வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, August 24, 2010

ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டம் தினமணி ஆசிரியர்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நேற்றைய தினமணியில் (23.8.2010) அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் இது தேவையா? எனும் தலைப்பில் கீழ்க் கண்ட பெட்டிச் செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பால் என்ன ஆகப் போகிறது? அமைச்சரவை (பிரதமர் தலைமையில்) ஜாதி வாரிக் கணக் கெடுப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காடுகளில் புலிகள் எத்தனை? சிங்கங்கள் எத்தனை? யானைகள் எத்தனை? எனக் கணக்கிட்ட செய்தி வெளியாகியது. நல்லவேளை நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணகெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை!

அதிகமான ஜாதிகள் உள்ளவர்கள் விகிதாசாரப்படி, முன்னுரிமை கோரி நாங்கள்தான் ஜாதியில் அதிகமாக உள்ளோம் என போராட மைனாரிட்டி ஜாதிகள், அதெல்லாம் சரியல்ல. பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்.

ஆக, இப்படி போராட்டம் பெரிதாகி வெடிக்க அதில் பலர் சாக, அதற்கு ஆதரவாக இப்போது காஷ்மீரில் நடக்கும் அராஜகம் போல் அராஜகம் வெடிக்க வருங்கால இந்தியாவுக்கு இது தேவையா?

எவன் திறமை மிக்கவனோ - அவனே உயர்ந்த ஜாதி! எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி! இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும்!

இதனைப் படிக்கும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளவர்களின் மனப்பான்மை எந்த உஷ்ணத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை எளிதில் உணரலாம்.

நல்லவேளை, நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணக்கெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை என்று தனது ஆத்திரத்தின் மூலம் அவரது கீழ்மையான குரைச்சல் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்கள் கணக்கை- ஜாதிவாரிக் கணக்கெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

மைனாரிட்டி ஜாதிகள் - பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்- என்பதன் மூலம் பெரும்பான்மை மக்கள் பன்றிக் குட்டிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.

அசல் ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டமாக இருக்கக்கூடிய ஒருவர் ஆசிரியராக இருக்கும் இந்த ஏட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சமாதானம் அடைந்துவிட முடியாது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தினமணி தனது தீய, ஆலகால நஞ்சினைக் கக்கிக் கொண்டு திரிகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வருண வெறி நாகங்களை அடையாளம் காணக் கடமைப் பட்டுள்ளனர்.

ஜாதியை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஜாதி ஒழிப்பு ஆவேசத்தில் எழுதப்பட்ட கடிதமா இது? அல்ல, அல்ல. ஆவணி அவிட்டமாகிய இன்று பழைய அழுக்குப் பூணூலை அப்புறப்படுத்தி விட்டு, தடித்த புது முறுக்குடன் புதிய பூணூலைத் தரித்துப் பலமுறை இழுத்துவிட்டு அழகு பார்க்கும் கூட்டம்தான் இந்த வகையில் மூக்கணாங்கயிறு இல்லாத பொலி காளை போல துள்ளுகிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தால் காஷ்மீரில் நடப்பது போல அராஜகம் வெடிக்க ஆரம்பிக்குமாம். இந்தியாவுக்கு இது தேவையா என்று மூக்கை ரத்தம் கசியக் கசிய சிந்துகிறது.

உரிமை பாதிக்கப்பட்ட மக்கள், அந்த உரிமை எந்த வகையிலாக இருந்தாலும் அதற்காகப் போர்க் கோலம் பூணத்தான் செய்வார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் புரிந்துகொண்டு அதற்கான வாய்ப்புகளை சட்ட ரீதியாக அளிக்கத் தவறினால், அந்த மக்களின் குமுறல் எரிமலையாகி ஒரு நாள் வெடிக்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகளின் கதி என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுமையும் உரிமையின் கூர் வாட்கள் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, ஆதிக்க வாதிகளை எப்படியெல்லாம் சிதைத்துள்ளன என்ற வரலாறு தரும் பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லையானால், புத்திசாலித் தனமாக அதன் வீரிய வீச்சைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவில்லையானால் வட்டியும் முதலுமாக - அதற்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

இட ஒதுக்கீடு வந்தால் தகுதி, திறமை தற்கொலை செய்துகொண்டுவிடும் என்று கூறிப் பார்த்தனர்; அது எடுபடவில்லை; இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்துத் தேர்ந்தோர் தங்களின் திறமைகளைச் சாதனைகள் மூலமாகப் பட்டொளி வீசிப் பறக்கிறார்கள்.

கடைசியில் தங்களுக்கும் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை என்ற மனு போடும் நிலைக்கு வந்தார்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்பதை மறந்துவிட்டு, தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?

எவன் திறமை மிக்கவனோ, அவனே உயர்ந்தவன் - எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி என்று மகரிஷி மாதிரி உபந்நியாசம் ஒரு பக்கத்தில்.

திறமைக்கும், தேச பக்திக்கும் அளவுகோல் என்ன? மனப்பாடம் செய்து தாள்களில் வாந்தி எடுத்துப் பெறும் மதிப்பெண்கள்தானா? வகுப்பில் மக்குப் பையன் என்று கூறப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதை யெல்லாம் தினமணிகள் வசதியாகச் சாமர்த்தியமாக மறந்து விடும்.

இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று இறுதியாக மங்கலம் பாடிக் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.

இறைவனன்றிதான் ஒன்றும் அசையாதே. அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு உள்பட) அனைத்தும் அவனால்தான் நடைபெறகிறது என்று ஒப்புக்கொண்டு கிருஷ்ணா, ராமா என்று முணுமுணுத்து பஜனை செய்துகொண்டு கயிற்றுக் கட்டிலில் படித்துக் கிடக்க வேண்டியதுதானே! அதற்குப் பிறகு என்ன ஜாதி முறுக்கும் - பூணூல் கொழுப்பும்?

---------- நன்றி விடுதலை (24.08.2010)
                                                                                      



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]