வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 24, 2021

பாஜக வின் தேர்தல் அறிக்கை விஷ வித்துக்கள் அடங்கிய கொத்து

 விஷ வித்துக்கள் அடங்கிய கொத்து என்கிற தலைப்பில் பாஜக வின் தேர்தல் அறிக்கை பற்றிய தீக்கதிரின் (25-03-2021) சிறப்பான தலையங்கம்.

ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பதுஅந்த கட்சி எந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம்கொடுக்கிறது; யாருடைய நலனை பிரதிபலிக்கிறது; எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது; எந்த திசைவழியில் மாநிலத்தை கொண்டு செல்லமுனைகிறது என்பதை காட்டுவதாக இருக்கும்.

அந்த வகையில் தமிழக  பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மாட்டிறைச்சிக்கு தடை, மதமாற்றத்திற்கு  தடை, சிஏஏ அமல், நீட் நிச்சயம், பள்ளி பாடத்தில் ஆன்மீகம் என விஷ வித்துகள் தூவப்பட்டிருக்கிறது. தமிழகத்தை கற்காலத்திற்கு பின்னோக்கி இழுக்கும்  சூட்சமங்களும்  உள்ளடக்கியிருக்கிறது.ஆர்எஸ்எஸ் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் முயற்சியின் முதல் படியாக பாஜகவின் தேர்தல்அறிக்கை இருக்கிறது.

உணவு என்பது உழைப்பு சார்ந்தது. மதம் சார்ந்தது அல்ல. ஆனால் பாஜக மதம் சார்ந்ததாக மாற்றி உணவு சங்கிலியை உடைக்க  முற்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம்; ஆனால் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என்கிற சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம் எனகூறுகின்றனர். ஆனால் மறுபுறம்   ஓட்டுக்காக  இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறி தமிழர்களை ஏமாளிகளாக்க முனைகின்றனர். அவ்வளவு ஏன், இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பை புறக்கணித்து தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்ததுதான் பாஜக அரசு.மருத்துவப் படிப்பிற்கு மட்டுமின்றி அனைத்துஉயர் படிப்புகளுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு என்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம்கொஞ்ச நஞ்சம் கிடைத்து வந்த  கீழ்த்தட்டு மக்களின் உயர்கல்வி வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது பாஜக. பள்ளிக் கல்வியிலேயே ஆன்மீகத்தை திணித்து, பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் திட்டத்தையும்  முன் வைத்திருக்கிறது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது.  அதை நிராகரித்து தமிழ்மொழியை சீரழிக்கும் விதத்தில் புதிய எழுத்துருக்களை முன் மொழிந்திருக்கிறது. இது முத்தமிழ்மீதான மூர்க்கத் தாக்குதல் ஆகும். 

அடுத்து, பட்டியலின மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்போம் என பாஜக கூறுகிறது. இதுநாள் வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர்  தற்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் தானே! பஞ்சமி நிலத்தை மீட்க அவரை யார் தடுத்தது?பட்டியலின மக்களின் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தது  பாஜகவின் இதே மோடி அரசுதான்.  கடும் எதிர்ப்புக்கு பின்னர்  5 ஆண்டு நீட்டித்து  காலக்கெடுவோடு சவப்பெட்டியும் செய்து வைத்திருப்பதை ஒரு போதும் பட்டியலின மக்கள் மறக்க மாட்டார்கள்.நாளொரு வேடமும், பொழுதொரு பொய்யுமாக தேர்தல் களத்தில்  பாஜகவும் - அதிமுகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளும் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்பதற்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒன்றே போதும். அதுவே அவர்கள் கூட்டணியை ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கும். 

நன்றி: தீக்கதிர் தலையங்கம்,24-03-2021



Sunday, June 14, 2020

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-2.... இந்து மகாசபை இருக்க இன்னொன்று ஏன்?- அருணன்


