வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 30, 2011

பூணூல் அணிவது தேவைதானா?


ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண் டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம். இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் நான் வந்துகொண் டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக் குடுமியும், உடலில் பூணூலும்  இல்லா மல் நான் இருந்ததைக் கண்டு அத் துறவிக்கு மனவேதனையாகிவிட்டது.
இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.
பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை
இந்த இரண்டையும் நான் ஏன் கைவிட்டேன் என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துகளைக் கோத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு. நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத் தும் இயக்கம் ஒன்று அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த சிலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்குப் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்தை அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான் வருத்தப் பட்டேனா  என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அறிவேன்.
பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்
நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக்கா விலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரி லேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள் ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொருத்தவரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.
வைணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந் திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப் புறப்பட விருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்து விட்டேன். எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால் கேலி செய்வார்கள் என்றும், ஆங்கிலேயர்கள் என்னை ஒரு காட்டுமிராண்டி என்று நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணினேன். இந்த கோழைத் தனமாக உணர்ச்சியின் காரணமாக, தென் ஆஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன் உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தி யையும் குடுமியை எடுத்துவிடுறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத்துக்குச் சங்கடமாக இருக்குமே என்பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடுமியை எடுக்கும்படி செய்துவிட்டேன்.
பூணூல் அணியும் உரிமை எப்போது?
இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது:-
கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே இந்துக்களாக இருந்து வர முடிகிறது. பூணூல் அணிய வேண்டும் என்பதற்கு எந்த விதமான நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து கொள்ளப் போவதில்லை. மேலும் பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல் பவராகவும் இருக்க வேண்டியது முக்கி யம். ஆனால், இந்து மதமும் இந்தியா வும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள் காட்டமுடியுமா  என்று அய்யப்படுகின் றேன். இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற் றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும், நடிப்புகளும் நீங்கிய பிறகே இந்துக் களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.
பூணூலைப் பற்றிக் கவலை இல்லை
ஆதலால் பூணூல் அணிந்து கொள் வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட் கம் என்ற தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன்.
ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர் களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.
பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத் துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு எனக்கு என்ன நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின!
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும்.
சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.,
ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகை யால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.
- சுயசரிதை



உண்மை....பொய்

பூமி என்ற நாம் வாழும் கிரகத்திலிருந்து சனி என்ற கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளதென்றால்... 1,321,416,800 கிலோமீட்டர்களாம். அதாவது 132 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரத்து 800 கிலோமீட்டர். யப்பா...இவ்வளவு தூரத்தில் உள்ளது சனி கிரகம்.

ஆனால், சென்னையிலிருந்து வெறும் 260 கிலோமீட்டர் தூரமே பயணித்து சனி கிரகத்தை அடைந்து விடுகிறான் நம்ம ஊர் ஆள்...காரைக்காலுக்கு 250 கி.மீ அங்கிருத்து 10 கி.மீ திருநள்ளாறு.

அதாவது, நம்மிடம் இருந்து உண்மை 132 கோடி கிலோமீட்டர் தாண்டியிருக்கிறது.....பொய்....அதாவது மூடநம்பிக்கை, அறியாமையானது ரொம்ப பக்கத்தில் 250 கி.மீ. தூரத்திலயே உள்ளது.

----சடங்குகளின் கதை!, அக்னிஹோத்திரம் ராமானுஞ்ச தாத்தாசாரியார்.


Friday, November 25, 2011

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

(உலக வரலாற்றில் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய - ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்- மூவாயிரம் பேர் கைதானார்கள். அந்த நாளையொட்டி (நவம்பர் 26) இந்தக் கட்டுரை இங்கே.)

26-11-1957 இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே எந்த அரசியல், சமூக, சமய சீர்திருத்தப் போராட்டத் தலைவனும் மேற்கொண் டிராத - உயர்ந்தது - புனிதமானது என்று கதைத்து வந்த இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரிப்போம் வாரீர் என்று தன் மானத் தலைவர் தந்தை பெரியார் அறிவு ஆசான் அறைகூவல் விடுத்து மேற் கொண்ட அறப்போர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சரித்திர வரலாறு.

17-9-1968 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் பெரியார் விடுதலை நாளிதழ் வெளியிட்ட அவர்தம் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் எழுதுகையில், எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரஸில் கூப்பிட்ட உடன் சேர்ந் தேன். நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எனும் பார்ப்பனரல்லா கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சியின் தலைமையை ஏற்றவுடன் அக்கட்சியின் கொள்கையாக இம்மூன் றையுமே ஏற்படுத்தி விட்டு அரசியலில் எலெக்ஷனில் (தேர்தல்) நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை, பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங் கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப் பட்ட போதும், பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியதும் இதற்காகத்தான்.

வெள்ளையன் போனபின்பு 1957இல் நடந்த தேர்தலின் போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்த போது என் கழகத்தில் இருந்து ஒரு வரைக் கூட நிறுத்தாமல் கம்யூனிஸ்டு களுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்துக் காங்கிரசைத் தோற் கடித்ததும் இதற்கு (என்னுடைய மேற் கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

இப்படி வாழ்நாள் முழுமையிலும் 93 ஆண்டுகளும் சாதிப் பேய்க்கு எதிரா கவே, பகுத்தறிவு தழைக்கவே பாடுபட்ட தலைவர் இந்தியாவில் எங்குத் தேடினா லும் பெரியார் அய்யா ஒருவர் தவிர வேறு ஒருவரைக் காண இயலாது. அவருடைய போராட்டங்களின் உச்ச கட்டம்தான் அரசியல் சட்ட எரிப்பு. இது ஏன்?

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமா கின்றன. இது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச் சாரி முதல் எல்லோரும் எதிரிகள். நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியு மென்று எண்ணினோம். பிராமணாள் என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக் கூடாது; பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்று திட்டங்களை வைத்து முதல் திட்டத் திற்குக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650 பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.

இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். ராசகோபாலாச்சாரி சொன்னார். நாங்கள் எப்போது சொன்னோம். ஜாதி ஒழியவேண்டுமென்று எங்கே சொன் னோம்? என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வனுக்கும் அவனுடைய ஜாதியை, மதத் தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கின் றான். ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம். அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்திரவாதம் அளித்திருக்கிறது.

இந்தச் சட்டம் இருக்கிறவரை ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் வரை,நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும் என்று கேள்வி கேட்ட அறிவு ஆசான், நம்முடைய சூத்திரத்தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா? என்று வினா எழுப்பியதோடு நின்றுவிடவில்லை.

8-10-1957 இல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் - தம் சொற்பொழிவில் முதல் போராட்ட அணுகுண்டை ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அரசமைப் புச் சட்டத்தை, ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்த அவர், ஜாதி ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக் கிக் கொள்ளுங்கள்.

இளைஞர்களா கியிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புங்கள் என்றவர். ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மா யிருப்பது? உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங் கள் என்றார்.

இந்த முடிவுக்கு - அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்தும் முடிவிற்கு அவர் சென்றது, வந்தது ஏன்? ஜாதி ஒழிப்புக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்குச் செய்தாய்விட்டது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லோ ரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒத்துக் கொண்டவர்களும் வெளிப்படை யாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றாலும், ஜாதியொழிப்பை எதிர்க்க ஆளில்லை. 100-க்கு 97 பேரைப் பற்றிய காரியமாக உள்ளதால் ஜாதி ஒழியவேண்டுமென் பதற்கு எதிர்ப்புக் கிடையாது.

--- கட்டுரையாளர் முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், விடுதலை,25-11-2011

(தொடரும்)


Saturday, November 19, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (19) திருந்தி விட்டனரா பார்ப்பனர்கள்?

அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் பார்ப்பனர்களை விரட்ட வேண்டும் என்றார்; கிளியும் குயிலும் மாடப் புறாவும், மைனாவும் ஒரே சோலையில் உல்லாசமாக வாழும். ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால், அதுவும் நம்மைப் போல் ஒரு பட்சி தானே என்று கருதாது. வட்ட மிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதை அறியும்.

அதேபோலவே திராவிட பெருங் குடிமக்கள் தம்மில் சிற்சில வேறுபாடு கொண்டவராயிருப்பினும், ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூறையாடும் ஆரியருடன் (பிராமணருடன்) வாழ இசையார் என்று அண்ணாதுரை அவரது பத்திரிகையில் எழுதினார் அறிஞர் அண்ணா அவ்வாறு எழுதியதில் என்ன தவறு? இன்றைக்குக் கூட தமிழ் நாட்டு மக்களின் வாழ் வோடு எந்த வகையில் ஒன்றிப் போயிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

மொழிப் போராட்டத்திலோ, கலாச்சாரப் போராட்டத்திலோ சமூக நீதிக் களத்திலோ, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்கும் உரிமைப் போரிலோ பார்ப்பனர்கள் ஒன்றிப் போராடியதுண்டா? போராடா விட்டாலும் பரவாயில்லை. குறுக்குச் சால் ஓட்டுவது - _ குதர்க்கம் செய்வது _- காட்டிக் கொடுப்பது என்கிற வட் டத்துக்குள்ளே தானே இருக்கின்றனர் -_ மறுக்க முடியுமா?

தமிழ் செம்மொழி அறிவிப்பு; தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை என்று ஒரு நீண்ட வரிசை யையே எடுத்துக்காட்ட முடியுமே!

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறவிருந்த அந்தக் கால கட்டத்திலே தினமணி (21.6.2010) என்ன எழுதிற்று?

செந்தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம் தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக, செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான். அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது! என்று தினமணி எழுதியதற்கு என்ன பொருள்?

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குத்தான் லாயக்கு என்று துக்ளக் (20.6.2010) இப்பொழுதுகூட எழுதவில்லையா?

விளம்பரப் பலகைகளில் தமிழில் இடம் பெற வேண்டும் என்றால் மொழி நக்சலிட்டுகள் என்று துக்ளக் எழுதுகிறதே! (15.9.2010)

கோவில்களில் தமிழில் வழிபாடு என்றால் மொழி ஆர்வமா? துவே ஷமா? என்று பற்களை நரநரவென்று கடித்துத் தலையங்கம் தீட்டுகிறாரே திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் (துக்ளக் 18.11.1998)

தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாக சொல்கிறாரே முதல் அமைச்சர் என்று கேள்வி கேட்டால் எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான் என்று கல்கி (27.1.2008) கதைக்கிறதே!

இப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டத்தோடு தமிழர்கள் எப்படி இணங்கி வாழ முடியும்?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் இப்படி எல்லாம் துவேஷ நஞ்சைக் கக்குவார்களா?

இப்பொழுது கூட கேட்கிறோம். பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்று சொல்ல முடியாது -_ குறைந்தபட்சம் தமிழர்கள் என்று கூட சொல்வ தில்லையே! (தேவைப்பட்டால் சந்தர்ப் பவாதமாக அவர்கள் சொல்வது கூடும்!)

கழகம் என்றால் சூதாடும் இடம் என்று எழுதுவார். ஆனால் அண்ணா தி.மு.க.வில் கழகம் இருந்தால் அதற்கு வேறு வியாக்கியானம் கூறத் தயாராகவே இருப்பார் சோ.

பெரியாரும், அண்ணாவும் பார்ப் பனர்கள் பற்றி தாக்கி எழுதுவதாகக் குதிக்கிறதே துக்ளக்

நீண்ட காலத்துக்கு முன்புகூட போக வேண்டாம் சென்னை அண் ணாநகர் ஸ்ரீகிருஷ்ணா கார்டனில் இதே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி (24,25-.12.2005) எப்படியெல்லாம் தமிழர்களுக்கு எதிராக வெறிக் கூச்சல் போட்டார்கள்?

அரிவாளைத் தூக்கிக் காட்டி மேடையில் எப்படி எல்லாம் வன்முறை நெருப்புத் துண்டங்களை அள்ளி வீசினார்கள்?

1967 பொதுத் தேர்தலில் ஆச்சாரி யாருடன் அண்ணா கூட்டுச் சேர்ந்தது பற்றியும் சிலாகித்துள்ளார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்வாள்.

பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரி யார் வேண்டுகோள் விடுத்தாரே _ அது எந்த அடிப்படையில்? ஆச்சாரியாரின் ஜாதி உணர்வை இன உணர்வை அது வெளிப்படுத்தவில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் ஆச்சாரி யாரோடு அண்ணா ஏன் தொடர்ந்து உறவு கொண்டாட முடியவில்லை? தேனிலவு முறிந்துவிட்டது என்று ராஜாஜி கூற நேர்ந்தது ஏன்?

சாணக்கியரின் ராஜ தந்திரம் அண்ணாவிடம் புறமுதுகு காட்டித் தோற்று ஓடி விட்டது என்று ஒப்புக் கொள்வார்களா? மாட்டார்கள்.
தி.மு.க. என்பது பெருங்காயம் இருந்த பாண்டம் அதையெல்லாம் துடைத்து எடுத்து விட்டேன் என்று ஆச்சாரியார் எழுதவில்லையா?

அப்படியா? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் (தி.மு.க.) என் பக்கம் வந்த நிற்பார்கள் என்று தந்தை பெரியார் சொல்லவில்லையா? கடைசியில் அதுதானே நடந்தது. பதவியேற்குமுன்பே தமது தலைவர் பெரியார் இருந்த திருச்சி -_ புத்தூர் பெரியார் மாளிகையை நோக்கித்தானே பறந்தார் அறிஞர் அண்ணா!

1971 தேர்தல் என்னாயிற்று? தி.மு.க. ஆச்சாரியாரோடு கூட்டுச் சேர வில்லையே!

சேலத்தில் திராவிடர் கழகம் நடத் திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை மய்யப்படுத்தி பார்ப்பனர்கள் ஆச்சாரி யார் தலைமையில் ஆரிய -_ திராவிடப் போராட்டத்தை நடத்தவில்லையா?

இறுதியில் திராவிடத்துக்குத் தானே வெற்றிமாலை 1967 தேர்தலில் தி.மு.க.வுக்கு 138 இடங்கள் என்றால், வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஆரியர் _ திராவிட போராட்டமாக நடந்த 1971 பொதுத் தேர்தலில் தி.மு.க. 183 இடங்களில் அல்லவா அபார வெற்றி பெற்றது!

இந்த நாடே ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளவில்லையா? இந்த நாட்டை விட்டே வெளியேறப் போவதாக கையொப்பமிட்டு எழுத வில்லையா? (கல்கி 4.4.1971)

அப்பொழுது முதல் அமைச்சர் கலைஞர் எவ்வளவு அழகாகச் சொன் னார்.

பார்ப்பனர் -_ பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்போது ஆச்சாரியாரே துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே அம்சம் இதுதான் (3.3.1971) என்று குறள் போலக் கூறினாரே!

வி.பி. இராமன் பிராமணராக இருந்தாலும் நாவலரின் நண்பர் ஆனார். திமு.க.விலும் இணைந்தார் என்றெல்லாம் கல்கி எழுதுகிறதே -_ அந்த வி.பி. இராமன் ஏன் தி.மு.கவில் தொடர முடியவில்லை?

அவர் தி.மு.க.வுக்கு வந்து செய்த ஒரே காரியம் ஆச்சாரியாரையும் -_ அண் ணாவையும் சந்திக்கச் செய்ததுதானே? பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் இது போன்ற வேலை களைத் தான் செய்வார்கள்; அதைத் தான் அவரும் செய்தார். ஆனாலும் ஒட்ட முடியவில்லை. மாடப்புறாவும் மைனாவும் தானே ஒரு சோலையிலே வாழ முடியும் என்றுஅண்ணா எழுதியதை லட்சுமிநாராயணய்யர் இந்த இடத்திலும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

பார்ப்பனர்கள் எல்லாம் சகோ தரத்துவம் பேசும் பேர் வழிகள்; திராவிடர் இயக்கத்தவர்கள்தான் பிராமணத்துவேஷிகள் என்பது போல பம்மாத்து செய்கிறார்களே!

1971 தேர்தலின் போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம். சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியது என்ன?

இதோ படியுங்கள்.

பிராமண தர்மம் ஓங்குக!

பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்; இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!

ஸ்லோகம் சொல்வது போல் பெரிய வர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத் துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!

இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள லாம். தி.மு.க காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம்!

அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக் காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலை கிறார்கள், இந்த ஆட்சியில்!

அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக் களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?

சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!

இப்படிச் சொன்ன பிறகு பிராமணர் களாகிய நாம் பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்க லாமா?

சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்தி ரர்கள் ஆட்சி வரலாமா? சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும். இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.

இந்த சூத்ரர்களால்தான் நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் பிரபலமானது.

பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம் தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்ரர்கள் மனதை மாற்றி; நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட்டான்? அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்குப் பிறகுதான் ஆதரிப்போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது. காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?

மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும். இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.

சூத்ரன் கொட்டம் ஒடுக்க - நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க பிராமண தர்மம் ஒங்க, - மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய, -ஆரிய பாஷையான சமஸ்கி ருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்!
பிரியமுள்ள கே.எம்.சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
இதற்கு என்ன பதில் திருவாளர் கே.சி. நாராயணன் அய்யர் அவர்களே!

தொடரும்

--- கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர்,19-11-2011


Tuesday, November 15, 2011

திமிர் பிடித்த தினமலரே....வேண்டாம், இந்த விஷப்பரீட்சை!

திமிர் பிடித்த தின மலர் தன் பூணூலை முறுக்கி விட்டுக் கொண்டு, சிண்டை ஒரு தட்டுத் தட்டிக் கொண்டு தமிழர்கள் மீது திட்ட மிட்ட வகையில் போர் தொடுத்தே விட்டது.

நேற்றைய தினமலர் (14-11-2011 - பக்கம் 2) செந்தமிழர்கள் இன் னும் கொந்தளிக்காதது ஏன்? என்று பெயர் போடாமல் செய்திக் கட்டுரை ஒன்றை 8 பத்தி தலைப்பிட்டு வெளியிட் டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஒருவர் தமிழராம். அவ ருக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து விட்டதாம். ஒரு தமிழர், அதுவும் தாழ்த்தப்பட்ட தமிழருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப் பட்டு விட்டதே - செந் தமிழர்கள் ஏன் கொந் தளித்து எழவில்லை என்று கேவலமான வகையில் கேலி செய்கிறது இனமலர் - இது ஒரு துக்ளக் பாணி கட்டுரை. துக்ளக்கில் புழுத்த இந்த வியாதி தின மலர், தினமணி என்று பரவிக் கொண்டிருக்கிறது.

எந்த உள்நோக்கத் தோடு இனமலர் இப்படி எழுதுகிறது என்பது எளி தாகப் புரிந்து கொள்ளப் படக் கூடியதே!

கற்பழித்த ஒருவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்ததையும், ராஜீவ் காந்தி கொலையில் சம் பந்தம் இல்லாதவர்களுக் குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டதையும் சம நிலையில் வைத்து கட்டுரை தீட்டும் தினமலரின் கொச் சைத் தனத்தைத் தமிழர் கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டதே!

அப்படியென்றால் கேரளாவில் தமிழர் ஒருவ ருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர் மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை என்று இன மலர் எழுதுமா? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

சங்கராச்சாரியார் சிறீரங்கம் மாமியிடம் பல மணி நேரம் அலைப்பேசி யில் பேசும், சல்லாபம், ஜொள்ளுகளைப் பற்றி ஒரு வரி எழுதுமா இந்த இன மலர் கூட்டம்? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்த காம காவிவேட்டி ஜாமீனில் இருக்கும்போதே கோயில் கும்பாபிஷேகம் செய்வது பற்றி ஒரே ஒரு வரியை எழுதச் சொல் லுங்கள் பார்க்கலாம். எழு தாது - எழுதவே எழுதாது.

காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடிக்கும் மர்மத்தைப் பற்றி, டீக்கடை பெஞ்சில் சிலாகிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எழுதாது - எழுதவே முடியாது.

காரணம் தெரிந்ததே!

தமிழ், தமிழர் என்றால் இந்தப் பார்ப்பனக் கூட்டத் துக்கு அவ்வளவு இளக் காரம். புலியின் வாலை மிதிக்க ஆசைப்படுகிறார் கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கிண்டல்.

பெங்களூரில் திருவள் ளுவர் சிலை மீது கல் லெறி யாமல் இருந்தால் சரி என்று தூண்டுதல் (துக்ளக்கில்).

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டானால் கத்தரிக் காய் விலை குறையுமா என்று கேள்வி.

தமிழர்களின் தோல் தடித்துவிட்டது என்று பார்ப்பனர்கள் நினைக் கிறார்கள் போலும்!

பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிட தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் ஒரு சிலர் புறப் பட்டுவிட்டனர் என்கிற தைரியத்தில் தின மலர்கள் தினவெடுத்துக் கிளம்பிவிட்டதோ!

ஆட்சி மாற்றம் ஏற் பட்டு விட்டது என்ற நினைப்பில் அக்கிரகாரம் வீண் வம்புகளை விலைக்கு வாங்குகிறதோ!

வேண்டாம், இந்த விஷப்பரீட்சை!

ஆனானப்பட்ட ஆச்சாரியாரே துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று விரட்டப் பட்டார் என்பதை நினை வூட்டுகிறோம்.

தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டும்? உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தினமலர் எதிர் பார்க்கிறதோ?

--------விடுதலை, 15-11-2011


Saturday, November 05, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (17) ஆச்சாரியார் ஆகஸ்டு துரோகிதானே?

இனநலனைக் காட்டிக் கொடுக்கும் கோடரிகள் யார் இருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் ஏதாவது கிறுக்கி நூலாக வெளியிட்டுள்ளார்களா? என அலைந்து திரிந்து தேடி, அதிலிருந்து பொறுக்கி தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் தாக்குவதாக நினைத்துக் கொண்டு ஏதோ எழுதித் தொலைக்கிறார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்.

இந்த இதழ் துக்ளக்கில் (2--_11-_2011) காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் கூறிவிட்டாராம். அது தமிழகக் காங்கிரசாரில் கணிசமானவர் களிடையே அதிருப்தியை உண்டாக் கியதாம். அந்தக் கணிசமானவர்கள் யார்? யார்? பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா?

கடைசிக் கடைசியாக அவாளுக்குக் கிடைத்தவர் திருவாளர் சி.சுப்பிர மணியம்தான்.

ஈ.வெ.ரா. எந்த அர்த்தத்தில் காமராஜரைப் பச்சைத் தமிழர் என்று சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.  காமராசர் பச்சைத் தமிழர் என்றால், நான் வெள்ளைத் தமிழனா? ஆர்.வெங்கட்ராமன் நீலத்தமிழரா? பக்தவத்சலம் சிவப்புத் தமிழரா? கக்கன் ஊதா தமிழரா? இதோ நிற்கிறாரே மாணிக்கவேலு நாயக்கர் இவர் மஞ்சள் தமிழரா? இப்படியெல்லாம் சொல்வது சரியில்லை என்றே எனக்குத் தோன்று கிறது.

நாங்கள் எல்லோரும் தமிழர்கள். உண்மையில் எல்லோரும் இந்தியர்கள். இதுதான் எனக்குத் தெரிந்த விளக்கம் என்று சுப்பிரமணியம் கூறினார்.
காமராஜரை மட்டுமே பச்சைத் தமிழர் என்று ஈ.வெ.ரா. கூறுகிறாரே? என்று ஒரு நிருபர் கேட்டார். அதுபற்றி அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார் என்றது துக்ளக் கட்டுரை.
எந்த அர்த்தத்தில் பச்சைத் தமிழர் என்று காமராசரை பெரியார் சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னதாக முதல்வரியில் காணப் படுகிறது. இந்த நிலையில் அவர் சொன்னதை யெல்லாம் எடுத்துக் காட்டுவது வெட்டி வேலை என்பதல்லாமல் வேறு என்ன?

எனக்குத் தெரியாது என்கிறார் ; பிறகு பெரியாரைத் தான் அது பற்றி கேட்கவேண்டும் என்கிறார். அப்படிப் பட்ட மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா திருவாளர் லட்சுமிநாராயணர்?

