வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Saturday, July 19, 2014

'னூல்' அறுக்கும் நூல்கள் - அடிமை


அடிமை 
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர் 
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 41 -பி, 
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், 
சென்னை - 600 098 
பக் : 32 விலை ரூ. 20 /- 

இந்தியாவில் அடிமைத்தனம் எப்போதும் இருந்ததில்லை. இந்து மதத்தின் பெருமையது என இப்போது சங்பரிவார் பீற்றித்திரிகிறது. அதேபோல் இந்து மதத்தை சகிப்புத்தன்மையின் மாதிரிபோல் சிலர் செப்பித்திரிகிறார்கள். இந்த இரண்டும் மிக மிக தவறான கண்ணோட்டம். இந்தியாவில் அடிமைத்தனம் இருந்ததையும், அடிமைத்தனத்தை விட மோசமான தீண்டாமை இருப்பதையும் மிகத் தெளிவாக வரையறை செய்து காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். சாதியஒடுக்குமுறை குறித்து மிக ஆழமான மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு வலுவான ஆதாரங்களோடு தீண்டாமையை தோலுரித்து காட்டிய அம்பேத்கரின் கட்டுரைகளில் இது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரைந்துகாட்டி தீண்டாமையே ஆகப்பெருங்கொடுமை என்பதை இந்நூலில் நன்கு வாதிட்டுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.

நன்றி: தீக்கதிர், 20-07-2014


Saturday, June 07, 2014

நூல் விமர்சனம் - அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்



அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு
மணற்கேணி
முதல் தளம், பு/எண்:10, ப/எண்:288, டாக்டர் நடேசன் சாலை, சென்னை-05
விலை : ரூ.95
கைப்பேசி : 9443033305

திருத்தி எழுதிய தீர்ப்புகள்...

அது கல்லறையானாலும் சரி, கழிப்பறையானாலும் சரி, பாதையை மறித்து நிற்கும் தீண்டாமைச் சுவரானாலும் சரி, பொதுப் பேருந்துகளில் அமர்ந்து பயணம் செய்யும் உரிமையானாலும் சரி, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள தலித்-பழங்குடி இனத்தவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அதிகார வர்க்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையே இன்னும் நீடிக்கிறது.பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், கோயிலில் நுழையவும் அண்ணல் அம்பேத்கர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்றால் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவதற்கே நீதிமன்றங்களின் உதவியை நாட வேண்டிய அவல நிலையில் தான் அவர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ஆதிக்க வர்க்கத்தினரின், சாதியினரின் எதிர்ப்புகளை தினந்தோறும் சந்தித்து, ஒவ்வொரு படியாக ஏறி வரும் அவர்கள் இறுதியாகத் தஞ்சம் புகும் நீதிமன்ற வளாகத்தில் அவர்களது உரிமைக் குரல்கள் எதிரொலிப்பது என்பதோ அரிதிலும் அரிது என்றே கூறி விடலாம். சாதிய ஆதிக்க வெறி நிறைந்த வட மாநிலங்கள் மட்டுமல்ல; திராவிடர்களின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழ் மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை ஆதி திராவிடர்கள் என்று பட்டம் சூட்டப்பட்ட தலித்துகள் ஒவ்வொரு கணமும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். 44 தலித் மக்களை வெண்மணி கிராமத்தில் உயிரோடு எரிக்கும் அளவிற்குத் தஞ்சை நிலப்பிரபுக்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல என்று சான்றிதழ் வழங்கிய, வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்களை மாட்சிமை பொருந்திய அரசு ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்க மாட்டார்கள் என்று நற்சான்றிதழ் வழங்கிய அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்த வறியவர்களுக்கு ஆதரவான குரல் ஒன்றும் எழுந்தது.

நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்தான் அந்தக் குரலுக்கு உரியவர். கல்லூரிப் பருவத்தில் தலித்-பழங்குடி மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடியதைப் போலவே, வழக்குரை ஞராக, மூத்த வழக்குரைஞராக செயல்பட்ட நேரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நீதிமன்ற வளாகத்தில் ஓங்கி ஒலித்தவர் அவர். 2006ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட போது, அவரது இந்த சமூக நீதிப் பணி தொடருமா? என்ற தயக்கம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டதும் உண்மைதான். எனினும் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யமுடியும் என்று பதவி ஏற்ற நாளிலேயே அறிவித்த அவர் அதை வெற்றிகரமாக நிரூபித்தும் காட்டினார்.

