கள் பற்றி சிறிது பார்ப்போம்.

‘NDTV juggles funds, shares abroad, avoids tax’ என்று தலைப்பிட்டு சண்டே கார்டியன் இதழில் அதன் உதவி ஆசிரியர் சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கப்பட்டி ருக்கும் கிளை நிறுவனத்தின் மூலமே எல்லா கணக்குகளும் பரிவர்த் தனைகளும் செய்யப்படுவதாகவும் அதன் மூலம் இந்தியாவில் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி என்.டி.டி.வி. நிறுவனம் வரி ஏய்ப்பு செய்த தொகை பல கோடிகள் இருக்கும் என்று அந்த கட்டுரையில் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் பார்ப்பன ஊடகங்களின் புனிதத்தன்மையை பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களுக்கும்(!) பொது மக்களுக்கும் தமிழ் ஊடகங்களின் தரம் பற்றி நன்கு தெரியும்.

திக்.. திக்... திகார்!, அடுத்த குறி!, காக்க காக்க கனிமொழி காக்க!, தயாளுவை சீண்டும் ராஜாத்தி!, ராஜாத்தி ஸ்டிரைக்! இப்படி இன் னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரைகள் வெளி யிடுகின்றன தமிழ்ப் பத்திரிகைள். இந்த மாதிரி தலைப்புகளில் கற் பனைக் குதிரையை தட்டிவிட்டு தங்கள் அனுமானத்திற்கு செய்தி களையும் கட்டுரைகளையும் எழுது வது என்ன வகையான இதழியல் என்று புரியவில்லை.

ஒருவரை நீதிமன்றங்கள் தண்டிப்பதற்கு முன்பே ஊடகங்கள் தண்டித்து விடுகின்றன என்கிற புகார் நூறு சதவிகிதம் நியாயம் தான். அந்த அள வுக்கு இந்த பார்ப்பன பத்திரிகைகள் எழுத்து அடாவடித்தனம் செய்கிறது.

எது எப்படி நடைபெற்றதோ அதை அப்படியே மக்களுக்கு செய்தியாக சொல்ல வேண்டும் என்கிற அடிப் படை இதழியல் இலக்கணத்தைப் பற்றி இங்கே ஒருவரும் கவலைப் படுவதாய் தெரியவில்லை.

கட்சிகள் மற்றும் இயக்கங்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் நடுநிலை என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வ தில்லை. அவைகள் கொள்கைகளை எடுத்தும் சொல்லும் பத்திரிகைகள். ஆனால், நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் எப்படி நடந்து கொள்கின்றன. தாங்கள் சொல்வதுதான் கருத்து.

இதை தான் மக்கள் நம்ப வேண்டும் என்கிற திமிரில் அவை எழுதிகின்றன. மோடிப் பற்றி சஞ்சீவ் பட் கூறி யிருக்கும் குற்றச்சாட்டு இந்த பத்திரி கைகளுக்கு முக்கியமானதாக தெரிய வில்லை. ஏதோ பெயருக்கு அந்த செய்தியை போடுகிறார்கள்.

ஆயிரக் கணக்கான மக்களின் உயிரை எடுக்க மோடி இணக்கம் தெரிவித்தது பெரிய செய்தியா?, இல்லையா?, ஜெய லலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்குவது ஊழல் எதிர்ப்பு வளையத்துக்குள் வராத செய்தியா?, அன்னா அசாரே நடத்தும் அறக்கட்டளையின் கணக்குவழக்கில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே இது மிகப் பெரிய செய்தி இல்லையா?

வெகுமக்கள் ஊடகக் கோட் பாடுகளில் இரண்டை மட்டும் இங்கே சிறிது பார்ப்போம்.

Agenda Setting theory என்பது செய்தி ஊடகங்கள் அதனுடைய கருத்தை எண்ணத்தை திருப்பி திருப்பி மக்கள் மத்தியில பரப்புவதன் மூலம் அதை ஒரு பொதுக் கருத்தாக மாற்றுவது. இந்தக் கோட்பாடு, எந்த செய்திக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கிறது என்பதை பற்றி சொல்கிறது.

Mugic bullet theory என்பது ஊட கங்கள் எந்த கருத்தை சொன்னாலும் அதை மக்கள் நம்பி ஏற்றுக் கொள் வார்கள். உலகப் போர் நடை பெற்றபோது வானொலியில் என்ன செய்திகள் சொல்லப்பட்டனவோ அதை மக்கள் அப்படியே நம்பி னார்கள் என்பதில் இருந்து இந்தக் கோட்பாடு பிறந்தது. நாஜி ஜெர்மானியர்கள் இப்படி தான் உலகப் போர் செய்திகளை அந்நாட்டு மக்களுக்குச் சொன்னார்கள்.

இந்தக் கோட்டுபாடுகளின் மொத்த உருவமாக இன்றைய வெகுஜன ஊடகங்கள் திகழ்கின்றன.

இப்படிதான், தி இந்து உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகள், ஈழப்போர் பற்றிய அய்.நாவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தராததோடு, அதை இருட்டடிப்பு செய்யவும் செய்தன. ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞர் மீது கண்டபடி புகார் கூற மட்டும் இவை தயங்குவதில்லை. இதேபோல், தமிழ்ப் பத்திரிகைகளும் செய்திகளை இருட்டடிப்பு செய் வதில் தேர்ந்தவைகளாக இருக் கின்றன.

எதன் அடிப்படையில் இந்தக் கோட்பாடுகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் செயல்படுத்துகின்றன என்பதற்கு நாம் பெரிய ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பனீயத்தை காப்பதும் தமிழினத்தை வீழ்த்துவதும் தான் அதன் அடிப்படை. இதன்படி தான் பத்திரிகைகளில் செய்திகள் முக்கியத் துவம் பெருவதும் சில செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் நடைபெறுகின்றன.

அதனால் தான், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாங்கேவை தேடிப் போய் செய்திகளை பெற்று அதை வெளியிடும் தி இந்து பத்திரிகைக்கு அய்.நா.வின் அறிக்கைப் புலப் படவில்லை.

ஊழல் ஒழிப்பு கதா நாயகனாக அன்னா அசாரே தூக்கிப்பிடிக்கப்பட்டதும் இந்துத் துவ சக்திகளுக்கு வலுவூட்டி ஆட்சியில் அமர வைப்பதற்கான ஒரு முன்னோட்டம்தான்.

Corruption என்றால் வெறும் ஊழல் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. எல்லா வகையான அயோக்கியத்தனமும் அதில் உள்ளடங்கும். அதன்படி, ஊடக தர்மத்தை கடைப் பிடிக்காதவர்களும் குற்றவாளிகள் தான்! நடுநிலை என்று கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான்! நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று என்றார் பெரியார்!

அந்த கிழவன் சொல்லிய எதுவும் இதுவரை பொய்யாகிவிடவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

இதை புரிந்துகொண்டு, பார்ப்பன ஊடகங்கள் தொடுக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராக அணி திரள்வோம்! பார்ப்பன ஊடகங் களைப் புறக்கணிப்போம்!

-------- புதுக்குடியான், விடுதலை ஞாயிறு மலர் (21-05-2011)


Sunday, May 22, 2011

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்...


பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஏனென்றால் இதை அவ்வளவு ஆழமாக சிந்தித்திருக்கின்றார். மதம் என்று வந்தால் அது ஒரு வட்டத்திற்குள் வந்து நின்றுவிடும். அதைத்தான் அய்யா அவர்கள் ரொம்ப அழகாக சொன்னார்.

தமிழ் மொழியை மதங்களிலே சாய்க்காமல்

தமிழ் மொழியை மதங்களிலே சாய்க்காமல் வேண்டும். புரட்சிக் கவிஞர் அவர்கள் இன்னொரு இடத்தில் சொல்லுகின்றார். சமயம் என்ற சூளையிலே தமிழ் நாட்டால் முளையாது என்று.

இந்த விதையைப் பாதுகாத்து கொண்டு வர வேண்டும். இது நல்ல விதை. ரொம்ப பாதுகாப்பான இடத்தில் தான் நட்டிருக்கின்றேன். இந்த நல்ல விதையை எங்கே நட்டிருக்கிறேன் என்றால் சூளையில் நட்டிருக்கிறேன். செங்கல் சூளைக்குள் நாட்டிருக்கிறேன் என்றால் அந்தச் செடி எங்கேயாவது வருமா? வளருமா?

அதனால் தான் சொன்னார். புரட்சிக் கவிஞர் மதம் என்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று. எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார் பாருங்கள்.

தமிழ் நாட்டின் தெருக்களிலே தமிழ்தான் இல்லை
மனக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை. மாந்தோப்பில் நிழலா இல்லை. தனிப்பரிதான் துன்பமிது தமிழ்நாட்டின் தெருக்களிலே தமிழ் தான் இல்லை என்று சொன்னார். அதற்குரிய வாய்ப்பு ஏன் வரவில்லை?

உடனே அதற்கு விளக்கம் சொல்லுகிறார். அய்யா அவர்கள். பெரியார் கேட்கிறார். ஏன் மொழியைக் கொண்டு போய் மதத்தோடு இணைக்க வேண்டும்? அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பதுதான் பெரியாரின் கருத்து.