அதுவும் ஆச்சாரியாரின் சீடரிடமா பெரியாரைப் பற்றிக் கேட்பது? ஆச்சாரியாரை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சாரியாருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவிக்கு காமராசரை எதிர்த்து  சி.சுப்பிரமணியம்  போட்டி யிட்டபோது, காமராசருக்கு ஆதரவாக இருந்தார் பெரியார் என்ற கோபம் சி.சு.வுக்குக்கடைசி வரை இருந்து வந்ததே! அப்படிப்பட்டவருக்கு பச்சைத் தமிழர் என்று காமராசரைப் பெரியார் பாராட்டினால் பிடிக்குமா?

பார்ப்பனர்களுக்குக் கைத்தடியாக இருந்த அதே சி.சுப்பிரமணியம் கூட பார்ப்பான் - தமிழன் என்ற ஒரு முக்கியமான பிரச்சினையில் சிக்குண்டு மூச்சுத் திணறும் ஒரு சம்பவம் நடந்ததே!  பெரியார் பார்ப்பனர் பற்றி ஏன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதை அனுபவத்தில் சி.சு. அறிந்து கொண்டாரே!

சி.சுப்பிரமணியம் அவர்களின் சிபாரிசுப்படி தமிழ் நாடு அரசின் வழக் கறிஞராக அழகிரிசாமி அவர்கள் நியமிக்கப் பட்டபோது பார்ப்பனர்கள் ஆர்த் தெழுந்து அமர்க்களம் செய்தபோது சி.சுப்பிரமணியம் பூணூல் மகாத் மியத்தின் பூரணத்துவத்தைப் புரிந்து கொண்டாரே! கல்கி இதழில் கண்ட னங்கள் தெரிவித்து எழுதினாரே ராஜாஜி.

அரசு வழக்கறிஞராக்கப்பட்ட  அழகிரிசாமியை எதிர் காலத்தில் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க மாட்டோம் என்று உத்தர வாதம் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பன வழக்கறிஞர்கள் அமைச்சர் சி.சு.விடம் கோரிக்கை வைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கி எழுந்ததே!
அழகிரிசாமியின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

10-_8-_1960 அன்று மனு விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள். டி.வி.பாலகிருஷ்ண அய்யர் மற்றும் ஜி.ஆர்.ஜெகதீசன் அய்யர்.

ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட் டாலும் பார்ப்பன நீதிபதிகள் சன்ன மாக தங்கள் விஷக் கொடுக்கைக் காட்டினர் தீர்ப்பில்.

அழகிரிசாமி நியமனம் செய்யப் படுவதற்கு சட்ட அமைச்சர் சி.சுப்பிர மணியம்தான் முழுக் காரணம். ஜனநாயக அரசு இயங்கும் நாடுகளில் நியமனங்களில் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு சலுகை காட்டுவது சகஜம் தான். அழகிரிசாமியின் பெயர் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால், அதைக் குடியரசுத் தலைவர் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பில் அடங்கி யிருந்த மணி வாசகமாகும்.
நீதிபதியின் வாசகங்கள், அரசு வழக்கறிஞர் நியமன விஷயத்தில் சட்டமன்றத்தின் உரிமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளன. ஆகவே நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் தாக்கீது (Notice) ஒன்றைக் கொடுத்தார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.லாசர்.

இது நீதிபதியை அவமதிக்கும் செயல் என்று வழக்குரைஞர் ராமச்சந்திர அய்யர் எனும் பார்ப்பனர் புதிய ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. 7-_10_-1960 அன்று சபாநாயகர் உயர்நீதி மன்றத்துக்கு வருமாறு கூறப்பட்டு இருந்தது.  அரசமைப்புச் சட்டத்தின்படி என்னை யாரும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று சபாநாயகர் யூ.கிருஷ்ணராவ் கறாராகக் கூறிவிட்டார்.
சி.சுப்பிரமணியனாருக்கு பார்ப்பன நஞ்சின் டிகிரி என்பது எத்தகையது என்பது அப்போதுதான் புரிந்தது.

பச்சைத் தமிழர் காமராசர் என்றால் அங்கு நிறப் பிரச்சினை கிடையாது. பச்சையான உண்மை, பச்சையான பொய் என்று சொன்னால் இந்த இடத்தில் என்ன பொருள்? கறுப்பு, சிகப்பு, மஞ்சள், வெள்ளை என்ற அர்த்தத்திலா? தமிழில் ஒரு பொருள் பன்மொழி, பல் பொருள் ஒரு மொழி உண்டே!
காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக் கும் (ராஜாஜிக்கும்) காமராசருக்கும் இடையே நடைபெற்ற சண்டை ஒன்றும் இரகசியமானதல்லவே! காந்தியார் வரை சென்று சிரித்த விவகாரம்தானே அது.

ஆகஸ்டு துரோகி என்று அழைக்கப் பட்ட ஆச்சாரியார் வழக்கம் போல கொல்லைப் புற வழியாக அகில இந்திய காங்கிரஸ் வழியாக காங்கிரசில் நுழைந்த போது, மதுரை திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற (31-10-1045) காங்கிரஸ் மாநாட்டில் (காமராசர்தான் காங்கிரஸ் தலைவர்) கல்தா கொடுக்கப்படவில்லையா?

அந்த மாநாட்டுக்குத் தம்மை காமராசர் அழைக்க வேண்டும் என்று ராஜாஜி கெஞ்சவில்லையா?

திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டியினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப் பினராக தேர்வு செய்தது செல்லாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!

1942 முதல் 1945 வரை ராஜாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எப்படியெல் லாம் விசுவாசமாக இருந்தார் என்பதெல்லாம் நாறிப்போன சங்கதி யாயிற்றே!
இந்த யோக்கியதையில் ஆச்சாரி யாரை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவதும், நீதிக்கட்சியை வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவான கட்சி என்று பிலாக்கணம் பாடுவதும் அவாளின் பாச உணர்வுக்கும், மோச உணர்வுக்கும் முறையே எடுத்துக் காட்டுகள் ஆகும்.

ஆச்சாரியாருக்கும் காமராசருக்கும் இடையே நிலவி வந்த இந்தப் போராட்டத்தின் பின்னணியையும், ஆச்சாரியார் 1952 இல் வழக்கம் போல கொல்லைப்புற வழியாக சட்டப் பேரவையில் நுழைந்து முதல அமைச்சர் ஆன நிலையையும், ஆட்சியில் அமர்ந்த பின், அசல் அக்கிரகாரப் புத்தியோடு, மனுதர்ம நோக்கத்தோடு அவர் ஆட்சி செய்ததையும், வருணாசிரம திட்ட மானகுலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்து முறியடித்த வரலாற்றையும், அதன் காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு ஓடிய நிலை யையும், அதனைத் தொடர்ந்து காம ராசர் முதல் அமைச்சர் ஆனதை யும், பார்ப்பன வட்டாரங்கள் காம ராசரைக் கடுமையாக விமர்சித்ததையும், காமராசர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்விப் பாட்டையை  கண்ணை மூடிக் கொண்டு திறந்துவிட்டதையும் முறை யாகத் தெரிந்து வைத்திருந்தால், பெரியார் பச்சைத் தமிழர் காமராசர் என்று சொன்னதற்கான அழுத்தமான வரலாற்றுப் பின்னணியும், காரணமும், காரியமும் கண்டிப்பாகத் தெரிந்து விடுமே!

(அது குறித்தும் மேலே பேசுவோம்)

---- விடுதலை ஞாயிறு மலர்,05-11-2011


Tuesday, October 25, 2011

வால்மீகி இராமாயணத் தையும், கம்ப ராமாயணத்தையும் அல்லவா தடை செய்யக் கோர வேண்டும்

அறிஞர் இராமானுஜம் அவர்களால் எழுதப்பட்ட 300 இராமாயணங்கள் - அய்ந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்புக் குறித்து மூன்று சிந்தனைகள் என்னும் கட்டுரை டில்லிப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பது வரலாற்று மோசடியாக என்றென்றும் பேசப்படும்.

வால்மீகி இராமாயணத்தில் அகலிகை வலிய இந்திரனை அழைத்ததாகவும், அதனால்தான் இந்திரனின் உடல் ஆயிரம் பெண்குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுதான் தடை செய்யப் படுவதற்குக் காரணமாம்.

வால்மீகி இராமாயணத்தில் அவ்வாறு கூறப்பட வில்லை; வரலாற்றுப் பேராசிரியர் இராமானுஜம் தவறாக - கற்பனையாக எழுதியுள்ளார் என்று நிரூபித்து அந்தப் பாடத்தைத் தடை செய்திருந்தால் அதுதான் அறிவு நாணயமாகும். அவ்வாறு அவர்களால் சொல்லப்பட வில்லை - அவ்வாறு சொல்லவும் முடியாது; காரணம் பேராசிரியர் இராமானுஜம் கூறிய மூல நூலாகிய வால்மீகி இராமாயணத்தில் உள்ளதுதான், அதனைத்தான் அவர் கையாண்டுள்ளார்.

பாரதிய ஜனதாவின் மாணவர் பிரிவாகிய ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் பல்கலைக் கழகத்தில் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியதன் காரணமாகவே இத்தகைய தொரு விபரீத முடிவை பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை ஒரு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - வெட்கக்கேடானதாகும்.

நூலகங்களைக் கொளுத்துவது - பாடத் திட்டங்களை மாற்றுவது - கலாச்சார சின்னங்களைச் சீரழிப்பது என்பது  பாசிஸ்டுகளின் அணுகுமுறையாகும். அதனைத்தான் இந்துத்துவாவின் கும்பல், நாட்டில் செய்து கொண்டி ருக்கிறது.

கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகினிற் சிறந்தவள்; அவளை உடல் ரீதியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவன் தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரலோகத்து அரசனாகிய தேவநாதன் இந்திரன். (தேவநாதன் என்றால் காஞ்சிபுரம் மச்சேஸ்வர கோயில் குருக்கள் தேவநாதன் நினைவிற்குக் கூட வரலாம் - இவனும் அந்த தேவநாதன்  காட்டிய அந்த வழியைத்தான் கடைப்பிடித்திருக்கிறான்  என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.)

விடியற்காலையில் எழுந்திருந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது கவுதம முனிவரின் அன்றாடப் பணி.

இந்திரன் என்ன செய்தான்? அகால நேரத்தில் சேவல் மாதிரி கூவிட, கவுதமன் வழக்கமாக விடியற் காலம் வந்தது என்று கருதி கங்கைக்குச் சென்றான்.

சென்ற முனிவன் திடுக்கிட்டான். ஏதோ சூது நடந்துள்ளது என்று கூறி வேகமாக தம் ஆசிரமத்துக்குத் திரும்புகிறான். இந்த இடைவெளியில் இந்திரன், கவுதம முனிவன்பேர்ல வடிவம் எடுத்து அகலிகையை அணுகி உடல் இன்பம் அனுபவித்தான்.  அதுசமயம் திரும்பிய கவுதம முனிவன் இந்திரனுக்குச் சாபமிட்டான். எந்த இன்பத்திற்காக இந்த அடாத காரியத்தைச் செய்தாயோ, அதன் அறிகுறியாக உன் உடல் முழுவதும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும் என்று சாபமிட்டான். அகலி யையைக் கல்லாகக் கடவது என்றும் சாபமிட்டான். இவை மூல இராமாயணமாகிய வால்மீகியில் உள்ளதுதான்.

இந்த விவரமும் வால்மீகியைத் தழுவி தமிழில் எழுதிய கம்ப இராமாயணத்தில் (பாலகாண்டம்-அகலிகைப் படலம் - பாடல்கள் 545 முதல் 549 வ) விரிவாகக் காணப் படுகிறது.

இந்திரன் கவுதம முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது அவனது உருவத்திலேயே சென்றான் என்கிறார் வால்மீகி. கம்பனோ பூனை வடிவில் வெளியேறினான் இந்திரன் என்று எழுதியிருக்கிறார்.  இந்திரன்-அகலிகை புணர்ச்சியையோ, கவுதம முனிவரின் சாபத்தையோ கம்பனாலேயே மறைக்க முடியவில்லை.

புக்கவ ளோடுங் காமப்புதுமண மதுவின்தேறல்
ஒக்கவுணர்ந் திருத்தலோடு முணர்ந்தனள்
 உணர்ந்தபின்னோ
தக்க தன் றென்னத் தேறா டாழ்ந்தனள்
முக்கணனை வாற்றன் முனிவனும்
 முடுகி வந்தான்.