ஆர் எஸ்எஸ் தோன்றுவிக்கப்பட்டதன் பின்புலம் பற்றி விவரித்திருக்கிறார் நூரானி. லாலா லஜபதிராய், பண்டிட் மதன்மோகன் மாளவியா என்றால் அந்தக் காலத்து காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றுதான் பலரும் அறிவர். ஆனால் அவர்களுக்கு இன்னொரு முகம் உண்டு. அவர்கள் இருவரும் இந்து மகாசபைத் தலைவர்களும்கூட.அந்தக் காலத்து காங்கிரஸ் ஒரு மகாசம்மேளனம். அதில் பல கருத்துள்ளவர்கள் மட்டுமல்ல பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இருந்தார் கள். “தங்களுக்கான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருப்பதால் இந்துக்கள் தம் அளவில் ஒரு தேசம்” என்று 1899லேயே எழுதியவர் லஜபதிராய். மதத்தின் அடிப்படையில் தேசியத்தை தீர்மானிக்கும் அபத்தச் சிந்தனை அப்போதே பிறந்து விட்டது. இந்துக்கள் ஒரு தேசம் என்றால் முஸ்லிம்கள் வேறொரு தேசம் என்றானது. இப்படித்தான் இரு தேசச் சிந்தனை இங்கே வேர் விட்டது.
இந்தச் சிந்தனையோடு 1907ல் பஞ்சாபில் அமைந்தது இந்து மகாசபை. 1909ல் நடந்த அதன் மாநாட்டில் உற்சாகமாகப் பங்கேற்றார் லஜபதிராய். 1914ல் அகில பாரதிய இந்து மகாசபை ஆரம்பிக்கப்பட்டது. அதை 1928 வரை வழி நடத்தி
யவர்கள் லஜபதிராயும், மதன்மோகன் மாளவியாவும். சுத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் வேலையையும் 1923ல் துவக்கியது இந்த சபை. லஜபதிராயின் சிந்தனை, இந்து மகாசபையின் செயல்பாடு எல்லாம் சாவர்க்கரிடம் தாக்கத்தை ஏற்படுத்தித்தான் அவரை “இந்துத்துவா” நூலை எழுத வைத்தன.
தி டிரிபியூன் பத்திரிகையில் 1924 டிசம்பரில் லஜபதிராய் எழுதினார்: “பஞ்சாபை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதை மேற்கு பஞ்சாப் என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதை கிழக்கு பஞ்சாப் என்றும் பிரிக்க வேண்டும்”. மத அடிப்படையில் இரு மாகாணங் களை உருவாக்க வேண்டும் என்று அடியெடுத்து கொடுத்தார், பின்னாளில் அது இரு நாடுகள் என முடிந்தது.இத்தகைய கருத்தியல் கொண்டவர்கள் முழு காங்கிரசையும் கைப்பற்ற முயற்சித்தார்கள் எனும் திடுக்கிடும் சங்கதியையும் நூரானி எடுத்துரைக்கிறார். அதற்கான ஆதாரமாக சாட்சாத் மோதிலால் நேருவைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஜவஹர்லால் நேருவின் தந்தையார் தனது மகனுக்கு எழுதினார் 1926ல்: “பிர்லாவின் பண உதவியோடு இயங்கும் மாளவி யா-லாலா கோஷ்டி காங்கிரசை கைப்பற்ற தீவிரமாக முயலுகிறது”. அந்தக் காலத்திலேயே பெருமுதலாளி ஒருவர் இந்த வகுப்புவாத கோஷ்டியையும் ஆதரித்திருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய சோகம் இதுதான்-இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்போடு சமரசம் செய்துகொண்டே தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்த்தது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது எதிரியாம் முதலாளித்துவத்தை மட்டுமல்லாது எதிரியின் எதிரியாம் நிலப்பிரபுத்துவத்தையும் ஒழிக்கும் வேலை வந்து சேர்ந்தது.இத்தகைய சமூக, அரசியல் சூழலில்தான் கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவர் கிளம்பினார். இந்த நாக்பூர்காரரின் சித்தாந்த வழிகாட்டி இந்து மகாசபையின் மற்றொரு தலைவராகிய பி.எஸ். மூஞ்சே. சாவர்க்கரின் “இந்துத்துவா” நூலைப் படித்த ஹெட்கேவாருக்கு அவர் மீது அளப்பரிய பிரியம் ஏற்பட்டது. 1925 மார்ச்சில் அவரோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்து விரிவாகக் கலந்துரையாடினார்.முடிவில் அதே ஆண்டு விஜயதசமி அன்று ஹெட்கேவாரின் வீட்டில் “ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்” எனப்பட்ட ஆர்எஸ்எஸ் உதயமானது. கூட இருந்த நான்கு பேர்: பி. எஸ். மூஞ்சே, சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவ் சாவர்க்கர், எல். வி. பரஞ்பி, பி. பி. தாக்கர்.ஹெட்கேவார் எத்தகையவர்? அவர் நூல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி அந்தக் காலத்திலேயே மராத்தியில் பிரசுரங்கள் வந்துள்ளன. அவற்றை மேற்கோள் காட்டுகிறார் நூரானி. நாக்பூரில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை அவர் வெறுத்தது, அவர்களை “யவன பாம்புகள்” என அழைத்தது, அவர்களை எதிர்க்கவே தொண்டர் படை ஒன்றை உருவாக்க முனைந்தது போன்ற விபரங்களைத் தந்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2018ல்  ஹெட்கேவாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி “இந்தியத் தாயின் ஒரு மகத்தான புதல்வர்” என்று வருகை ஏட்டில் எழுதினார். அதையொட்டி ஹெட்கேவார் பற்றிய வரலாற்றாளர்களின் பதிவுகள் வெளியாயின. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த “டாக்டர் ஹெட்கேவார், யுக புருஷர்” எனும் வாழ்க்கை வரலாறு நூலை மேற்கோள் காட்டியது தி கேரவான் ஏடு(10-6-2018). “அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இரண்டாவதாகத்தான் இந்தியர்கள்” எனும் முடிவுக்கு வந்தார் ஹெட்கேவார் என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீது வீணான சந்தேகத்தை எழுப்பி, அப்படியாக அவர்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வேலையைச் செய்ய முடிவெடுத்தார்.மற்றொரு வரலாற்றாளர் பிரளாய் கனுங்காவின் கருத்துப்படி நாக்பூரில் 1923ல் வெடித்த இந்து -முஸ்லிம் கலவரமே ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ்சை துவக்குவதற்கான அடிப்படை. கலவரத்திற்கான காரணங்களில் முக்கியமானது மசூதிகள் முன்பாக மத ஊர்வலங்கள் நடத்த இந்துக்களுக்கான உரிமை பற்றியது. எச். வி. சேஷாத்திரி பதிப்பித்த நூல் கூறியது “முஸ்லிம்கள் மீதான பயத்தின் காரணமாக இந்துக்கள் மசூதிகளின் முன்பு மேளதாளங்களை தவிர்த்தனர். அப்போது டாக்டர்ஜியே (ஹெட்கேவார்) மேளதாளங்களை அடித்து தூங்கிக்கிடந்த இந்துக்களின் வீரத்தை எழுப்பினார்”.
ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியர்கள் அனைவரது உரிமைகளையும் பறித்திருந்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடாமல் முஸ்லிம்களை எதிர்த்துக் கிளம்பியவர்தான் ஹெட்கேவார். மிகப் பெரிய வீரம் எதுவென்றால் 
மசூதிகள் முன்பு மேளதாளம் அடிப்பதாம்!  அன்று முதல் இன்று வரை சங் பரிவாரத்தின் ஜோலி இதுதான்! மக்களின் மெய்யான எதிரிகளுக்கு எதிராக இந்துக்கள் திரண்டுவிடாதபடி பொய்யான எதிரிகளைக் கட்டமைப்பதுதான் அவர்களின் தந்திரம்.இத்தகைய நோக்கத்திற்காக இத்தகையவர் உருவாக்கிய ஆர்எஸ்எஸ் 1926 லேயே ஷாகாஎனப்பட்ட தினசரி உடற்பயிற்சியைத் துவக்கியது. இது பற்றி வரலாற்றாளர் சேட்டன் பட் கூறுவது: “ஆர்எஸ்எஸ்சின் ஷாகாக்களில் தண்டா (லத்தியுடனான ஆயுத பயிற்சி), கட்கா (வாள் பயிற்சி),வெட்ரசர்மா (கம்புச் சண்டை), யோக்சேப் (லெஜிம் பயிற்சி) ஆகியவை உண்டு”. இதுவெல்லாம் எதற்கு? எதிரிகளை வீழ்த்தத்தான். எதிரிகள் யார்? நிச்சயம் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் இல்லை. எதிரிகள் யார் என்பதை ஹெட்கேவார் தனது பேச்சாலும் செயலாலும் தெளிவாக உணர்த்தியிருந்தார்.
இப்படிப்பட்டவருக்காக ஆர்எஸ்எஸ்சில் “சர்சங்சலக்” எனும் பதவி 1929ல் உருவாக்கப் பட்டது. அதாவது உயர் தலைவர். “பரம பூஜனிய”, பெரிதும் பூஜிக்கத் தக்கவர் என அழைக்கப்பட்ட இவரின் உத்தரவுப்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவரது சொல்லே அந்த அமைப்பின் வேதம். இது ஆயுட்காலப் பதவி. இவர்தான் அடுத்த சர்சங்சலக்கை நியமிப்பார் தனது இறுதி காலத்தில். தேர்தல் எல்லாம் கிடையாது.
ஒரு கேள்வி இருக்கிறது. இந்துக்களுக்காக என்று இந்து மகாசபை இருக்கும் போது அவர்களுக்காக எதற்கு இன்னொரு அமைப்பு? இதற்கு நூரானி தரும் பதில் ஆர்எஸ்எஸ்சின் சாரத்தை விண்டுரைக்கிறது. அது: “இந்த இரண்டுக்கும் இடையே இரண்டு வேறுபாடுகள் உண்டு. மகாசபையின் தலைவர்கள் அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட்டார்கள். மாளவியாவும் லஜபதிராயும் மத்திய சட்டசபை உறுப்பினர்கள். இரண்டாவதாக அவர்கள் வன்முறையை ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் அப்படி அல்ல. அது தேர்தல் அரசியலை ஏற்கவில்லை, அதேநேரத்தில் வன்முறையை அமைப்புரீதியாகப் பயன்படுத்துவதை ஏற்றது. நாக்பூரில் நடந்த வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பிறகு உருவான ஆர்எஸ்எஸ்சின் நோக்கம் ‘எதிரியை வீழ்த்துவதுதான்’. லத்தி என்பது ஆபரணம் அல்ல, ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு பகுதி. ஹெட்கேவாரின் வழிகாட்டியாகிய மூஞ்சேயின் ஆலோசனைப்படி அது ஏந்தப்பட்டது. தசரா விழாவின் போது ஆயதங்கள் வணங்கப் பட்டன, ராணுவ இசை எழுப்பப்பட்டது. சுயம் சேவக்குகள் பலரும்கூடி லத்தி, வாள் மற்றும் இதர பல பயிற்சிகளில் தங்களுக்குள்ள திறமையைக் காட்டுவார்கள்”.
இரண்டின் நோக்கமும் இந்துத்துவாதான். அதற்காக அரசியல் களத்தில் வேலை பார்க்க இந்துமகாசபையும், சிவில் தளத்தில் இயங்க ஆர்எஸ்எஸ்சும் எழுந்தன எனப்படுகிறது. ஆனால் சிவில் தள இயக்கம் என்பது ஏதோ சாந்தரூபமானது அல்ல, அது அதிதீவிரமானது. அதற்காக தினசரி பயிற்சிகள் தரப்பட்டன சிந்தனைரீதியாகவும், உடல்ரீதியாகவும். எந்தக் காலத்தில் இது ஆரம்பமானது? பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழத் துவங்கிய காலத்தில்! இதனது நோக்கம் அந்த தேசிய இயக்கத்திலிருந்து இந்துக்களை பிரித்தெடுத்து திசைதிருப்புவது.எனவே நூரானி முத்தாய்ப்பாய்க் கூறினார்: “நாட்டிலிருந்து இந்திய தேசியத்தை விரட்டும் இந்து தேசியத்தின் ஆயுதம் தாங்கிய, தீவிரவாத அமைப்பாகவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது”. இந்திய தேசியமா? இந்து தேசியமா? என அன்று எழுந்த கேள்வி இன்று வரை தொடர்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ்சின் கைங்கரியமே!
நன்றி: தீக்கதிர், 03-06-2020


ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-1 இந்துத்துவா பிதாமகன் ஆங்கிலேயரின் ஓய்வூதியர்!




பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ. ஜி. நூரானி “தி ஆர்.எஸ்.எஸ்.” எனும்  ஒரு நூல் எழுதியிருக்கிறார். “லெப்ட்வேர்ட்”  பதிப்பகம் வெளியிட்டுள்ள இதில் 25 அத்தியாயங்க ளும், 16 பின்இணைப்புகளும் உள்ளன. புத்த கத்தை புரட்டியவுடன் வருவது அண்ணல் அம்பேத்க ரின் இந்த அழியாத சாட்சியம்: “இந்து ராஜ் என்பது  வந்தால் அது இந்த நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்.  எனவே அதை எப்பாடுபட்டேனும் தடுத்தாக வேண்டும்”. (“பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரி வினை”, 1946) இந்தப் புத்தகத்தை முன்வைத்து நான் தீக்கதிர் முகநூல் வழி ஆற்றிய தொடர் சொற்பொழிவுதான் இங்கே எழுத்து வடிவம் பெறுகிறது.
இந்த நூலில் உள்ள முகவுரையில் ஆர்எஸ்எஸ்  தலைவர் கோல்வால்கருக்கு 1948 நவம்பர் 10ல் பிரத மர் நேரு எழுதிய இந்த வாக்கியங்கள் உள்ளன: “ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ள நோக்கங்களுக்கும் அதன் உண்மையான நோக்கங்கள் மற்றும் அதனு டன் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பல வடிவங்க ளிலும் வழிகளிலும் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிய வில்லை. அதன் உண்மையான நோக்கங்கள்  இந்திய நாடாளுமன்றத்தின் முடிவுகளுக்கும், முன்மொழியப்படும் இந்திய அரசியல்சாசனத்தின் சரத்துகளுக்கும் முற்றிலும் எதிரானவையாகத் தோன்றுகின்றன. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி அதன் நடவடிக்கைகள் தேசவிரோத மானவை, பல நேரங்களில் சதிகாரத்தனமானவை, வன்முறையானவை”.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆர்எஸ்எஸ் பற்றி தந்த மதிப்பீடுஇது. இதன் அர்த்தம் அதன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்த மில்லை, அதன் அறிவிப்புகளுக்கும் அதனது ஆட்களின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது. உள்ளும் புறமும் ஒன்றாய் இருக்கும் அமைப்பு அல்ல ஆர்எஸ்எஸ். அதனால்தான் அதை மர்மதேசம் என்கிறேன். அதனது வர லாறே அதற்கு ஆதாரமாக இருக்கிறது. நூரானி  பல விபரங்களைத் தந்திருக்கிறார். நானும் கூடுத லாகத் தந்து அதை நிரூபிக்க முனைகிறேன். நூரானி நூலின் முன்னுரை ஒரு கவிதை யோடு துவங்குகிறது. அது: “தோட்டத்திற்கு ரத்தம் தேவைப்பட்டபோது எங்களது கழுத்துக்களே முதலில் அறுக்கப்பட்டன. ஆனாலும் தோட்டத்தில்  இருப்பவர்கள் சொல்கிறார்கள் தோட்டம் அவர்களு டையது, எங்களது அல்ல”. இந்திய முஸ்லிம்க ளின் இன்றைய மனநிலையை இது தெரிவிக்கி றது என்கிறார். அது நிஜமே. இந்திய சுதந்தி ரத்திற்காக ரத்தம் சிந்திய முதல் தியாகிகள் முஸ்லிம்களே, ஆனால் இன்று அவர்களை அந்நி யர்கள் போல பாவிக்கிற கொடுமை நடக்கிறது.
முஸ்லிம்களின் தியாகத்திற்கு முதல் சாட்சி யாக சாவர்க்கரை கொண்டுவந்து நிறுத்துகிறார் நூரானி. “இந்திய சுதந்திரப் போர்-1857” என்று  இந்திய சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி ஒரு  நூலை 1909ல் எழுதினார் சாவர்க்கர். அதில்  அவர் கூறினார்: “அந்த சிப்பாய்களுக்கு மௌல்வி கள் போதித்தது, பிராமண பண்டிதர்கள் ஆசிர்வதித்தது, தில்லியின் மசூதிகளிலிருந்தும் காசியின் கோயில்களிலிருந்தும் சொர்க்கத்திற்குச்  சென்ற பிரார்த்தனைகள் என்ன? அவை சுவதர்மம், சுயராஜ்யம் எனும் மகத்தான கோட்பாடு கள். இந்திய சுதந்திரத்திற்கு வந்துள்ளஆபத்தை முதலில் உணர்ந்தவர்கள் புனேயின் நானா பர்னாவி சும் மைசூரின் ஹைதர் அலியும்”.
ஹைதர் அலி என்றால் அவரது வீரஞ்செறிந்த புதல்வர் திப்பு சுல்தானும். அவர்கள்தாம் 1760-1800ல் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி யாருக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இதை  இப்படியாக அங்கீகரித்தார் சாவர்க்கர். அவர்க ளது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் ஆங்கிலேயரை எதிர்த்த சிப்பாய்களின் கிளர்ச்சி  1857ல் ஏற்பட்டது என்றார். அந்தப் போராட்டத்தின்  மைய அச்சாக இருந்தது தில்லியின் கடைசி முகலாய மன்னராகிய பகதூர்ஷா ஜாபர். 82 வயதான  அவருக்கு அதிகாரத்தை மீட்டுத் தருவது என்ற பெயரில்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் அன்று இணைந்து போராடினார்கள். அந்த முயற்சி  தோல்வியுற்றதும், பகதூர் ஷாவைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் அந்தத் தள்ளாத வயதில்  அவரை பர்மாவிற்கு நாடு கடத்தினார்கள். 1862ல் அங்கேயே வாடி வதங்கி மாண்டுபோனார். அங்கு  விஜயம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் அவரது  சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இப்படி ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போரில் துவக்கத்திலிருந்தே முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது. இதை சாவர்க்கரும் அங்கீகரித்திருந்தார் என்பது மிக முக்கியமான ஆதாரம், இது சங் பரிவாரத்திற்கு சமர்ப்பணம். கொடுமை என்னவென்றால் இப்படி சிப்பாய்கள் கிளர்ச்சியை வியந்து எழுதிய சாவர்க்கர் விரைவி லேயே ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்தது! நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் கொலை  வழக்கில் 1910ல் கைது செய்யப்பட்ட சாவர்க்கருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1911ல் அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஒன்றரை மாதத்திலேயே மன்னிப்பு கோரி  ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுத  ஆரம்பித்தார். ஒன்பது ஆண்டுகளில் ஆறு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்பினார். அந்தமான்  சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்ட வர் 1924ல் விடுவிக்கப்பட்டார். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனும் நிபந்த னையின் பேரில்.
இதனினும் ஓர் உச்சம் ஆய்வாளர் நிரஞ்சன் தக்லே சொல்வதாக பிபிசிநியூஸ் தமிழ் (28-5-2020)  தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்: “காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு தங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக  வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம்  ரூ .60 வழங்கினார்கள். மாத ஓய்வூதியம் கொடுக்கும்  அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்னை சேவை  செய்தார், ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப்பட்ட ஓய்வூதியம் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது”.
ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர் களைத் தனது எதிரியாக பாவித்த சாவர்க்கர் சிறை  வாழ்வின்போது காந்தி, காங்கிரஸ், முஸ்லிம்  களைத் தனது எதிரியாக பாவிக்கத் தொடங்கினார். அதனால்தான் வைஸ்ராயோடு அப்படியாகக் கையெழுத்துப் போட்டு ஓய்வூதியதாரர் ஆனார். இந்த மாற்றம் சித்தாந்தரீதியானதும்கூட. 1923ல் சிறையிலிருந்து  அவர் எழுதிய “இந்துத்துவா-யார் இந்து?” எனும் நூலில் அந்த மாற்றம் துல்லியமாக வெளிப்பட்டது. 1857 சிப்பாய்கள் கிளர்ச்சியை இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் வெளிப்பாடாகப் பார்த்து நூல் எழுதியவர் இப்போது இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் எனச் சொன்னார், பிற மதத்தவரை அந்நியராகச் சித்தரித்தார்.
இந்த வகுப்புவாத அரசியலுக்கு அவர் செய்த நாமகரணமே “இந்துத்துவா”. எனினும் ஒரு விஷயத்தை அந்த நூலில் ஒப்புக்கொண்டார். அது: “இந்து மதம் எனப் பொதுப் படையாகச் சொல்லப்படுவதும் இந்துத்துவாவும் ஒன்று அல்ல”. சங் பரிவாரத்தினர் தங்களது சித்தாந்த பிதாமகனின் இந்தப் பிரகடனத்தை மனதில் வாங்க வேண்டும். இது தெரியாமல் இந்து மதமும்  இந்துத்துவாவும் ஒன்று என்று பேசிக் கொண்டி ருக்கிறார்கள்! ஒரு சுவையான செய்தியை நூரானி தனது நூலில் சொல்லியிருக்கிறார். “சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி” என்பது அது. ஆனால் மேல் விபரங்கள் இல்லை. ஆய்வாளர்கள் இதற்குள் மேலும் செல்வது பயனுள்ளதாக இருக்கும். நாத்தி கர் என்றாலே கண்களை உருட்டி, மீசையை முறுக்கும் சங் பரிவாரத்திற்கு அவர்களது பிதா மகனே ஒரு நாத்திகர்தான் என்பது செரிக்க முடி யாத சமாச்சாரமாக இருக்கும்.
நூரானி நூலின் முன்னுரை நேரு பற்றிய சில  செய்திகளோடு முடிகிறது. “இந்து வகுப்பு வாதம்  என்பது  ஃபாசிசத்தின் இந்திய வடிவம்” என்றாராம்  அவர். நேரு பிரதமராக இருந்த காலத்தில் வெள்ளி தோறும் அதிகாரிகளைச் சந்திப்பாராம். அதற்கான  ஏற்பாட்டைச் செய்யும் வெளியுறவுச் செயலாளர் யெஷ்டி குண்டேவியா ஒரு சந்திப்பை விவரித்தி ருக்கிறார் தனது நூலில். அதிலிருந்து இது: “குண்டேவியா: ஐயா, நாடு சுதந்திரம் பெற்றதி லிருந்து காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. அதி காரிகளாகிய நாங்களும் அதன் கொள்கை களையே அமுல்படுத்தி வருகிறோம். நாளை கம்யூ னிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்னாகும்? கேரளா வில் கம்யூனிஸ்டு அரசு உள்ளது. நாளை மத்தியி லும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளின் நிலை என்னாகும்?
பிரதமர் நேரு: மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஏன் நினைக்கி றீர்கள்? (சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு  நிறுத்தி நிதானமாகச் சொன்னார்) குறித்துக் கொள்ளுங்கள், இந்தியாவுக்கான அபாயம் கம்யூ னிசம் அல்ல. மாறாக, இந்து வலதுசாரி வகுப்பு வாதம்”. தீர்க்கதரிசனம் என்பது இதுதான். இன்று  என்ன நடக்கும் என்பதை அன்றே சொல்லியிருக்கி றார். இந்தியாவின் சமூகவியலை நன்கு உள்வாங்கி யிருந்ததால்தான் அவரால் இப்படியொரு சரியான  கணிப்பை செய்ய முடிந்திருக்கிறது. நேருவை ஏன்  சங் பரிவாரம் நஞ்சாய் வெறுக்கிறது என்பதும் புரி படுகிறது.
நன்றி: தீக்கதிர், 02-06-2020


