வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 04, 2011

ஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?


ஊழலை ஒழிக்கும் உத்தமப் புத்திரர்கள் புற்றீசல் போல புறப்பட்டு விட்டார்கள். ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவர்கள் பால் பொது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வருகின்றனர்.

அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தியின் மறுபதிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, இதோ ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் ஒரு மகான்! பராக், பராக் என்று பத்திரிகைகள் முண்டாசு கட்டி ஊளையிட்டன.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல சில திரைமறைவு உண்மைகள் வெளிச்சத்தில் வந்து வீழ்ந்தன.

இந்த ஹசாரே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் - அதன் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தவர் என்று கூறப் பட்டது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்.
இவர் உண்ணாவிரதம் இருந்த டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மேடை என்பது ஆர்.எஸ்.எஸின் வாடை மிகக் கடுமையாக வீசும் வகையில் இருந்தது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மேடைகளில் இடம் பெறும் பாரத மாதா வந்து குதித்து விட்டார் - மேடை விரிப்புக்கூட காவி வண்ணத்தில்தான் வடிக்கப்பட்டு இருந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்காக 82 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது - யாரிடமிருந்து? பெரும் பண முதலைகளிடமிருந்து நன்கொடைகளைக் கணிசமாகத் திரட்டுபவர்களால் உண்மையில் ஊழலை ஒழிக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும்.

82 லட்சம் நிதி திரட்டப்பட்டதிலிருந்து நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்குள்ளிருக்கும் நேர்மையின் மாற்று என்ன?

லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக ஹசாரேயால் பரிந்துரைக் கப்பட்டவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லையே!

லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் - அதில் நான் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர்.

தான் உறுப்பினராக இருப்பதோடு, தன்னால் சொல்லப்படுபவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதெல்லாம் நேர்மையானது தானா என்ற கேள்வி எழவில்லையா?
சுவாமி அக்னிவேஷ், ராம் மாதவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற சாமியார் பட்டாளமும் ஹசாரேயின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.

பொதுவாக நாட்டில் சாமியார்களின் யோக்கியதை பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. பரலோகத்தைக் காட்டப் போகிறேன் என்று கோடி கோடியாகப் பணம் குவிக்கிறார்களே - இதன் பொருள் என்ன?

கோடிகளைக் குவிப்பதற்கு ஆன்மீகம், காவி, சாமியார் என்பது ஒரு புடம் போட்ட குறுக்குவழிமுறையே!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஹோதாவில் குதித்துள்ள இந்த ராம்தேவ் யார்? ஆர்.எஸ்.எஸின் பசு பாதுகாப்பு யாத்திரையில் (கோ ரக்ஷா) யோகா வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்வரை சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று தனி ஹெலிகாப்டரில் பறந்து திரிகிறாரே - இதற்கான பணபலம் வந்த வகை தொகை என்ன? வெளிப்படையாக விவரங்களை வெளியிடட்டுமே, பார்க்கலாம்.

இப்பொழுது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள பாபா ராம்தேவ் தம் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் ஒன்று என்ன தெரியுமா?

இங்கிலீஷ் இருக்கும் இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?

இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்ற முகத்திரை முழம் முழமாகக் கிழியவில்லையா?

பார்ப்பனீயம், சங்பரிவார்த்தனம் என்கிற பின்னணி யோடு ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சங்பரிவார்க் கும்பல் பெரும் சரிவை சந்தித்திருக்கும் கால கட்டத்தில், ஊழல் ஒழிப்பு என்ற குதிரையின்மீது சவாரி செய்து, மக்கள் மத்தியில் தங்கள் சட்டையை உரித்துக் காட்டுகிறார்கள். சட்டையை உரித்து விடுவதாலேயே பாம்பின் நஞ்சும் தேனாக மாறி விட்டது என்று நம்பினால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஊழல் ஒழிக்கப்படட்டும் - வரவேற்போம்! வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று நோயாளிகள் கேட்கும்படி இருக்கக் கூடாதல்லவா!

-------- விடுதலை தலையங்கம், 04-05-2011


1 comment:

Ilakkuvanar Thiruvalluvan said...

வேடதாரிகள் பற்றி நன்றாகத் தெளிவுபடுத்துப்பட்டுள்ளன. பிற வலைப்பூக்களிலும் பதியச் செய்யுங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]