(கம்ப இராமாயணனம் - அகலிகைப் படலம், பாடல் 545)

இந்திரன் அகலிகையைப் புணரும்போது, அவன் தன் கணவன் கவுதமன் அல்லன்; வேறு ஆடவன் என்று உணர்ந்து கொண்டாளாம். தவறு நடந்துவிட்டது என்று தெரிந்திருந்தும் அதனின்றும் விடுபடாமல் ஆசை மிகுதியால் உடன்பட்டாள் என்று கம்ப நாட்டாழ்வாரே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், உண்மையைச் சொன்ன பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் எழுதிய கட்டுரையை தடை செய்தது - 2011 ஆம் ஆண்டில் இந்தியா சஞ்சரிக்க வில்லை; இன்னும் காட்டுவிலங்காண்டித்தன மதவெறி மனப்பான்மையுடன்தான் இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.  நியாயமாக வால்மீகி இராமாயணத் தையும், கம்ப ராமாயணத்தையும் அல்லவா தடை செய்யக் கோர வேண்டும்.
வெட்கக்கேடு!  மகா மகா வெட்கக்கேடு!!

----விடுதலை தலையங்கம்,25-10-2011


Sunday, October 23, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (15) மொழி நக்சலைட்டுகள் யார்?

தோழர் ஜீவா சொன்னாலும் சரி, வேறு யார் சொன்னாலும் சரி, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் என்பது தந்தை பெரியார் அவர்களால் கற்பனையாக உருவாக்கப் பட்டதல்ல. அது நீண்ட காலப் போராட்டம். கவுதம புத்தர் காலத் திலும் நடைபெற்றதுதான்.

தொடர்ச்சியாக நடந்ததுதான் - ஆரியர் சூழ்ச்சிகளால்  வென்றிருக்க லாம். பெரியார் காலத்தில் அது மரண அடி வாங்கியது என்பதுதான் உண்மை.

தோழர் ஜீவாவை விட்டே மோத விடுவது கூட ஒரு வகையான பார்ப் பனத்தனம்தான். அதே ஜீவா தந்தை பெரியாரின் தொண்டராக இருந்து பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தவர்தான். கடைசி காலத்திலும் தந்தை பெரியாரை நன்கு உணர்ந்து அவர் நிலையை ஆதரித்தவர்தான்.

மாபெரும் காரியங்களை சாதித்து வந்திருக்கும் அய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகதான் பேசவேண்டும் என்று ஜீவா அவர்கள் சொன்னது (23-.11.-1951 சென்னை செம்பியம் பொதுக் கூட்டத்தில்) துக்ளக்குக்கும் பொருந்தும்; லட்சுமி நாராயணர் வகையறாக் களுக்கும் பொருந்தும்.

பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல எழுதுகிறார்களே -_ எழுதுபவரின் தோளிலும், எழுதப்படும் ஏட்டின் ஆசிரியரின் தோளிலும் தொங்குவது என்ன? அந்தப் பூணூலின் திமிருக்கு என்ன பொருள்?

நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் யார்? பதில் சொல்லும் திராணி உண்டா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை என்று பெரியார் கூறியதும், திராவிடர் கழகம் இன்று வரை போராடுவதும், கலைஞர் அவர்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப் பட்டதும், ஜாதி ஒழிப்புச் சிந்தனை அல்லவா? அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற பதின்மூன்று பேர்களும் பார்ப்பனர்கள் அல்லவா?

அடுத்த வார துக்ளக்கில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். சங்கராச்சாரியாராக இந்து மதத்தைச் சேர்ந்த - _ அதற்கான சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த எவரும் வரலாம் _- நாங்கள் ஏற்கிறோம் என்று எழுதிடத் தயாரா? சவால் விட்டுக் கேட்கிறோம். இந்த 2011 ஆம் ஆண்டிலும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்ற ஆணவத்தில் எழுதலாமா?
பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தை காந்தியார் சுட்டிக் காட்டவில்லையா?

ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால், அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக் கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.

-இதைச் சொன்னவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தியார். தஞ்சாவூர் பொதுக் கூட்டத்தில்தான் (16.9.1927) அப்படிச் சொன்னார். காந்தியாரைக் கறுப்புச் சட்டைப் பட்டியலில் சேர்த்திட உத்தேசமோ?

கதர் போர்டின் தலைவராக பெரியார் இருந்தார். செயலாளராக சந்தானம் அய்யங்கார் இருந்தார். உத்தியோகங்களை எல்லாம் பார்ப் பனர்களுக்கே தாரை வார்த்துக் கொண் டிருந்தார். தலைவர் பெரியார் எதிர்த் தார். சந்தானம் ராஜினாமா செய்தார். காந்தியார் வரை கொண்டு சென்றனர்.

இது குறித்து காந்தியார், பெரியார், சந்தானம், ராஜகோபாலாச்சாரியார் எல்லோரும் விவாதித்தனர். அப் பொழுது நடைபெற்ற உரையாடல் (குடிஅரசு இதழில் (6.3.1927) வெளி வந்துள்ளது.

பெரியார்: கதர் போர்டு சம்பந்த மான உத்தியோகங்களைப் பெரிதும் பார்ப்பனர்களுக்கே அவர் கொடுப்ப தால் அதன் தலைவர் என்ற

முறையில் பார்ப்பனர் அல்லாதாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்னதனால் அவருக்குத் திருப்தி இல்லாமல் அவர்

ராஜினாமா கொடுத்துவிட்டார்.

மகாத்மா: இது ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரி யாருக்குத் தெரியாதா

பெரியார்: இது விஷயத்தில் அவர் கள் எல்லோரும் ஒன்றுதான்.

மகாத்மா: அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார்: பார்ப்பனர்களுக்கு அவரிடம் இருக்கும் நம்பிக்கை அளவு எனக்கு அவரிடம் இல்லை.

மகாத்மா: அப்படியானால் பார்ப் பனர்களிடத்திலேயே உமக்கு நம்பிக் கையில்லையா

பெரியார்: இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே

மகாத்மா: அப்படியானால் உலகத் திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பதுதான் உமது அபிப்பிராயமா

பெரியார் : என் கண்ணுக்குத் தென் படுவதில்லையே; நான் என்ன செய்யட்டும்

மகாத்மா: அப்படிச் சொல்லாதீர் கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோகலே. அவர் தம்மைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும் மரியாதை செய்தாலும் நட்புக் கொள்ளாததோடு உடனே ஆட்சேபித்துத் தமக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.
பெரியார்: மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என் போன்றவர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக்கூடும்?

மகாத்மா: (வேடிக்கையாகச் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக்கூடாதா?

பெரியார்: நன்றாய் பார்க்கலாம். எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை. ஆனால் பார்ப்பனரல்லா தாருக்கு 100-க்கு 50 வீதம் உத்தியோக மாவது கொடுக்கக் கட்டுப்பட வேண்டும்.

(ஸ்ரீமான் பாங்கர் ஆச்சரியப்பட்டு 100-க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக்கப்பட வில்லை என்கிறீர் என்று கேட்டார்.   ஆம் என்றார் பெரியார்).

சங்கர்லால் பாங்கர்: ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் 100-க்கு 50 வீதம் போதும் என்கிறாரே. இது என்ன அதிசயம்?

மகாத்மா: நான் ஒரு போதும் சம்மதியேன். 100-க்கு 90 வீதம் கொடுக்க வேண்டும்.

பெரியார்: 100-க்கு 50 கொடுப்பதாய் தீர்மானம் போட முடியாது என்கிற வர்கள் 100-க்கு 90 வீதம் கொடுப்ப தெப்படி?

மகாத்மா: தீர்மானம் போட வேண் டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் 100-க்கு 90 வீதம் கொடுக்க வேண்டியது கிரமம் என்றுதான் சொல்லுவேன். (ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து) பார்ப்பனர் அல்லாதாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கு என்ன ஆட்சேபணை?

சந்தானம்: எனக்கு ஒன்றும் ஆட் சேபணை இல்லை. ஒருவரும் வருவ தில்லையே. நான் என்ன செய்யட்டும்?

மகாத்மா: (பெரியாரைப் பார்த்து) நாயக்கர் ஜீ! யாரும் வருவதில்லை என்கிறாரே என்ன சொல்கிறீர்?

பெரியார்: அது சரியல்ல. ஏன் வருவ தில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும்; வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம் நடந்தால் எவ்வளவு பேர் வேண்டு மானாலும் கிடைப்பார்கள்.

மகாத்மா: அப்படியானால் இனி மேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நீங்கள் வைத்துக் கொள்கிறீர்களா?
பெரியார்: ஸ்ரீமான் சந்தான முடியாதென்றால் நானே பார்த்துக் கொள்கிறேன்.

மகாத்மா: (ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து) இனி, உத்தியோகஸ்தர்கள் நியமனத்தை நாயக்கரிடம் விட்டு விடுங்கள் என்றார்.

சந்தானம்: எனக்கு ஆட்சேபணை யில்லை. (ஸ்ரீமான் ராஜகோபாலாச் சாரியார் குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம்.

ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ, அவர்கள்தான் வேலைக்காரரை நியமிக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒருவர் நியமிப்பதும் ஒருவர் வேலை வாங்குவதுமாயும் இருந்தால் வேலை நடக்காது என்றார்.)

மகாத்மா: உடனே சிரித்துக் கொண்டு நாயக்கர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்று கிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசிடென்ட், ஸ்ரீமான் ஜவஹர்லால் நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவஹர்லால் வேலை வாங்க முடியா விட்டால் நானாவது குற்றவாளியாக வேண்டும்; அல்லது ஜவஹர்லாலாவது குற்ற வாளியாக வேண்டும். நியமிக்கப் பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர், வேலை வாங்குபவர் ஒருவர். அப்படி யிருக்க, அதில் எங்கேயாவது வேலை வாங்குபவர் நியமிக்காததால் வேலைக்காரர்கள் சரியாக நடக்க வில்லை என்று ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டார்.

ராஜகோபாலாச்சாரியார்: வகுப்புப் பிரிவினை பார்த்தால் போதுமான வேலை நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா?

மகாத்மா: நாயக்கர் அதையும் பார்த்துக் கொள்வார் என்றே நினைக் கிறேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமிப்பதன் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டியதுதான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கியமானதோ அது போல வகுப்பு அதிருப்திகளும் நீங்கவேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும் என்று சொன்னார்.
(குடிஅரசு 16.3.1927)

பார்ப்பனர் பிரச்சினையில் பெரியார் சொன்னது உண்மை என்பதைக் காந்தி யாரே ஒப்புக் கொண்டு விட்டாரே! காந்தியாரும் பிராமணத் துவேஷி என்று சொல்லவேண்டியதுதானே!

வரலாற்றில்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள் நதிகள் போல் ஓடியிருக் கின்றன. 1937ஆம் ஆண்டிலேயே பார்ப்பனர்களைப் பார்த்து தந்தை பெரியார் ஒன்றைக் கேட்டார்.

இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாகா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில்தான் இந்நாட்டுக் கோவில்களின் தலையெழுத்து பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ காங்கிரசே சர்க்கார் - சர்க்காரே காங்கிரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக் கொள்ளும்படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக்கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்க வேண்டும். பார்ப்பானே சோறு பொங்க வேண்டும். பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன பார்ப்பானே செய்ய வேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி, வகுப்புவாதம் புரிகின்ற ஜஸ்டிஸ் கட்சியார் உள்பட தனித் தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும், ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெட்யூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்தரவோ செய்து வகுப்புவாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.

இதாவது நாளைக்குச் செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வதயாபரமும் உள்ளவரான பகவானைத் தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு போடட்டுமே என்றுதான் கேட்கிறோம். - (குடிஅரசு - தலையங்கம் - 08.08.1937)

இன்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் இவ்வாறு எழுதியிருக்கிறாரே பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இன்றுவரை இவற்றில் மாற்றம் பெற்றுள்ளனரா? இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் பேனா பிடித்து முண்டா தட்டுவது

யாரை ஏமாற்ற?

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்ததுண்டு.
இந்த வார துக்ளக்கில் (26.10.2011) சென்னை இராயப்பேட்டை இலட்சுமி புரத்தில் உள்ள லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்கிற பார்ப்பன சங்கத்தில் அண் ணாவும் ராஜாஜியும் பங்கு கொண்டது குறித்தும், அதில் அண்ணா அவர்கள் ராஜாஜியைப் புகழ்ந்தது குறித்தும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அமைப்பில் தந்தை பெரியார் அவர்களும் பங்கு கொண்டு(5.1.1953) உரையாற்றியதுண்டு. அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இன்றைக்கும் கூட சிந்தித்துப் பார்த்திட வேண்டும் பார்ப்பனர்கள்.

