வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 29, 2010

ஞானசூரியன் - தொடர்-10

பொருள்: குலத் தொழிலை மீறி நடக்கிற வைசியன் இறந்தபின், மலத்துவாரத்தில் கண்களை உடையதும் மலத்தையே புசிக்கும் இயற்கையுடையுதுமான, மைத்திராக்ஷ ஜோதிகன் என்கிற பிசாசாகவும், இம் மாதிரியே சூத்திரன் வெள்ளைப் பேனைத் தின்கிற கைலாசகன் என்கிற பிசாசாகவும் பிறக்கின்றனர். இதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், இன்னும் பாப்பனருக்கே அடிமையாக இருக்கவிரும்பினால், அவர்களையே வணங்கிக் கேட்டும், அடிமைத் தனத்தைத் தள்ளிச் சுதந்திரமாக இருக்க விரும்பினால், ஸ்மிருதிகளைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

1சனாதன தரும முறையாக வருணங்கள் நான்கே உள்ளன. இதற்கு மனுவின் வசனம் வருமாறு:

பிராஹ்மண; க்ஷத்திரியே வைஸ்த;

த்ரேயோவர் ணாத்விஜாதய

சதுர்த்த ஏகஜாதிஸ்து சூத்ரோ

நாஸ்திது பஞ்சம (மனு)

பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். 2நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி (இவனுக்கு உபநயனமில்லாததால், துவிஜாதியாக மாட்டான்). அய்ந்தாவது ஜாதி கிடையாது. ஆனால், இக்காலத்தில் காணப்படுகிற அளவற்ற ஜாதி வேற்றுமைகள் எங்ஙனம் உண்டாயின என்றால், எட்டுப் பார்ப்பனர்களும், ஒன்பது அடுக்களை என்று வங்க தேசத்தில் ஒரு பழமொழி வழங்குவதுண்டு. இதைப்போல் ஒழுக்கங்களையுடைய வகுப்பினர்கள் அனைவரும் ஸ்மிருத முறைப்படி சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்களேயாவர்.

1. சனாதன தருமம், வைதிகம், மனுதர்மம், வருணாச்சிரம தருமம் ஆகிய சைவம், வைணவம், தருமம் என்பனவெல்லாம் பிராமண மதமென்றே கொள்ள வேண்டுவதன்றிப் பெயர் மாற்றத்தால் மயங்கவேண்டாம்.

2.பிறப்பினால் மனிதனாகவும், வைதிக ஸம்காரத்தாலும், ஒழுக்கங்களினாலும் ஜாதிகள் உண்டாவதால், எம்மனிதனுக்கும் சமஸ்காரஞ் செய்து ஒழுக்கங்களைப் பழக்கினால் ஜாதியுண்டாமென்றது கருத்தாகவும், பிற்காலத்தில் பொறாமையால் எழுதிய சுவடிகளில் சம்ஸ்காரம் செய்யாதே என்று எழுதியும், நல்லொழுக்கத்தில் பழகினால் தண்டித்தும் வந்த மதமே பிராமண மதமென்றறிய வேண்டும். நிற்க, அய்ந்தாவது ஜாதி கிடையாது என்று இதில் கூறவும் 180 ஜாதி என்கிறது எசுர்வேதம்.

ஆதலால், எவ்வளவு உயர்ந்த ஜாதியென்று தன்னை மதித்துக் கொண்டாலும் வேதவிதிப்படி உபநயனமில்லாத வர்கள் யாவரும், இந்த நான்காவது ஜாதியிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். புலையர், சான்றார், செட்டியார், பிள்ளை எனத் தங்களை உயர்வுப்படுத்திக் கூறிக்கொண்டு, ஒருவரோ டொருவர் கலக்காமல் நூல் முறையும் தெரியாமல், நம்மவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, வருவது பார்ப்பனருக்கு நன்மையும் நம்மவருக்குள் தீமையும்தான் பயக்கம். தவிரவும் அய்ரோப்பியர், அமெரிக்கர், ஜப்பானியர், அராபியர், சைனாக்காரர் முதலிய பலதிறப்பட்ட மனிதர்களும் பார்ப்பனர் பார்வைக்குச் சூத்திரன் என்ற வார்த்தைக்கு இடங்கொடுப்ப தில்லை. பார்ப்பனர் தங்களுக்கு இடையூறு நேராவண்ணம், ஒரு ஜாதியாருக்குள்ளேயே இவ்வளவு அதிகமான வேற்றுமையை உண்டாக்கி, அதை அழியாமல் நிலைநிறுத்திக் கொண்டு வருவதால் அவர்களுக்கு மிகுந்த நன்மையுண்டு. ஆனால், இந்த வேற்றுமைகளைப்பற்றி அவர்கள் ஒன்றும் கூறமாட்டார்கள். இப்போது பலவிடங்களிலும் நாடார்களுக்கும், நாயக்கமார்களுக்கும் யுத்தம். புலையர்களுக்கும் ஏனைய வகுப்பினருக்கும் சண்டை. மலையாளத்தில் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரகம் மற்றும் பலவிடங்களிலும் மண்டை உடைபடுதல் ஆகிய இவைகளெல்லாம் இவ்வேற்றுமையின் பயனென்று நம்மவர்கள் நன்கு யூகித்து உணர வேண்டும். இதனால் நம்மை வஞ்சிக்கிற பார்ப்பனர்கள் ஜெயமடைகிறார் களென்றும், நாம் தோல்வியடைகிறோமென்றும் நன்கு விளங்குகிறன்றோ? வேத முறைப்படி சம்ஸ்காரமில்லாத வர்களைச் சூத்திரர்கள் என்று பார்ப்பனர்கள் கூறும் சொற்படியே நாமும் கூறுகிறோமேயல்லாது, தாழ்மைப்படுத்திக் கூறுவது எமது கருத்தன்று.