நம்முடைய அரசியல் சட்டத்திலேயே மிகவும் ஆழமான சிந்தனை எது? முதலில் எடுத்தவுடனே நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். sovereign, Democratic secular, Socialist, Republic அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முன்னுரையிலே இது தான் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் முன்னுரையில்
Soverign என்றால் என்ன? முழு உரிமை பெற்ற, Secular மதச் சார்பற்ற Socialist என்பதை பின்னாலே சேர்த்துக் கொண்டார்கள் மிக முக்கியமாக.

செக்குலர் என்பதற்கு மதச்சார்பின்மை என்று பொருள். இப்பொழுதும் கூட எல்லா மதத்தையும் ஒரே மாதிரி பாவிப்பது என்று தவறான விளக்கத்தைச் சொல்லுகின்றார்கள். இது தவறான அணுகுமுறை என்று பெரியார் சொல்லிவிட்டார். இது தனியே பேச வேண்டிய செய்தி.

பெரியார் அவர்களுடைய மொழி சிந்தனை என்பது வேறு. தமிழை மதத்தோடு சேர்த்து, சேர்த்து சொன்ன பொழுது அதற்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். அப்பொழுது தான் அது பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.

நீச்சர்கள் பேசுவதால் நீச்ச பாஷையா?
துணை வேந்தர் அவர்கள் நல்ல கேள்வி கேட்டார். நீச்சர்கள் பேசுவதால் அது நீச்ச பாஷையா? அல்லது நீச்ச பாஷை பேசுவதால் நீச்சர்களா? இந்த இரண்டு கேள்வியும் ஆழமான சிந்தனைக்கு உட்பட்டது.

உலகத்திலேயே எந்த பாஷையாவது நீச்ச பாஷை என்று சொல்லியிருக்கின்றார்களா? நீக்ரோக்கள் பேசக் கூடிய மொழியாக இருக்கலாம். இன்றைக்கு நீக்ரோ என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்கன் பிளாக், ஆஸ்ட்ரேலியன் பிளாக் தங்களை கறுப்பர்கள் என்று அழைப்பதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள். கனடியன் பிளாக் என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள். எங்களுடைய கலாச்சாரம் கறுப்புக் கலாச்சாரம் என்று சொல்லுகிறார்கள்.

தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் அனுமதியில்லை
அவர்களைக் கூட கொச்சையான மொழி பேசுகிறவர்கள் என்று அவர்கள் ஒதுக்கி வைக்கவில்லை. ஒரு பக்கம் கண்ணுதற் கடவுள் கழக மோடமர்ந்து என்று சொல்லுகின்றான். அப்புறம் ஏன் உள்ளே போக  முடியவில்லை.

அந்த மொழிக்கு சுயமரியாதை வராத காரணத் தால் தான் இன்னமும் நம்முடைய கோயில்களிலே நம்முடைய மன்னர்கள் கட்டிய பெரிய கோயிலா கட்டும் அல்லது சிறிய கோயிலாகட்டும் அங்கே தமிழனும் உள்ளே போக முடியவில்லை.

தடைகள் இருக்கின்றன
இப்பொழுது தான் நிலைமை மாறியிருக்கிறது. இதற்கும் பல தடைகள் இருக்கிறது. கோயில்குள்ளே தமிழும் போக முடியவில்லை. தமிழனும் உள்ளே போக முடியவில்லை. இதைவிட வேறு கொடுமை என்ன?

அதோடு தமிழன் இல்லத்து மணவிழா என்பதற்கு அடையாளம் என்ன? அங்கே தமிழிலே நடக்கிறதா? இல்லையே. நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் போக முடியாதே.

இன்னமும் சமஸ்கிருதத்தில் தான் திருமணம்
இன்னமும் திருமணம் எப்படி நடக்கிறது?  வட மொழியில் புரியாத மொழியில் சமஸ்கிருதத்தில் தானே திருமணத்தை நடத்துகிறார்கள். அந்த மொழி மீது நமக்கு ஒன்றும் கோபமில்லை. சில தமிழ றிஞர்கள் மேதைகள் என்று வந்தவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள்? அந்த சமஸ்கிருத மொழி உச்சரிப்பால் ஒரு சிறப்பு இருக்கிறது. இது சாதாரண விசயமல்ல. தமிழில் இந்த சிறப்பெல்லாம் கிடையாது என்று சொன்னார்கள்.

ஆனால் மறைமலை அடிகளார் சொன்னார். சமஸ்கிருதத்தைப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் வயிற்று வலிவரும் என்று சொன்னார். இதை வேடிக்கைக்காக நான் சொல்லவில்லை.

மறைமலை அடிகளார் பாடம்
அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சிக்கு வந்தார். பாடத்திட்ட ஆட்சி மொழிக் குழுவில் இருந்த மு.வரதராசனார் மொழி பற்றிய மறைமலை அடிகளார் கூறிய கருத்துக்களை ஒரு பாடமாக வைத்தார். அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருவார் என்று நினைத்து மறைமலை அடிகளார் இந்தப் பாடத்தை வைக்கவில்லை. அண்ணா அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த பாடத்தை எடுக்க வேண்டும் என்று எதிர்த்தார்கள்.

ஆனால் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மறைமலை அடிகளார் சொன்ன அதே காரணத்தைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொன்னார். மறைமலை அடிகளார் சொன்னார். சமஸ்கிருதப் பாடத்தை வைத்தால் மாணவர்களுக்கு வயிற்று வலியே வரும். தமிழ் மொழியில் இந்த தொந்தரவு இல்லை என்று சொன்னார்.

அண்ணா சொன்னார் மறைமலை அடி களாரைப் போல ஒரு மொழி அறிஞரே கிடையாது. சமஸ்கிருதத்தை ஆழமாகப் புரிந்தவர். எனவே அவர் விருப்பு, வெறுப்பு இன்றி எதையும் சொல்லவில்லை. விஞ்ஞான ரீதியிலே மருத்துவ தன்மையிலே உளவியல் கூற்றுப்படி மொழியல் அறிஞர் ஆராய்ந்தால் என்ன சொல்லுவார்களோ அதை சொன்னார் என்று அண்ணா சொன்னார். கடைசி வரை அதை எடுக்கவில்லை. அது பாடமாக இருந்தது. அது தான் மிக முக்கியமானது.

பரமசிவனுக்கு உகந்த மொழி அய்யா சொல்லுகிறார் பரமசிவனுக்கு உகந்த பாட்டு தமிழ் என்றால் (அய்யா அவர்கள் மனதிற்குப் பட்டதை பளிச்சென்று சொல்லுவார்) எதிர்ப்பைப் பற்றிக் கவலைப் படமாட்டார்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும், துலுக்கனும் தமிழில் படிப்பது பாவமல்லவா? அந்த மதத்துக்காரன் இந்த மொழியை எப்படி படிப்பான்? மற்ற மதத்துக்காரன் அரேபியாவிலிருந்து வந்தவன் அல்ல. மற்ற மதத்துக்காரன் தான் இஸ்ரேயிலிருந்து குதித்தவன் அல்ல. அல்லது அகதியாக வந்தவன் அல்ல.
இனத்தால் திராவிடர்கள்

நான்கு தலைமுறைக்கு முன்னால் இனத்தால் அவர்கள் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள். இப்படி எல்லாம் இருக்கிற சூழ்நிலையில் ஏன் அவர்கள் இதைப் பற்றிச் சொல்லவில்லை?

மேலும் சொல்லுகிறார். அந்தப்படி இருந்தால் பார்ப்பனர்கள் தமிழ் மொழிக்கு சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதை பாவம் என்று சொல்வார்களா? ஒரு பெரிய மடத்தினுடைய தலைவர் நான் குளித்து சந்தியாவந்தனம் எல்லாம் பண்ணி விட்டேன். இனிமேல் என்னிடத்திலே  தமிழில் பேச முடியாது.

சமஸ்கிருதத்தில் பேசினால்தான் நான் பேசுவேன். இல்லையானால் நான் உங்களோடு பேச முடியாது. நாளைக்கு வாருங்கள் என்று ஒரு தமிழ்ப்புலவர் சொன்னார். அவரும் பார்ப்பனர்தான். அதிலிருந்து அந்த மடத்தலைவரை போய் இவர் பார்க்கவில்லை. இது பற்றிய செய்தியைச் சொன்னவர் இன்றைக்கும் 94 வயதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

பேராசிரியர் திரு.என்.சுப்பிரமணியம் என்பது அவர்களுடைய பெயர். வரலாற்றைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 30, 40 நூல்களுக்கு மேல் அவர் எழுதியிருக்கின்றார். மிகப்பெரிய வரலாற்று அறிஞர் அவர். இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தன்வரலாறு நூலில்

அவன் தன் வரலாறு என்ற நூலை எழுதியிருக் கின்றார். அந்த நூலில் இதை எழுதியிருக்கின்றார். அவர் தான் இந்த செய்தியை சொல்லியிருக்கின்றார்.