அவர் நீதிநாயகமாக இருந்த ஏழு ஆண்டுகளில் 96,000 வழக்குகளில் இறுதித் தீர்ப்பை வழங்கியது மட்டுமே ஒரு சாதனை அல்ல. அவர் முன்னே வந்த வழக்குகளில் பலவும் ஆதிக்க சக்திகளின், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கண்ணோட்டத்தை, தலித் எதிர்ப்பு நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், சமூக நீதியின் வெளிச்சத்தின் துணை கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் வீரிய எழுத்துக்களின் வெளிச்சத்திலிருந்து அவர் வழங் கிய தீர்ப்புகள் காலத்தை வென்றவையாக நீடிக்கும். நீதிநாயகம் கே. சந்துரு வழங்கிய குறிப்பிட்ட சில தீர்ப்புகளை உள்ளடக்கிய வகையில் “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிட் டுள்ளது. அவர் வழக்குரைஞராக இருந்தபோது நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி ஒரு வார இதழில் தொடராக எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “ஆர்டர்! ஆர்டர்” என்ற நூல் நீதி கோரி வருவோர் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து மிக எளிமையாக விளக்கி யது எனில் தலித்-பழங்குடிப் பிரிவினருக்கு ஆதரவாக அவர் வழங்கிய தீர்ப்புகளின் பின்னணியையும் தீர்ப்பு வழங்க அவர் எடுத்துக் கொண்ட வரலாற்று, அரசியல், இலக்கிய ஆதாரங்களையும் விரிவாக விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினருக்கு சமூகநீதி கிடைக்கும் வகையில் அவர் வழங்கிய தீர்ப்புகளில் அம்பேத்கரின் அறிவார்ந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும், அமெரிக்காவின் நிறவெறியைப் போன்றே சாதி-ஆதிக்க வெறி இங்கே தலைவிரித்து ஆடுவதைச் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

கல்லறை உரிமைக்கான தலித்துகளின் கோரிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கையில்(கல்லறைதான்) சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமேஎன்ற சினிமாப் பாடலை மேற்கோளாகக் காட்டியும் நீதிநாயகம் சந்துரு வழங்கிய தீர்ப்பைப் போன்று பல தீர்ப்புகளின் பின்னணியை விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது.இத்தகைய தீர்ப்புகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட மற்றொரு காரணமும் உண்டு என்று அவர் கூறியுள்ளது அனைவரும் கவனிக்கத்தக்க, கவலை கொள்ளத் தக்க ஒன்றாகும். “தமிழகம் முழுவ தும் பரவலான பாராட்டுக்களை எனது தீர்ப்புகள் பெற்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக, (பின்னா ளில் வழக்குரைஞர்கள் வாதம் புரியவோ, தீர்ப்புகளில் மேற்கோளாக, முன் உதாரணமாகக் காட்டு வதற்கு உதவும் வகையில்) தீர்ப்புகளை தொகுத்து வெளிவரும் சட்ட இதழ்களில் அந்தத் தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை. அதற்கு அந்த இதழ்களின் நவீன தீண்டாமையும் ஒருவேளை காரணமாக இருக்கலாம்” என்ற வரிகள் 66 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவை இன்றும் நீடிக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1970களின் இறுதியில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி இனத்தவருக்கு ரயில்வே துறையில் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஓ. சின்னப்ப ரெட்டி ஆகிய இருவரும் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று அப்போது வழக்குரைஞராக இருந்த சந்துரு ஆர்வமாக இருந்தார். அப்போது சிறையில் இருந்த தியாகு இந்தத் தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.

அதனை சரிபார்த்து கொடுத்ததோடு, சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பற்றி என்ற அந்த நூலுக்கு சந்துரு முன்னுரை வழங்கியதோடு அந்த நூல் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாகச் செல்லவும் உதவி புரிந்தார் என்பதையும் இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இச்சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நீதித்துறையின் படிக்கட்டுகளில் ஏறி சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது அளப்பரியதொரு போராட்டமாகும். அப் போராட்டத்தில் கிடைக்கும் தீர்ப்பு என்பது மற்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போ ராட அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதோடு, மற்ற நீதிமன்றங்களும், நீதிநாயகங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்க உதவி புரியும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய வரலாற்றைத் திருத்தி எழுதிய தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய அவசியம் உள்ளது.

அத்தகைய முயற்சிகள் தொடர, இவ்வகையான நூல்கள் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கே அவர் மறைந்து 34 ஆண்டு களுக்குப் பிறகே அவரது நூற்றாண்டு விழாவின்போது திடீரென்று நினைவிற்கு வந்ததுபோல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கையில், ஆதிக்க சக்திகளின் இரும்புக் கண்ணிகளை உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த நூல் விளங்குகிறது என்றே கூறலாம். சமூகநீதிக்காகப் போராடுவோருக்கு ஊக்கம் தரும் வகையிலான இந்த நூலை போராளிகள் அனைவரும் வாங்கிப் படித்து, பரவலாக அறியச் செய்வது அவசரமானதொரு சமூகக் கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர்,08-06-2014


Tamil 10 top sites [www.tamil10 .com ]