சம்ஸ்காரமில்லாதவர்களும் சூத்திரர்களே என்று பார்ப்பனரும் அவர்களின் சமய நூற்களும் கூறினும், பார்ப்பன சமயத்தைப் பின்பற்றி யொழுகுவோர் யாரோ அவர்களைத்தான் இதனால் ஏற்படும் தீமைகள் சாரும். 1அதினின்றும் ஒழிந்தவுடன், ஜாதிச்சங்கிலி அறுபட்டுப் போவதால், அத்தகைய தன் மதிப்புள்ள ஒரு மனிதனைப் பார்த்து, நீ சூத்திரனாகப் பிறந்தமையால் எங்களுக்கு அடிமை; வீட்டுக்கு வந்து எனது கட்டளைப்படி நடக்கவேண்டும் என்று ஒரு பார்ப்பனன் கூறத்துணிவானோ? எவனேனும் இறுமாந்து மதிப்பைக் கெடுக்கக்கூடிய வார்த்தை யாதேனும் கூறுவானாயின், அக்கணமே பிறரால் நையப் புடைக்கப்படுவதோடு,

1. கிறிஸ்துக்கள், முகம்மதியர்கள், புத்தர்கள் முதலியோர்.

2கிரிமினல் சட்டப்படி தண்டனையும் அடைவானென்பது திண்ணம். ஆனால், பார்ப்பனரல்லாத ஓர் இந்து முன்சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதுதானே, அதனாலன்றோ வைக்கத்தில் பொதுவழியில் நடக்க உரிமை வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டும் பயன்படாது, ஓராண்டு காலமாய்க் கடுந்தவம் புரிகின்ற பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்கள் கிறிஸ்துவையோ முகம்மது நபியையோ சரணமடைந்தால், அடுத்த நிமிஷத்திலேயே இரத்தம் ஒழுகுகின்ற மாமிசத்தைக் கையில் தாங்கிக் கொண்டு எந்தப் பொதுவழியிலும் தடையின்றிச் செல்லும் உரிமையுடையவர் களாகின்றார்கள். இது ஜாதிச்சங்கிலி அறுந்து போனதனா லென்றே உணரவேண்டும். இந்துச் சமயத்தைத் தங்கள் சமயமாக ஒப்புக்கொள்ளும் பார்ப்பனரல்லாதாரைப் பார்ப்பனர்கள் தஸ்யு, தாஸன் 3விருஷலன் என்றும் மற்றும் இழிவாகக் கூறுவதிலும் இதினின்றும் விலகியவர்களைத் துரை (அரசன்), சாயபு (பிரபு) என்றும் அழைத்து உபசரிப்பதிலும் என்ன ஆச்சரியமிருக்கிறது?

இனி, ஒவ்வொரு வருணங்களையும் அவர்களின் ஒழுக்கங்களையும் பற்றிக் கூறுவோம். பார்ப்பனன் யாவன்? என்னும் வினாவிற்குப் பார்ப்பனியின் வயிற்றிற் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி முதலிய தரும சாஸ்திரமுறைப்படி விடை இப்படியே நடைபெறுவதையும் பார்க்கிறோம் அல்லவா? இஃதன்றி வேறு வகையாகவும் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:-

சமோதமஸ்தப: சௌசம்

க்ஷாந் திராஜவமேவச

ஜ்ஞானம் விஞ்ஞானம் மாஸ்திக்யம்

ப்ராஹ்மம் கர்ம, ஸ்வபாவஜம்

(கீதை - அத்தியாயம் 18)

பொருள்: ஞானேந்திரியம், கருமேந்திரியங்களை அடக்குதல், சுத்தி, பொறுமை, நல்லொழுக்கம், சாஸ்திரஞானம், அனுபவஞானம் இவை பிராமணனது இயற்கைக் குணங்களாம். முன்சொன்ன மனுஸ்மிருதிக்கும் இதற்கும் இருக்கிற வேற்றுமை, வீட்டுச் சுரைக்காய்க்கும், ஏட்டுச் சுரைக்காய்க்கும் உள்ள வேற்றுமை போன்றதே.

-(தொடரும்) நன்றி - விடுதலை

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]