Wednesday, June 10, 2020

ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை...

ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை...

தந்தை பெரியார் பற்றி வழக்கம் போல அவதூறு அள்ளிவிட்ட ரங்கராஜ் (பாண்டே) வீடியோ பார்த்தேன்.அந்த 20 நிமிட வீடியோவில் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் பற்றி கேள்வி கேட்பதாக சொல்லிவிட்டு, வாட்ஸாப்ப் ல வரும் மீம்ஸ்ஸை காட்டி இது பெரியார் 1925 ல் சொன்னார். அது இடதுசாரி இணையதளமான அவர்களின் கீற்று இணையத்தில் இருக்கு. இது 'விடுதலை வெப்சைட்ல' இருக்கு. இப்போ கூட .in ல இருந்து வெப்சைட் மாத்திட்டாங்க ன்னு நினைக்கிறேன்.  இப்படி பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்களை கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று அந்த வீடியோவில் எப்பொழுதும் போல சாராயம் குடித்த பைத்தியகாரனுக்கு தேள் கொட்டியதை போல உளறி கொட்டியிருக்கிறார். இறுதியில் அவர் முடிவு சொல்ல மாட்டாராம். அந்த 20 நிமிட வீடியோ கருமத்தை கேட்ட  நம்மிடமே முடிவு பண்ணிக்க சொல்கிறார். என்ன முடிவுமாம்? பெரியார் பெண்ணுரிமைக்கு உண்மையாவே போராடினாரா ன்னு நாம் முடிவு பண்ணிக்கணுமாம்.