இதோ பெரியார் பேசுகிறார்:

யாரோ சில பிராமணர்கள், பெரி யார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்ப தாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்ய வில்லை.-திராவிடர் கழகத்தின் திட்ட மும் அதுவல்ல. திராவிடர் கழகத் தினுடைய திட்டமெல்லாம் - திராவிடர் கழகமும், நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம் - நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது, பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டை விட்டு அவர்கள் போய் விடவேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர் களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக் கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க் கிறோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம்; ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப் பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார்; அதாவது பிரா மணர்களும் கால தேச வர்த்தமானத் துக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது.      (விடுதலை 8.1.1953)
என்று பார்ப்பனர்கள் மத்தியிலேயே பேசினாரே தந்தை பெரியார்.

இந்தச் சந்தர்ப்பத்தை எல்லாம் பார்ப்பனர்கள் பயன் படுத்திக் கொள்ள வில்லையே!

இன்றைக்கும் என்ன எழுது கிறார்கள்?

கேள்வி: தமிழ்மொழியை செம் மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். - (தினமலர், வாரமலர் 13.62004)

தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத் திற்குக் கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடகஅரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட்தனபாலு: அதனால என்னங்க. பெங்களூருவுல திருவள் ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? - (தினமலர் 18.8.2009)

கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல் அமைச்சர்?
பதில்: எல்லாம் கிடக்க, கிழவியை மணையில் அமர்த்திய கதைதான். (கல்கி 27.1.2008)

தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக்கைக்கு விரோதமானது.

(துக்ளக் 27.1.2010)

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன்மூலம்கன்னடர்- தமிழர் இடையே நல்லுறவு, நல்லி ணக்கம் ஏற்படும்  என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே!
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! - (துக்ளக்  19.8.2009)

தமிழில் படித்தால் சட்டி சுரண்டு கிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம்.

(துக்ளக் 23.6.2010)

கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?

பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு - என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே!  கலைஞர் ரெடி - தமிழகம் ரெடி- தமிழ் ரெடியா?
 (துக்ளக்  4.8.2010)

கேள்வி: உலகத் தமிழ் மாநாடு என்பது எதற்காக நடத்தப்படுகிறது?

பதில்: இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் எதற்காக நடத்தப் பட்டன? அவை என்ன சாதித்தன? அதனால் தமிழ் மொழிக்குக் கிட்டிய சிறப்புகள் என்னென்ன? என்பதை யெல்லாம் கண்டுபிடியுங்கள். அதைக் கண்டுபிடித்த பின், அதே பயன் களுக்காகத் தான் இந்த மாநாடும் நடத்தப்படுகிறது என்பது உங்களுக்குப் புரிய வரும். - (துக்ளக் 14.10.2009)

தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வாகத்தில் புகுந்து குட்டிச் சுவராக்கும் இவர்களை மொழி நக்சலைட்டுகள் என்றுதான் கருத வேண்டும். . . முதல்வரே தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பி விடுகிறார் கள். துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இதுபோல், நடைமுறைக்கு ஒவ்வாத மொழி வெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழி வெறியைத் தங்கள் அதி காரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும் தீவிரவாதிகள்தான்.  இவர்கள் மொழி நக்சலைட்டுகள். - (துக்ளக்  15.9.2010)

இவற்றுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவையில்லை.

தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, திருவள்ளுவர் என்னும் சொற்களைக் கேட்கும்போதே இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்குக் குமட்டிக் கொண்டு வருகிறதே!

பார்ப்பனர்களின் இந்தப் பிறவிக் குணத்தை மிக அழகாக - நேர்த்தியாக படம் பிடித்துக் கண்ணாடி சட்டம் போட்டுக் காட்டுகிறார் அறிஞர் அண்ணா.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியைப் பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரென்னும் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர் களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான். - (திராவிட நாடு  - 2.11.1947)

அண்ணா சொன்னது ஏதோ விளையாட்டல்ல. நிதர்சனமானது. துக்ளக்கில் ஒரு கேள்வி.

கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டு களுக்கு மேலாக நடத்தியும் எந்தப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?

பதில்: எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே.
(துக்ளக் - 24.10.2005)

இப்படி தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்தான் தமிழைப் பழிக்கிறார். அதைத்தானே அண்ணா வும் சொல்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் மீது பற்றுக் கொள்வது மொழி நக்சலிசமாம். இப்படிச் சொல்லுகிற பார்ப்பனர்களின் நிலை என்ன?

கோவில்களில் வழிபாட்டு மொழி தமிழ் என்று சொன்னால், துக்ளக் (18.11.1998)  என்ன தலையங்கம் தீட்டு கிறது? தலைப்பே மொழி ஆர்வமா? மத துவேஷமா?

என்ன எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும்; புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு என்று வரிந்து கட்டிக் கொண்டு ஸம்ஸ்கிருதத்திற்காக எழுது கிறாரே - இது ஸம்ஸ்கிருத மொழி வெறியில்லையா?

தமிழ் வழிபாட்டு உரிமை பிரச்சி னையில் ஆனந்த விகடன் (8.11.1998) என்ன எழுதியது?

விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் பழைய வார்த்தைதான் என்று எழுதுகிறதே.

இந்து முன்னணி ராம கோபால அய்யர்வாள் என்ன பேசுகிறார்?

தமிழ் அர்ச்சனைனால் விலைவாசி குறைந்து விடுமா? (திருச்சியில் 15.11.1998)

காஞ்சி சங்கராச்சாரியாரும் இதே வார்த்தைகளை குமுதத்தில் பேட்டி யாகச் சொல்லுகிறார்.

தமிழ்- தமிழர் உணர்வு அடிப் படையில் எதைச் செய்தாலும் இவற் றால் விலைவாசி குறையுமா என்று கேட்கிறார்களே - திருப்பி நம்மால் கேட்கமுடியாதா? கோயில் கும்பா பிஷேகம் செய்கிறீர்களே, தேரோட்டம் நடத்துகிறீர்களே - நாள்தோறும் கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்துகிறீர்களே. தீபாவளி கொண் டாடச் சொல்லுகிறீர்களே. இவற்றால் விலைவாசி குறைந்து விடுமா? கேள்விக்கு என்ன பதில்?

இவர்கள் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். எல்லாவற்றையும் முற்றும் து(தி)றந்த முனிவர் ஒருவர் இருந்தாரே காஞ்சி மடத்தில். அவர் என்ன சொன்னார் தெரியுமா?

சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் சர்வ வியா பகத்வம் என்பார்கள்.

உலகில் முதன் முதலில் தமிழ் மொழி தோன்றிற்று; அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப் பட்டது. பிறகுதான் ஸம்ஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பாணினி என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற் கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷை சாஸ்திரம் (philology) என்று சொல்லக் கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதந்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது.

(ஞான வழி, வானதி பதிப்பக வெளியீடு)

முற்றும் துறந்த முனிவருக்கே சமஸ்கிருதம் தனது தாய் மொழி என்னும் பார்ப்பன வெறி தலைக்கு மேல் வழிகிறது. இது மொழி நக்சலிசம் இல்லையா?

ஒரு கேள்வி: பிரம்மத்திற்குச் சமமான ஸம்ஸ்கிருதம் ஏன் செத்த மொழி ஆயிற்றாம்?

பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ள, எடை போட இன்னும் ஆதாரங்கள் தேவையா?

---- விடுதலை ஞாயிறு மலர்,22-10-2011 (மீண்டும்  சந்திப்போம்)


Monday, October 17, 2011

இந்தப் பாழாய்ப்போன தமிழர்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லையே!

தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில், ஜனங்களே இல்லாத ஜனதா கட்சியின் தலைவரான சு.சாமியின் பேட்டி நேற்றிரவு நடைபெற்றது. அதனைக் கேட்டுத் தொலைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நறுக்கென்று ஒரு கேள்வி சுனையாகக் கேட்கப் பட்டது.

அய்க்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறீர்களே - நீதிமன்றம் சென்றுள்ளீர்களே - ஊழல் ஒழிப்புதான் உங்கள் முக்கிய நோக்கமென்றால் பி.ஜே.பி. ஆட்சியில் ஊழலை எதிர்த்து நீங்கள் கிளம்பவில்லையே என்பது கேள்வி.
நியாயமான கேள்வி - நாணயமான முறையில் பதில் சொல்ல வேண்டாமா?

அது என் வேலையில்லை. எல்லாவற்றையும் நானேதான் செய்ய வேண்டுமா? ஏன் நீங்கள் செய்யக் கூடாதா? இன்று மத்தியில் உள்ள ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று ஆத்திரத்துடன், அதே நேரத்தில் கேள்வியின் கூர்மையைச் சமாளிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி பதில் சொல்ல முயற்சித்தார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? பி.ஜே.பி. யின் மீது ஊழல் புகார் தெரிவிக்க மாட்டேன். காங்கிரஸ் மீதுதான் ஊழல் பற்றிப் பேசுவேன் - வழக்குத் தொடுப்பேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாரா, இல்லையா? ஊழலுக்கு ஜாதி ஏது என்று வித்தாரம் பேசும் மேதாவிகள் இந்த இடத்தை மட்டும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இன்னொன்றையும் சம்பந்தமில்லாமல் உளறித் தொலைத்துவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் தொண்டர்களைப் போல நல்லவர்களை, உண்மையான தொண்டர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்றும் தம் மனதில் உள்ளதைப் பூசி மெழுகாமலும் கூறிவிட்டார்.

செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்டவர்களைப் படு கொலை செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் புகுந்து, அங்குப் பணியாற்றும் கிறித்துவ நர்சுகளை அடித்து உதைத்துப் பாலியல் வன்முறையில் ஈடுபடவேண்டும். பட்டப்பகலில் பகிரங்கமாக இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கவேண்டும்.

தொழுநோயாளி களுக்குத் தொண்டுகள் செய்து வந்த பாதிரியாரையும், அவர்தம் இரு மழலைச் செல்வங்களையும் கொடூரமான முறையில் எரித்துக் கொல்ல வேண்டும்.

முசுலீம் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தக் கருவை இழுத்து நெருப்பில் போட்டு குரங்கு போல கூத்தாடவேண்டும். தேசப்பிதா என்று மக்களால் நம்பப்பட்ட தலைவரைப் படுகொலை செய்யவேண்டும்.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் பச்சைத் தமிழர் காமராசரைப் பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரான டில்லியில் படுகொலை செய்ய துள்ளி எழ வேண்டும்.

இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும், விசுவ ஹிந்து பரிஷத்காரர்களுக்கும் தான், இந்த சு.சாமி அடேயப்பா எப்படிப்பட்ட சர்டிபிகேட்டை தங்க முலாம் பூசி கொடுக்கிறார்.

அடுத்த கேள்வி. ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சு.சாமி: கருணாநிதி ஆட்சியை விட நல்ல ஆட்சி.

அடுத்து கருணாநிதி வரக்கூடாது என்பதால் ஜெயலலிதா ஆட்சியை ஆதரிக்கிறேன்.

பார்ப்பனர்கள் - எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இந்தப் பாழாய்ப்போன தமிழர்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லையே!

கொலைக் குற்ற வழக்கில் ஜாமீனில் திரியும் ஆசாமிகளையே லோகக்குரு, ஜெகத்குரு என்று சொல்லுவதில் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே! தயக்கம் காட்டுவதில்லையே! தன் புத்திக்குப் படாவிட்டாலும் எதிரிகளைப் பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா நம் தமிழர்கள்?
-------------விடுதலை,17-10-2011


Saturday, October 15, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (14)...சட்டத்தை எரித்தது குற்றமா?


திராவிடர் கழகத்திலிருந்து வெளி யேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர் கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான வர்களை யெல்லாம் தேடிப் பிடித்து அவர்கள் எல்லாம் தந்தை பெரியாரைப் பற்றி என்ன சொன்னார்கள் என்கிற வீண்வேலையில் திருவாளர் கே.சி.லட்சுமி நாராயண அய்யர்வாள் இறங்கி இருக்கிறார்.