காரைக்குடியிலே என்னுடைய தந்தையார் தமிழாசிரியராக இருந்தார். என் தந்தையார் காரைக்குடிக்கு வந்திருந்த சங்கராச்சாரியாரை சந்தித்தார். மறைந்த சங்காரச்சாரியார். இத் தனைக்கும் அவர் இவருக்கு அறிமுகமானவர். காரைக்குடியில் என்.சுப்பிரமணியம் அவர் களுடைய தந்தையார் தான் சங்காரச்சாரியாரை சந்திக்கச் செல்கின்றார். சங்கராச்சாரியார் தான் குளித்து முடித்துவிட்டு சந்தியாவந்தனம் ஜபதபம் எல்லாம் செய்து விட்டு வந்த பிறகு தமிழில் பேச மாட்டேன். சமஸ்கிருதத்தில்தான் பேசுவேன் என்று சொல்லியிருக்கின்றார். அப்படியானால் என் தமிழும் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தால் உங்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் திரும்பிப் போகிறேன் என்று சொன்னவர் யார்? நீங்கள் ஜாதியை கூட மறந்து விட்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.

மொழிக்கு சுயமரியாதை...!
இந்த இடத்திலே தன்மானம் மொழி சுய மரியாதை என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த மொழிக்குரிய சுயமரியாதை வந்ததென்றால் பெரியார் பிறந்த காரணத்தினாலே வந்த உணர்வு. அதற்கு முன்பு அப்படிப்பட்ட சூழல் இல்லை.

பெரியார் தமிழுக்கு விரோதி தமிழுக்கு விரோதமான கருத்துக்களை பெரியார் சொன்னார் என்று சொல்லுகிறார்கள்.

தமிழுக்கு எதிரானவர் 
ஆகா பெரியார் தமிழுக்கு விரோதி தமிழுக்கு எதிரானவர் என்று சொல்வதா? கலைஞரோ அல்லது தமிழர்களை விரும்புகிறவர்கள் பெரி யாரை பாராட்டினால் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் என்று சொல்வதா? தமிழ்மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று ஏன் எதனால் சொல்லுகிறேன் என்றால் என்று துணிச்சலோடு விளக்கத்தைச் சொன்னார்.

தமிழும் தமிழரும்!
தமிழும், தமிழரும் என்ற ஒரு நூலை நாங்கள் போட்டிருக்கின்றோம். எதையும் ஆதாரத்தோடு நாங்கள் பதில் சொல்லக் கூடியவர்கள். மொழி பற்றி அய்யா அவர்கள் சொல்லும் பொழுது கூட பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். மக்களுக்குத் தன்மான உணர்வை உண்டாக்க வேண்டும். மொழிக்கும் தன்மானம் இருக்க வேண்டும் என்று சொல்லுகிற பொழுது இங்கே சொல்லுகிறார் பாருங்கள்.

தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி

தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

---------- விடுதலை,22-05-2011


தமிழக (2011) பதவி ஏற்ப்பு விழாவில் லூட்டி அடித்த சோ ராமசாமி



2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமைச்சரவைக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (16.5.2011)

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலை வர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற் றனர்.

முதல் வரிசையில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி அமர்ந்து கொண்டு செய்த அட்டகாசங்கள் சாதாரண மானவையல்ல. லூட்டி அடித்தார் என்றே கூறவேண்டும். அட்டாணிக் கால் போட்டுக் கொண்டு,அடிக்கடி கைகளைத் தட்டிக் கொண்டு, அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு ஒரேயடியாகத்தான் கும்மாளம் போட்டார்.

தொலைக்காட்சியில் இதனைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்குத் தான்தான் சூத்திரதாரி என்பது போலவும், தான்தான் ராஜகுரு என்பது போலவும் காட்டிக் கொண்டார். மக்களை நம்ப வைக்க இப்படி ஒரு ஏற்பாட்டைத் தனக்குத் தானே செய்து கொண்டு, திட்டமிட்ட வகையில் தான் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரிகிறது.

1971 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இதே பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அமைச்சரவை பதவி ஏற்றது. (15.3.1971).

ஒருவர்கூட ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்கவில்லை.

அந்த நிகழ்ச்சியிலேயே தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு, முதல் அமைச்சர் கலைஞர் முதல் அத்தனை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தந்தை பெரியார் அவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்த காட்சியெல் லாம் மனக் கண் முன் நிழலாடுகிறது.

அப்பொழுது கனம் ராஜாஜி அவர்கள் இவ்வாறு எழுதினார். மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும்.

அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது (கல்கி 4.4.1971) தமிழக மந்திரி சபை என்று ஆத்திரம் அடைக்க எழுதினார் ஆச்சாரியார் ராஜாஜி.

அந்த நிலை எங்கே? இந்த நிலை எங்கே?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பார்ப்பன ஒளிவட்டம் என்னும் தோற்றத்தை உருவாக்குவார்

சோ-.- இவர் நெஞ்சம் என்பது பூணூல் மஞ்சம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அவர்கள் கூட தனிப்பட்ட எந்த ஒருவர் வீட்டுக்கும் செல்வது கிடையாது -_ சோ ராமசாமி வீட்டைத் தவிர. இந்த அந்நியோன்னியத்தைக் கூட தம் இனத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார் சோ.

மக்கள் ஆதரவு என்றால் ஜாதி ரீதியான வலை வீச்சு என்று கலைஞரைக் குற்றம் சாற்றி இவ்வார துக்ளக்கில் (25_-5_-2011) தலை யங்கம் தீட்டியுள்ளார். அதே நேரத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏன் சீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றி எழுத வேண்டியது தானே?

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ் வதிக்குக் கையாளாக இருந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்டார். சங்கராச்சாரியார் கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டவர் இந்த சோ. எம்.ஜி.ஆருக்குக் கையாளாக இருந்து அ.தி.மு.க. பொருளாளராக இருந்த சவுந்தர பாண்டியன்பற்றி உளவு பார்த்தார். எவ்வளவு பெரிய பார்ப்பன வெறியர் இவர் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

கேள்வி: சட்டசபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் பிராமண பாஷையில் பேசுவது யாரைக் கிண்டல் செய்ய?

சோவின் பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந் தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்பொழுது ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை.

(துக்ளக் 22_-7_-2009 பக்கம் 14)

இதற்கு விளக்கம் தேவையா? இங்குப் பேசுவது குமுறுவது சோவின் பூணூல் தானே!

தமிழர்களின் கல்விக் கண்ணில் மண்ணை அள்ளிப் போடுவதில் முதல் ஆளாக இருக்கக் கூடியவர்தான் இந்த சோ. அதனால்தான் 1952 இல் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை - அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற மனுதர்மத் திட்டத்தை இப்பொழுதும் ஆதரித்து எழுதுகிறார் என்றால் தெரிந்து கொள்ளலாமே.

(துக்ளக் 15-7-1988)

எதற்காக செல்விஜெயலலிதா அவர் களை இவர் ஆதரிக்கிறார்? ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு என்ன?

திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத் திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத் தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமை யாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா என்று கேட்டால் கிடையாது.

கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தாலும், அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு ஒரு புறம்; தொழிலாளிகளுக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்கமாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னொரு புறம்.

இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கைகளை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீப காலஅரசியல் அற்புதம்!

(துக்ளக்: 21-_-9_-2005) என்று விலாவாரியாக செல்வி ஜெயலலிதா பற்றி திருவாளர் சோ ராமசாமி எழுதித் தள்ளியுள்ளார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதா திராவிட பாரம்பரியத்துக் குச் சம்பந்தமே இல்லாதவர். அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர். அவரது நம்பிக்கை திராவிட பாரம்பரியத்துக்கு எதிரானது. மாறாக தனது நம்பிக்கைகளை திராவிட பாரம்பரியத்தினை ஏற்கச் செய்தவர் என்று பச்சையாக - பார்ப்பனத்தனமாக செதிர் காயாக உடைத்துச் சொல்லிவிட்டார்.

இது -_ செல்வி ஜெயலலிதாவுக்குப் பாராட்டா _ இகழ்ச்சியா? என்பதை சம்பந் தப்பட்ட வர்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சோ, ஜெயலலிதாவை ஆதரிப் பதற்குக் காரணமே இந்தக் கண்ணோட்டம் தான். இதனை மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் புரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

உண்மையான திராவிடப் பாரம் பரியத்தாரும், அய்யா, அண்ணா கொள்கை புரிந்தோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடைசி செய்தி:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை! --_ சோ ராமசாமி.

ரஜினிபற்றிய ஆங்கில நூல் வெளி யீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார். (சென்னை 2008 மார்ச்சு).

முதல்வர் ஜெயலலிதா இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

---------மின்சாரம், ஞாயிறு மலர் (21-05-2011)


Tuesday, May 17, 2011

இக்காலத்திலும் மனுதர்மத்தை பற்றி பேசும் துக்ளக் சோ ராமசாமி

கரூர் மாநகரில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில்  வழக்குரைஞர் வீர.கே. சின்னப்பன் நினைவுப் பந்தலில் நடை பெற்றது. பாவலரேறு பெருஞ் சித்திரனார் தலைமை வகித்தார்.

மனுதர்ம சாத்திர எரிப்புப் போராட்டம் அப்பொழுது அறிவிக்கப்பட்டது.