அந்த வீடியோ தொடங்கும்பொழுதே பாரதியாரின் பெண்ணுரிமை பாடலை ஒன்றை பார்ப்போம் நண்பர்களே ன்னு பாரதியார் கவிதை ஒன்றை ஒட்டிவிடுகிறார். பிறகுதான் உளற ஆரம்பிக்கிறார். இவர்கள் குப்பை போன்று மனுதர்மம் எழுதி பெண்களை இழிவுபடுத்தி வைத்திருப்பார்களாம். அதையெல்லாம் பெரியார் தொட்டு கேள்வி கேட்டு விமர்சனம் செய்தால்...அப்படியே பெரியாருக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார்கள். சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யதால் இறங்குபவர் உடலிலும் அது ஒட்டத்தான் செய்யும். அப்படி சாக்கடை போன்று மனுதர்ம எழுதி வைத்துக்கொண்டு, சனாதன தர்மம் ன்னு பெண்ணடிமை போதித்தார்கள்.போதித்து கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கேள்வி கேட்டு இந்து பார்ப்பனிய மத பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெண்ணுரிமை கருத்துக்களிளிருந்து  மூலைக்கு மூலை நறுக்கி எடுத்து, பெரியார் பெண்களை இப்படி சொல்லியிருக்கிறார், திருமணம் கிரிமினல் என்று சொல்லி இருக்கிறார் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து காட்டி திரிபுவாதம் செய்வது அறிவு நாணயமா மிஸ்டர் ரங்கராஜ் பாண்டே? பெரியார் சில இடங்களில் கடும் சொற்களை கையாண்டிருக்கலாம் அதற்கு தேவையும் இருந்திருக்கும். ஆனால் அதற்கு  காரணம் உன் பார்ப்பனிய மதத்திலிருக்கும் பித்தலாட்ட கருத்துக்கள். அதை வசதியாக மறைப்பது ஏன்?

இறுதியில் ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளார், நாங்க எழுதிய மனுதர்மம் என்றைக்கோ எழுதியது. அதை இன்றும் எடுத்து காட்டி பேசுவது சரியா ன்னு..மனுதர்மம் கேவலமானது ன்னு வெட்கம்விட்டு ஒப்புக்கொண்டுள்ளதற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆனால் இன்று நடைமுறையில் இல்லை என்பது உண்மையா? சரி நீங்களாவா சீர்திருத்தம் பண்ணீங்க? உடன்கட்டை ஏறுவதில் தொடங்கி, இன்று பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பது வரை எல்லாம் உங்களை எதிர்த்து போராடி போராடி பெற்ற உரிமைகள். ஏதோ நீங்களா விட்டு விட்டது போன்று பம்முறீயே பாண்டே வெட்கமா இல்ல? இன்றைக்கும் சனாதன தர்மம், மனு தர்மமம் புனிதமென்று உங்கள் வீட்டு பெண்களையே சொல்ல வைக்கிறீர்களே அது என்னவாம்? ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் என்கிற பார்ப்பன அம்மையார் இதை ஒரு வேலையாகவே செய்துகொண்டிருக்கிறார். எங்கள் சனாதன தர்மம், மனுதர்மம் புனிதம் என்றே பதிவிடுகிறார். மனுதர்மம் நடைமுறையில் இல்லை என்றால் இதெல்லாம் என்ன? அடுத்த வீடியோவில் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவும்.

சரி, பாண்டே உளறினார் என்றால், இப்படிபட்ட  கேவலமான உளறலை சுமந் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஷேர் பண்ணி குஷியோடு சொல்கிறார். நல்ல விமர்சனமாம். பெரியாரிஸ்ட் யாரவது பதில் சொல்றீங்களா ன்னு அப்படியே குதுகூலமடைகிறார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது இவர்கள் அறிவு எவ்வளவு கேவலமா அற்பத்தனமா இருக்குன்னு நினைக்க தோணுது. ஆனால் வெளியில் அறிவுஜீவி மாறி திரிகிறார்கள்.

சரி, இறுதியில் பெண்களை இழிவுபடுத்தும் சனாதன இந்து மத மனுதர்ம பிட்டுகள் கொஞ்சம் உங்க பார்வைக்கு....

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்

மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

(மனு தர்ம விளக்கம் ஆதாரம் நூல்: "ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
ஆசிரியர்: இரயாகரன் பி. வெளியீட்டாளர்: கீழைக்காற்று வெளியீட்டகம்)

இது போன்ற ஏராளமான மனு தர்ம குப்பைகளை தான் தந்தை பெரியார் கேள்விக்கு உட்படுத்தினார். அவற்றிக்கு எதிராக பெண்ணுரிமை கருத்துக்களை முன்வைத்தார். இது மகாகவி பாரதி வழியில் பெண்களை கும்மியடிக்கவும், கோலம் போடவும் தயார் செய்யும் பாண்டேக்களுக்கு இன்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள். கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் மறுபடி நம் தலையில் கட்டிவிடுவார்கள். எச்சரிக்கை.

'ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை' என்று போர்டு தொங்கவிடனும். அப்பொழுதுதான் சமூக வலைத்தளத்தில் உலா வரும் நம் இளைஞர்கள் எச்சரிக்கையா இருப்பார்கள்.



Saturday, June 04, 2016

மாலன் செய்கிற வாதம் மொக்கையானது

குஜராத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் பி.பி. படேல் உட்பட 36 பேர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டை நீதிபதி பி.பி. தேசாய் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார்.இது பற்றிய விவாதம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 3 ம் தேதி காலையில் நடைபெற்றது. கருத்து சொன்னவர் பிரபல எழுத்தாளர் மாலன் .

இந்தத் தீர்ப்பின் விவரங்களைச் சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 60 பேரில் 36 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்கிறார்.“நீதிமன்றம் என்ன செய்யும், சாட்சிகள் அடிப்படையில் தான் அது தீர்ப்பு சொல்ல முடியும். நமது நீதி முறை அப்படி இருக்கிறது.” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொன்னார் மாலன். ஆமாம் ஆமாம் என்று நெறியாளரும் தலையாட்டி ஆமோதித்துவிட்டார். அவரின் வயதுக்கு அதைத்தான் செய்ய முடியும். கடந்த கால அனுபவங்களை எடுத்துச்சொல்லி மாற்று வினா தொடுக்க இயலாத அளவுக்கு இளம் வயது நெறியாளருக்கு .ஆனால் ‘அனுபவசாலி’யான மாலனின் பதில் தான் சில சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது. நீதிமன்றங்கள் எப்போதுமே சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறதா?மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினார்கள். இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தை தனது நிலைக்கு ஏற்ப வியாக்கியானம் செய்தது. அதாவது மக்கள் அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்று சொல்வதால் எந்த வகையிலும் இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடு என்ற அளவைத் தாண்டக் கூடாது என்றது.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இடஒதுக்கீட்டிற்கு மட்டும் தான் பொருந்துமா? செல்வ வளத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்து அளித்துவிடுமாறு நீதிமன்றம் சொன்னதா? ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய நிலப் பகிர்வு மிகமிக முக்கியம் என்று மண்டல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதே! அதனை அரசு செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லையே ! மாறாக 50 விழுக்காடு அளவுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றதால் தமிழகத்தின் 69 விழுக்காடு ஒதுக்கீடு இப்போதும் தொங்கலில் தான் இருக்கிறது.