க.. இராசாராம் திராவிடர் கழகத்தி லிருந்து விலகி, தி.மு.க.வுக்குச் சென்று,  அதன் பின் அதனை விட்டு அதிமுகவுக் குச் சென்று, நால்வர் அணியில் சங்கம மாகி, கடைசியில் தி.மு.க.வுக்கே வந்து - எல்லாவற்றையும் விட தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைப் பகுத்தறிவுக் கொள்கைக்கே விரோதமாக சங்கராச்சாரி ஜோதியில் கரைந்தவர். அவரையெல் லாம் இழுத்துக் கொண்டு வந்து இதோ பார் - இதில் இப்படி எழுதி இருக்கிறார் - அதோ பார், அதில் அப்படி எழுதி இருக்கிறார் என்று காட்டுவதெல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனமே!

பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி! என்று தந்தை பெரியார் சொன்னாராம்.

எங்கே சொன்னார்? அப்படி சொன் னதாக எங்கே இருக்கிறது? ஆதாரம் காட்ட முடியுமா? இப்படிசொல்லி இருந்தால் அது பெரியாராகத்தானே இருக்கும் என்று குத்து மதிப்பில் எழுதி விடலாமா? அப்படி பெரியார் சொல்லி இருந்தால் ஒரு பார்ப்பான் மிஞ்சியிருக்க மாட்டானே!

தந்தை பெரியார் நடத்திய போராட் டங்களைப் பற்றி விமர்சிக்கப்பட்டுள் ளது. அதிலும் குழப்பம். சட்ட எரிப்புப் போராட்டம் - தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - காந்தி பட எரிப்புப் போராட்டம்  இவையெல்லாம் _ ஜாதி ஒழிப்புக்காகப் பெரியார் நடத்திய போராட்டங்களாம்.

இந்தப் போராட்டங்களை பெரியார் அறிவித்து இருக்கிறார் என்பது மட்டும் செவி வழிச் செய்தியாக அறிந்திருக் கிறார்கள். அவ்வளவுதான். எந்தப் போராட்டம் எந்த நோக்கத்துக்காக என்பதில் கூட அடிப்படை அறிவு இல்லாமல் எழுதுகோல் பிடிக்கலாமா?

காந்தியாரின்மீது இன்று நேற்றல்ல - 1927 ஆம் ஆண்டிலேயே விமர்சனம் வைத்தவர் தந்தை பெரியார். 1927 ஆம் ஆண்டில் பெங்களூரில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் நேருக்கு நேர் விவாதம் செய்து, காந்தி யாரின் வருணாசிரமக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தவர்.

1927 முதல் 1931 வரையிலான குடிஅரசு இதழைப் புரட்டிப் பார்த்தால் காந்தி யார் எதிர்ப்பு அலை அனல் காற்றாக இருக்கும்.

வருணாசிரமக் காவலர் வருகிறார். பகிஷ்கரியுங்கள் என்ற  முழக்கங்கள் தமிழ் மண்ணைக் கலக்கின.

டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் ஜஸ்டிஸ் ஏட்டில் (8-_9-_1927) காந்தியாரின் வருணாசிரமக் கொள்கையை எதிர்த்துத் தலையங்கமே தீட்டியுள்ளாரே! வருணாசிரம முறையைக் காப்பாற்றி இந்து மதத்தை நாற்றம் எடுக்கச் செய்கிறார் காந்தி என்று எழுதவில்லையா?

காந்தியார் பட எரிப்பு என்பது அறிவிப்பு நிலையிலே இருந்ததே தவிர அதனைத் தந்தை பெரியார் நடத்திட இல்லை.

இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் (1_-8_-1955) என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டம் அல்ல - இந்தி யைக் கட்டாயமாகத் திணித்தது பற்றியதாகும்.

உங்கள் நண்பர் ஈ.வெ.ரா. நடத்த இருக்கும் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுக்கக் கூடாதா? என்று பிரதமர் நேரு கேட்டுக் கொண்டபோது கூட, ஈ.வெ.ரா. எனக்குத்தான் நண்பர், இந்திக்கு நண்பர் அல்ல என்று முதல் அமைச்சர் காமராசர் சொல்ல வில்லையா?

இந்தி திணிக்கப்படாது என்ற பிரதமரின் உறுதி மொழியை பிரதமர் சார்பில் முதல் அமைச்சர் காமராசர் அளித்ததன் காரணமாக, போராட் டத்தை ஒத்தி வைக்கிறேன் என்றுதான் தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறினார் என்பதை நினைவூட்டுகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்  (26-11-1957) என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டமே!

இலட்சோப லட்ச மக்களை தஞ்சை யில் கூட்டி (ஜாதி ஒழிப்பு - தனி மாநாடு) அதில் எடுக்கப்பட்ட முடிவு அது! (3-11-1957)

ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி பாதுகாக்கப் படும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 13(2), 25 (1)29 (1) (2) 368 பிரிவுகளைச் சுட்டிக் காட்டி, அந்தப் பகுதிகள்தான் அச்சிட்டு எரிக்கப்பட்டன.

அம்பேத்கர் சொன்னார்
பெரியார் செய்தார்
சிலர் நான்தான் இந்த அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள்
நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்கு வதற்கும் முதன்மையான வனாக இருப்பேன்
நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன் என்று ஆந்திர மசோதா பற்றிய விலவும் மாநிலங்களவையில் நடந்தபோது (3.9.1953) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறினார். சட்டத்தை உருவாக்கியவரே சட்டத்தை எரிப்பேன் என்று சொல்ல வில்லையா? அம்பேத்கர் சொன்னார் _ பெரியார் செய்தார் இதில் என்ன குற்றம்? இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்படாத - மனுநீதியின் மறுபதிப்பு என்று கூறியவர் பெரியார்.


தந்தை பெரியார் இந்தப் போராட் டத்தை அறிவித்த கால கட்டத்தில், சட்டத்தை எரித்தால் என்ன தண் டனை என்று சட்டத்திலேயே  இல்லை!

அவசர அவசரமாக தமிழ்நாடு சட் டப் பேரவையில்  நிறைவேற்றப்பட்டது - தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டம்(Prevention of Insult to National Honour Act,1957)  என்று பெயர். அதன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப் படலாம்.

தந்தை பெரியார் தயங்கினாரா? கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டம் அஞ்சியதா - பதுங்கியதா?

சிறைக்கஞ்சா சிங்கம் பெரியார் அவர்களின் கர்ச்சனை அறிக்கை இதோ:

நான் மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டீஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட, அவைகளுக்குப் பயன்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத் தையோ மாற்றிக் கொள்ளப் போவ தில்லை. நீங்கள் 3 ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்து விடமாட்டீர்கள்.சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.

ஆகவே இப்படிப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.

-  (ஈ.வெ.ரா. விடுதமலை 8-11-1957)

எதிர்த்துக்கூட வழக்காட வில்லையே - வேண்டாம் என்றாரே வெண்தாடி வேந்தர்.  ஆச்சாரியார் போல ஆகஸ்டு போராட்டத்தில் அண்டர்கிரவுண்ட் ஆகவில்லையே!
நீதிமன்றத்தில் என்ன அறிக்கை கொடுப்பது? அதுகூட முன்கூட்டியே

தீர்மானிக்கப்பட்டதே. இதோ அந்த அறிக்கை:

26ந் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூறவேண்டியது
மேன்மை தங்கிய   . . . . . . . . . . கோர்ட்டார் அவர்கள் சமூகத்திற்கு
வாதி:        (போலீசார்)

எதிரி:
வழக்கு எண்: / 57

சமூகம் கோர்ட்டில் எதிரி வாசித்துக் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்:

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக் கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தை, திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத் தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை யுண்டு. இதனால் எந்த உயிருக்கும் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால்அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
இடம்:

தேதி:    எதிரியின் கையெழுத்து
(விடுதலை 26-111957)

இப்படி ஒரு இயக்கம் உண்டா?

கர்ப்பிணிப் பெண்கள்கூட ஜாதி ஒழிப்புக்காகச் சிறைக் கோட்டம் ஏகினரே! சிறையில் பிறந்த குழந்தைக் குச் சிறைப் பறவை என்றுகூட பெயர் சூட்டப் பட்டதே!

சிறுமிகளும் தண்டனையிலிருந்து தப்பவில்லையே! நீடாமங்கலம் பிரபசர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டாண்டு தண்டனை. சென்னையில் உள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனரே!

கலியபெருமாள், கோவிந்தசாமி ஆகிய இரு சிறுவர்களும்  தண்டனை பெற்று நெல்லை மற்றும் செங்கற்பட்டு சிறுவர் சிறைகளுக்கு அனுப்பப்பட் டார்களே!

நேரு மாமா 3 ஆண்டு தண்டனை கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.  ஏன் நீதிபதி மாமா ஆறு மாதம் தண்டனை கொடுத்துள்ளீர்கள்? என்று நீதிபதியைப் பார்த்துக் கேட்ட இளைஞன் - கருஞ் சட்டைக்காரன் என்று நினைக்கும் பொழுது இப்பொழுது நினைத்தால்கூட உணர்வுகள் எல்லாம் சிலிர்க் கின்றனவே. இந்தப் போராட்டம் பற்றி ஜீவா அப்படி சொன்னார். இப்படி சொன்னார் என்பதெல்லாம் கவைக்கு தவாத ஒன்று.

ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிறது அரசமைப்புச் சட்டம். அதனைத் திருத்து. இன்றேல் அதற்குத் தீதான் என் பது புரட்சிகரமான சிந்தனைதானே! ஜீவா குறை கூறியிருந்தாலும் குற்றம் குற்றம்தான்.

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. எனும் நூலை  தோழர் ஏ.எஸ்.கே. எழுதியுள்ளார். அந்நூலில் ஓரிடத்தில் (என்னுரை பகுதியில்) குறிப்பிடுகிறார்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பல தடவை என்னிடம் கூறியுள்ளார்:

"நீங்கள் செய்யவேண்டிய வேலைகளை நான் செய்து வருகிறேன். அப்படி இருக்க ஏன் திரு . . . .  என்னைத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்? அதாவது, கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை, இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலையல்லவா? நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவ்வாறிருக்க, கம்யூனிஸ்டுக் கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும், உருக்கமாகவும், பன்முறை கேட்டு வந்துள்ளார். இது முற்றிலும் உண்மை.பெரியார்  அவர்களைப் பற்றிச் சரியான கணிப்பு பல தோழர்களுக்கு இல்லை என்பதுதான் என் கருத்து. இந்நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

தோழர் ஏ.எஸ்.கே.யின் இந்தப் பதில் தோழர் ஜீவாவுக்குப் பொருந்தும்தானே`!

ஜாதிகளை ஒழிக்க ஒரு போராட்டம் நடத்தப் போவதாக அவர் (ஈ.வெ.ரா.) திடீரென்று அறிவித்தார். 1957 ஆம் வருட ஆரம்பத்தில் நடந்த தேர்தலில் காமராஜ் தலைமையிலான காங்கிரசை ஆதரித்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா. அதே காமராஜின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 1957 நவம்பர் மாதத்தல் ஜாதி ஒழிப்புப் போராட்டம் என்ற ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்தார் என்று துக்ளக் (19-_-10_-2011) சொல்லுகிறது.

ஒன்றைக் கூட உருப்படியாகத் தெரிந்து கொள்ளாமல் அரை குறையாக எழுதும் அரை வேக்காட்டுக் கவிச்சி தான் வீசுகிறது.

இந்தப் போராட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிப்பதுதானே தவிர காமராசருக்கு எதிரானதல்ல. அதனைப் போராட்டம் நடைபெறுவ தற்கு முன்பே தந்தை பெரியார் தெளிவு படுத்திவிட்டாரே!

பொதுமக்கள் சட்ட எரிப்புப் போராட்டத்துக்காக இன்றைய மந்திரிசபையையோ குறிப்பாக திரு. காமராசரிடமோ எந்த விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை.(விடுதலை 6-_11-_1957) என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில் காமராசருக்கு எதிராக இந்தப் போராட்டத்தை பெரியார் நடத்தினார் என்று எழுதுவது விஷமத்தனம் அல்லது பூணூல்தனம்தானே! இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் வரை கடும் தண்டனையைப் பல்லாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர் கள் குடும்பம், குடும்பமாக அனுபவித்த நிலையிலும் - 20 பேர் இன்னுயிரை நீத்த பிறகும், அடுத்தடுத்து வந்த 1962 மற்றும் 1967 பொதுத் தேர்தலிலும் காமராசரைத் தானே ஆதரித்தார் தந்தை பெரியார். விவரம் புரியாமல் கிறுக்க வேண்டாம்.

தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு மசோதா, தமிழ்நாடு சட்டப் பேரவை யில் 11-_11_-1957 அன்று விவாதிக்கப்பட்ட போது, அண்ணாதுரை நேற்றைக்குப் பெரியாரின் பேருதவியைப் பெற்றீர்கள். இன்றைக்கு அவரைப் பிடித்து அடைக் கத் துடிக்கிறீர்களே என்று கேட்டதாக தி.மு.க. நாளிதழான நம் நாடு (17_-11_-1957) தெரிவித்தது.

ஈ.வெ.ரா. தேர்தலில் காங்கிரசுக்காகப் பிரச்சார உதவி செய்தாராம். அந்த உதவியைக் காமராசரும், காங்கிரசாரும் பெற்றுக் கொண்டார்களாம். இப்போது காமராசர் மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்து விட்டதும் ஈ.வெ.ரா.வைக் கைது செய்து சிறையில் அடைக்கத் துடித்தாராம்! இவ்வாறு சட்டப் பேரவையில் அண்ணாதுரை பேசினார். அமைச்சர் சுப்பிரமணியம் அவருக்கு உடனடியாகச் சுடச்சுடப் பதில் அளித்தார்.

அண்ணாதுரை வளர்ந்துவிட்டாரே, நம்மிடம் ஒட்டிக் கொண்டிருந்தவர் இப்போது ஒரு கட்சியின் தலைவராகி விட்டாரே, கட்சி உறுப்பினர்களோடு தேர்தலில் நிற்கிறாரே என வயிற்றெரிச் சலோடு, அண்ணாதுரையை வீழ்த்துவ தற்காகத்தான் தேர்தலில் ஈ.வெ.ரா. தாமாக முன்வந்து காங்கிரசை ஆதரித் தார். நாங்கள் அவரது ஆதரவைக் கோரவில்லை. இதைத் தேர்தலின் போதே நான் தெரிவித்திருக்கிறேன் என்று சுப்பிரமணியம் பதில் அளித்தார்.

அண்ணாதுரை வாய் மூடி மவுனமாக அமர நேர்ந்தது என்கிறார் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்

(துக்ளக் 9-_10-_2011)

பெரியார் மீது சி.சுப்பிரமணியத் துக்குக் கோபம் இருப்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும். ராஜாஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்து குலக் கல்வி திட்டத்துக்குக் கையொப்பம்போட்டவரும் அவரே! காமராசர் முதல் அமைச்சர் ஆன நிலையிலும் கல்வி அமைச்சராக இருந்து, அந்தக் கல்வித் திட்டத்தை ஊற்றி மூடு வதற்கும் கையொப்பம் போட்டவரும் அவரே!  அவ்வளவு  அறிவு நாணயஸ்தர்அவர்.

அதனை திராவிடர் கழகம் விமர்சித்ததுண்டு. ஆச்சாரியார் பதவி விலகி காமராசர் முதல் அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட போது ராஜாஜியின் வாலாய் காமராசரை எதிர்த்து நின்ற நிலையில்  பெரியாரின் ஆதரவோடு காமராசர் வெற்றி பெற்றாரே -ஆத்திரம் இருக்காதா சி.சு.வுக்கு?

தந்தை பெரியார் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்ததும், காமராசர் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தெரிவித்து, அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியதும் காமராசரைக் கல்வி வள்ளல் என்றும் பச்சைத் தமிழர் என்றும், புகழாரம்சூட்டியதெல்லாம் தி.மு.க.வையும், அண்ணாவையும் நினைத்துத்தானா?

சி.சு. உதிர்த்த அந்தச் சிறுபிள்ளைத் தனக் காய்களை எடுத்து சப்பரம் கட்டுகிறது துக்ளக்!

சி.சுப்பிரமணியம் கூற்றுக்கும், அதனை எடுத்துக் காட்டி துக்ளக் சிலம்பம் விளையாடுவதற்கும் பதிலடி கொடுக்க விடுதலை ஏடு தேவை யில்லை. அப்பொழுது அவாள் ஆத்து கல்கியே பதிலடி கொடுத்துவிட்டதே!  இதோ கல்கி பேசுகிறது:

திராவிடர் கழகத் தலைவர் திரு. ஈ.வெ.ரா. திரு. காமராசரை ஆதரிப் பதற்குக் காரணம் திரு.அண்ணாத் துரைதானென்றும், நம்மக் கிட்ட வளர்ந்த பையன், இவன்தலைவனாவ தாவது, கட்சியமைத்துச் சட்ட சபைக்குப் போவதாவது? இவன் கட்சி ஆட்கள்அதிகம் ஜெயித்தால் என்ன ஆவது? என்று யோசித்து இவர்களைத் தோற்கடிக்கக் காமராஜ்தான் சரியான ஆள் என்று நினைத்து அவரை ஆதரிப்பதாகப் பேசி வருகிறார். இவ்வாறு சி.சுப்பிரமணியம் சட்ட சபையில் கூறினார்.

திரு.சி.சுப்பிரமணியம் மக்களின் ஞாபகசக்தியில் நம்பிக்கையில் லாததனால்தான் இப்படிப் பேசி யிருக்கிறார். தி.மு.கழகமோ, அண்ணாத் துரையோ சட்டசபைப் பிரவேசத்தைப் பற்றிக் கனவில் கூட நினைக்காத போதிலிருந்தே திரு.ஈ.வெ.ரா. திரு. காமராசரை ஆதரித்து வந்தார். திரு. காமராஜ் முதன் மந்திரியானதிலிருந்தே ஆதரித்து வந்திருக்கிறார். பச்சைத் தமிழன் ஆட்சி நடைபெறுகிறது என்று பெருமிதம் அடைந்தார். குடியாத்தம் உபதேர்தலில் திரு. காமராசரை ஆதரித்துப் பேசினார்.

ஆதரிப்பதற்கு உண்மைக் காரணம் ஒரு சாதியாரைப் பற்றிய வெறுப்பே. அதை மறைப்பதில் பயனில்லை. மேலிடத்தார் வற்புறுத்தலுக்காக, ஈ.வெ.ரா. வின் பெயரில் நடவடிக்கை எடுத்தாலும் அதை முழு மனதுடன் எவ்வளவு தூரம் அமுல் நடத்துவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

(கல்கி _ 10_-11_-1957)

துக்ளக்குக்கு அவாள் ஆத்து கல்கி சவுக்கடி கொடுத்தால்தானே இதமாக இருக்கும்.
நாங்கள் பெரியாரை ஆதரவு கேட்க வில்லை; அவராகத்தான் காங்கிரசை ஆதரித்தார் என்கிறார் சி.சு. இது போன்ற வார்த்தை காமராசர் வாயி லிருந்து வருமா?

பெயரியார் நினைப்பதை நான் செய்கிறேன் என்றவராயிற்றே காம ராசர். கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார்; காரியம் _ -காமராசர் என்று ஆனந்தவிகடன் எழுதவில்லையா? பெரியார் என்ற குயில் கொள்கை முட்டையிட, அதனைக் காமராசர் என்ற காகம் அடைகாக்கிறது என்று கல்கி கார்ட்டூன் போட்டதே - இவை யெல்லாம் துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியாதோ! சி.சு.வைத் தூக்கிச் சுமந்தால் இந்தக் கெதிதான்!

குடுமிகளை வெட்டுதல், பூணூல் களை அறுத்தல் போன்றவை கழகத் தலைமை திட்டமிட்டு, ஆணையிட்டு இயக்க ரீதியாகச் செயல்படுத்தப்பட்ட வையல்ல. மற்றவர்களை இழிவு படுத்தும் இந்த ஜாதி ஆதிக்கச் சின்னங்களை தன்மான உணர்வோடு எங்காவது சிதைத்திருந்தால் அது ஒன்றும் குற்றமும் ஆகாது.

முஸ்தபா கமால்பாட்ஷா இத்தகு சீர்திருத்தங்களைச் செய்தவர்தான் - அதற்காக அவரை வரலாறு போற்றிட வில்லையா?

சுடுகாட்டில் கூட சூத்திரர்கள் பகுதி என்று பொறித்திருந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சூத்தி ரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சொல்லுவது எப்படிவன்முறை யாகும்?

-   இன்னும் உண்டு.
----------------- கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர் 15-10-2011,


Sunday, October 09, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (13) சூத்திரன் கல்விக் கண்ணைக் குத்திய சூத்ரதாரி!

ராஜாஜிதான் நாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்றியது போலவும், அவர்தான் தலைசிறந்த அறிவாளி போலவும் அவர் போல ஆளப் பிறந்தவர்கள் வேறு யாரும் இலர் என்பது போலவும், ஊடகங்களின் மூலம் காற்றடித்து ஊதிப் பெரிய பிம்பமாகக் காட்டத் துடிக்கின்றனர்.

அரசியல்வாதியான அவர் ஒரு முறை கூட தேர்தலில் நின்று, மக்களைச் சந்தித்து, வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திடும் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்ததில்லை.

கொல்லைப் புறமாக பதவி நாற் காலியைப் பிடித்த அவர் முழு காலமும் ஆட்சி செய்யும் திறமை உடையவ ராகவும் இருந்ததில்லை.

தன் ஆட்சித் திறனைப் பற்றி அவரே கூட வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாடாள எனக்குத் தெரியாது!

நாங்கள் கஷ்டமான வேலையை மேல்போட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். தேச நிர்வாக அனுபவம் எனக்குக் கிடையாது. கோர்ட்டில் கேசு நடத்திட எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. அந்த அனுபவம் தேச நிர்வாகத்துக்கு உதவி புரியாது. ஒரு கட்சிக்காகப் பரிந்து பேசும் வழக்கம் நிர்வாக விஷயத்தில் பிரயோஜனப்படாது. 20 ஆண்டுகள் என் வக்கீல் தொழில் அனுபவம் எனக்கு இப்பொழுது பிரயோஜனப்படவில்லை.

அந்தப் பழக்கம் என் வேலைக்குத் தடையாக நிற்கிறது. ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு ஓயாமல் பேசுவது எனது வாடிக்கையாகிவிட்டது. தேச நிர்வாகத்திற்கு நான் ஜவாப்தாரியாக இருக்கும்வரை அந்த வாடிக்கையை ஒழிக்க வேண்டியதுதான் (அனந்தப்பூரில் 12-7-1938 -இல் ராஜாஜி பேசியது).

இதற்கு எந்தவித பதவுரை பொழிப் புரை தேவைப் படாது. தன்னிலை விளக்கமே கொடுத்துவிட்டார் காந்தி யாரின் சம்பந்தி.

இப்படிப்பட்டவரைத்தான் அக்கிரகாரம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது.

ஆட்சித் திறன் இல்லாவிட்டாலும் இரண்டு முறை அவர் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பார்ப்பனீயத்துக்குப் பால் வார்த்தார். பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக ஆட்சியை நடத்தினார்.

1937-38 அமைச்சரவையில் மொத்தம் 10 பேர் அமைச்சர்கள் என்றால் அதில் 4 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகிதத்தி னருக்கு 40 சதவிகித இடங்கள். 1952_54 இல் முதல் அமைச்சராக வந்தபோது மொத்தம் 13 பேர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகித பார்ப்பனர்களுக்கு 24 சதவிகித இடங்கள் அமைச்சரவையில்.

1937_-39 இல் பிரதம அமைச்சராக இருந்தபோது 2500 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். மது விலக்கினை அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யவே பள்ளிகளை மூடுவதாகக் கார ணம் சொன்னார். தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒரு திருடனைக் கேட்டபோது புல் பிடுங்க ஏறினேன் என்று சொன்னானாம். அந்தக் கதையாக அல்லவா இது இருக்கின்றது. ஆச்சாரியாரின் இந்தச் சூழ்ச்சியை விளக்கி மது விலக்கின் இரகசியம் என்று குடிஅரசு இதழில் (24-10-1937) தந்தை பெரியார் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937-_39 கால கட்டத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு.
அந்த நேரத்தில் 2500 தொடக்கப் பள்ளிகளை மூடுகிறவர்க்குப் பெயர் தான் மூதறிஞரா? நிதியைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிய ஆச்சாரி யார் பார்ப் பனர்கள் படிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தாரே!