ஜாதி ஒழிப்பிலும், சம வாய்ப்புச் சமூகத்தை உருவாக்கு வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை யுள்ள திராவிடர் கழகமானது தனது எதிர்ப்பையும், வெறுப் பையும் காட்டும் அறிகுறியாக மே 17ஆம் தேதியன்று (1981) நாடெங்கும் மனுதர்மத்தின் முக்கிய சுலோகங்களை உள்ள டக்கிய அச்சுத்தாளை திறந்த வெளியில் கொளுத்தி, நமது ஜாதி ஒழிப்பு உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டால் தடையை மீறிக் கொளுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது.

அம்மாநாட்டில் மராட்டிய மாநில தாழ்த்தப்பட்டோர் விடு தலை இயக்கத் தலைவர் தலித் பந்தர் தலைவர் அருண்காம்ப்ளே கலந்து கொண்டு சங்கநாதம் செய்தார்.

தமிழ்நாடெங்கும் பெண் களே தலைமை வகித்துப் பல்லாயிரக்கணக்கானோர் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானர்கள். சென் னையில் கழகப் பொதுச் செய லாளர் கி. வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

மனுதர்ம எதிர்ப்புப் போராட் டத்தினை  வெறும் தடை மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று மனப்பால் குடித்த அன்றைய எம்.ஜி.ஆர். அரசு அதில் தோல்வி கண்டது.

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலே விரும்பும் எவரும் - அதற்கு மூல ஊற்றாக இருக்கக் கூடிய இந்துமத ஸ்மிருதிகளை, இராமாயணம் போன்ற இதிகாசங்களைக் கொளுத்தத்தானே வேண்டும்?

மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி என்று மனோன் மணீயம் சுந்தரனார் மிக அழகாகவே பாடினார்.

இன்றைக்கு யார் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் கள் - இதற்கான எதிர்ப் போராட்டம் எல்லாம் தேவையா என்று நுனிப்புல் மேயும் மனப்பான்மையில் போகிற போக்கில் கேட்போர் உண்டு.

பூனாவில் நடைபெற்ற (1981 டிசம்பர்) ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே!
இப்பொழுதுகூட திருவாளர் சோ ராமசாமி துக்ளக் இதழில் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடித்துத் தத்துவார்த்த முலாம் பூசிக் கொண்டு திரிகிறாரே!

பல்லாயிரம் வருடங் களுக்கு முன்பாக ஆழ்ந்த சிந்தனை (மனுதர்மம்) இங்கே இருந்திருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கின்றனர். நாம்தான், மனு ஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம் (துக்ளக் 24.11.2010) என்று இந்த கால கட்டத்திலும் துணிச்சலாக எழுதுகிறார் என்றால், அந்தத் தன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

சூத்திரன் ஏழு வகைப் படுவான் என்றும், அதில் ஒன்று விபசாரி மகன் என்றும் (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) எழுதி வைத்திருக்கும் மனுதர்மம் மிக உயர்ந்தது என்றும் மேல்நாட்டவர்களும் பாராட்டுகிறார்கள் என்றும் ஒரு பார்ப்பனனால் இன்றைக்குக்கூட எழுத முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன?

நம்மைத் தேவடியாள் மகன் என்று சொல்வதிலே பெருமைப் படக் கூடிய ஆணவக்காரர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று தானே கொள்ள வேண்டும்?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்னும் முழக்கம் இந்தக் கால கட்டத்திலும் தேவைப்படுகிறது அல்லவா!

- மயிலாடன், விடுதலை (17-05-2011)


Monday, May 16, 2011

மோடி மஸ்த்தான் ஆட்சியின் யோக்கிதை....

‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமையானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்பட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத்தான் ஆட்சி நடத்த வேண்டும்’

‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவிக்கக் காரணமாயிருந்தார். இந்து மதவெறியர்களின் கொலைவெறித் தாண்டவம் முடியும் வரை எதுவும் செய்யக்கூடாது என காவல்துறைக்கு ஆணையிட்டார். நீதியை வளைத்து, உண்மையைப் புதைத்து, கொலைகாரர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டார்’

மேலே சொன்ன இரண்டுமே ஒருவரைப் பற்றிய செய்திதான். அவர் வேறு யாருமன்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். ஒரே மனிதரைப் பற்றி, இரண்டுவிதமான செய்திகள், அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்ட கோணத்தில். இரண்டில் எது உண்மை, இதில் மறைந்திருக்கும் அரசியல் என்ன?

2007, நவம்பர் 3ஆம் நாளிட்ட தெகல்கா புலனாய்வு வார இதழ் மோடியின் மதவெறியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 2002 பிப்ரவரியில் நடந்த கலவரம், முதலமைச்சர் மோடி மற்றும் பிஜேபி தலைமையிலான நடுவண் அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அந்தப் புலனாய்வு இதழ் மறுக்க முடியாத சான்றுகளுடன் முன்வைத்தது. இந்துத்துவக் கலவரக்காரர்களின் வாயிலிருந்தே அத்தனை உண்மைகளையும் காட்சிப் பதிவுகளாக வெளியிட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை.

இந்நிலையில், குஜராத் உயர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திர பட், உச்ச நீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டட்டும்” என்று முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டார் என அந்த வாக்குமூலத்தில் சஞ்சீவ் பட் கூறியிருக்கின்றார். இவர் ஏதோ ஊகத்தின் அடிப்படையிலோ, கற்பனையாகவோ இதைச் சொல்லவில்லை. 2002 பிப்ரவரி 27 ஆம் நாள் குஜராத் முதல்வர் மோடி, தனது வீட்டில் கூட்டிய காவல்துறை உயரதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் இந்த சஞ்சீவ் பட். அன்று தங்களுக்கு முதல்வர் இட்ட உத்தரவைத்தான் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவ் பட். அதோடு இவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை, இவரது வாகன ஓட்டியான, தாராசந்த் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவற்றின் மீது என்ன விசாரணை மேற்கொள்ளப்படும், மோடிக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதெல்லாம், உச்சநீதிமன்றத்தின் நேர்மைக்கான வினாக்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்ட பெரும்பான்மை இந்துக்களின் முதல்வராக மட்டுமே செயல்பட்டவர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட மதவெறியரைத் தான், காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கின்ற அன்னா ஹசாரே முதல் தமிழ்நாட்டின் சீமான் வரை முன்மாதிரி முதல்வர் என்று போற்றுகிறார்கள். மோடிக்கு அவர்கள் சூட்டிய புகழாரம் தான் கட்டுரையின் முதல் பத்தி.

அன்னா ஹசாரே மோடி புகழ் பாடியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதுவும் குஜராத் மாநிலத்தின் சமூக ஆர்வலர்களிடமிருந்தே அந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.(தி ஹிண்டு ஏப்ரல் 13, 2011)

மோடியின் கிராமப்புற மேம்பாட்டுக்கான மாதிரிகள், ஊடகங்கள் சொல்வது போலத் தொழில் முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையில் குஜராத் என்பதெல்லாம் தகரத்திற்குத் தங்க முலாம் பூசியது போன்றது என்பது அவர்களின் கூற்று. குஜராத்தின் வளர்ச்சி என்பது மேல்தட்டு மக்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிதானே ஒழிய, பெரும்பான்மை கிராமங்களின் வளர்ச்சியாக இல்லை. குஜராத்தின் பெரும்பான்மை சமூக சக்திகள், தங்களின் குறைகளை மறைக்க இந்த ‘குஜராத் முன்னேறுகிறது’  என்கிற முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் அவர்கள்.

இந்தக் கருத்துகளைத் தனித்தனியாக யாரும் சொல்லவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு, கூட்டறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்கள். சமூக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா, மனித உரிமைகள் ஒருங்கமைப்பின் இயக்குனர் பிரசாந்த் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரோகித் பிரஜாபதி, சாராபாய், நந்தினி மஞ்ரேகர் ஆகியோர் அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அன்னா ஹசாரே மோடியை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் அவர் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து விலகப்போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் குஜராத்தின் பின்னோக்கிய வளர்ச்சியை அன்னா ஹசாரே நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தை விளக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

மோடி தலைமையிலான அரசு விவசாயிகள், பெண்கள், உழைக்கும் வகுப்பார், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிரானது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சரி, இப்போது செய்திக்கு வருவோம். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவற்றிற்கு நேர்மாறாக இருக்கின்றன. அவை  குஜராத்தின் தொழில் வளர்ச்சியையும், மோடியின் நிர்வாகத்தையும் வானளாவப் புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் பெரிய கட்டமைப்புகளைக் கொண்ட ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கின்றன. மோடியின் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டி வருகிறது. டாடா கார் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழில்நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகத் தந்திருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவைதான் குஜராத்தின் உண்மை நிலை. இதனை  இங்கிருந்து கொண்டு நாம் சொல்லவில்லை, அங்கே மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து, அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர், பெருமுதலாளிகளின் கைப்பாவைதான் முதல்வர் மோடி என்று.