அப்படியென்றால் தேவைப்படும் போது நீதிமன்றம் சட்டத்தை வளைத்துக் கொண்டு வியாக்கியானம் அளிக்கும் என்பது விளங்குகிற தல்லவா?இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பைத் தமிழகம் சந்தித்தது.1968 ஆம் ஆண்டு கீழ வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கோர சம்பவம் தொடர்பான வழக்கில் நாகை விசாரணை நீதிமன்றம் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரும் மற்ற குற்றவாளிகளும் மேல் முறையீடு செய்தனர். கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சொன்ன காரணம் என்ன தெரியுமா?“இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விசயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள் . முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்.”(நின்று கெடுத்த நீதி பக்கம் 435)நிலம் வைத்திருப்பவர்களும் கார் வைத்திருப்பவரும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டார்கள் என்று எந்த சட்டமாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குஜராத் படுகொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதையும் இந்தப் பின்னணியுடன் எண்ணிப்பார்ப்பதில் தவறு இல்லை.எனவே சட்டம், சாட்சிகள் இவை மட்டுமே நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் இயக்குகின்றன என்று மாலன் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிற வாதம் மொக்கையானது என்பது தெளிவு.`இயற்கை நீதி, சூழ்நிலை சாட்சியங்கள் என்பதும் கூட நீதிமன்ற மொழிகளில் உண்டு. இதையும் மாலன் மறந்து விட்டுத் தான் பேசுவார் அவரது ``சார்பு’’ அத்தகையது.

குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகள் படுகொலை வழக்கின் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடி மீது படிந்துள்ள கறை. ஏனென்றால் சம்பவம் நடந்த 2002 ல் அவர் தான் குஜராத் முதலமைச்சராக இருந்தார் என்று தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திரசச்சார் கூறியிருப்பதும் இந்த வழக்கில் குற்றச்சதிக்கான (120-பி) காரணங்களை விசாரணை அறிக்கையில் விரிவாகக் கூறியிருந்தேன். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டதற்குகாரணம் தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் கூறியிருப்பதும் இணைத்தே பார்க்க வேண்டியவை. மாலனின் பார்வைக் கோளாறு ஒதுக்கப்பட வேண்டியது.

-மயிலை பாலு

நன்றி: தீக்கதிர்,05-06-2016


பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்கு ஏது வாஸ்த்து சாஸ்த்திரம்?


ஞாயிறு சிறப்பு: படித்ததில் பிடித்த நூல் விமர்சனம்...வாய்ப்பிருந்தால் வாங்கி பயனடையவும்.

புத்தகத்தின் பெயர்: வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும்

‘வாஸ்து’ என்று சொல்லி கொஞ்சம் வசதிபடைத்த மக்களின் மனங்களில் பீதியையும், அச்சத்தையும் உருவாக்கிப் பணம் கரப்போர் உலவி வருகிறார்கள்.வசதியில்லாதவர்களுக்கு கொம்புகளும் கீற்றும்இருந்தால் போதும் குடிசையாக்கி எங்கேயும் வாழ்ந்து விடுவார்கள். அவர்கள் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை,பூஜையறை என்ற விதவிதமான வசதிகளை அறியாதவர்கள்.எனவே வாஸ்து என்பது நடுத்தர உயர்நடுத்தர, உயர்தர வருவாய்க் குடும்பங்களையே, பெரிதும் ஆட்டிப்படைக்கிறது. அனுபவிக்க அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்குத் தானே அச்சப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களுக்கு கெல்லாம் அறிவுரை மட்டும் கூறி நிறுத்தி விடாமல் வாஸ்து என்கிற பண்டைக் கால கட்டுமானமுறையில் உள்ள அறிவியல் அம்சங்களை நூலாசிரியர் எஸ்.ஏ.பெருமாள் எடுத்துக் காட்டுகளுடன் எடுத்துச் சொல்கிறார்.மின்சார வசதி கிடைத்த பின் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் கிணறு விசயத்தில் வாஸ்துக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.வாஸ்து மிரட்டல்காரர்கள் வீட்டோடு நின்றுவிடாமல் நாடாளுமன்றக் கட்டடம், மும்பை ரயில் நிலையம் போன்ற வற்றையும் விட்டுவைக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லி வாய்ப்பு கிடைத்தால் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் எடுத்துச் சொல்லி வாய்ப்பு எப்படிப் பரப்பி விடுகிறார்கள் என்பதை அங்கதச் சுவையோடு சொல்வது இந்தச் சிறுநூலின் சிறப்பம்சமாகும்.

ஆசிரியர்: எஸ்.ஏ.பெருமாள்
வெளியீடு: நியூசெஞ்சூரி புக்ஹவுஸ் (பி)லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,


சென்னை - 600 098 பக்:44, விலை ரூ. 30/-

நன்றி : தீக்கதிர்,05-06-2016


மோடி அளிப்பதாக உறுதி அளித்த நல்லாட்சி எங்கே?

ஆழம் நிறைந்த கருத்துகளை ஆவேசத்துடன் வெளிப்படுத்த இயன்ற அரசியல் வாதியும் பத்திரிகையாளரு மான அருண் ஷோரி அண்மையில் கரண் தாபருக்கு அளித்த நேர்காணல் உடனடியாக உலகெங்கும் ஒளிபரப்பப் பட்டது. அனைவராலும் பெரிதும் மதிக்கப் பட்ட இந்த அரசியல் விமர் சகர், கரண் தாபரின் கேள்விகளால் தூண்டுதல் பெற்று, பிரதமர் நரேந்திர மோடி பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியபோது அனல் கக்கினார் என்றே கூறவேண்டும்; தனது கருத்து களை வெளிப்படுத்தியபோது, வார்த்தை களை அறைகுறையாக மென்று விழுங்காமல், சற்றும் தயக்கம் இல்லால் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவரது பேச்சு ஒரே சீராக ஆற்றொழுக்கு போல அமைந்திருந்தது. நாட்டில் எப்படிப் பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய தனது கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரி வித்த அவரது நேர்காணல் காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது.
அவரது சொற்கள் மட்டுமல்ல; அவரது அங்க அசைவு களும் பெரும் அளவிலான மக்களின் கவனத்தையும், கருத்தையும் ஈர்ப்பதாக இருந்தன.  அது ஒரு நேர்காணலைப் போலவே இல்லை; துணிவு மிகுந்த மாவீரர் ஒருவரின் தீரம் மிகுந்த செயலைப் போலவே இருந்தது. தூண்டுதல் பெற்றவராக மட்டுமன்றி, தடுத்து  நிறுத்த இயலாதபடி ஒரு நாடக பாணியில் அந்த நேர்காணல் அமைந்திருந்தது.
அவரது கைகளும், விரல்களும் பல வளைவுகளையும், நிழல் களையும் உருவாக்கிக் காட்டின. மோடி அரசின் பல தவறான செயல்களைப் பற்றி அவர் விவரித்தபோது, அவரது கண்கள் மின்னல் அடித்து ஒளிர்ந்தன; அவரது உதடுகளில் குறும்புத்தனமான புன்னகை தவழ்ந்தது.