நீதிக்கட்சியின் ஆட்சியின்போது ஏ.பி.பாத்ரோ அவர்களால் செயல்படுத் தப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை நிறுத்தினார். சேலம் ஜில்லா போர்டார் தங்கள் வட்டாரத்தில் அனைவருக்கும் கட்டாய மாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரூ 13,500 தொகையை ஒதுக்கி இருந்தார்கள். அதற்கான அனுமதியையும் அரசிடம் கேட்டார்கள். பிரதம அமைச்சர் ஆச் சாரியார் என்ன செய்தார் தெரியுமா?

நிதிநிலை இடம் தராது. அதனால் அனுமதி அளிக்க முடியாது என்று ஒரு வரியில் பதில் எழுதிவிட்டார்.

எல்லா செலவினங்களையும் கணக் கிட்டுதான் இந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கி உள்ளோம் என்று மறுபடியும் அரசுக்கு எழுதினர். அந்த முறையீட்டையும் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

ஈரோடு நகராட்சியார் வீட்டு வரியைக் குறைத்துக் கொள்ள நூற்றுக்கு 2 ரூபாய் - வரவு செலவுகளை சரிக் கட்டக் கொடுத்து அரசிடம் அனுமதி கேட்டனர் . மனுவாதி ஆச்சாரியார் என்ன பதில் எழுதினார்? வீட்டு வரியைக் குறைக்க முடியாது; வேண்டுமானால் கல்வி வரியைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பதில் எழுதினார்.

கல்வி ஒழிப்புக் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவர் இந்த ஆச்சாரியார்.

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிகளும் 60 பிள்ளை களுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட காட்டுத்துறைக் கல்லூரியை (Forest College) இழுத்து மூடினார்.

நம் பிள்ளைகள் படிப்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி சம்பளத்தை ((Tuition Fees) உயர்த்தினார். முசுலிம்கள், கிறித் தவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெற்று வந்த உதவித் தொகையையும் (Stipend) நிறுத்தினார்.

ஏழு வயதானால்தான் பள்ளியில் சேரமுடியும் என்றார். பாடங்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலை அனுசரித் ததாக இருக்க வேண்டும் என்றார். அதன் மூலம் வரும்படி வருமாறு செய்து, அந்த வருமானத்தின் மூலமே பள்ளிக் கூடங்கள் நடத்த வேண்டும் என்றார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையையொட்டி தமிழர்களாகிய நமது பிள்ளைகள் கல்லூரிகளில் நுழைவதற் காக நீதிக்கட்சி ஆட்சியின்போது அறிமுகப் படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்குழுவினை (College Selection Committee) ஒழித்துக் கட்டினார் ஆச்சாரியார். நேர்முகத் தேர்வுக்கு இருந்து வந்த 150 மதிப்பெண்களை 50 ஆகக் குறைத்த புண்ணியவான் இந்த ராஜாஜிதான்.
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்பதிலே கண்குத்திப் பாம்பாக, கண்களில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு சதா அதே சிந்தனையிலும், செயலிலுமாக இருந்தார் என்பதுதான் சுருக்கமான கணிப்பாக இருக்க முடியும்.

இந்த அணுகுமுறைதான் தமக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஆச்சாரியாரை - வீழ்த்தும் நிலைக்கு தந்தை பெரியாரை வேகமாகத் தள்ளிவிட்டது. காமராசரைப் பச்சைத் தமிழராகப் பெரியார் ஆக்கியதும் இந்த அஸ்திவாரத்தின் மீதுதான்.

காமராசரை ஒரு காலகட்டத்தில் கருப்புக் காக்கை என்று சொல்லி, கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் நிதானத்தை முற்றிலும் இழந்த ஆத்திரத்தின் புயலாக, அக்கிரகாரத்தின் அக்னிக் குழம்பாகச் சீறி எழுந்தவர். சூத்திரர், பஞ்சம மக்களின் கல்விக் கண்களைப் பிடுங்குவதற்கு நாம் போட்ட திட்டத்தையெல்லாம் இந்த நாயக்கரும், நாடாரும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்களே என்ற ஆத்திரத்தில் காந்தாரி போல வயிற்றில் குத்திக் கொண்டார். அவரின் வாரிசுகள் தான் இந்த லட்சுமிநாராயணன், சோ ராமசாமி, குருமூர்த்தி கம்பெனிகள் - வகையறாக்கள்!

அரசுப் பணிகளை வழங்குவதிலும் ஆச்சாரியார் எப்படியெல்லாம் அப்பட் டமாக பூணூல் புத்திரராக சண்ட மாருதம் செய்தார் என்பதை அளந்து கொட்ட ஏடுகளும் போதாது - எழுத்தாணிகளாலும் ஆகாது!

உடல் நோயைத் தெரிந்து கொள் வதற்கு ஒரு துளி ரத்தத்தைத்தானே குத்தி எடுக்கிறார்கள். இதோ சில துளிகள். (தனியே பெட்டி செய்தி 6ஆம் பக்கம் காண்க). பார்ப்பனர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கும் வங்காளக் குடாக் கடலாக ஆச்சாரியார் இருக் கிறாரே, அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
இந்த இடத்தில்தான் அவருக்குரிய வக்கீல் புத்தி வகை துகையாக, வாட்ட சாட்டமாக உதவி புரிந்திருக்கிறது!

பார்ப்பனர் ஒருவரை ஒரு பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றால் ராஜாஜி எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்?

ராஜாஜியின் ஆப்த நண்பரான பெரியார் அவர்களை விட்டே பதில் சொல்ல வைப்போம்.

இதோ ஒரு தமிழனுக்கு டாக்டர் தாயுமானசாமி டைரெக்டர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (இயக்குநர், மக்கள் நலவாழ்வு) உத்தியோகம் போட்ட தற்குச் சுதேசமித்திரன் (நாளிதழ்) மிரட்டுகிறான். இப்போது நீ சந்தோஷப் படலாம்.

அவர்கள் கைக்கு அதிகாரம் வந்தால் உங்களை ஒழித்துக் கட்டிவிடுவோம் என்கிறானே? காம ராசர் இதில் அக்கிரமாகக் குறுக்கிட் டிருக்கிறார் என்கிறான்; என்ன அக்கிர மமான குறுக்கீடு? முன்பு ராஜகோ பாலாச்சாரியார் காலத்தில் ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் (அரசு வழக்குரைஞர்) நியமிக்க வேண்டியிருந்தது! திருச்சி கைலை அனந்தரை கலெக்டர் (மாவட்ட ஆட்சியர்) சிபாரிசு செய்து அனுப் பினார்.

இவர் 100-க்கு இத்தனை கிரிமினல் கேஸ்களில் (வழக்குகளில்) ஆஜராகி இருக்கிறார்.

ஆகையால் இவரைத் தவிர தகுதி உடையவர் யாரும் இல்லை என்று எழுதினார். ராஜாஜி அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவரை நியமித்துவிட்டார்! சட்டசபையில் கேள்வி வந்தது. அப்போது சொன்னார், தகுதி இருந்தால் போதுமா? சர்க்கார் (அரசு) தனக்கு நம்பிக்கையான வரைத்தானே நியமிக்கும்? உனக்கு ஒரு வக்கீல் வேண்டுமானால், உனக்கு நம்பிக்கையானவரைப் பார்ப்பாயா? இல்லை இவன் கெட்டிக்காரன் என்பதற்காக அவனிடம் போவாயா? என்றார்.

மேலும், ஏதாவது கேட்டால் கைலை அனந்தர் எதற்கும் லாயக்கில்லை என்றாகிவிடும். வாயை மூடிக்கொள் என்றார். இது போல ஒரு பார்ப்பானுக்கு வேலை வர வேண்டு மென்றால் தகுதி முக்கியமல்ல. நம்பிக்கைதான் முக்கியம் என்கிறார்கள். அந்த வேலை நமது ஆளுக்குக் கிடைப்பதாயிருந்தால் தகுதிதான் முக்கியம் என்கிறார்கள். இவற்றை யெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டும்.

(21-9-1957 சேலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: விடுதலை 12-10-1957)
இதன் பொருள் என்ன? பார்ப்பனர் ஒருவர் பார்ப்பனர் அல்லாத ஒருவர் போட்டிக்கு வந்தால் அந்தப் பார்ப் பான் தகுதி உள்ளவர் அதனால் பார்ப் பனரை நியமிக்கிறேன் என்பார். பார்ப்பனர் அல்லாத ஒருவர் தகுதி உடையவர் என்றால், தகுதி முக்கியமா? நம்பிக்கைதான் முக்கியம் என்று கூறி பார்ப்பனரை நியமிப்பார்.இதுதான் ராஜாஜியின் அணுகு முறை மட்டு மல்ல. எல்லாப் பார்ப்பனர்களின் அணுகுமுறையும் இன்று வரையும்கூட.

ராஜாஜியைப் பற்றி முக்கிய சான்று ஒன்று இருக்கிறது. அதுவும் மோதிரக் கை அது. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால்தான் குட்டுப்படவேண்டும். இதோ அந்தக் குட்டு!

காங்கிரஸ்காரர்களைக் கண் காணித்து வருமாறும் சோஷலிஸ்டு களைக் கைது செய்யுமாறும் போலீசுக்கு உத்தர விட்டார். இந்திய சுதந்திர நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்வதன் மீது பிரிட்டீஷ் அரசாங்கம் பிறப் பித்திருந்த தடையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். ஒரு சோஷலிசப் பத்திரிகை பிணைத் தொகைக் கட்டும் படி செய்தார். முந்தைய ஆண்டுகளில் காங்கிரசால் கடுமையாகக் கண்டனம் செய்யப்பட்டு வந்த கிரிமினல் சட்ட திருத்தத்தை இந்தி எதிர்ப்பு மறியல் செய்தவர்கள் மீது பயன்படுத்தினார்.

கடுமையான நடவடிக்கைகள் தான் இந்தியாவில் பலிக்கும் என்றும், சட்டமறுப்பு இயக்கங்களின்போது பிரிட்டிஷார் மிகவும் மென்மையாக நடந்து கொண்டனர் என்றும் ஆளுநர் எர்ஸ்கினிடம் கூறினார். ஆந்திர மாநிலம் ஏற்படுவதைத் தடுத்து தனது சொந்தக் கட்சிக்கு எதிராகவே ஆளுநருடன் சேர்ந்து சதி செய்தார். ஒரு மாத விடுமுறையில் செல்லும் போது தனது அரசாங்க அலுவலர் களில் பெரும்பாலானவற்றை ஆளுநரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது அமைச்சரவை சகாக்களைக் காட்டிலும் எர்ஸ்கின் (ஆளுநர்) மீதுதான் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். தனது ஆதர வாளர்கள் சிலருக்கு பிரிட்டிஷ் சக்கர வர்த்தி வழங்கும் சர் பட்டங்களும் இதர பட்டங்களும் வழங்கவேண்டும் என்று பரிந்துரைக்க விரும்பினார்.

ராஜாஜி பற்றி இப்படி எழுதியிருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அய்யர் அவர்களின் அருமருந்தன்ன புத்திரர் வரலாற்றாளர் சாட்சாத் சர்வபள்ளி கோபால்தான்! லட்சுமி நாராயணர்களுக்கு அக்குளில் தேள் கொட்டிய மாதிரி இருக்கிறதா? ஆப்பதனை அசைத்து விட்ட கதை யாகத் தோன்றுகிறதா? என்ன செய் வது? உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்!

பேராசை நாயகர்

ஆச்சாரியாரைப் பெரும் தியாகி என்பார்கள். 1942ஆம் ஆண்டு போராட்டத்தின் போது காங்கிரசைக் காட்டிக் கொடுத்தவர். ஆகஸ்டு துரோகி என்று காங்கிரஸ்காரர்களே தூற்றினர்.

அப்படிப்பட்ட ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். அவர் பேராசைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு: 1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளை கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும் அக்காலம் முழுதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகைகளை கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது
எப்படி இருக்கிறது?

(குங்குமம் 7.4.2000)
-----விடுதலை ஞாயிறு மலர்,08-10-2011(மேலும் உண்டு) 


Tamil 10 top sites [www.tamil10 .com ]