ஜெர்மானியர்களை யூதர்களுக்கு எதிராக மூளைச் சலவை செய்த, ஹிட்லரின் படுகொலைகளை நியாயப்படுத்திய கோயபல்சின் ‘தி அட்டாக்’ என்ற நாளிதழின் பணியைத்தான் இப்போது இந்த ஊடகங்கள் செய்துவருகின்றன. பளபளப்பான பக்கங்களை மட்டுமே காட்டி, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, மக்களிடையே ‘ரொம்ப நல்லவர் மோடி’யின் மாய பிம்பத்தை உலவவிட் டிருக்கின்றன.

‘அங்கு இருக்கின்ற இசுலாமியர்களும் அமைதியாக இருக்கின்றனரே! 2002 கலவரத்திற்குப் பிறகும், மோடியைத்தானே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நிர்வாகத் திறமை மிக்கவர் மோடி என்பதால்தானே, அனைத்தையும் மறந்துவிட்டு, மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ’ என்று ஒரு பரப்புரை, தமிழ்நாட்டிலும் நடந்துவருகிறது. அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு, அங்கே சிறுபான்மையினரான இசுலாமியர்களின் வாக்கு வங்கி இல்லை. எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற அளவிற்கு, அவர்களுக்கு ஆதரவான வலிமையான அமைப்புகளும் அங்கு இல்லை. ஏற்கனவே மதப் பெரும்பான்மையினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இசுலாமியர்கள், அச்சத்தின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கின்றனர். இதுதான் உண்மை.

சு.சாமி, சோ.சாமி போன்ற ஜெயலலிதா வகையறாக்கள் மோடிக்குத் தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பதும், விழா நாயகனாக்கித் தூக்கிப் பிடிப்பதும் ஏன் என்று புரிந்து கொள்ள அகராதியைப் புரட்ட வேண்டிதில்லை. அது அவாள்களின் இனப்பாசம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் மோடியைப் போற்றிப் புகழ்கிறாரே எப்படி என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை, ஜெயலலிதாவையே ஆதரித்து, இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கும்போது, மோடியைப் புகழ்வதில் என்ன வந்துவிடப் போகிறது என்று அவர் நினைத்திருக்கலாம்.

தவறு செய்தவன் தனி மனிதாக இருந்தால், அவன் மனம் திருந்தும் நிலையில் மன்னிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நரேந்திர மோடி என்பவர் தனி மனிதர் அல்லர். இந்துத்துவாவின் அடையாளம். அகண்ட பாரதம் காணத் துடிக்கும், பிஜேபி தலைவர்களில் ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாநிலத்தின் முதல்வர். அங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் தன்மான நல்வாழ்க்கைக்குப் பொறுப்பானவர். அப்படிப்பட்டவர் செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைத்து, மேலோட்டமாகப் பார்த்துக் கருத்துக்களைச் சொல்வது எப்படி சரியாகும்?

முடக்கி வைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டி எடுக்க, நல்லதொரு வாய்ப்பை சஞ்சீவ் பட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகும், மோடியே நேரடியாக வந்து சொன்னால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று சட்டமும், நீதிமன்றமும் கருதினால்... குஜராத்தின் தற்காலிக அமைதி இப்படியே காலத்திற்கும் நீடிக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

------ நன்றி: கீற்று இணையம்,கட்டுரையாளர் இரா.உமா


Saturday, May 14, 2011

இவாள் எல்லாம் யார்? யார்?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் எதற்கெடுத்தாலும் ஆரியர் - _ திராவிடர் என்று பேசுறாளே என்று துக்ளக் சோ முதல் தினமணி வைத்தியநாதய்யர் கல்கி ராஜேந்திரன்கள் வரை குதி குதி என்று குதிக்கிறாளே! இங்கு சங்கராச்சாரியாரைச் சுத்தி இருப்பவாள் எல்லாம் யாராம்?

சாத்தானும் தீத்தானுமா இருக்கா? எல்லாம் அவாள்தானே? பூணூல் கோத்திரத்தைச் சேர்ந்தவாதானே? இந்த யோக்கியதையில் வீரமணியையும், கலைஞரையும் எதற்கெடுத்தாலும் சீண்டுவது ஏன்? லாலாலஜபதி தான் சொன்னார்.

சென்னை மாகாண பிராமணர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றாரே அவர் வாய்க்குச் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

---------- விடுதலை,ஞாயிறு மலர் (14-05-2011)


தி(இ)ன மலரின் திரிநூல்தனம்

தினமலரான இனமலருக்குச் சதா திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை! 

அதுவும் சரிதானே, - பார்ப்பனர் களுக்குத் தங்களின் எதிரி யார் என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்குத்தான் விவரம் போதவில்லை.
(1) ஏப்ரல் 25 ஆம் தேதி தினமலரில் தனபாலுக்கு இதோ ஒரு டவுட்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லையெனில், இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் வளர்த்தே தீரணும்னு உங்க சகோதரர் கட்சி முடிவெடுத்து . . . அப்படி இருக்கும் போது, நீங்க சொல்றது எப்படி நிறைவேறும்னு புரியலையே
(தினமலர் 25--.4-.2011)

இதில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்பதை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறாரே (15.-3.-2011). நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு காங்கிரசுக்கு 63 இடங்களைக் கொடுக்கத் தேவையில்லை என்று அதில் கூறப் பட்டுள்ளதே.

உண்மை இவ்வாறு இருக்க ஒரு மாதம் 9 நாள்கள் கழித்து இப்படி தினமலர் எழுதுகிறதே - என்ன ஞான பிரகாசம்!

இனமலர் தனபாலுக்கு இன்னொரு டவுட்

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி:
வன்னிப் பகுதியில் இலங்கை அரசு அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியது.

டவுட் தனபாலு: அப்படியா?

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதா உங்க சேய்க் கழகத் தலைவர்தான் சொன் னாரு. அதன் அடிப்படையில்தானே அவர் உண்ணாவிரதத்தையே முடிச்சாரு. அப்படி அவர் சொன்னது உண்மை யில்லையா? (தினமலர் 8-.5.-2011)

உத்தரவாதம் கொடுத்தது உண்மை தான். அதன்படி நடந்து கொள்ளவில்லை என்பதும் அதைவிட உண்மைதான். அதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் இடித்துக் காட்டிச் சொல்லி யிருக்கிறார்.

இப்படி உத்தரவாதம் கொடுத்ததற்கு மாறாக நடந்து கொண்ட ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக்கு என்று திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.

அது சரி ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமா- வேண் டாமா? இதில் தினமலரின் நிலை என்ன? அதனை வெளிப்படுத்த முடியுமா?

(3) திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததற்காக இந்தியா தான் முதன் முதலில் ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்திய அரசின் போக்கை வரலாற்றிலே என்ன என்று நினைப்பர்?

டவுட் தனபாலு: தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்களும், தலைவர்களும் மத்திய அரசை வலுவா வற்புறுத்துல. அதனால், மத்திய அரசு ஒண்ணும் செய்யலை _ ன்னு நினைப்பாங்க. வேற எப்படி நிணக்கச் சொல்றீங்க.

(தினமலர் 7-.5.-2011)

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ மத்திய அரசை வற்புறுத்தலையாம் . . . தினமலர் பத்திரிகை தமிழ்நாட்டில் இருந்துதான் வெளியாகிறதா?

எத்தனைப் போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. எத்தனை பேரணிகளை, மாநாடுகளை நடத்தி, தீர்மானங்கள் வாயிலாக திராவிடர் கழகம் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.

மதுரை, கரூர், பட்டுக்கோட்டை, திருவரங்கம், திருப்பத்தூர் என்று எத்தனை இடங்களில் மாநாடு கூட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.

திராவிடர் கழகத்தின் இந்த நடவடிக்கையைப் பற்றி ஒரே ஒரு வரி செய்தி வெளியிட மனம் வராத பார்ப்பன ஏடு, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது!

முதல் அமைச்சர் கலைஞரே உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசை வற்புறுத்தவில்லையா?

திருமாவளவன், பேரா. சுப.வீரபாண் டியன் போன்றவர்கள் வீராவேசமாகக் குரல் கொடுக்கவில்லையா? சகோதரர் வைகோ குரல் கொடுக்கவில்லையா?

இதற்கு மேல் மத்திய அரசை எப்படி வற்புறுத்த வேண்டும் என்று இனமலர் எதிர்பார்க்கிறது? அதனைச் சொல் லட்டுமே!

பேச நா இரண்டுடையாய் போற்றி என்று ஆரியர் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் அழகுற படம் பிடித்துக் காட்டினாரே. அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

------- மின்சாரம், விடுதலை ஞாயிறு மலர் (14-05-2011)


அன்று சர்ச்சிலுக்கு ஏற்பட்ட இதே நிலை! இன்று தி.மு.க விற்கு....தொடரட்டும் சமூகப்பணி

இனம், மொழி, பகுத்தறிவு, பண்பாடு, சமூக நீதிக் களங்கள் உண்டு
அரசியலோடு இப்பணிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!... தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், அதே நேரத்தில் அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல; மேலும் பல களங்கள் உண்டு என்றும் எடுத்துக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

நேற்று (மே 13-2011) வந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத் தக்கவை - வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான (நம்) அனைவருக்கும்.

வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

சாதனைகளுக்குக் கிடைத்த பரிசு!