ஒரு பத்திரிகை ஆசிரியரும் நுண்ண றிவாளருமான அவரது நேர்மையான நடத்தைக்காக பலராலும் அஞ்சப்பட்டு, ஈர்க்கப்பட்டவர் அவர். நேர்மையும் நேசமும் கொண்ட ஒரு மாமனிதர் அவர். இந்தியா முன்னேற்றம் அடைந்து வளம் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பது பற்றியோ, பொதுவாழ்க்கையில் நிலவும் ஊழல் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பைப் பற்றியோ சந்தேகம் எழுப்புவதற்கு இதுவரை எவரும் துணிந்ததில்லை.
இம்முறையும் தனது கருத்தை வெளிப்படுத்த அவர் சற்றும் தயங்கவே இல்லை; தன்னால் குறை காணப்பட்ட எவரைப் பற்றியும் விமர்சனம் செய் யாமல் விட்டுவிடவுமில்லை. சிந்தனை யைத் தூண்டும் கூரிய நேர்காணல் ஒன்றை அவர் அளித்தார். குறிப்பாக, நீங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி எங்கே? என்று கேட்ட ஷோரி,
பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்போது மட்டும்தான் ஊழலுக்கு எதிரான எந்த ஒரு  நடவடிக்கையும் வெற்றி பெற இயலும் என்றும் கூறினார். இதற்கு லலித் மோடி போன்றவர்களின் பெயர்களை எடுத்துக் காட்டாகக் கூறினார். மேலும் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பு களின் அடிப்படையில்தான் ஊழல் புகார்களின் மீதான நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அதன் பின்னர்தான் நரேந்திர மோடியின் மீதான ஒட்டு மொத்த தொடர் தாக்குதல் வந்தது. மோடி ஆட்சி செய்யும் பாணியைப் பற்றி கண்டனம் தெரிவித்த ஷோரி, மோடியின் ஆட்சியில் எவரையும் கலந்தாலோசிப்பது என்பதே இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
தந்திரமும் வஞ்சனையும் கொண்டவர் என்று மோடியைப் பற்றி வர்ணித்த அவர்,  தான் செய்த தவறுகளுக்கு சற் றுமே வருந்தாதவர்தான் மோடி என்று குற்றம் சாட்டினார். வேண்டு மென்றே இந்திய மக்களிடையே பிளவை மோடி ஏற்படுத்துவதாக கூறினார். துடைத் தெறியப் பயன்படுத்தப்படும் காகித கைக்குட்டைகளைப் போலவே மக் களைக் கருதி மோடி நடத்துவதாக ஷோரி கூறுகிறார்.
ஒவ்வொருவருட னும் மோடி குத்துச் சண்டைப் போட்டி நடத்துவதாக அவர் கூறு கிறார். தன்னால் வெற்றி பெற முடியும் என்பதை ஒவ்வொரு இரவும் தனக்குத்தானே உறுதி செய்து கொள்ள முனையும் காதல் மன்னன் மோடி என்று மிகத் துணிவுடன் ஷோரி கிண்டல் செய்தார். ஒரு தனி நபர் ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சிக்கு எந்த வித கட்டுப் பாடோ, சமன்பாடோ கிடையாது என் றும் கூறினார். தனது கருத்தை ஏற்றுக் கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் கூறுவதைத்தான், அதுவும் அவர் கேட்க விரும்புவதைக் கூறுபவர்களது பேச்சை மட்டும்தான் மோடி கேட்பதாக ஷோரி கூறுகிறார்.

மோடியின் ஆட்சியை ஷோரி கடுமையாக விமர்சித்திருந்தது, மிகத் துணிவுடனும், வெளிப்படையாகவும்,  எத்தகைய முக்கியமான நம்பிக்கை களோ,  மதிப்பீடுகளோ பின்பற்றப்பட வில்லை. அவர்களது ஒரே நோக்கம் அடுத்த தேர்தலில் எப்படியாவது, என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்று கூறி யதே ஆகும். அதைப் பற்றி மேலும் விவரிக்கும்படி கேட்கப்பட்டபோது,
இதற்கு முன் எப்போதுமே எவருமே கூறியிராத கருத்தை மிகுந்த துணிவுடன் கூறி, இதற்கும் மேலான முறையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும்,  மக்களின் அன்றாட நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும், வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிடும், மதத்தின் அடிப்படையில் மேலும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகள்  போன்ற ஆபத்துகள் எதிர்காலத்தில் நிகழ உள்ளன என்று மக்களை அவர் எச்சரித்தார்.

மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட  பசுபாதுகாப்பு என்ற ஏமாற்று செயல்திட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார். பசுபாதுகாப்பு திட்டம் எதிர்பார்த்த அளவில் பயன்தரவில்லை என்பதே இதன் காரணம் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்களுக்கு சங்கடம் அளிக்கும் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டு எழுப்புபவர்களின் குரல்வளை நெறிக் கப்படும்.
பிரதமர் மோடி இந்தியாவுக்கு ஏற்ற நல்ல பிரதமர் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்களா என்று தாபர் கேட்டபோது, இந்தியா இப்போது ஆபத்து நிறைந்த வழியில், திசையில் நடத்திச் செல்லப்படுகிறது என்று ஷோரி பதிலளித்து, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் எதிர்காலம் இல்லை என்ற எதிர் மறை எண்ணத் துடன் தனது நேர்காணலை  நிறைவு செய்தார். இந்த ஒளிவு மறைவு அற்ற நேர்காணலில், பல முக்கியமான செய்திகள் முதன் முதலாக இடம் பெற்றுள்ளன. என்றாலும், தனக்கு ஏற்பட்ட  தனிப்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகத்தான் ஷோரி இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று காரணம் கற்பிக்க முயலும் சந்தர்ப்ப வாதிகளும் இருக்கவே செய்வர்.
ஆனால் இதில் உள்ள உண்மை என்ன வென்றால்,  ஆற்றல் மிகுந்த தடை களை உடைத்தெறிந்து விட்டு உள்ளே நுழைந்து, தான் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்வதில் ஷோரி வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான். அவரிடமிருந்து வெடித்து வெளிவந் துள்ளவை எல்லாம், ஏமாற்றம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் புலம்பல் அல்ல. அவருக்கு நிதி அமைச்சர் பதவி அளிக்காத காரணத்தால்தான்  மோடி மீது ஷோரி குறை கூறுகிறார் என்று சில சில்லறை விமர்சகர்கள் கூறவும் கூடும்.  ஆனால் அவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.
ஷோரி அமைச்சர் பதவியை விரும் பியிருக்கவும் கூடும்; அது கிடைக்க வில்லை என்று ஏமாற்றம் அடைந்து வருந்தியும் இருக்கலாம்; அவர் தொடர்ந்து கோபமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் கூறியதன் பின்புலத்தில் உள்ள கவலையை எவராலாவது மறுக்க முடியுமா? மக்கள் எதையெல்லாம் உணர்கிறார்களோ, எதையெல்லாம் அனுபவிக்கிறார்களோ அவற்றைத்தான் அவர் கூறியிருக்கிறார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கான ஒரு சீரான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறுவதை எவராலாவது மறுக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இயலுமா?
தனது மனதில் உள்ளதையெல்லாம் அருண்ஷோரி கொட்டித் தீர்த்து விட்டார். அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேருமா என்பது அய்யத்திற் கிடமான கேள்வியாகும். அவர் ஒரு  மூத்தகுடிமகன்;  அவர் உடலால் மெலிந்து தளர்ந்துள்ளவர்.  நோயாளி யான மனைவியையும், மாற்றுத் திறனாளியாக உள்ள ஒரு மகனையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் அவர். தனது மனதைத் திறந்து பேசியதற்காக அவருக்கு என்ன தீங்கு அவர்களால் செய்துவிட முடியும்? எதுவுமே செய்யமுடியாது.
வரித்துறை யினரால் தொல்லைப் படுத்தப்பட இயன்ற அளவுக்கான சொத்தோ, வருமானமோ அவருக்கு இல்லை. அவரது கடந்த காலத்தைப் பற்றி தோண்டி எடுக்க மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு முயற்சியும், காலத்தை வீணாக்கக் கூடிய  வீண் முயற்சியே. போராட்டக்காரர் களாலும் பேரணிகளினாலும் ஷோரியைப் போன்ற மக்களை அச்சுறுத்த முடியாது. அவரது வாழ்க்கையில் இதைப் போன்றவைகளையும், இன்னமும் அதிகமானவை களையும் கூட அவர் பார்த்திருக்கிறார்.
இதில் உள்ள விஷயம் என்ன வென்றால், நம்மால் அருண் ஷோரி யையோ அவரது இந்த நேர்காண லையோ அலட்சியப்படுத்தி விட முடியாது என்பதுதான்.  மோடியாலும் அலட்சியப் படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அவருக்கு சங்கடம் அளிக்கும், ஆனாலும் அவரால் எதிர்கொண்டே ஆக வேண்டிய  உண்மைகள் ஆகும்.  அதைத்தான் நாம் இங்கே, இப்போதே செய்கிறோம். இவை ஏதோ கசப்புணர்வு கொண்ட,  ஏமாற்றத்தால் கோபமடைந்துள்ள ஒரு கிழவர், தனது கோபத்தை வெளிப் படுத்த அரசின் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை, தனது சுயவிளம்பரத் துக்காக கூறுபவை அல்ல.
அவர் அளித்துள்ள  பல எச்சரிக்கைகள் பற்றியும்,  அவரது நெஞ்சார்ந்த அறிவுரைகள் பற்றியும்  நாம் நெருங்கிய கவனம் செலுத்தத் தவறினோமானால், நமக்கு நாமே பெருந்தீங்கு இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம். ஷோரி கவலை அடைந்துள்ள ஒரு மனிதராகும். அவரைப் போலவே நாமும் கவலைப் படுபவர்களாக இருக்க வேண்டும். அவர் நமக்கு எச்சரிக்கை அளிக்கும்போது, அதனை நாம் கவனிக்க வேண்டும்.
ஷோரியின் சொற்களைக் கேட்காமல் முதுகைத் திருப்பிக் கொண்டு நாம் செல்வோமானால்,  அதற்கு நாம் மிக அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செய்வது நம்மால் இய லாததும், தேவையற்றதும் ஆகும். மோடி யாலும் கூட அதனை கவனிக்காமல் புறக்கணித்துவிட முடியாது.
நன்றி : டெக்கான் கிரானிகிள் 14-05-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Source: http://www.viduthalai.in/page2/123455.html


மோ(ச)டியின் “திருவிளையாடல்!”





இரண்டாண்டு சாதனையோ சாதனை! ஆட்சியைப் பிடிக்க அன்று ஆட்சியை நிலைநிறுத்த இன்று மோ(ச)டியின் “திருவிளையாடல்!”

போட்டோஷாப்  1
நவம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் வந்த போது அதை பார்வையிட ஹெலிகாப் டரில் வந்த மோடி தனது சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டி ருந்தார். பொதுவாக விமா னம் மற்றும் ஹெலிகாப் டரின் ஜன்னல் வழியாக எடுக்கப்படும் படங்கள் மங்கலாக இருக்கும். ஆனால் பிரதமர் அலுவல கம்  ஜன்னல் வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை பார்வையிடுவது போல் போலியான படத்தை வெளியிட்டது.


போட்டோஷாப் 2 
ஈழத்தில் போரால் பாதிக் கப்பட்ட தமிழ்க் குடும்பம் ஒன்றை அவுட்லுக் பத்திரிகை அட்டைப் படமாக வெளி யிட்டது, அதை வைத்துக் கொண்டு கேரளத்தில் ஊட்டச் சத்து குறைவினால் குழந்தை கள் பாதிக்கப்படுகின்றனர் என்று போட்டோஷாப் மூலம் மாற்றங்கள் செய்து காண்பித் தார் பிஜேபி தலைவர் அமித்ஷா. இவ்விவகாரம் தொடர்பாக உண்மை வெளிவந்த பிறகு அவுட் லுக் பத்திரிகை மீது பழியைப் போட்டுவிட்டு தங்கள் மீது தவறு இல்லை என்று விளக்கம் கூறினார்.

போட்டோஷாப் 3
2014- மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும் போது மோடியின் தேர் தல் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவ ரது சகாக்களும் ஆர்வத் துடன் பார்ப்பது போன்ற ஒரு படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி யானது. ஆனால் அந்தப் படம் பாகிஸ்தான் அப்டா பாத்தில் ஒசாமா பின்லே டனை பிடிக்க நடந்த ஆபரேசன் ஜொரோமா நேரடி சம்பவங்களை கண்காணிக்கும் படமா கும்.  - அதை ‘உல்டா’ செய்து இப்படி வெளியிட் டுள்ளனர்.

போட்டோஷாப் 6
பாஜகவின் இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முதல் அமைச்சராகவிருந்த  குஜராத் அகமதாபாத்தில் புல்லட் ரெயில் ஓடுகிறது என்று ஒருபடம் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் புல்லட் ரெயிலே இல்லை என்று சமூக வளைதளத்தில் பலர் கிண்டல் அடிக்க ஆரம்பித்ததும், யாரோ மோடி அனுதாபி மிகைப்படுத்தி இப்படத்தை வெளியிட்டு விட்டார்; என்றும் வேலைப் பளுவில் கவனிக்காமல் அந்தப் படத்தை வெப்சைட்டில் வெளியிட்டு விட்டோம் என்று அறிக்கை விட்டு ஏமாற்றினர்.

போட்டோஷாப் 7 
2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற மோடி வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் உரையாடி நடந்து வருவது போன்ற ஒரு செய்தியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த படம் போலியானது என்றும் வெள்ளைமாளிகையில் ஒபாமாவும் அவரது மனைவியான மிகையிலும் நடந்து வரும் காட்சியில் மிகையிலின் படத்தை எடுத்துவிட்டு மோடியின் படத்தை ஒட்டிவிட்டனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தப் போட்டோ மோடியின் உதவியாளர் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதாகவும் அது உண்மையா போலியா என்றும் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இது மாதிரி ஒரு பிரதமரை எங்காவது பார்த்திருந்தால், படித்திருந்தால் அவசியம் தெரியப்படுத்துங்கள்.

போட்டோஷாப் 5 
சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம் வயதில், ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. 1988ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அஹமதாபாதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோரியுள்ளார். இதையடுத்து வந்த பதிலில், அந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும் கணினி மூலம் மறு ஆக்க வேலை(போட்டோஷாப்) செய்யப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 04-06-2016


Saturday, February 27, 2016

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது

வனபுத்திரி
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
7,இளங்கோ தெரு 
தேனாம்பேட்டை , சென்னை -– 600018. 
பக்:112 , விலை : ரூ. 80/-

சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....

புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது . அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார் .பாராட்டுகள்.புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில் , தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும் ; கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும் .இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது .வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய , ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார் .இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார் .இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார் .

ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது ? “ அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை ……. ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே! என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள் ....” என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது .“ கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது ; வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது; லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.; இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது .அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார் ?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை ? வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது . விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது ; இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை, ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும். இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு .நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான் . இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான் .

ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர் .இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான் . ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான் ?தீக்குளிக்கச் சொன்னான் . இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும் . சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை . நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார் . அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது .இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது .இது இன்றையத் தேவை . ராஜம் கிருஷ்ணன் எழுதிய , இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும் ;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும் . இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே ! இது என் வேண்டு கோளும் கூட . இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும் .

எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது . சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

தகவல்: சு.பொ.அகத்தியலிங்கம் @ தீக்கதிர் நாளிதழ், 28-02-2016


Tamil 10 top sites [www.tamil10 .com ]