இந்தத் தோல்வி, கலைஞர் (தி.மு.க.) அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், ஆம் என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 1933-லேயே குடிஅரசில் எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

நன்றி என்பது பலனடைந்தவர்கள் கட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்

- இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

அன்று சர்ச்சிலுக்கு ஏற்பட்ட இதே நிலை!


இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனையும், நேச நாடுகளையும் அச்சு நாடுகள் அணித் தலைவர் சர்வாதிகார ஆரிய இட்லரிடமிருந்து காப்பாற்றி, போரில் மக்களுக்குத் தன்னம் பிக்கை ஊட்டி, தளராது பாடுபட்டார் அன்றைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

எனது மக்களிடம் வியர்வையும், ரத்தமும், உழைப்பும் தாருங்கள் என்று கேட்பதைத் தவிர, நான் தருவதற்கு வேறுஒன்றுமில்லை என்று கூறி, மிகப் பெரிய போரை வென்று ஜனநாயகத்தை, சர்வாதிகாரம் கொல்லாமல் காத்த வின்ஸ்டன் சர்ச்சலின் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்தனர் பிரிட்டிஷ் மக்கள் - இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் நடந்த பிரிட்டனின் பொதுத் தேர்தலில். மக்கள் தீர்ப்பு - விசித்தரமானதாகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தாலும் அதைத் தலை வணங்கி ஏற்கிறேன் என்றுதான் இரும்பு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சில் அன்று கூறினார்!

சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்ன பதில்

தான் நின்ற தொகுதிகளில் எல்லாம் (திருவாரூர் உட்பட) தொடர்ந்து வென்றே சரித்திரம் படைத்த நமது முதல்வர் கலைஞர் அவர்கள், இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர் களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நேற்று!

எந்த நிலையிலும் எதிர் நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967-இல் பச்சைத் தமிழர் காமராசர்கூட தோற்ற நிலையில், சாதனைகளை அதிக மாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற் கடித்தார்கள் - மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றார்!

தொங்கு சட்டசபைக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட் டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்ட சபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட் டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதல் அமைச்சர் ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார் நேற்று ஒரு பேட்டியில்.

அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு - குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?
நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கலைஞரின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களுக்கு, ஓய்வு என்பது சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணி களுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் - போன்றவை காத்துக் கொண்டிருக் கின்றன - வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

அரசியல் களம் போல, சமரசங்களுக்கு உட்படாதவைகள் அக்களங்கள்! திராவிடர் - தமிழர் இனமானப் பிரச் சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக் கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்!

இவற்றில் சாதிக்கப்பட வேண் டியவை நிரம்பவே உண்டு - அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப் பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல் படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்?

அரசியல் நாகரீகப்படி புதிய அரசுக்கு நமது வாழ்த்துக்கள்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


Wednesday, May 11, 2011

புத்தர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தினசரி இலவசமாகவே மாமிசம் கிடைத்தது

ரிக் வேதம் பசு புனிதமானது என்று கூறுகிறது. புனிதமானபடியால் யாகங் களில் அது வாளால் அல்லது கோடரி யால் வெட்டப்பட்டுக் கடவுளுக்கு நெய்வேத்தியமாக அளிக்கப்பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாத மாக பிராமணர்களும் சரி, பிராமணர்கள் அல்லாத ஜாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர்.

இதை தைத்தீரிய பிராமணா என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு கோ உணவு அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளி கள் வேத காலங்களில் கவுரவப் படுத்தப்பட்டனர்.

ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷி யாகிய யாஜன வல்கியார் கூறுகிறார்:

நான் அதைச் சாப்பிடுகிறேன். ஆனால், அது இளசாக இருக்க வேண்டும்.

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததைப் புத்த சூத்திரங்கள் தெளி வாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராளமாகக் கொல்லப் பட்டன. இவை அனைத்தும் சமயச் சடங்குகளாகக் கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்களை மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்ப வர்களை, மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமிசங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் இந்துக்களைப் பிரித்தால் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார், துண்டாப்படாதவர் எனலாம். ஆனால், வேதங்கள் கூறும் நான்கு வர்ணங்களுக்கு இது ஒத்துவராது. எனினும், எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் மாட்டு மாமிசத்தை உண்ணுவதை விட்டுவிட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால், பிராமணர் அல்லாதவர் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்ம் பிராமணர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மையில் ஏறத்தாழ தினசரி பிராமணர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் குருமார்கள் ஆன படியால், பிராமணர் அல்லாதார் எல்லாச் சடங்குகளுக்கும் பிராமணர்களை அழைத்து வந்தனர்.

எல்லாச் சடங்குகளி லும் கலந்து கொள் ளும் பிராமணர் களுக்குத் தினசரி இலவச மாகவே மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பிரா மணர் அல்லாதவர் களுக்கு கிடைக்க வில்லை. உபநிஷத் துக்கள் கோ மாமிசம் சாப்பிடுவதை நியா யப்படுத்தின; கட்டா யப்படுத்தின. அப்படியானால், கோ மாமிசம் சாப்பிடுவதைப் பிராமணர் எப்பொழுது கைவிட்டனர்? ஏன் கைவிட்டனர்? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

புத்த மதத்திற்கும் பிராமணீயத் திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும் பொருள் முதல்வாதமும் மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தத்தைப் பெரிதும் ஆதரித்தவன்.

பிராமணர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பெரும் முயற்சி செய்து வந்தனர். பவுத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே மதத்தைப் பிராமணர்களும் கடுமையாக பின்பற்றத் தொடங்கினர். புத்தர் இறந்த பின், பவுத்தர்கள் புத்தக் கோவில்களைக் கட்டினர். பிராம ணர்களும் கோயில்களைக் கட்டினர். ஆனால், அவைகளில் சிவன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணன் விக்கிரகங்களை வைத்தனர். இதன் நோக்கம் ஒன்றே; புத்தர் கோவில்களுக்குச் செல்லும் மக்களைத் தங்கள் கோவில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோவில்கள் ஏற்பட்டன. பிராமணீயத்தில் கோவில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயத்தை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக் கொலை எதிர்ப்பைப் பெரு வாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற்றனர். காரணம், விவசாயத் திற்கு மாடுகள் மிகத் தேவையான தாலும் பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்தி லிருந்துதான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பிராமணர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமன்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து. எந்த மாமிசமும் தின்பவர்கள் அல்லர் என்றும் தாங்கள் காய்கறிகள்தான் உண்பவர்கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பிராமணர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப் பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒருபுறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பிராமணர்களும் பிரா மணர் அல்லாதவர்களும், கோமாமிசம் சாப்பிடுவதை விட்டபின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோமாமிசம் சாப் பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத் தியது.

கோமாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது; அதைக் கொல்லக் கூடாது; பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங் கினர். அகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

(மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து)

--------- விடுதலை ஞாயிறு மலர், 07-05-2011


1930 ஆம் வருடத்திலேயே தாலியின்றி மாலை நேரத்தில் நடைபெற்ற திருமணம்

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும், கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை குமாரத்தி திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5.5.1930 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரி யாதை மாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம் மாளவர்கள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார் கள்.

- ஈ.வெ. ராமசாமி

- இவ்வாறு ஓர் அறிவிப்பு குடிஅரசு இதழில் (4.5.1930) வெளிவந்துள்ளது.

சிவகாமி அம்மையார் சிறு வயதில் திருமணம் செய்து இளவயதிலேயே கணவனை இழந்தவர்.

அவருக்கு எப்படியும் மறு மணம் செய்து வைக்கவேண்டும் என்பதிலே பெண்ணின் தந்தை யார் குப்புசாமி பிள்ளை அவர் களைவிட அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

இதனை மணமகளின் தந்தையார் குப்புசாமி அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாடு ஈரோட்டிலே ஏற்பாடாகி இருந்தது. அந்த மாநாட்டுக்கு முன்பாகவே அந்தப் பந்தலில் சிவகாமி - சிதம்பரனார் புனர் விவாஹம் நடைபெற்றது. (அப்படித்தான் அந்தக் காலகட்டத்தில் குடிஅரசு வெளியிட்டு இருந் தது- 11.5.1930 குடிஅரசு, பக்கம் 12) தாலியின்றி மாலை நேரத் தில் நடைபெற்றது அந்தக் காலத்தில் பெரும் புரட்சிதானே!

திருமணத்தை நாகம்மை யார் முன்னின்று நடத்தி வைத் தார்கள். அப்பொழுது மண மக்கள் உறுதிமொழிகளைக் கூறினார்கள்.

மணமகள்
உறுதி மொழி


இன்றிலிருந்து அன்பி னால் நமது இன்ப இல்லற வாழ்வு ஆரம்பமாகின்றது - அந்நல்வாழ்விற்கு இன்றியமை யாததாகிய எனது அன்பு, எனது கூட்டுறவு முதலியவைகளை சமூக முன்னேற்றத் தொண்டிற் கான எல்லாத் துறைகளிலும் தந்துதவி, நமது நியாயமான விருப்பத்திற்கு மாற்றமில்லாது என்றென்றும் எனது அருமை ஆருயிர்த் துணைவராக இன்று முதல் ஏற்றுக் கொள்கிறேன்.

இதேபோல, மணமகனும் கூறினார். இந்த உறுதிமொழி அச்சிட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்று மாலை 4 மணிக்கு பெரியார் மாளிகையிலிருந்து மணமக்களை மோட்டாரில் வைத்து மேள தாளங்கள் முழங்க, பிரமுகர்கள் குழாம் சூழ மாநாட்டுச் சிங்காரக் கொட்ட கைக்கு அழைத்து வந்தனர்.

திருமணத்திற்குப் பின் சாமி. சிதம்பரனார் (தமிழ் ஆசிரியர்) திருவாரூருக்கு மாற்றலானார்.
இதற்காகவே, திருவாரூ ருக்குத் தந்தை பெரியாரும், நாகம்மையாரும் வரவேண்டும் என்று கூறி (5.6.1930) பெரிய ஊர்வலமும், வரவேற்பும் நிகழ்த் தப்பட்டன.

திருவாரூரில் சில நாள்கள் தங்கி இருந்து சிவகாமி அம்மை யாருக்குக் குடும்பப் பாங்கு களைப் பயிற்றுவித்து வந்தார் அன்னை நாகம்மையார் என்ப தெல்லாம் சாதாரணமானதுதானா?

தந்தை பெரியாருக்குப் பரந்து விரிந்த தமிழர் குடும்பமே தமது குடும்பம் என்பதற்கும், அதில் நாகம்மையார் அவர் களின் பாத்திரம் எத்தகையது என்பதற்கும் இது ஒரே ஒரு பருக்கை எடுத்துக்காட்டாகும்.

இன்று அன்னை நாகம்மை யார் நினைவு நாள் (1933).
-  மயிலாடன் எழுதியது, விடுதலை 11-05-2011


சங்கராச்சாரியார் பார்வையில் சாயிபாபா!

இன்றைய ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கொல்ஸ் பள்ளி என்ற கிராமத்தில் வசித்த வெங்கடப்ப ராஜீ - ஈஸ்வரம்மா தம்பதியிருக்கு மகனாக நவம்பர் 23, 1926-_இல் பிறந்தார் பாபா. இந்தக் கிராமமே இப்பொழுது புட்டபர்த்தி என்ற பெயரில் விளங்குகிறது. புட்டபர்த்தி என்பதற்குப் புற்றுகள் நிறைந்த ஊர் என்று பொருள் இங்கு பாம்புகள் அதிகம்.

இவ்வூருக்குப் புற்றூர் எனப் பெயர் வரக் காரணம் உண்டு...
இங்கு வசித்த மாடு மேய்க்கும் வாலிபன், தன் மாடுகளைக் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மேய்ப்பான். திரும்பி வரும்போது, ஒரே ஒரு மாட்டின் மடியில் மட்டும், பால் இல்லாமல் இருப்பதைக் கவனித்தான். தொடர்ந்து சில நாட்களாக இதே நிலை நீடித்தது. அந்தப் பசுவை ரகசியமாக கண்காணித்தான்.

ஒரு நாள் தொழுவத்திலிருந்து கிளம்பி, மலையடிவாரத்துக்குச் சென்றது பசு. அங்கு ஒரு புற்று இருந்தது. இதிலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியே வந்து மாட்டின் மடியில் வாய் வைத்துப் பாலைக் குடித்தது. வாலிபனுக்கு அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்பட, அந்தப் பாம்பைக் கொல்வதற்காக ஒரு கல்லைத் தூக்கிப் போட்டான். உயிருக்குப் போராடிய பாம்பு பேசியது.

இந்த ஊரிலுள்ள இடையர்கள் இனி தொழில் செய்ய முடியாது. பசுக்கள் அழிந்து விடும். இனி ஊர் முழுதும் புற்றாக மாறி, நல்ல பாம்புகள் குடி கொள்ளும் என சாபமிட்டார். அதன் பின் இந்தவூர் புற்றூர் ஆகி விட்டது.

காலையில் கிணற்றுத் தண்ணீர் இறைக்கச்சென்ற ஈஸ்வராம்பாவின் வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி வந்த நீல ஒளி பாய்ந்தது. ஈஸ்வரம்பா மயங்கி விட்டார். இதன்பின்தான் வயிற்றில் புகுந்தது தெய்வீக ஒளி என பெரியவர்கள் கூறினர். இதிலிருந்து பத்தாவது மாதம் பாபா பிறந்தார். குழந்தைக்கு சத்ய நாராயண ராஜு என பெயரிட்டனர்.

சத்யா பிறந்தபின் அவ்வூரில் பாம்புகள் அட்டகாசம் ஒழிந்தன.. இடையர்கள் மீண்டும் தம் தொழிலை சிறப்பாக நடத்தினர். பால்வளம் பெருகியது. பாம்பின் சாபம் நீங்கியது. புட்டபர்த்தியில் பாபா பஜனைக் குழு ஒன்றைத் துவங்கினார். அக்டோபர் 20, 1940. பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பினார் சத்யா புத்தகங்களை வீசி எறிந்து விட்டு, இனி நான் சத்யா இல்லை. நான் திருமால், என் மாயை அகன்றது. இனி நான் உங் களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொந்தம்? என சப்தம் போட்டார்.

அவர் அண்ணி ஓடி வந்து பார்த்தார். சத்யாவின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தது.

சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து போதனை செய்வார். அதை போட்டோ எடுத்துப் பார்த்தபோது அது ஷீரடி சாய்பாபாவாக மாறி தோற்றமளித்தது. ஷீரடி பாபாவின் அவதாரமாக கருதி மக்கள் அவரை வழிபட ஆரம்பித்தனர். இதன் பிறகு பல அற்புத லீலைகளை அவர் நிகழ்த்தினார். நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

புட்டபர்த்தியில் சாந்தாலயம் என்ற பகுதியில் மிகப் பெரிய கோயில் கட்ட முடிவெடுத்தார். பக்தர்கள் கோவிலை எழுப்பினர்.

அதுவே இப்பொழுது பிரசாந்தி நிலையம் எனப்படுகிறது நவ.23, 1950-_இல் இது திறக்கப்பட்டது.
இவ்வளவு தகவல்களும் வெளி யிட்டது தினமலர் வாரமலர் (நவம்பர் 20, 2005 பக்கம் 2,3).
ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்குவதற்கு இவ்வளவு அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை, பித்தலாட்டங்களை, மூடத்தனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பசுவின் மடியில் பாம்பு பால் குடிக் குமா? பாம்புக்கு உள்ளது பிளவுபட்ட நாக்கு; - அதனால் உறிஞ்சிக் குடிக்க முடியாது என்பது அறிவியல் கூறும் -உண்மைத் தகவல்.

வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி ஒரு நீல ஒளி பாய்ந்ததாம். அது என்ன நீல ஒளி? அது எப்படி வயிற்றுக்குள் பாயும்? அது எப்படி குழந்தையாகப் பிறக்கும்?

றீறீறீ புட்டபர்த்தியில் திடீர் பரபரப்பு - _ நிலாவில் தோன்றி அருள்பாலிப்பேன் -_ சாய்பாபா திடீர் அறிவிப்பு என்று நாளேடுகளில் ஒரு செய்தி தவழ்ந்து வந்தது (6.10.2007)

மாலை 6.30 மணி அளவில் சத்ய சாய்பாபா விஸ்வ ரூப விராத் தரிசனம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. (நிலவில் தோன்றிதரிசனம் என்பது இதன் பொருளாம்!)

கைப்பேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல்கள் பரப்பப் பட்டன. அவ்வளவுதான் புட்ட பர்த்தியை நோக்கிப் பக்தர்கள் படையெடுத்தனர். பல்லாயிரக்கணக்கில் கூடி விட்டனர். சாயிபாபாவை நிலவில் அல்லவா பார்க்கப் போகிறோம் என்ற ஆசை அலை, ஆர்வ ஊற்றுப் பீறிட்டு அடிக்காதா? அமாவாசைக்கு இன்னும் 5 நாள்களே இருந்த நிலையில் அன்று நிலாவே தோன்றவில்லை; ஏமாற்ற மடைந்ததுதான் மிச்சம். இன்னொரு நாள் நிலவில் தோன்றுவேன் என்று கூறி சாயிபாபா சென்று விட்டார் (5.10.2007).

அதுதான் தெய்வ ஒளியாயிற்றே, அதற்கும் பத்து மாதம் தேவைப்படுமா? என்ற கேள்விகளை அறிவைப் பயன்படுத்திக் கேட்கவே கூடாது;. அப்படிக் கேட்டால் அதற்குப் பெயர் விதண்டாவாதமாம் -_ பகுத்தறிவை யெல்லாம் பக்தி விஷயங்களில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்று ஆக்கி வைத்திருப்பதற்குக் காரணம் மூடத்தனங்களை முற்றாகக் காப்பாற் றிடவே!

அப்படிக் காப்பாற்றுவதன் மூலம் தான் பார்ப்பனீயத்தை வாழ வைக்க முடியும் _ ஆண்டான் அடிமைத் தனத்தை நிலைக்க வைக்க முடியும்.

அடுத்து தினமணிக்கு வருவோம்.

தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கை யையும் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு கால கட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ, மேஜிக் என்றோ தள்ளி விடவா முடியும்? என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது (25.4.2011)

எழுபது ஆண்டுகளாக பக்தர்கள் மனதில் இடம் பிடித்து விட்டாராம். அதனால் சாயிபாபா வசியக்காரர் என்றோ, மேஜிக்காரர் என்றோ தள்ளி விட முடியாதாம்.

பல நூற்றாண்டுக் காலமாக மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர் வெண்ணெய் இவற்றைக் கலந்து பார்ப்பனப் புரோகிதன் கலந்து கொடுக்க அதனைப் பஞ்சகவ்யம் என்று போற்றி, தட்சணை கொடுத்து மொடாக் குடியனாகக் குடிப்பதால், அந்த அசிங்கம் அங்கீகரிக்கத்தக்கதுதானா?

எத்தனையோ முட்டாள்தனங்கள் பக்தியின் பெயரால் எத்தனை எத்தனையோ ஆண்டுகள் குடி கொண்டுள்ளன என்பதால் அந்த முட்டாள்தனங்களை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

பல நூற்றாண்டுக் காலமாக தீபாவளி கொண்டாடுகின்றனர் மக்கள் என்பதால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் மூழ்கடித்தான். இரண்யாட்சதன் என்பதைத் தினமணி ஏற்றுக் கொள்கிறதா?

பூமியும், பன்றியும் புணர்ந்து பிள்ளை பெற்றது _ அவன்தான் நரகாசுரன் என்ற கட்டுக் கதையை காதைப் பொத்திக் கொண்டு தோப்புக் கரணமும் போட்டு ஆம் என்க! என்று ஆமோதிக்க வேண்டும் என்கிறதா தினமணி?

மேஜிக்குகளைச் செய்யும் சாயி பாபாவின் முகத்திரையை நேருக்கு நேர் கிழித்தாரே மற்றொரு மேஜிக்காரரான பி.சி. சர்க்கார்.

பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட புட்டபர்த்தியின் திருமண மண்டப திறப்பு விழாவில் கை அசைப் பில் தங்க சங்கிலியை வரவழைத்து நினைவுப் பரிசாக வழங்கிய சாயிபாபா வின் குட்டு - _ வீடியோ பதிவு மூலம் உடைபட்டதே _ படத்தோடு ஏடுகளி லும் அம்பலமானதே _ இதற்குப் பிறகும் சாயிபாபா தெய்வீகப் புருடர் _ தெய்வீக சக்தி மூலமாகத்தான் இவற்றையெல் லாம் செய்து காட்டுகிறார் என்று தினமணி எழுதுமேயானால் சாயிபாபா என்ற மோசடிக்காரருக்குத் துணை போகும் மோசடி ஏடு என்ற முடிவுக்குத்தானே வர முடியும்?

சரி, கல்கிக்கு வருவோம்.

ஷீரடி சாய்பாபா கோயில் சென்னை மைலாப்பூரில் இருக்கிறது. ஒரு முறை நண்பர் ஒருவர் நீதியரசர் கற்பக விநாயகத்தை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த ஈடுபாடும் ஏற்பட வில்லை. பின்னர் தில்லிக்கு விமானப் பயணம் செய்யும் போது, நடுவானில் விமானம் குலுங்க, அது கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

கடைசி நேரத்தை நெருங்கி விட்டோம் என்று பயணி களுக்குப் புரிந்து போனது. மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத்துக்கு ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஷீரடி சாய்பாபாவை மனமுருக வேண் டினார். என்ன அதிசயம்! அவர் மனக்கண் முன் காட்சியளித்தவர் சத்ய சாய்பாபா. கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது என்று கைகளை உயர்த்தி ஆசி வழங்கி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சீரான நிலைப்பாட்டை அடைந்தது விமானம். அன்று எங்களைக் காப்பாற்றியவர் சிறீசத்ய சாய்பாபாதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமிதான் என்னை வழி நடத்து கிறார் என்கிறார் கற்பக விநாயகம்.

உள்ளங்கையிலிருந்து அருவியாக விபூதி, வாயிலிருந்து லிங்கங்கள், கையை அசைத்து விரித்தால் தங்க, வைர மோதிரங்கள், கடிகாரங்கள்.. என்று ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து அற்புதங்களை நிகழ்த்தும் சாய்பாபா, நிஜக் கடவுளே வந்தாலும் நம்பாத காலம் இது. நான் மனிதன் அல்ல; தெய்வ அம்சம் என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? உங்கள் மத்தியில் தெய்வமே அவதாரம் எடுத்து வந்திருக்கிறது என்பதை உணர்த்தவே நான் அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் ஆசை, விரோதம், பொறாமை, கொடுமை, வன்முறை, நயவஞ்சகம் என்று, நல்லவர்களை, ஒழுக்கமுடைய வர்களை, பக்தர்களை தீய பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். மக்களை என்னிடம் கொண்டு வந்து குவிக்கவே அற்புதங்களை நிகழ்த்துகிறேன் என்று ஒரு முறை சொன்னார்.

(கல்கி 8.5.2011 பக்கம் 4,5)

தெய்வ அவதாரம் எடுத்து வந்திருக் கிறேன் என்பதற்காகவே அற்புதங் களைச் செய்கிறேன் என்று சாயிபாபா சொன்னது பற்றிச் சிலாகிக்கிறது கல்கி.

இதற்கு முன் இந்துமத மகாவிஷ்ணு பல அவதாரங்களை எல்லாம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறதே அந்த அவதாரங்கள் எல்லாம் சாயிபாபாவைப் போல மேஜிக்குகளைச் செய்தனரா?

கடவுள் என்ற ஒன்று இருந்து, அதன் உண்மையான அவதாரமாக வந்துதித்தவர் சாயிபாபா என்றால் அற் புதங்களைச் செய்து காட்டித்தான் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டுமா?
இவர்தான் பகவான் ஆயிற்றே -_ அவர்களின் நெஞ்சுக்குள் நிறைந்து நெக்குருகிப் போகச் செய்ய வேண்டி யதுதானே?

தன்னைக் கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிக் குதிகால் பிடரியில் இரகசிய அறைக்குள் ஓடிச் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட சங்கதிகள் எல்லாம் தெரியாதா? பகவான் என்பது உண்மையானால், அவனை கொல்ல முடியுமா? மற்றவர் கள் மனதில் பகவானைக் கொல்ல வேண்டும் என்ற மருள் ஏற்படலாமா?

வருடம் ஒன்றுக்கு எத்தனை எத்தனையோ விமான விபத்துகள், ரயில் விபத்துகள் நடக்கின்றன. பரிதாபமாக மக்கள் பலியாகிறார்கள். அவர்களில் ஒருவராவது சாயிபாபாவை நினைக்காத தால் தான் அந்த விபத்துகள் நடந் தனவா? மக்களை விபத்துகளிலிருந்து காப்பாற்ற தானாக முன்வராதவர் எப்படி பகவான்?

ஒரு பொய்யை மறைக்க எத்தனை எத்தனை பொய் மலைகளை இவர்கள் சோடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?

சாயிபாபா அற்புதங்களைச் செய்வ தால் அவர் பகவான் சாயிபாபா தான், பகவான் அவதாரம்தான் என்று கல்கிகள் சாதிக்கப் பார்க்கின்றனவே.

அந்த அற்புதங்களை வசியங்களை சித்துகளை இவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள் கிறாரா? ஒவ்வொரு வாரமும் அந்தச் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வண்ணப் படத்தை விடாமல் போட்டு பெரியவாளின் அருள்வாக்கை வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறது. கல்கி சாயிபாபா வின் தெய்வீகத் தேஜஸ்பற்றி பிரஸ் தாபிக்கும் அதே கல்கி இதழின் 33ஆம் பக்கத்தில் பெரியவாளின் அருள் வாக்கை வெளியிட்டுள்ளதே!

சாயிபாபாவா? சங்கராச்சாரியாரா? என்று கேள்வி கேட்டால் கல்கி கூட்டத்தார் பெரியவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா?

அந்தப் பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி இந்த மேஜிக்குகளை சித்துக்களைப்பற்றி என்ன திருவாய் மலர்ந்தருளுகிறார்?

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சிசங்கராச்சாரியாரிடம் மந்திரம், மாயா ஜாலங்கள்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டதல்ல (23.10.1974).

சங்கராச்சாரியாரின் இந்த விமர் சனத்துக்கு தினமணி கல்கி வகையறாக்கள் என்ன பதிலைக் கையில் வைத்துக் கொண்டுள்ளன?

சங்கராச்சாரியாரால் கூறப்பட்டுள்ள அந்த சாபக்கேட்டுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்களே, எப்படி? பகவான் பாபாவைக் காப்பாற்ற வேண்டுமா னால், பெரியவாளைக் கை கழுவ வேண்டும். பெரியாவாளைக் காப்பாற்ற ஆசைப்பட்டால் பாபாவைத் தூக்கிக் கடாச வேண்டும். என்ன செய்ய உத்தேசமோ!

----- நன்றி விடுதலை ஞாயிறு மலர், 07-05-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]